Showing posts with label முத்துசாமி தீக்ஷிதர். Show all posts
Showing posts with label முத்துசாமி தீக்ஷிதர். Show all posts

Sunday, February 22, 2015

ஆதித்தன் பெருமை

சௌரம் - ஒரு மதம் என்று சொல்லப்படும் அளவிற்கு அன்று சூரிய வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்தது. கலிங்கத்தின் கட்டிடக் கலையின் உச்சம் என சொல்லப்படும் கொனார்க் சூரிய கோவில் இன்றும் அதை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

சூரிய குடும்பத்திற்கும், அதில் உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமிக்கும் இன்றியமையாதது ஆதவன் என்பதனை எடுத்துரைப்பதாய் இருக்கிறது சூரிய வழிபாடு.

இராம-இராவண யுத்தத்தின் போது, வெற்றி-தோல்வி இல்லாது முடிந்த ஒரு மாலைப் பொழுதில் அகத்திய மாமுனி இராமனை அணுகி, "ஆதித்ய ஹிருதயம்" எனும் ஆதித்தன் துதியை எடுத்து இயம்பினார். இத்துதியானதை ஓதுவோருக்கு மனச் சோர்வையும் நோய்களையும் போக்கி உடலுக்கு சக்தி தரும் அருமருந்தாகச் சொன்னர்.  இதனில் சூரிய பகவான் தான் - பிரம்ம தேவன்; விஷ்ணு; ருத்ரன்; சண்முகன்; பிரஜாபதி தேவன்; தேவேந்திரன்; குபேரன்; காலன்; தர்மராஜன்; சந்திரன்; வருணதேவன் - என்றெல்லாம் வர்ணனை செய்யப்படுகிறது. இப்படி எல்லாமுமான பரம்பொருள் என்பது எல்லாமும் அடங்கிய சர்குண பிரம்மம் ஆகையால் - சூரியனை வழிபடுவது என்பதை பரம்பொருளைத் துதிப்பது போலாகிறது.

யோகாசனங்களில் பெரிதும் அவசியாமான ஒன்றாக கருத்தப்படும் "சூரிய நமஸ்காரம்" - உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் அரும்பயிற்சியாகக் கருதப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களில் சூரியனையும் ஒரு கிரகமாக சேர்க்கப்படுவதன் காரணம் தீமைகளை அழித்து நன்மைகளை நாட்டுவதே ஆகும்.

முத்துசாமி தீக்ஷிதரின் பாடல்களில் - சூரியன் மற்றும் இதர கிரகங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது உருப்படிகள் செய்திருக்கிறார். இவையாவன:

சூர்ய மூர்த்தே (சௌராஷ்டிரம்)
சந்தரம் பஜ மானஸ (அசாவேரி)
அங்காரகம் (சுரடி)
புதம் ஆஸ்ரயாமி (நாட்டைகுறிஞ்சி)
பிரகஸ்பதே (அடாணா)
ஸ்ரீசுக்ரபகவந்தம் (பரஜூ)
திவாகரதனுஜம் (யதுகுலகாம்போதி)
ஸ்மராம்யகம் (ரமாமனோஹரி)
மஹாசுரம் (சாமர)

இந்த ஒன்பது கீர்த்தனைகளில் அந்தந்த கிரகங்களில் சிறப்புகளும், ஜோசிய சாஸ்திரம் தொடர்பான நுட்பங்களையும், அவற்றுக்கான மந்திரங்களின் பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்ய மூர்த்தே 
இராகம் : சௌராஷ்டிரம் (சூர்யகாந்தம் ஜன்யம்)
தாளம்: த்ருவம்

பல்லவி
ஸூர்ய மூர்தே நமோऽஸ்து தே
ஸுந்த3ர சா2யாதி4பதே

அனுபல்லவி
கார்ய காரணாத்மக ஜக3த்ப்ரகாஸ1 -
ஸிம்ஹ ராஸ்1யதி4பதே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஆர்ய வினுத தேஜ:ஸ்பூ2ர்தே
ஆரோக்3யாதி3 ப2லத3 கீர்தே

சரணம்
ஸாரஸ மித்ர மித்ர பா4னோ
ஸஹஸ்ர கிரண கர்ண ஸூனோ
க்ரூர பாப ஹர க்ரு2ஸா1னோ
கு3ரு கு3ஹ மோதி3த ஸ்வபா4னோ
ஸூரி ஜனேடி3த ஸு-தி3னமணே
ஸோமாதி3 க்3ரஹ ஸி1கா2மணே
தீ4ரார்சித கர்ம ஸாக்ஷிணே
தி3வ்ய-தர ஸப்தாஸ்1வ ரதி2னே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஸௌராஷ்டார்ண மந்த்ராத்மனே
ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே
பா4ரதீஸ1 ஹரி ஹராத்மனே
பு4க்தி முக்தி விதரணாத்மனே


பாடற்பொருள்
சூரிய மூர்த்தியே - சாயா தேவியின் பதியே!
எல்லா காரியங்களுக்கும் காரணமாகத் திகழ்பவனே!
உலகங்கெளெல்லாம் ஒளிகொண்டுத் திகழச்செய்பவனே!
சிம்மராசியின் அதிபதியே!
உடலக்கு அழகையும் பலத்தையும் ஆரோக்யத்தையும் கொடுப்பவனே!
தாமரையை மலரச் செய்பவனே! (இதய தாமரையையும்)
கர்ணனின் தந்தையே!
கொடிய பாவங்களையும் வதைத்து காப்பவனே!
சந்திரன் முதலான கோள்களை ஆள்பவனே!
நடக்கும் எல்லா செயல்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே!
அழகான ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செல்பவனே!
எட்டெழுத்து ஸ்வர மந்திரமாகத் திகழ்பவனே!
தங்க ஒளியாத் திகழ்பவனே!
பிரம்மா, திருமால் மற்றும் சிவன் போன்றவனே!
பொருளையும் அருளையும் ஒருசேரத் தருபவனே!

இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள், ஆதித்ய ஹிருதயத்தினை விருத்தமாகப் பாடியபின் பாடிட இங்கு கேட்கலாம்:



Tuesday, December 28, 2010

பக்தியும் ஞானமும் (6) - சக்தி

ன்று, அன்று என்றில்லாமல் தொன்று தொட்டு சக்தி வழிபாடு நிலவி வருகிறது நம் நாட்டில். தட்சன் நடத்திய யாகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாட்சாயினியின் உடலை சிவன் சுமந்து மிக துயரத்தில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த மஹாவிஷ்ணு, சக்தியின் உடலை சக்ராயுதத்தில் துண்டு துண்டாக வெட்டும்போது, அந்த துண்டுகள் 51 இடங்களில் விழுந்ததாகவும், அவையே 51 சக்தி பீடங்களாக பாரதம் மழுதும் அமைந்தன என்றும் புராணங்கள் சொல்லும். ஜ்வாலாமுகி, சித்தபூரணி, காசி, பிரயாக், வைஷ்ணவி, பத்ரிநாத், நேபாளம், காஞ்சி, மதுரை, திருவாரூர், திருக்குற்றாலம், மைசூர், கொடுங்களூர், சோட்டாணிக்கரை, சிருங்கேரி ஆகியவை முக்கியமான தலங்களாகும்.

சக்தி வழிபாடு இருவகைப்படும். ஒன்று அக வழிபாடு. இன்னொன்று புறவழிபாடு. அக வபாட்டில், யோகியானவன் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, சிரசிலிருக்கும் சஹஸ்ரதள கமலமான சிவனிடம் ஐக்கியமாகச் செய்து ஆனந்தத்தை அடைகிறான். சக்தியின் புறவழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது ஸ்ரீசக்ரம் ஆகும்.

ஸ்ரீசக்ரம்: பல கோணங்கள் கொண்ட வரைபடம் போல் பார்க்க இருந்தாலும், இதன் கண பரிணாமத் தோற்றத்தில் பார்க்கையில் மேரு மலையைப் போன்றது.

1. இதன் முதல் நிலையில் இருப்பது நான்கு வாயில் கொண்ட பூபுரம் எனும் சதுர வடிவான சுவர்கள். இதற்கு த்ரைலோக்ய மோஹன சக்ரம் என்றும், இதில் 28 சக்திகளுக்கு - பிரகடயோகினிகள் என்றும் பெயர் சொல்வார்கள்.
2. இதன் அடுத்த நிலையில் 16 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வாசா பரிபூரக சக்ரம் என்பது பெயர். இதில் 16 குப்த மோகினிகள் வசிக்கிறார்கள்.
3. அடுத்த நிலையில் 8 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வ சம்க்ஷோபன சக்ரம் என்றும் இதில் 8 குப்த மோகினிகள் வசிப்பதாகவும் சொல்வார்கள்.
4. இதற்கு அடுத்த நிலையில் இருப்பது 14 கோணங்களை சர்வ சௌபாக்ய தாயக சக்ரம் என்னும் நிலை. இதில் வசிப்பவர்கள் 14 சம்பிரதாய யோகினிகள்.
5. ஐந்தாவது நிலையில், சர்வார்த்தசாதக சக்ரம் என்ற பெயருடன் 10 வெளிக்கோணங்கள் கொண்டது. இது 10 குளோத் தீர்ண யோகினிகளின் இருப்பிடம்.
6. ஆறாவதாக இருப்பது 10 உள்கோணங்கள் உள்ள சர்வ ரக்ஷாகர சக்ரமாகும். இதில் 10 நிகர்ப்ப யோகினிகள் வசிக்கிறார்கள்.
7. அடுத்தது, 8 திக்கு கோணமுடைய சர்வரோக ஹர சக்ரம். இதில் 8 ரகஸ்ய யோகினிகள் இருக்கிறார்கள்.
8. எட்டாவது நிலையில், முக்கோண வடிவில், சர்வசித்திப்ரத சக்ரத்தில் 3 ரகஸ்ய யோகொனிகள் வசிக்கிறார்கள்.
9. இறுதியாக, "பிந்து" என்கிற புள்ளியில், ஸ்ரீராஜராஜேஸ்வரி என்கிற பெயருடம் அன்னையவள் வீற்றிருக்கிறாள். இந்த ஆவரணத்திற்கு சர்வாநந்தமய சக்ரம் என்று பெயர்.

