Showing posts with label நிவேதிதா. Show all posts
Showing posts with label நிவேதிதா. Show all posts

Friday, September 30, 2011

மாயா யாமா

மாயை? இச்சொல்லின் பொருள்தான் என்ன?
மாயை என்பது காட்சிப்பிழையா அல்லது கானல் நீரா?

தொடக்கக் காலத்தில் மாயை என்றால் மகேசனின் ஜாலமென்றுதான் பொருள்.
காலப்போக்கில், அப்பொருள் மறைந்து போய், மனமயக்கமே மாயை என்று பொதுவாக பொருள் கொள்ளப்பட்டது. இந்த உலகமே பொய். காண்பதெல்லாம் வெறும் மாயை என்று பொருள் சொல்லப்பட்டது. நிலையாமை என்பதுதான் மாயை என்பதாகக் கொள்ளப்பட்டது.
 
சுவேதஸ்வதர உபநிடதம் சொல்லுவதை சற்று நோக்கினால்:
"இயற்கையே மாயை என்பதறிவோம்.
மனமே மாயையின் அரசன் என்பதை அறிவோம்.
அவ்வரசனே இறைவன் என்பதறிவோம்."


கிட்டத்தட்ட  கனவில் நடப்பது போல, பாதி உறக்கத்தில், பாதி விழிப்பில் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்க, நமது புலன்களால் உணரப்படக்கூடயதை மட்டுமே உலகமாக, பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவாய் நாம் கொள்வதால் - நம்மைப் பொறுத்த வரையில் பிரபஞ்சம் என்பதுஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.

1. ஒரு பக்கம் மாயை என்றால் "கனவுக் காலம், வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்" என்பது போன்ற நிலையின்மையாகவும், புலன்களால் உணரப்படுவதாகவும், அதனால் மனமும் அதே மயக்கத்தில் அமிழ்ந்து போவதாகக் கொள்ளப்பட்டாலும்,

2. அதே மாயையினால்தான் எங்கெங்கும் வியாபித்து, எல்லாப் பொருளிலும் இருக்கிறான் இறைவன்.


மேலே சொல்லப்பட்ட இரண்டு கூற்றுகளும் இந்து சமயத்தின் தத்துவ அடித்தளமாகும்.
மற்ற எல்லா கூற்றுகளும் இவற்றில் இருந்து வந்தவைதான்.

-சுவாமி விவேகானந்தரின் "மாயை" பற்றிய சொற்பொழிவுகளில் இருந்து
சகோதரி நிவேதிதையின் குறிப்புகள் (The Master as I saw Him)


Monday, September 19, 2011

இலக்கும் இறுதியும்

இலக்கு தொலை தூரத்தில் இருக்கிறது.
இயற்கைக்குப் புறம்பாகவும் இருக்கிறது. ஆனால் அது,
நம்மை எப்போதும் தன்பால் ஈர்த்தபடியே இருக்கிறது!
அதனை அருகாமையில் வரச் செய்ய வேண்டும்.
அருகே அருகே என அருகாமையில் வர வர:
வானத்தின் இறைவன் இயற்கையில் தெரிகிறான். பின்னர்,
இயற்கையில் தெரிந்த இறைவன் இயற்கையாகவே மிளிர்கிறான்.
அடுத்து, உடலாகிய கோயிலில் உறைகிறான்.
பின்னர், உடலில் உறைந்த இறைவன் உடலாகவே ஆகிறான்.
இறுதியாய் அவனே அதன் ஆன்மாவாகிறான்.
அது வரை இலக்கானது நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கெங்கெலாமோ தேடப்பட்டவன்
இங்கேயே இதயக் கமலத்திலேயே இருக்கிறான்.
தத்வமஸி. நீயே அவன், ஓ மனிதா, நீயே அவன்.

- சுவாமி விவேகானந்தர்
மேற்கோள் : சகோதரி நிவேதிதாவின் "The Master as I saw Him"

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
     கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
     டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும்பொருளாய்ப் புன்மை தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
     நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

- மகாகவி பாரதி