Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Friday, May 30, 2014

மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?

சிங்கள வம்சாவளியினரின் இலங்கை வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்தின் படி, வங்கத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் (கி.மு 543 - கி.மு 505) என்பவன் வந்ததாகவும், அவனது வம்சாவளியினரே முதல் சிங்கள ராஜ வம்சமாகவும் கருதப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க, சிங்கள வம்சாவளியினருக்கும் மற்றவர்களுக்குமான மரபணுத் தொடர்பை ஆராயும் சோதனைகள் என்ன சொல்கின்றன?

பல்வேறு சோதனைகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தாலும், அவை யாவும் சிங்களர்களுக்கும் வங்காளியர்க்குமான மரபணுத் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன.

1995 வாக்கில் நடத்தப்பட்ட ஆரம்பகால சோதனைகள் இந்தியத் தமிழர்களின் மரபணுத்தொடர்பே சிங்களரிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் சிங்களர்க்கும் வங்கத்தினருக்குமான மரபணுத் தொடர்பு - மகாவம்சத்தின் கதையோடு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை.

சமீபத்தில், 2005-2006 இல் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் படி,  72 சதவிகிதமும் வங்காளியர்க்கும், 16 சதவிகிதம் தமிழருக்கும் மற்றும் 12 சதவிகிதம் குஜராதியினருக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது! இந்த ஆய்வில் தமிழரின் மரபணுத் தொடர்பின் பங்கு குறைந்துபோனதற்கு காரணமென்ன என்கிற கேள்விக்குச் செல்லாமல் (சோதனை செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்து பங்கு விகிதம் கூடவும் குறையவும் செய்யலாம்), வங்காளியர்க்கும், தமிழருக்குமான தொடர்பு எதிர்பார்த்ததே என்றாலும், குஜராத்தியினரின் குறிப்பிடத்தக்க பங்கு சிங்களரின் மரபணுவில் இருப்பதுமாக இவ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது.

மேலும் சில வரலாற்று ஆய்வளர்கள் - இளவரசன் விஜயன் வங்க நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை. மகாவம்சம் சொல்லுவதற்கு மாற்றாக வட மேற்கு இந்தியாவில் இருந்து - குறிப்பாக தற்போதைய குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

வங்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பவர்கள் கூற்றுப்படி - விஜயன் இருந்த சிம்மபுரம் என்ற இடம் என்பது தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கும் சிங்குர் எனகிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பர்கள் கூற்றுப்படி, சிம்மபுரம் என்கிற இடம், தற்போது குஜராத்தில் சிஹோர் என்கிறார்கள். விஜயனின் கப்பல் முதலில் சுப்பாரகா என்னும் இடத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் இருக்கும் சோபனா என்கிற இடமாக அறியப்படுகிறது. விஜயனின் கப்பல் வங்கத்தில் இருந்து கிளம்பி இருந்தால் எப்படி இந்தியாவின் மேற்கு கரையினை அடைந்திருக்க முடியம்? ஆகையால் மேற்கு கடற்கரையில் இருந்தே புறப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுக்கிறது.

குஜராத் நாட்டுப்புற பாடல்களிலும், மற்றும் ஒன்றிரண்டு திரைப்படங்களிலும் கூட, "இங்கு இருந்து இளவரசன் இலங்கை சென்று, அங்கு பெண்ணை மணந்தான்" என்கிற செய்தி பேசப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியிலும் இடம்பெறுகிறது சிங்கம். பழங்கால வங்கத்தில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் குஜராத்திலோ தொன்று தொட்டே சிங்கங்கள்  இருந்தன என்றும் தெரிகிறது.

மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கொண்டாலும் கூட - அதனை இந்தியாவின் வட மாநிலங்களான வங்காளம் மற்றும் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் நிதர்சனமான குறியீடாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் சிங்கள மொழி உருவாவதற்கும் இதுவே காரணமாகவும் அமைகிறது.

மரபணு சோதனை விவரங்களுக்கு விக்கி தளத்தில் இச்சுட்டியைப் பார்க்கவும்.