அம்பிகைக்கு கன்னிப் பருவத்தில் "பாலா" என்றும், குமரிப் பருவத்தில் "புவனேஸ்வரி" என்றும், முப்பது வயதுடன் "லலிதா" என்ற பெயரும், அகில உலக அன்னையாக "ராஜராஜேஸ்வரி" என்ற பெயரும் சொல்லப்படுகிறது. மேலும், தீமையை அழிக்க துர்கையாகவும் இருக்கிறாள் அன்னை. ஆதி சங்கரர் தோன்றுவதற்கு முன்பு, சக்தி வழிபாட்டின் தந்திர மார்க்கத்தில் பல்வேறு தவறான பிரயோகங்களும் இருந்தது. சங்கரர் அவற்றை அகற்றி, ஸ்ரீசக்ரத்தை சத் பூஜைகள் மூலம் ஆராதிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அவர் இயற்றிய சௌந்தர்ய லஹரி கீர்த்தனைகளாலும், சப்ததசி பாராயணம், குத்துவிளக்கு வழிபாடு போன்ற முறைகளாலும் - எளிமையான வழிபாடு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.

இனி, முத்துசாமி தீக்ஷிதரின் சக்தி கீர்த்தனைகளை ஆராய்வோம்.
சுமார் 160 சக்தி உருப்படிகளில், 32 கீர்த்தனைகள் விபக்தி கீர்த்தனைகள் ஆகும். விபக்தி என்பது, வடமொயில் வேற்றுமை உருபு - இது மொத்தம் 8 எண்ணிக்கை ஆகும். அபையாம்பிகை, நீலோத்பலாம்பிகை, கமலாம்பிகை, மதுராம்பிகை என நான்கு அம்பாள் பெயரிலும் - ஒவ்வொன்றுக்கும் 8 விபக்தி கீர்த்தனைகள் என - 32 எண்ணிக்கை அமையப் பெறுகிறது. இதில் கமலாம்பிகையின் மீது பாடப்பட்ட கீர்த்தனைகள் யாவும் ஸ்ரீசக்கரத்தின் நவாவரணங்களாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த நவாவரணங்களைப் பார்த்தால்:
1. கமலாம்பா சம்ரக்ஷது (ஆனந்த பைரவி, மிஸ்ர சாபு)
2. கமலாம்பாம் பஜரே (கல்யாணி, ஆதி)
3. ஸ்ரீ கமலாம்பிகயம் (சங்கராபரணம், ரூபகம்)
4. கமலாம்பிகாயை (காம்போஜி, கண்ட)
5. ஸ்ரீ கமலாம்பா பரம் (பைரவி, மிஸ்ர ஜம்பை)
6. கமலாம்பிகயா (புன்னாக வராளி, ரூபகம்)
7. ஸ்ரீ கமலாம்பிகயம் (சஹானா, திஸ்ர திரிபுட)
8. ஸ்ரீ கமலாம்பிகே(கண்டராகம், ஆதி)
9. ஸ்ரீ கமலாம்பா ஜயதி (ஆகிரி, ரூபகம்)
இந்த ஒவ்வொரு உருப்படியும் ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு ஆவரணத்தையும், அதன் தேவதைகளையும் பாடுகின்றன. இதைத்தவிர, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்புகளை வேறுபல கீர்த்தனைகளிலும் இடத்திற்கு தகுந்தார்போல் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார் தீக்ஷிதர்.
மேலும், லலிதா சகஸ்ரநாமவளிப் பெயர்களை தனது பல்வேறு கீர்த்தனைகளில் பிரோயோகப்படுத்தி இருப்பதை ஏற்கனவே இந்த இடுகையில் பார்த்திருக்கிறோம்.
மேலும்,
ஸ்ரீ மீனாக்ஷி (கல்யாணி) : இதில் காமாட்சி, விசாலாட்சி மற்றும் மீனாக்ஷி என்று முப்பெயர்களையும் சேர்த்திருக்கிறார்.
அன்னபூர்ணே (சாமர ராகம்) : பாயச அன்னத்தில் நிரம்பிய பாத்திரத்தையும், தங்க கரண்டியையும் வைத்திருப்பதாக அன்னபூரணியைக் குறிப்பிடுகிறார்.
ஆர்யாம் அபயாம்பாம் பஜரே (பைரவி): பராசக்தியை பூந்தோட்டம் அமைத்து பூமாலைகளை அணிவித்தல், சந்தனம் அரைத்தல், ஆலயம் கட்டுதல், சுத்தம் செய்தல், சுலோகம் படித்தல், வணங்குதல் முதலான உபசாரங்களால் அவளது அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறார்.
முக்கியமாக, மீனாக்ஷி மேமுதும் என்கிற பாடலைப்பாடி அன்னையின் முகத்தில் ஆனந்தக் கண்ணீரையும், சிரித்த முகத்தையும் வரவைத்தவர் என்பதை முன்பே இந்த பூர்விகல்யாணி இடுகையில் பார்த்திருக்கிறோம்.

இப்படியாக தீக்ஷிதர் தேவி கிருதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
குறிப்பாக, சாகித்ய வரிகளைப் பார்ப்பதற்காக, இங்கே பூர்ண சந்திரிகா இராக "ஸ்ரீராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி" எனும் பாடலை இங்கு பார்ப்போம்.

இப்பாடலை திருமதி.இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-rajarajeswari....


பல்லவி:
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி த்ரிபுர ஸுந்த3ரி
சிவே பாஹி மாம் வரதே3

அனுபல்லவி:
நீரஜாஸனாதி3 பூஜித பரே
நிகி2ல ஸம்சய ஹரண நிபுண-தரே

சரணம்:
சௌரி விரிஞ்சாதி3 வினுத ஸகலே
சங்கர ப்ராண வல்லபே4 கமலே
நிரதிசய ஸுக2 ப்ரதே3 நிஷ்கலே
பூர்ண சந்த்3ரிகா சீதலே விமலே

(மத்யம கால சாஹித்யம்)
பரமாத்3வைத போ3தி4தே லலிதே
ப்ரபஞ்சாதீத கு3ரு கு3ஹ மஹிதே
ஸுருசிர நவ ரத்ன பீட2ஸ்தே2
ஸுக2-தர ப்ரவ்ருத்தே ஸுமனஸ்தே2

பாடற்பொருள்:
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே - த்ரிபுரசுந்தரியே - சிவே -
சகல வரங்களையும் தருபவளே, என்னைக் காப்பாற்று.

பிரம்மா முதலானவர்களால் உபாசிக்கப் பட்டவளே,
எல்லாவித சந்தேகங்களையும் போக்குபவளே - பிரம்ம வித்யா நாயகியே.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலானவர்களால் போற்றப்படுபவள்.
(உன்னைப் போற்றினால் அவர்கள் எல்லோரையும் உபாசித்தது ஆகும்.)
பரமேஸ்வரனின் நாயகியே, பரம பவித்திரமே.
ஈடு இணையற்ற சுகமான ஆத்ம சொரூப ஞானமே.
எந்த விதமான அம்சமோ அவையங்களோ அற்ற சைத்தன்யம் நீ.

