Showing posts with label சுந்தரர். Show all posts
Showing posts with label சுந்தரர். Show all posts

Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு 





Sunday, January 25, 2009

கால்வண்ணம் கண்டு கொண்டோம்!

இந்தப் பகுதியில் ஒரு அருமையான பாடலை பார்க்கப்போகிறோம். இப்பாடலை வஞ்சகப் புகழ்ச்சி அல்லது 'தூற்றுமறைத் துதி' (நிந்தாஸ்துதி) என்கிற வகையில் சொல்லலாம். அதாவது, தூற்றுவது போல போற்றும் பாடல். சமீபத்தில் தான், வஞ்சகப் புகழ்ச்சி அணியினை, அகரம்.அமுதா அவர்கள், காளமேகப் புலவரின் கவியினைக் கொண்டு வெண்பா வகுப்பினில் விளக்கி இருந்தார்.

தில்லையில் ஆனந்த நடம் ஆடும் ஈசன், கூத்தன், விரிசடை விண்ணவன், எப்போதும் ஒரு காலைத் தூக்கி நின்றாடுகிறான் அல்லவா! எதனால்? அவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடுவதன் மறைபொருள் ஒருபுறம் இருக்க, அவன் காலைத் தூக்கி நிற்பதால், அவன் முடமாகி நிற்கிறானோ, என்பதுபோல பலவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார் பாடலாசிரியர் இப்பாடலில். கவி காளமேகப் புலவரின் இந்த வெண்பா போல:
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாங்க, இவிங்க குடும்பமே நோய்வாய்ப்பட்ட குடும்பம் போல! இவிங்க நோய்களையே தீர்த்துக்கக் காணும், எங்கே நம்ப வினையை தீர்க்கறது?!!!

வாதம் - சீதம் என வருகிற மாதிரி, ஒரு நீண்ட பாடலே இயற்றி இருக்காரு, பாபவிநாசம் முதலியார் அவர்கள். இவர், நிறைய தமிழ்ப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இவர் இயற்றிய பெரும்பாலுமான பாடல்கள், இந்த வகையைச் சார்ந்த இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பாடலில் பாருங்கள் எப்படி அருமையா எதுகை அமைச்சிருக்காரு! :
நடம் - முடம் - திடம் - சடை
எடுப்பும், தொடுப்பும் என்னமா துடிக்குது!

இராகம் : காம்போதி
இயற்றியவர் : பாபவிநாச முதலியார்
(1650-1725)

எடுப்பு
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!

தொடுப்பு
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
(நடமாடித்..)

முடிப்பு
1. திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!

ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!

பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)
2. தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?

இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? - முறிந்ததுவோ?

கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று


(நடமாடித்..)
3. பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?

சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?

சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?
(நடமாடித்..)

இந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடிடக் கேட்கலாம். அவர் முடிப்பில் முதல் சரணத்தை மட்டுமே பாடுகிறார். சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் இடம் பெறுவதில்லை. மேலும், சில புத்தகங்களில், இப்பாடல், கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டதென தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.
பாடலைக் கேட்டவாறு, அதன் பொருளை மேயலாமா?



நடம் - நடனம் ஆடித் திரியும்
இதர கவிகளால், இப்படியெல்லாம், சிவன் நடம் ஆடுவதைப் பாடிவார்:
* ஆனந்த நடம் ஆடுவார் தில்லை, அம்பலம் தன்னில் ஆனந்த நடம் ஆடுவார் தில்லை (நீலகண்ட சிவன் : பூர்வி கல்யாணி)
* ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)
* நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே, கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (கோபால கிருஷ்ண பாரதி : வசந்தா)
* ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ (முத்துத்தாண்டவர் : மாயமாளவகௌளை)

இடதுகால் முடம் :
இடதுகாலைத் தூக்கி நிற்பதால், இவருக்கு கால் முடமோ?, இவரால் காலை ஊன்றி நிற்க இயலாததன் காரணம் என்னவோ என வினவுகிறார்!
இதர கவிகள் இப்படியெல்லாம் 'காலை தூக்கி நின்றாடுவதை' பாடுவார்கள்:
* இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே, நெஞ்சே (பாபநாசம் சிவன் - கமாஸ்)
* காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே, எனை கைதூக்கி ஆள் தெய்வமே! (மாரிமுத்தாப்பிள்ளை - காம்போதி)
இவரோ, இடது கால் தூக்கி நிற்பதை 'முடம்' என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமாம் 'நமசிவாய' தனில் தொடக்கமாம் 'ந' வெனும் எழுத்தும், உனைப்போல் தூக்கிய காலுடன் நிற்பதுவே!

