Showing posts with label வர்ணம். Show all posts
Showing posts with label வர்ணம். Show all posts

Sunday, August 17, 2008

தஞ்சம் என்றாலே : ஆபோகி வர்ணம்

மிழ் தியாகராஜர் எனப்போற்றப்படும் திரு. பாபநாசம் சிவன் அவர்களின் ஆபோகி இராக வர்ணம் தனை இங்கே பார்க்கப்போகிறோம்.

வர்ணம் : இதனை கச்சேரியின் துவக்கத்தில் பாடுவது வழக்கம். வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவியினைத் தொடர்ந்து முக்தாயி ஸ்வரங்கள் இருக்கும். அதைத் தொடர்ந்து சரணம் இரண்டு அல்லது மூன்று கால அளவில் வாசிக்கப்படும். இவற்றுடன் சிட்டாயி ஸ்வரங்களும் இருக்கும். சரணத்தில் ஒரே ஒரு வரி தான் இருக்கும். அதனையே வெவ்வேறு கால அளவிலும் வாசிக்க வேண்டும். இசைக் கலைஞருக்கு, அது நல்லதொரு பயிற்சியினைத் தருவதற்காக வர்ணத்துடன் கச்சேரியினைத் துவங்குவதை வழக்கமாக கொண்டார்கள் போலும்.

இந்தப் பாடலில் வரிகளின் வர்ணங்களும் மிகப் பொலிவு. நீங்களே பாருங்களேன், வார்த்தைகள் வர்ண ஜாலங்கள் புரிகின்றன:

இராகம்: ஆபோகி
தாளம் : ஆதி

பல்லவி
தஞ்சம் என்றாலே
நெஞ்சம் அருள் சுரந்தே வலிய
தண்முகில் போல வந்து
அஞ்சேல் என்று உவந்தருளும் அய்யா,

அனுபல்லவி
வஞ்சம் கொண்டோர்போல
வன்மம் கொண்டே
மிகமனம் வருந்தும் என்மேல்
அருள் சிறிதும் இன்றி
மறந்த விந்தை என்னென்பேன் அய்யா?

முக்தாயி ஸ்வரம்

தா ஸ் ஸ் த ம கா ம
க ம க ரீ க ம க ரீ ஸ் ரீ த ஸ் ரீ
......

(தஞ்சம்...)

சரணம்

உயர் மாதவர்பணி கபாலி,
ஆள மனமும் உண்டோ
இலையோ சொல்?

(தஞ்சம்...)

திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கே கேட்கலாம்.

90 களில் இறுதியில் நான் பணியில் சேர்ந்தபின் மும்பையில் ஆடியோ கேசட் கடைக்கு தேடிப்போய் வாங்கிக் கேட்ட ஒலித்தொகுப்பான 'குறிஞ்சி' யில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று இது. இந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களும் அற்புதமான நித்தலங்கள். நித்யஸ்ரீ அவர்களின் குரலோ கேட்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் இனிமை நிறைந்தது. இதற்குப்பின் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருந்தாலும், அப்போது முதன் முதலில் கேட்டதின் நினைவுகள் என்றும் பசுமையாய் நிறைந்துள்ளது!. அதை மீண்டும் நினைவு படுத்துகையிலும் இனிமை!. இந்நாள் வரை இனித்திடும் இசை ரசனைக்கு இப்பாடல் தொகுப்பு ஒர் அடித்தளமாய் அமைந்தது என்பேன்!.

தொடர்புடைய முந்தைய இடுகை : ஆபோகியில் அகமுருகி