பரம அத்வைதத்தைப் போதிப்பவளே, லலிதே.
பிரபஞ்சத்தின் தோற்ற விளைகளமான சைத்தன்யமே!
குருகுஹனாம் தீக்ஷிதரால் போற்றப்படுபவளே!
ஜொலிக்கும் நவரத்தின பீடத்தில் அமர்ந்திருப்பவளே!
சுகத்தைத் தருபவளே, அகங்காரமற்ற மனங்களில்
எல்லாம் பிராகாசிப்பவளே, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!

~~~~~~
பிரம்ம வித்தையைச் சொல்லும் சாத்திரங்களால் அத்வைதமென போதிக்கப்படும் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அன்னை.
"ஜகம் நேதம் நேதம்" - பிரபஞ்சம் சத்தியமில்லை என்று அது விலக்கப்பட்டு, சைத்தன்மாய் இருக்கும் பரம்பொருள் அன்னை.
பகவான் கண்ணன் கீதையில் உபதேசிப்பது போல
"இந்த பிரபஞ்சம் என்னால் உருவாக்கப்பட்டாலும் - அது என்னுள் இல்லை. எல்லாவற்றைக் காப்பாற்றுவதும் நான் என்றாலும், நான் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இந்த பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து விலகி இருக்கிறேன்." (9.5)

மாயையினால் பிரபஞ்சம் சைத்தன்யத்தில் தோற்றுவிக்கப்பட - அதன் மூலமான சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அம்பாள்.
அதே மாயையினால் தான், அதன் களமான அம்பாளையே உபாசிக்க இயல்கிறது. மாயை சேர்ந்தால் தானே சகுண உபாசனை.
அதே மாயையினால் தான், பிரபஞ்சம் சத்தியமில்லை, பரமன் மட்டுமே சாசுவதமானது என்னும் மெய்ஞான சித்தி வந்து கடைத்தேறக் கிடைக்கிறது.

Sunday, December 26, 2010

பக்தியும் ஞானமும் (5) - திருமால்

என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும்நிறை பரப்பிரம்மம் அம்மா
என்றழைக்க, என்ன தவம் செய்தனை!
- ஊத்துக்காடு வேங்கடகவி

திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்தவுமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும். குழந்தைக் கண்ணன் தன் வாய் திறந்து அண்ட சராசரங்களையும் காட்டி அன்றே சொல்லிவிட்டான், சகுணப் பிரம்மமாக அவன் காட்சி அளித்தாலும், அவன் பரப்பிரம்மம் தான் என்று.

யாரோ என்றெண்ணாமலே நாளும் - இவன்
அதிசயங்களைச் சொல்லக் கேளும்!
சூராதிசூரன் இராமன் என்னும் பேரன்!
...
இங்கே வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை!
- அருணாசலக் கவிராயர்.

ஆம், குணங்களோடு கூடியதான பரப்பிரம்மம் போற்றிப்பாடிட வழி செய்து பரமனை அறிய மற்றும் அடைய மனிதனுக்கு வழி வகை செய்திட, அது நம் பெருந்தவப் பலன் தான்.

முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளில் இராமனையும் கண்ணனையும் பாடும் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகளை இவ்விடுகையில் பார்க்கவிருக்கிறோம்.

முதலில் ஜகம் புகழும் புண்ணிய கதை : இராமகாதை.
* மாமவ இரகுவீரா (மாஹாரி ராகம்) : இராம சொருபம் தத்வ சொருபம்
* ராமசந்திரேண சம்ரஷிதோஹம் : பிரம்ம, விஷ்ணு, ருத்ர சொரூபம்
* ஸ்ரீ ராமச்சந்ரோ (ஸ்ரீரஞ்சனி) : விஸ்வாமித்திரரின் யாகத்தை காத்தது, தாடகை வதம், மிதிலைப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதை மணம், பரசுராமரின் கர்வத்தை அடக்குதல் - என்று பாலகாண்டம் பளிச்சிடுக்கிறது.
* இராமச்சந்திராதன்யம் (தன்யாசி) : சுபாகு, மாரீசன், கரன், தூஷணன் போன்றோர்களைக் கொன்றது குறிப்படப்படுகிறது.
* மாமவ பட்டாபிராம (மணிரங்கு) : அனுமனால் பாடப்பட்டு, பரதன், இலக்குவன், சத்ருக்கணன், விபீடணன் மற்றும் சுக்ரீவன் போன்றவர்களால் சேவிக்கப்பட்டு, முனிவர்களின் ஆசிகளுடன் நவரத்தின மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்மாசனத்தில் அன்பின் சீதையுடன் கொலு வீற்றிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியினை தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது - பாடலில் தான்.

அடுத்து கவின்மிகு கண்ணன் கதை.
* பாலகோபால (பைரவி) : கம்ச வதம், துரோண, கர்ண, துரியோதனன் முதலானவர்களை ஒஇத்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது.
* ஸ்ரீகிருஷ்ணம் பஜரே (ரூபவதி): பாரதப் போரில் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தது.
* பார்த்தனின் சாரதியானதை ஒரு பாட்டில் 'தனஞ்சய சாரதே' என்கிறார்
* கிருஷ்ணாநந்த முகுந்தமுராரே (கௌடிபந்து) : நாராயணன், வாசுதேவன், கோவிந்தன், பத்மநாபன் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

மேலும், பிளிறு கேட்டோடி வந்து களிறு மீட்டது - கஜேந்திரனைக் காப்பாறியது பல கீர்த்தனைகளில் குறிப்படப்பட்டுள்ளது.
பக்தன் பிரகலாதனை பரிபாலித்தது, கூர்மாவதாரம், வாமனாவதாரம் போன்றவயும் அவரது கீர்த்தனைகளில் இடம்பெற்றுள்ளன.
அஜாமிளன், அம்பாரிஷன் கதைகளும் கூட இடம்பெற்றுள்ளன.

திருமால் திருத்தலங்களை இவரது பாடல்கள் மூலமாகவே தரிசித்து விடலாம். திருப்பதி, காஞ்சி, சோளங்கிபுரம், திருவரங்கம், சிதம்பரம், திருக்கண்ணமங்கை, அழகர் கோவில், குருவாயூர், திருவனந்தபுரம் என நெடியோன் தலப்பட்டியல் நீள்கிறது. "சேஷாசல நாயகம்" என்னும் வராளிராக கீர்த்தனையில் திருவேங்கடத்தானின் அலங்கார அகுகளை வர்ணிப்பார்.

இந்த இடுகையில் நாம் சாகித்யத்துடன் பார்க்கப் போகும் பாடல் 'சந்தான ராமசுவாமினம்' என்னும் பாடல்.
இராகம் : ஹிந்தோள வசந்தம்
பாடற்தலம்: நீடாமங்கலம் (திருவாரூர்)

திருமதி, இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்:
santhanaramaswamin...


பல்லவி

சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே

அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்

சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்

பாடற்பொருள்:
பாடலில் பல்லவியிலேயே தீஷிதர் பிரம்மத்தின் இரண்டு பரிணாமங்களை எடுத்து இயம்பி விட்டார். சந்தான இராம சாமி - இவரே தான் குணங்களோடு கூடியவர் - இவரேதான் குணங்கள் இல்லாமலும் இருப்பவர். எதற்காக இப்படி இருக்க வேண்டும் என்றால் - நமக்கு அருள் செய்வதற்குதான் - அதற்காகத்தான் குணங்கள் பொருந்திய சகுண பிரம்மமாகத் திககிறார்.

எப்போதும் யமுனாம்புரமதில்(நீடாமங்கலம்) வாசம் செய்பவர். ஹிந்தோள வசந்தம் என்னும் இராகத்தில் பாடப்படும் மாதவர்.
சச்சிதானந்த சொருபம். சத்யம் - ஞானம் - ஆனந்தம் - என மூன்று சொருபங்களிலும் ஆனவர்.
"சிவம்" - சிவம் என்னும் நிலை - துரியம் - இதுவே சைத்தன்யம்.

பக்தர்களுக்கு சந்தான சௌபாக்கியங்களை அருள் செய்பவர்.
அவரது தாமரைப் பாதங்கள் சாதுக்களின் இருதயத்தில் தெரிகிறது. (அகங்காரம் அற்றவர்களிடமெல்லாம் அவர் இருப்பார்)
சிந்தாமணி முதலான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்.
சைத்தன்ய சொருபமானவர்.
சூரியன் மற்றும் சந்திரன் இவரது கண்களாய் அமைந்தன.
குருகுஹனான தீக்ஷிதரால் துதிக்கப்படுபவர்.
பொய்யானது இங்கே இல்லை, ஜடமானது இங்கே இல்லை. துக்கம் இங்கே இல்லை. பின் என்ன?
சத்யமாயும், ஞானமாயும், ஆனந்தமாயும் திகழும் சச்சிதானந்த சொரூபம் மட்டுமே. ஆதி அந்தமில்லா சச்சிதானந்தம்.