திடமேவும் தில்லை நகர்
தில்லைத் தலம் என்று சொல்லத் தொடங்கினால், இல்லை பிறவி, பிணியும் பாவமும்! (கோபாலகிருஷ்ண பாரதி - சாமா)
அப்படிப்பட்ட தில்லைநகரில், "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்", சடைதனை விரித்த வண்ணம், பேரானந்தம் தரும் சத்-சித்-ஆனந்தம். எங்கெங்கும், எல்லாமுமாய் ஆகாசத்தில் பரந்து விரிந்து நிறைந்திருக்கும் பரப்பிரம்மம்.

சீதமும் வாதமும்
சுடலைப்பொடி பூசும், உள்ளம் கவர் கள்வனே, திரு-நீறை உடலில் பூசியதால், சீதமாகியதோ, அதனால், வாத குணமும் வந்து, இடது காலைக் கீழே வைக்க இயலாமல் தவிக்கிறீரோ? நமக்கெல்லாம், திருநீறைப் பூசினால், நமது நீர் குறையும். ஆனால், இங்கே எதிர்மறையா சொல்லுகிறாரே!. ஒருவேளை, திருநீறை நாம் பூசி, நம் சீதம் குறைந்து, அதெல்லாம் அவனுக்குப் போய்விட்டதோ! ஹ ஹா!

காலனை ஒரு காலால் உதைத்த 'ஒரு-காலன்':
நீரோ ஒற்றைக் காலில் ஆடுபவன்! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, உன் காலால், காலனை உதைத்க, அப்போது, உம் காலில் தான் சுளுக்கு ஏறியதோ? அதனால் தான், ஒற்றைக் காலை எப்போதும் தூக்கியவாறே நிற்கிறீரோ?

வாசல் படி இடறிற்றோ?
ஈசனே, உமது 'நண்பர்' சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனைவி பரவையாரை மீண்டும் சேருவதற்காக தூது போனீரோ!. அப்படி அவசர அவசரமாக அவரது வீட்டுக்குள் நுழையும்போதுதான், பரவையாரின் வீட்டு வாசற்படித் தடுக்கி கீழே விழுந்து, அதனால் முடமாகிப் போனீரோ?

எந்தன் பாவமோ?
ஒருவேளே, நான் செய்த பாவங்களால், அதனால் உனக்கு குறைவு வந்ததோ, அதனால் தான், நீர் முடமாகிப் போனீரோ?

இப்படியாக மற்ற இரண்டு சரணங்களிலும், ஒவ்வொரு கதையினைச் சொல்லி, அதில் தன் கற்பனையைப் புகுத்தி, இதனால் தான் சிவன் முடமாகிப் போனதுவோ, என்பதுபோல பாட்டினை வடிவமைத்திருக்கிறார் பாபவிநாசம் முதலியார்!

* சிவன் வேடனாக, தனஞ்செயன்(அர்ஜூனன்) உடன் போரில் நீர் அடிபட்டு விழ, அப்போது, உமது இடுப்பு எலும்பு இணைப்புகளில் வலி ஏற்பட்டு, அதனால், உம்காலைத் தூக்க இயலவில்லையோ? (சந்து: இடுப்பு; முடி:முடிச்சு:எலும்பு இணைப்புகள்; சமர்:போர்)
* தாருகா வனத்தில் பிச்சை எடுப்பவன் போல் திரிந்ததில், முள்ளும் உன்காலைத் தைத்ததுவோ?
* கனகசபை தன்னில், உமது ஆனந்த நடனம் கண்டு அதிசயத்தவர்களில் கண்பட்டுத்தான் இவ்வாறு நேரிட்டதோ?
* உன் இடது பாகத்தில் இருக்கும் சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?
* சத்தியலோக அதிபதியாம், பிரம்மனின் வேகமான தாளத்திற்கு ஏற்ப, நடமாடினீரே! அந்நடனமதில், உமக்குப் பிடித்த, அருமையான நடன முத்திரை இதுவென, ஒருகாலைத் தூக்கிக் காட்டுகிறீரோ எமக்கு!

ஏனையா, நடராஜனே, எனிப்படி ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறீர்?
ஆணவம், மற்றும் மாயை ஆகியவற்றில் இருந்து விடுபட, "இந்தா என் அருள்" என வழங்கிடும் வண்ணம்தனைக் குறிக்கத்தான், இப்படித் தூக்கிய காலுடன் நின்றீரோ, ஐயா!. பக்தி செய்பவர்களின் பாவமெல்லாம் நாசம் செய்யும், "பரமபதம் இதுவென" உன் பாதம் தனைக் காட்டும் கருணையுள்ளம் கொண்ட பெருமானே, வந்தனம் செய்வேன் உம்மை!.

பி.கு:
* அடைப்புக்குறியில் () குறிக்கப்பட்டவை பாடலை இயற்றியவர் பெயரும், பாடலின் இராகமும்.
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் சென்னை ஆன்லைன் தளத்தில் இப்பாடலைப்பற்றி, தந்துள்ளவற்றை இங்கே பார்க்கவும்.
* இப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தந்துதவிய திரு.ஸ்ரீநிவாசன் சபாரத்தினம், திரு.சேதுராமன் சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றிகள்.

Sunday, December 21, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!