~~~
திருமாலைப் பற்றிச் சொல்லும்போது அவனது திருமார்பினை விட்டு அகலாத திருமகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமகள் பெருமையினைப் பாடும் 'ஹிரண்மயிம் லக்ஷ்மீம்' எனும் லலிதா ராகப் பாடலை இங்கு முன்பே பார்த்திருக்கிறோம்.
~~~
ஸ்ரீ சத்யநாராயணம் (சுபபந்துவரளி) கிருதியில் தீக்ஷிதர் சொல்லுவது போல, சத்யம் - ஞானம் - ஆனந்தம் எனும் வடிவில் எப்போதும் உள்ளார் நாராயணர். பரமாத்ம சொரூபத்தைத் தவிர பிரபஞ்சத்திற்கு தனியான ஒளி இல்லாததால், சர்வமாக நாராயணர் இருக்கிறார்.

குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மமாக போற்றப்பட்டாலும் - குணங்களற்ற நிர்குண பிரம்மமாய் இராமன் இருப்பவன் என்பதை மகான் கபீர்தாஸர் எப்படி வலியுருத்தி இருக்கிறார் என்பதனை சூரி சாரும் கபீரன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாய் இருக்கும்.

Friday, December 24, 2010

பக்தியும் ஞானமும் (4) - சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை
தரிசித்தளவில் முக்தி பெறலாம்.
- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.
-நடராஜப் பத்து.


சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


(என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.)

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

னி, முத்துசாமி தீஷிதரின் கிருதிகளில் இருந்து:

* சதாசிவனே (சிந்து ராமக்ரியா ராகம்) : சத்யோதாதி பஞ்சமுகன்
* தியாகராஜனே: 'பஞ்சக்ருத்யகரணேன': ஐந்து தொழில்களும் குறிப்படப்படுகின்றன.
* தியாகராஜாயே நமஸ்தே (பேகடா ராகம்): முனிவர்கள் முதல் பூச்சிகள் வரை எல்லா உயிரனங்களுக்கும் முக்தி தர வல்லவர்.
* ருத்ரகோப ஜாத வீரபத்ரமாஸ்ரயே (ருத்ரபிரியா ராகம்): வீரபத்ரர்
* கால பைரவம்: (பைரவி) : காலபைரவர்
* மாரகோடி கோடி லாவண்யாய (ஆரபி) : பிக்ஷாடணர், விபூதி ருத்ராக்ஷ அபிமானர்
* ஸ்ரீதக்ஷிணாமூர்திம் (பேனத்யுதி ராகம்) : வேதங்களால் போற்றப்படுபவர், ஆலமரத்தடியில் வசிப்பவர்
* சங்கர அபிராமி மனோகரம் (மனோகரி) : மார்கண்டேயனைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது
* நீலாசலநாதம் (சம்யுக்தி ராகம்) : அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்த்ரம் வழங்கியது
* ஸ்ரீமாத்ருபூதம் (கானடா) : தாயுமானவர்
* அருணாசல நாதம் (சாரங்கா) : நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாம் திருவண்ணாமலையில் 'தேஜோமய லிங்கம்' தனைக் குறிப்பிடுகிறார்.
* சிந்தயமாகந்த மூலகந்தம் (பைரவி) : காஞ்சி ஏகாம்பரர்- மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவர், பிருத்வி லிங்கம்
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்) : நடராஜர் - பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு திருவடி தரிசனம் தந்தது.

- இப்படியாக, பட்டியலில் இவரது பாடல்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

குறிப்பாக, தில்லைக்கூத்தனைப் பாடும் இக்கீர்த்தனையைப் பார்ப்போம்:
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்)
பாடுபவர்: டி.எம்.கிருஷ்ணா


பல்லவி
ஆனந்த3 நடன ப்ரகாசம் சித்ஸபே4சம்
ஆச்ரயாமி சிவ காம வல்லீசம்


அனுபல்லவி
பா4னு கோடி கோடி ஸங்காசம்
1பு4க்தி முக்தி ப்ரத3 த3ஹராகாசம்
தீ3ன ஜன ஸம்ரக்ஷண சணம்
தி3வ்ய பதஞ்ஜலி வ்யாக்4ர பாத3-
த3ர்சித 2குன்ஞ்சிதாப்3ஜ சரணம்


சரணம்
சீதாம்சு க3ங்கா3 த4ரம் நீல கந்த4ரம்
ஸ்ரீ கேதா3ராதி3 க்ஷேத்ராதா4ரம்
பூ4தேசம் சார்தூ3ல சர்மாம்ப3ரம் சித3ம்ப3ரம்
பூ4-ஸுர த்ரி-ஸஹஸ்ர முனீச்வரம் விச்வேச்வரம்
நவனீத ஹ்ருத3யம் ஸத3ய 3கு3ரு கு3ஹ தாதம்
ஆத்3யம் வேத3 வேத்3யம் வீத ராகி3ணம்
அப்ரமேயாத்3வைத ப்ரதிபாத்3யம்
ஸங்கீ3த வாத்3ய வினோத3 தாண்ட3வ -
ஜாத ப3ஹு-தர பே4த3 சோத்3யம்


பாடற்பொருள்

ஆனந்த நடனம் - பேரொளிப் பிரகாசம் - சிற்சபை தன்னில் சரணடையும்
என்னைக் காத்தருள்வாய், சிவகாமவல்லி பதியே, சிவனே.

கோடிகோடி சூரிய பிரகாசமானவனே - சூரியன் முதலான எல்லா ஒளிக்கும் மூல ஒளியே.
தகராகாசம் என்னும் இதய ஆகாசத்தில் - சைத்தன்ய சொருபமாய் இருப்பவனே,
சித்த சுத்தி வந்து கடைத்தேறச் செய்பவனே, நீ தீனர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவன்.
பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு தன் பொற்பாதத்தைக் காட்டிய பொன்னம்பலவனே.

சிவன், சந்திரன் மற்றும் கங்கையைத் தரித்தவன், நீலகண்டன்.
கேதாரம் முதலான 12 தலங்களை இருப்பிடமாய்க் கொண்டவன். (இப்பாடலின் இராகமும் கேதாரம்!)
பூதகணங்களுக்கு அதிபதி. புலித்தோலை அணிந்தவன்.
சித் + அம்பரம் = சிதம்பரம் : அவனது சித்தம் சைத்தன்யமாய் ஆகாச வெளியில் எங்கெங்கும் பரவியிருக்க, எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
முனிவர்களால் கொண்டாடப் படுபவன். உலகங்களுக்குத் தலைவன்.
இளகிய மனம் கொண்டவன். குருகுஹனாம் முருகனின் - வேதத்தின் உட்பொருளின் - தந்தையானவன்.
ஈடு இணையிற்றவன், அத்வைதமாய் இருப்பவன். அத்வைத வேதாந்தத்தைப் பிரகாசிப்பவன்.
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.

இப்படியாக, ஈசன் குணங்களோடு கூடிய ஈஸ்வரனாக காட்சி அளிப்பது - பக்தர்கள் அவனைப்போற்றிப் பாட ஏது செய்யத்தான். மாயையுடன் சேர்ந்த நிலையில் சகுண பிரம்மமாவதும், நிர்குணமாய் இருப்பதும் - அவன் ஒருவனே - அவனே பரம்பொருள் எனும் மெய்ப்பொருள் தனை அறிவோம்.

Tuesday, December 21, 2010

பக்தியும் ஞானமும் (3) : தண்டாயுதபாணி

சப்தமும் அறியேன், அந்த சப்தத்தின் அர்த்தமும் அறியேன். ஆனால் என் இதயத்தில் ஆறு முகம் கொண்ட சத்யமான பொருள் ஒன்று பிராகசிக்கின்றது.
- சுப்ரமணிய புஜங்கம், ஆதி சங்கரர்.
ர்நாடக இசையில், முத்துசாமி தீக்ஷிதர் என்ற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது அவரது 'குருகுஹ' என்னும் அவரது இயற்றியவர் முத்திரையும், அதில் பொதிந்திருக்கும் கார்த்திகேயனது பெயரும் தான். 'குருகுஹ' என்னும் முத்திரைக்குக் காரணம், அவர் பாடல் இயற்றுவதை துவக்கி வைத்த அவது குருவும், குகனான திருத்தணி முருகனும் என்பதால். தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் மனக்குகையில் பிரகாசிப்பவனாகவும், ஞானத்தை உபதேசிக்கும் குருவாகவும் அமைந்திருப்பதுதான் அப்பெயருக்கு எப்பொருத்தம்!

ஷண்முகனுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள்!!! முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளின் சாகித்யத்தில் அவையாவும் விரவியிருப்பது கண்கூடு. 'பரமசிவன் குமாரன்', 'பார்வதி புத்திரன்', 'கார்த்திகைப் பெண்டிரால் அரவணைக்கப்பட்டவன்', 'கந்தன்', 'குகன்', 'வேலாயுதன்', 'சேவல் கொடியோன்', 'தண்டாயுதபாணி', 'மயில் வாகனன்', 'தேவசேனதிபதி', 'ஆறு எழுத்தோன்', 'சரவணபவ', 'வள்ளி மணாளன்', 'தெய்வயானையின் கணவன்', 'அசுரர்களை அழித்தவன்', 'பிரணவ மந்திரத்தை உபயோகித்தவன்' போன்ற பற்பல பெயர்களால் குமரனை அழைத்து மகிழ்ந்திருக்கிறார் தீக்ஷிதர் பெருமான்.

குறிப்பாக, கீகண்ட தீக்ஷிதரின் கிருதிகளில் இருந்து:
* குருகுஹாதன்யம் (பல ஹம்ச ராகம்) :
'குப்த ஆகமார்த்த தத்வ ப்ரபோதினோ': மறைந்திருக்கும் வேத பொருளை அறிந்தவர்
'வாதிதராந்த தத்வஸ்வரூபிண': பூமி முதல் சிவன் வரையான 36 தத்துவங்களை உடையவர்
'சக்ஸ்ரதள சரசிஜ மத்ய நிவாசின' : 1000 தாமரை இதழ் கொண்ட சக்கரத்தின் மத்தியில் அமர்ந்தவர்
'ஜீவைக்யாத்மனோ' : ஜீவனோடு ஐக்கியமானவர்
'தஹரவித்யா ப்ரதாயக பரமாதனோ' : தஹர வித்யைக்கு காரணமானவர்
போன்ற பொருள் பொதிந்த பதங்களைக் காணலாம்.

* சுவாமிநாத (நாட்டை ராகம்)
'பூமிஜலாக்னி வாயுககன் கிரண' : பஞ்ச பூதங்களின் சொரூபமானவர்
'ப்ரப்ரவாமதி பூஜிதபதேன' : ப்ரப்ரவாம முதலான மந்திரங்களால் பூஜிக்கப்பட்டவர்

* ஷடானனே (கமாஸ் ராகம்)
'ஷட் ஆதாராதி சக்தியாத்மகே' : ஆறு சக்தியாக இருப்பவர் , அறுகோனங்களின் மத்தியில் இருப்பவர்

* ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே (காம்போதி ராகம்)

'தாரக சிம்மமுக சூரபத்மாசுர சம்ஹர்த்ரே': தாரகாசுரன், சிம்மமுகன், சூரபத்மாசுரன் முதலிய கொடியவர்களை வதைத்தவர்.

* மானச குருகுஹ ரூபம் பஜரே (ஆனந்த பைரவி)

திருத்தணி முருகனைப் பாடும் அற்புதமான பாடல். இப்பாடலில் முருகப் பெருமானை குருவாய் பாவிக்கிறார். சத்வ குணம் நிறைந்த சதாசிவமாய் இருபவர் சண்முகன். இவ்வுருவத்தில் இருந்துதான் எல்லா ஜீவனும் அவித்தையுடன் பிறந்தது. அண்ட சராசரமும் அவனது தாமச குணத்தின் குறிப்புதானோ!. தாரகேஸ்வரனாகவும் முருகப் பெருமான் இருந்து பிறவிக்கடலைக் கடக்க பேருதவி புரிகிறார்.அவரே 'ஆனந்தபைரவராக' - பேரானந்தப் பெருவொளியாய்த் திகழ்கிறார்.
இப்பாடலை சமீபத்தில் நடந்த ஜெயா டி.வி மார்கழி மகோற்சுவத்தில் மல்லாடி சகோதரர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



அடுத்து, ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த 'தண்டாயுதபாணிம்' என்கிற கீர்த்தனையை கொஞ்சம் விரிவாகப் பார்த்தால்:

மனமே, தண்டாயுதபாணியை நினை. அசுரரை தண்டித்தவனை, கருணைக் கடலானவனை, தேவர்களால் போற்றப்படுவனை நினை மனமே.

நூறுகோடி சூரியனாய் பிரகாசிப்பவனே! எப்போதும், எல்லாவிடத்திலும் நிறைந்து, எதனாலும் குறுக்கப்படாதவனே! உயர்ந்த கற்களை மாலையாய் அணிந்தவனே! தாரகாசுரனையும், சூரபதுமனையும் தண்டித்தவனே!

புன்னகை தவழும் தாமரை முகத்தவனே! மாதவன் மருகனே! தேவர்கள் பணியும் தேவசேனாபதியே! முனிகளின் மதிப்பே! முசுகுந்த வம்சத்தைக் காப்பாற்றியவனே! பிரம்மா மற்றும் விஷ்ணுவால் வணங்கப்பட்டவனே! உனது அதரங்கள் தேனானது. பூமிதத்துவத்தினை உனது சந்தனத்தில் தெரிவிப்பவனே! ஆகாச தத்துவத்தினை, மலரின் மணத்தில் தெரிவிப்பவனே! வாயு தத்துவத்தினை தூபத்திலும், நெருப்பினை, தீப வரிசையிலும், நீரினை உனது பிரசாதமாகவும் தருபவனே!

குருகுஹனே - நீயே பேரானந்தமாய் இருப்பவன். தாமரைப் பாதங்களைக் கொண்டவன். தனது சேனையில் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொண்டவனே! தூய ஞானமதைத் தரும் பேரானந்தமே!

பாடலை திருமதி இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
dandayudapAni-song...


தண்டாயுத பாணிம்
ராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ரூபகம்

பல்லவி
த3ண்டா3யுத4 பாணிம் த3ண்டி3த தை3த்ய ஸ்ரேணிம்
த3யா நிதி4ம் ப4ஜ ரே ஹ்ரு2த3ய ஸததம் ஸுர வினுதம்

அனுபல்லவி
சண்டா3ம்ஸு1 ஸ1த கோடி ஸங்காஸம் ஜக3தீ3ஸம்
அக2ண்ட3 ரூபம் அண்ட3ஜ மணி மண்ட3ல-மய குண்ட3லாதி3 -
(மத்4யம கால ஸாஹித்யம்)
மண்டி3தாங்க3 ஸுகுமாரம் க2ண்டி3த தாரகஸூரம்
பண்டி3த-தர நவ வீரம் சண்டி3கேஸாவதாரம்

சரணம்
மந்த3ஸ்மித வத3னாரவிந்த3ம் மாதுல கோ3விந்த3ம்
ஸரணாக3த ஸுர ப்3ரு2ந்த3ம் ப3ஹு மானித முனி ப்3ரு2ந்த3ம்
பரிபாலித முசுகுந்த3ம் ப்ரணத விரிஞ்சி முகுந்த3ம்
அத4ர மது4ர மகரந்த3ம் ம்ரு2து3-தர வசனம் அனிந்த3ம்
மாயா மூல கந்த3ம் ஸ்கந்த3ம் ஸந்த3ம்
ப்ரு2தி2வ்யாத்மக க3ந்த4ம் க3க3னாத்மக ஸும க3ந்த4ம்
வாயு-மய தூ4ப க3ந்த4ம் வஹ்னி-மய தீ3ப ப்3ரு2ந்த3ம்
அம்ரு2தாத்மக ரஸ ப்3ரு2ந்த3ம் ஸ்ரீ கு3ரு கு3ஹம் ஆனந்த3ம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸுந்த3ர கர சரணாரவிந்த3ம் ரத2 க3ஜ துரக3 ப்3ரு2ந்த3ம்
ஸத்ய ஞானானந்த3ம் அதி ஸ்வச்ச2ந்த3ம்

ராஜ யோகத்தில் மணிபுர சக்கரத்தின் அதிபதி கந்தன். மூலாதாரத்தில் இருந்து மூலக்கனலை மேலெழுப்பி, சகஸ்ரத்தில் சேர்ப்பதில் துணை செய்பவன். 'சேனைகளுக்குள் ஸ்கந்தன்' என கீதை சொல்லுவதுபோல் இவன் தேவசேனாதிபதி. மனதில் எழும் பயங்களைப் போக்க 'யாமிருக்க பயமேன்?' போக்கிடுபவனாய் வேலுடன் நிற்பவன். விரைந்தோடி துணை புரிபவன் - அதனால் விரைவான ஊர்தியாம் - மயில் வாகனன். மணிபுர சக்ரத்திற்கான வாகனாக செம்மறி ஆடு சொல்லப்படும். குமரனுக்கு ஆடும் வாகனமாய் இருப்பதை திருப்புகழ் உரைக்கும்.

'சுப்ரமண்யன்' என்றாலே வேதத்தின் உட்பொருள் என்பது பொருள். பொன்னேரகம்பதியான சுவாமிநாதன் - ஞான பண்டிதன். அருணகிரியாருக்கு 'சும்மா இரு, சொல்லற' எனும் ஞான உபதேசம் சொன்னவன். அண்டி வரும் அடியார் மனமதில் குகனாய் வாசம் செய்து, அவர்தாம் மன இருள் அகற்றுபவன். உபநிடதங்களில், நாரதர் தனது துன்பங்களை போக்க வேண்டிட, சனத்குமாரர் அவரது அவித்தைகள் அகல, ஆத்ம உபதேசம் செய்திடுவார். அப்படிப்பட்ட சனத்குமாரர் சாட்சாத் குமரக் கடவுளின் அவதாரம் எனவும் உபநிடதங்கள் சொல்லும். கேட்டதைக் கொடுக்கும் குழந்தை - குறிப்பாக ஆன்ம ஞானத்தைக் கொடுக்கும் குழந்தை குமரன். கேட்க வேண்டியது மட்டுமே நம் பணி. குமாரா, கொடுத்தருள் செய்திட வேண்டும். முருகனை நினைந்துருகி ஒருதரம் பாடி நின்றால், கருணையுடனே வந்து காட்சி தருவான். முருகா! முருகா! முருகா!.

குணங்கள் பொருந்திய சகுணப்பிரம்மமாக குமரக் கடவுள் வழிபடப்பட்டாலும், அவன் உண்மையில் நிர்குணபிரம்மம் என உணர்வோம். எந்த ஒரு பொருளால் சூரியன் முதலான ஒளி தரும் பொருட்கள் எல்லாம் ஒளி விடுகிறதோ - அந்த மூலப்பொருளாக இருப்பது கந்தன். எந்த ஒரு பொருள் எல்லாமுமாக இருக்கிறதோ, எந்த ஒரு பொருளாக அறிந்தால் வேறொன்றில்லை என்கிற நிலை ஏற்படுகிறதோ அப்பொருளாம் பரம்பொருளாய் இருக்கிறான் முருகன். அதே பரம்பொருள் குன்று தோறும் சகுணப் பிரம்மமாக வீற்றிருந்து அடியார்களின் குறை தீர அருள் பாலிப்பது நாம் செய்த தவப்பயனால் தான்!

அடுத்த பகுதியில் ஆனந்த நடமாடும் தில்லை ஈசனைப் பாடும் தீக்ஷிதர் கிருதிகளைப் பார்ப்போம்.
கடந்த பகுதிகள்:
பக்தியும் ஞானமும் (2) : கணபதி
பக்தியும் ஞானமும் (1) : முகவுரை

Sunday, December 19, 2010

பக்தியும் ஞானமும் (2) : கணபதி

காலைப் பிடித்தேன் கணபதி - நின் பதம் கண்ணிலொற்றி!
- மகாகவி பாரதி
(சென்ற பகுதியில் முகவுரையைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி இப்போது...)
புராணக் கதைகளில் பார்த்தால் விநாயகர் யாருடைய உதவியையும் நாடியது கிடையாது. ஆனால் எல்லோரும் அவரது உதவியை நாடி இருப்பார்கள். திரிபுர சம்ஹாரத்தின் போது தேர் முறிந்து இடையூறு ஏற்பட, சிவனே விநாயகரை பூஜை செய்து, அசுரர்களை வென்றார். பண்டாசுர அரக்கனை வெல்ல, தேவி விநாயகரை நாட, அரக்கனின் விக்ன யந்திரங்களை அகற்றி தேவிக்கு வெற்றியை அளித்தார். ஹேரம்ப மூர்த்தியாக ராமர் உபாசித்து, இராவணனை அழித்தார். அர்க்க கணபதியாக சூரியனால் வழபடப் பட்டவர். பிரம்மா விநாயகரை வழிபடாததால், சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாம். முருகனுக்கோ, வள்ளி மணம் புரிய துணை புரிந்தவர். இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். சரி, இப்படியெல்லாம் ஏன் சொல்கிறார்கள்? தெய்வத்திற்குள் ஏன் இந்த உயர்வு தாழ்வுகள் என யோசிக்கலாம். இப்படியெல்லாம் புராணக் கதைகள் சொல்வதின் பிண்ணணியில் தத்துவங்கள் அடங்கி இருக்கும்.

அது என்ன? எதையும் கணபதி துணையுடன் துவங்குதல் நன்மையில் முடியும் என்பது மரபு. இதற்கு ஆழமான காரணங்களுண்டு. கணபதி மூலாதார சக்கரத்தின் முதல்வன். அசுத்த மாயைகள் அண்டாமல் காப்பவன். வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களைந்தால் தான், மனமது முக்தி என்னும் நிலைக்குத் தயாராகிறாது. எந்த ஒரு தெய்வதை வணங்குவதற்கு முன்பாகவும் கணபதியை வணங்கிடுதல், குறுக்கிடும் இடர்களை களைவதற்கு துணை புரியும். இவ்வுண்மைகள் தான் திரும்பத் திரும்ப பல்வேறு புராணங்கள் மூலமாக சொல்லப்படுகின்றன!

முத்துசாமி தீக்ஷிதரின் கணபதி கீர்த்தனைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றில் சொல்லப்படும் குறிப்புகளைப் பட்டியலிடலாமா!

1. ஸ்ரீ மூலாதார சக்ர விநாயக (ஸ்ரீராகம்)
* மூலாதார சக்கரத்தின் அதிபதி
* 600 சுவாசங்களுக்கு அதிபதி
2. பஞ்ச மாதங்கமுக கணபதினா (பிலஹரி)
* பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்ச சிருஷ்டிக்கு காரணம்
3. ஸ்ரீ கணேசாத் பரம்
* பூமி முதல் சிவன் வரை 36 தத்துவங்களை தன்னுள் கொண்டவர்
4. விநாயக (வேஹவாகினி ராகம்)
* சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றை முக்கண்களாகக் கொண்டவர்
5. கஜானானயுதம் (வேஹவாகினி ராகம்)
* அர்த, காம, மோட்சம் என்னும் வாழ்வியல் குறிக்கோள்களை அடையத் தருபவர்
6. வாதாபி கணபதிம் (ஹம்சத்வனி)
* பிரணவ சொருபத்தினைக் கொண்டவர்
7. மஹா கணபதிம் (தோடி)
* திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனால் அர்ச்சிக்கப்பட்டவர்
8. வல்லப நாயகஸ்ய (பேகடா)
* முருகன் வள்ளி திருமணத்திற்கு உதவியவர்
9. லம்போதராய (வராளி)
* அகத்தியரால் வணங்கப்பட்டவர்

இப்படியாக முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளில் இருந்து பல்வேறு சுவையான குறிப்புகளையும் கண்டெடுக்கலாம்.

இந்த படத்தில் பார்த்தீர்களா. கள்ளமற்ற வெள்ளைக் குழந்தைகள் தங்கள் பிஞ்சுக்கைகளால் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனைமுகனும், குமாரசாமியும் அவர்களதுகூட எப்போதும் இருப்பார்கள்.

From என் வாசகம்


'ஸ்ரீகணேசாத் பரம்' என்னும் கீர்த்தனையை இங்கு பார்க்கலாம்.

இப்பாடலை திருமதி.ராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-ganesatparam-s...


ஸ்ரீ கணேசாத் பரம்
ராகம்: ஆர்த்ர தேஸி
தாளம்: ஜம்ப


பல்லவி
ஸ்ரீ க3ணேசாத் பரம் சித்த ந ஹி ரே ரே ஸிவாதி3 ஷட்-த்ரிம்ஸத்-தத்வ ஸ்வரூபிண:

அனுபல்லவி
வாகா3தி3 பஞ்சக வ்யாபார ரஹித - ஹ்ரு2த3யாகாஸ ஸம்ஸ்தி2தாத்- யோகி3 ராஜார்சிதாத்

சரணம்
மாதங்க3 வத3னாத்-உமா ருத்3ர த3ர்ஸிதாத் பூ4த பௌ4திக விஸ்வ பூஜித களேப3ராத் ஸ்வேதார்க ஸும த4ராத் ஸ்வேதர விவர்ஜிதாத் பீதாம்ப3ராவ்ரு2தாத் ப்3ரஹ்மாத்3யுபாஸிதாத் (மத்4யம கால ஸாஹித்யம்) பூ4தாதி3 நுத பதா3ம்போ4ஜாத்-ஸிவாத்மஜாத் ஸீதாம்ஸு த4ர பரம சிவ - கு3ரு கு3ஹாக்3ரஜாத்

பாடற்பொருள்:
சிவன் முதலான 36 தத்துவங்களையும் தன்னில் அடக்கிய கணபதியே, நீயே பரமன். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை. 'வாக்கு' முதலான ஐம்புலங்களும் நுழைய முடியாத இதயக் குகையில் - சிதாகாசத்தில் வசிப்பவனே - யோகியரால் வணங்கப்படுவனே!

யானை முகத்தவனே, சிவன் மற்றும் பார்வதியுடன் இருப்பவனே! வெள்ளை அர்க்க மலர் மாலை அணிபவனே! தன்னிலும், எல்லோரிலும் இருப்பவனே! பீதாம்பரம் அணிந்தவனே! பிரம்மனால் வணங்கப்பட்டவனே! தாமரை பாதங்கள் கொண்டவனே! பூத கணங்களால் போற்றப்படுபவனே! குருகுஹனாம் முருகனுக்கு மூத்தவனே! குளிர்பிறை தரித்த சிவனது மூத்த சேயே, உன்னில் உயர்ந்தது யாதுமில்லை.
~~~~~~~~~~~~

இவ்வாறாக, குணங்களோடு கூடிய தெய்வமாக போற்றினாலும், கணபதி முழுமுதல் பரமன், எல்லாவற்றிலும் உயர்ந்த பிரம்மம் என்றுதான் போற்றுப்படுகிறார். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை என்கிறார். இதன் காரணம், இறுதியில் அடைய வேண்டிய இலக்கான ஞானமதாகவே - பரம்பொருளாகவே - கணபதி இருப்பதுவேயாம்.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.

ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நான்மணிமாலை


அடுத்த பகுதியில் ஆனைமுகனுக்கு அடுத்தவனாம் அழகன் கார்த்திகேயனைப் பாடும் தீக்ஷிதர் கீர்த்தனைகளைப் பார்ப்போம்.

Wednesday, December 15, 2010

பக்தியும் ஞானமும் - பகுதி 1

பொதுவாக எல்லோருக்கும் ஞான மார்க்கம் என்பது பக்தி அல்லாத வழி என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் முக்தி அடைவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, என்றாலும், 'முக்தியானது ஞானத்தால் மட்டுமே கிட்டும்' என்பது ஆதி சங்கரரின் முடிபு. அதே சமயம், பலரும் ஞான மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு - மிக முக்கியமான பங்குண்டு என்பதையும் உணர வேண்டும். ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான 'சைவம்', 'சாக்தம்', 'வைணவம்', 'கணாபத்யம்', 'கௌமாரம்' மற்றும் 'சௌரம்' ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடி கோலினார். அதற்குக் காரணமென்ன என்று பார்த்தால், ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது தெளிவாகும். நாம் எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கருவி பக்தியாகும்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249)

ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை.

ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில்.
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

- நம்மாழ்வார்
வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது?

வேதாந்தத்தில் 'பிரம்மம்' இரண்டு நிலைகளில் விளக்கப்படுகிறது. முதலாவது, 'நிர்குண பிரம்மம்' - அதாவது, குணங்கள் இல்லாத பிரம்மம் குணங்கள் இல்லாததால் - அது கருப்பா, சிவப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் அதனில் இல்லாத நிறமில்லை. அது நெட்டையா, குட்டையா எனச் சொல்ல முடியாது. இடத்தாலோ, காலத்தாலோ அல்லது வேறு எந்த வரையுறைக்கு உட்படுத்தப்பட்டு குறிக்கிட இயலாதது. அதை உபநிடதங்கள் - "சத்யம், ஞானம், அனந்தம்" என்றும் "சத், சித், ஆனந்தம்" என்றும் பேசுகின்றன. இந்த நிர்குண பிரம்மத்துடன் மாயை சேரும்போது - அது "சகுண பிரம்மம்" என வழங்கப்படுகிறது - அதாவது குணங்கள் கூடிய பிரம்மம். இந்த நிலையில் சகுண பிரம்மத்தினை - சிவனாகவோ, திருமாலாகவோ அல்லது வேறு ஒரு இஷ்ட தெய்வமாகவோ போற்றிப் பாடிட வழி வகுக்கிறது. நம்மால் போற்ற, ஆடிப்பாடி பக்தி செய்ய ஏதுவானதொரு கருணை பொழியும் வதனமாகத் திகழ்கிறது. மாயையுடன் சேர்ந்ததால் சகுண பிரம்மமாக - வழிபாட்டுக்கு உரியதொரு தெய்வம் என்னும் நிலை பெற்று, நாம் அருள் பெற வழி வகுக்கிறது. மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சொரூபம் தான் இந்த தெய்வங்களாக இருக்க, அந்த தெய்வங்களையே போற்றிப் பாடி, வணங்கி, அவர்களது அருளால் ஜீவனாக இருந்தது, தனது உண்மையான நிலையினை உணரச் செய்திட, மெய்ஞானம் பெற ஏதுவாகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்.

பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்:
முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது.
அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது.
அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம்.
இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

க்தி செய்திட கீர்த்தனம் ஒரு கருவி என்று பார்த்தோம். நமது நீண்ட பாரம்பரியத்தில் பலநூறு அறிஞர்களும், புலவர்களும், கவிஞர்களும் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றி நமக்கு அருமையான பக்தி செய்யும் கருவிகளை செய்து தந்திருக்கிறார்கள். சண்மதம் முன் நிறுத்திய ஆறு இறைகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே எத்தனை எத்தனை கீர்த்தனைகள்!. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரை எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டியல் பெரிதாய் நீளும். நீங்களே பாருங்களேன், மூர்த்திகள் வகையில் பிரித்த இவரது கீர்த்தனைப் பட்டியலை:

கணபதி : 27
சிவன் : 131
சக்தி : 176
முருகன் : 36
திருமால் : 41 (27 +14)
சூரியன் உட்பட நவகிரகங்கள் : 9
பெரும்பாலும் 'குருகுஹ' என்ற முத்திரையோடு அமைந்த இக்கீர்த்தனைகள் அத்வைத சாரத்தை எடுத்துச் சொல்லுவதோடு, நமது மறைகள், பிரபந்தங்கள் மற்றும் புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை இசையோடு சேர்த்து ஊட்டுகின்றன.

இந்த தெய்வங்களைப் போற்றுவதில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக கருதப்படும். "We can have preferences, but no exclusions." என்பார்கள். தனக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக, ஒரு தெய்வத்தை பற்றிக் கொள்ளலாம். கண்ணன் கீதையில், "என்னைப் பற்றிக்கொள். உனக்குத் தேவையான ஞானத்தை நான் தருகிறேன்", சொல்வதை நினைவில் கொண்டு, பக்தி என்னும் கருவி கொண்டு சகுண பிரம்ம உபாசனை செய்து உயர் ஞானம் பெற்று முக்தி என்னும் வீடுபேறினை பெற்று உய்யும் உபாயத்தினை நம் பெரியவர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள். ஆயினும், பக்தியும் ஞான மார்க்கமும் வெவ்வேறானது, தொடர்பில்லாதது என்கிற ஐயப்பாட்டு பலரிடம் நிலவத்தான் செய்கிறது.

மேலே சொன்ன ஆறு இறைகளையும் எடுத்துக்கொண்டு, முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் வழியாக பக்தி பண்ணிப் பாடிப்போற்றி இந்தத் தொடரில் பயணிக்கப் போகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இறையை எடுத்துக்கொண்டு, தீக்ஷிதரின் கிருதிகளை முன்னிருத்தி, அதிலிருந்து பக்தி செய்வதற்கான உந்துதலைப் பெற முனைவோம்.

அடுத்த பகுதியில் முமுதற் கடவுள் கணபதியைப் பாடித் துவங்க இருக்கிறோம்...

Wednesday, March 31, 2010

கண்ணுதலும் மூவாறு கண்களும்


அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் - அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா!
அதிலிருது ஒருதுளி:

ஆதி சங்கரர் இயற்றிய 'சுப்ரமணிய புஜங்கம்' படித்திருப்பீர்கள்.
அதில் 'அஷ்டாதசலோசன்' என்றொரு வரி வரும்.
அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், 'சுப்பிரமண்யேன' எனத்துவங்கும் சுத்த தன்யாசி ராகப் பாடலில், முருகனை 'அஷ்டாதசலோசனா' என்றழைப்பார்.
அஷ்ட + தச = 8 + 10 = 18 கண்கள்!
எப்படி பதினெட்டு கண்கள் இருக்கமுடியும்?
அறுமுகம் என்றால் கூட பன்னிரண்டு கண்கள் தானே?

'கொடிய மறலியு மவனது கடகமு...' எனத்துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர்
'அறுமுகமும் வெகு நயனமும்' என, 'பலவான கண்கள்' என்கிறாரோ தவிர, குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

...
வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(கைக்கிளைப் படலம், 71).

எனக் கம்பன் சுவைக்கும் கண்ணுதற் கடவுளின் கண்மணி எப்படி இருப்பான்?
தகப்பன் சாயலில் தானே தகப்பன்சாமி!
நுதலிற் (நெற்றியில்) கண்ணினை உடைய கண்ணுதலாம்(கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்!
முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ, முருகய்யா!

கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்.
'பவளத்தன்ன மெனி' செவ்வேளும் சிவனும் சொல்லாடலில் குறிப்பது செந்நிறத்தையேயாம். 'சிவனை நிகர்' முருகனின் ஆற்றுப்படை இடம்கொண்டது, பதினோராம் திருமுறைத் தொகுப்பில்.

ஸ்ரீகுருகுஹ' எனத்துவங்கும் விருவிருப்பான கீர்த்தனையில் பல பதிகளும் சேவிக்கும் பரமனென முருகனைப் புகழ்வார் முத்துசாமி தீக்ஷிதர்.
அந்த பதிகளெல்லாம் யார் யாராம்?

சுரபதி - இந்திரன்
ஸ்ரீபதி - விஷ்ணு
ரதிபதி - மன்மதன்
வாக்பதி - பிரம்மா
க்ஷிதிபதி - அரசன்
பசுபதி - சிவன்

என சிவன் உட்பட, பல்வேறு பதிகளாலும் பூஜிக்கப்படுபவன் பாலசுப்ரமணியன் என்பார் பாடலின் பல்லவியில்.
இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:

Tuesday, December 22, 2009

அம்பா, எத்தனை பெயர் உனக்கு!


முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் - பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா!

பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்
-----------------------------------------
1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ!)


2) மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா


3) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை) மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): கலிகல்மஷநாசினி
 

4) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி
 

5) பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணி

6) மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி


7) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை


8) அவ்யாஜகருணா காமாக்ஷி : (சாலங்கநாடை) : சவ்யாபசவ்யமார்க்கஸ்தாயி




9) திரிபுரசுந்தரி சங்கரி குருகுஹ ஜனனி: (சாமா) : சாமகானப்பிரியகரி


10) ஏகாம்பரேஸ்வர நாயகீம் : (சாமா) : வாஞ்சிதார்த்த ப்ரதாயினி


11) ஸ்ரீமதுராம்பிகையா : (அடணா) : நாமாபாரயணப்பிரியா : (நாமத்தினைப் பாராயணம் பண்ண வேறென்ன வேண்டும்!)

12) பாலாம்பிகாயை நமஸ்தே வர தாயை : (நாட குறிஞ்சி) : ஸ்ரீ ஹரித்ரான்னரசிகாயை


13) நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை 


14) அபயாம்பிகாயை : (யதுகுலகாம்போதி) : குடகுல்பா 


15) ஸ்ரீமாத சிவவாமாங்கே : (பேகடா) : ஸ்ரீமஹாராக்ச்ஜை


16) அம்ப நீலாயதாஷி : (நீலாம்பரி) : புவனேஸ்வரி


17) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : நடேஸ்வரி

18) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : காத்யாயினி


19) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) : சுவாசினி


20) பர்வதராஜகுமாரி : (ஸ்ரீரஞ்சனி) : கௌளினி




~~~~
லலிதா சஹஸ்ரநாமவளியில், அம்பாளை என்னவெல்லாம் பெயர்களில் பாடிப் பரவசம் கொள்கிறோம்! நாமவளியின் தாக்கத்தில் விளைந்த பாடல், அடியேன் புனைந்தது:

எடுப்பு:
எத்தனை பெயர் உனக்கு - அம்பா,
எத்தனை பெயர் உனக்கு!

தொடுப்பு:
பக்தனும் சாக்தனாய் உனைப்பாட - ஓராயிரம்
பெயர் உனக்கே, சக்தியே!
(எத்தனை பெயர் உனக்கு!)

முடிப்பு:
இரும்பாய் இருந்திட்ட மனத்தையும், அம்பா,
கரும்பு வில்லாய் வளைத்திட்டாய்.
திரையாய் படிந்த வினையெல்லாம்
நுரையாய் பிரிந்திட வழிசெய், சச்சிதானந்தமே!
(எத்தனை பெயர் உனக்கு!)

~~~~
பிற்சேர்க்கை:

திரு.சுப்புரத்தினம் அவர்கள் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளார்கள்:



~~~~

லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திர சுலோகங்கள் மொத்தம் 1008. அவற்றில் 108 எண்ணிக்கையை, தமிழ்ப்பொருளுடன் பார்ப்போமா, இங்கே:
~~~~

ஓம் ஸ்ரீமாத்ரே நம;
ஓம் சீர்மிகு அன்னையே போற்றி

ஓமோம் தே(3)வகார்ய-ஸமுத்(4)யதாயை நம:
ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி

ஓம் தே(3)வர்ஷிக(3)ண ஸங்கா(4)த ஸ்தூயமானாத்ம வைப(4)வாயை நம:
ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி

ஓம் ப(4)க்தஸௌபா(4)க்(3)யதா(3)யின்யை நம:
ஓம் அன்பருக்கு நல்லவெல்லாம் அருள்செய வல்லாளே போற்றி

ஓம் ப(4)க்தி ப்ரியாயை நம:
ஓம் பக்திதனை விரும்புவாளே போற்றி

ஓம் ப(4)யாபஹாயை நம:
ஓம் பயத்தினைப் போக்குவாளே போற்றி

ஓம் ராக(3)மத(2)ன்யை நம:
ஓம் ஆசை தன்னைக் கெடுப்பவளே போற்றி

ஓம் மத(3)நாசின்யை நம:
ஓம் செருக்கெலாம் ஒழிப்பவளே போற்றி

ஓம் மோஹநாசி(H)ன்யை நம:
ஓம் மதிமயக்கம் போக்குவாளே போற்றி

ஓம் மமதாஹந்த்ர்யை நம
ஓம் மமதையை அழிப்பவளே போற்றி

ஓம் பாபநாசி(h)ன்யை நம:
ஓம் பாபங்களை ஒழிப்பவளே போற்றி

ஓம் க்ரோத(4)சமன்யை நம:
ஓம் கோபங்களை அடக்குவாளே போற்றி

ஓம் லோப(4)நாசி(h)ன்யை நம:
ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

ஓம் ஸம்சயக்(4)ன்யை நம:
ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்ற

ஓம் ப(4)வநாசி(h)ன்யை நம:
ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி

ஓம் ம்ருத்யுமத(2)ன்யை நம:
ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி

ஓம் து(3)ர்கா(3)யை நம:
ஓம் துர்கா தேவியே போற்றி

ஓம் து(3):கக(2)ஹந்த்ர்யை நம:
ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி

ஓம் ஸுக(2)ப்ரதா(3)யை நம:
ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி

ஓம் து(3)ஷ்டதூ(3)ராயை நம:
ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி

ஓம் து(3)ராசாரச(h)மன்யை நம:
ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி

ஓம் தோ(3)ஷவர்ஜிதாயை நம:
ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி

ஓம் ஸர்வக்ஞாயை நம:
ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:
ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:
ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:
ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:
ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:
ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:
ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

ஓம் பார்வத்யை நம:
ஓம் மலைமகளே போற்றி

ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி

ஓம் கோ(3)ப்த்ர்யை நம:
ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்

ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி

ஓம் திரோதா(4)னகர்யை நம:
ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி

ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:
ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி

ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:
ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக அனைத்தையும் ஈன்றவளே போற்றி

ஓம் வர்ணாச்(H)ரம-விதா(4)யின்யை நம:
ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி

ஓம் நிஜாஜ்ஞாரூப-நிக(3)மாயை நம:
ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி

ஓம் புண்யாபுண்ய-ப(2)லப்ரதா(3)யை நம:
ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்ற

ஓம் ராக்ஷஸக்(4)ன்யை நம:
ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி

ஓம் கருணாரஸ-ஸாக(3)ராயை நம:
ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி

ஓம் வேத(3)வேத்(4)யாயை நம:
ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி

ஓம் ஸதா(3)சாரப்ரவர்த்திகாயை நம:
ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி

ஓம் ஸத்ய:-ப்ரஸாதின்யை நம:
ஓம் உடனருள் புரிபவளே போற்றி

ஓம் சி(h)வங்கர்யை நம:
ஓம் மங்கலம் செய்பவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டேஷ்டாயை நம:
ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டபூஜிதாயை நம:
ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி

ஓம் காயத்ர்யை நம:
ஓம் காயத்திரியாளே போற்றி

ஓம் நிஸ்ஸீம-மஹிம்னே நம:
ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி

ஓம் ஸமஸ்த-ப(4)க்த-ஸுகதா(3)யை நம:
ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி

ஓம் புண்யலப்(4)யாயை நம:
ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி

ஓம் ப(3)ந்த(4)மோசன்யை நம:
ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி

ஓம் ஸர்வவ்யாதி(4)ப்ரச(h)மன்யை நம:
ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்ற

ஓம் ஸர்வம்ருத்யு-நிவாரிண்யை நம:
ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி

ஓம் கலிகல்மஷ-நாசின்யை நம:
ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி

ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி

ஓம் மைத்ர்யாதி(3)-வாஸநாலப்(4)யாயை நம:
ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி

ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி

ஓம் தை(3)த்யஹந்த்ர்யை நம:
ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி

ஓம் கு(3)ருமூர்த்யை நம:
ஓம் குருவின் திருவடிவே போற்றி

ஓம் கோ(3)மாத்ரே நம:
ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி

ஓம் கைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி

ஓம் த்ரிஜக(3)த்(3)-வந்த்(3)யை நம:
ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி

ஓம் வாக(3)தீ(4)ச்(h)வர்யை நம:
ஓம் குலவு சொல் தலைவியே போற்றி

ஓம் ஜ்ஞாநதா(3)யை நம:
ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி

ஓம் ஸர்வவேதா(3)ந்த- ஸம்வேத்(3)யாயை நம:
ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி

ஓம் யோக(3)தா(3)யை நம:
ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி

ஓம் நிர்த்(3)வைதாயை நம:
ஓம் இரண்டற நிற்பவளே போற்றி

ஓம் த்(3)வைதவர்ஜிதாயை நம:
ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி

ஓம் அன்னதா(3)யை நம:
ஓம் அன்னமளிப்போய் போற்றி

ஓம் வஸுதா(3)யை நம:
ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி

ஓம் பா(4)ஷாரூபாயை நம:
ஓம் மொழிகளின் வடிவமே போற்றி

ஓம் ஸுகாராத்(4)யாயை நம:
ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி

ஓம் ராஜராஜேச்(h)வர்யை நம:
ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி

ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம:
ஓம் சக்ரவர்த்தி பதவியை அடியார்க்கு அளிப்பவளே போற்றி

ஓம் ஸர்வார்த்த-தா(3)த்ர்யை நம:
ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்ற

ஓம் ஸச்சிதா(3)னந்த ரூபிண்யை நம:
ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி

ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் கலைமகள் வடிவினளே போற்றி

ஓம் த(3)க்ஷிணாமூர்த்தி-ரூபிண்யை நம:
ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி

ஓம் ஸநகாதி(3)-ஸமராத்(4)யாயை நம:
ஓம் சனகர் முதலியோர் பூசிக்கும் வடிவினளே போற்றி

ஓம் நாமபாராயணப்ரீதாயை நம:
ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி

ஓம் மித்யாஜக(3)த(3)தி(4)ஷ்டானாயை நம:
ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி

ஓம் ஸ்வர்ககா(3)பவர்க(3)தா(3)யை நம:
ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி

ஓம் பரமந்த்ர-விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி

ஓம் ஸர்வாந்தர்யாமிண்யை நம:
ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி

ஓம் ஜன்மம்ருத்யு-ஜ்ரா தப்த-ஜன-விச்(h)ராந்தி தா(3)யின்யை நம:
ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி

ஓம் ஸர்வோபநிஷது(3)த்(3) கு(4)ஷ்டாயை நம:
ஓம் உபநிட நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி

ஓம் லீலாவிக்(3)ரஹ-தா(4)ரிண்யை நம:
ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி

ஓம் அஜாயை நம:
ஓம் பிறவியில்லாதவளே போற்றி

ஓம் க்ஷயவிநிர்முக்தாயை நம:
ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி

ஓம் க்ஷிப்ரப்ரஸாதி(3)ன்யை நம:
ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி

ஓம் ஸம்ஸாரபங்க-நிர்மக்(3)ன ஸமுத்(3)த(4)ரண-பண்டி(4)தாயை நம:
ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி

ஓம் த(4)னதா(4)ன்ய-விவர்தி(4)ன்யை நம:
ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி

ஓம் தத்வமர்த்தஸ்வரூபிண்யை நம:
ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி

ஓம் ஸர்வாபத்(3)-விநிவாரிண்யை நம:
ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி

ஓம் ஸ்வபா(4)வ-மது(4)ராயை நம:
ஓம் இயல்பினில் இனிமை மிக்கவளே போற்றி

ஓம் ஸதா(3)துஷ்டாயை நம:
ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி

ஓம் த(4)ர்மவர்ததி(4)ன்யை நம:
ஓம் அறம்வளர் செல்வியே போற்றி

ஓம் ஸுவாஸின்யை நம:
ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி

ஓம் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதாயை நம:
ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி

ஓம் வாஞ்சிதார்த்தப்ரதா(3)யின்யை நம:
ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி

ஓம் அவ்யாஜ- கருணா மூர்த்தயே நம:
ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

ஓம் அஜ்ஞானத்(4)வாந்த-தீ(3)பிகாயை நம:
ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி

ஓம் ஆபா(3)ல-கோ(3)ப-விதி(3)தாயை நம:
ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி

ஓம் ஸர்வானுல்லங்க்(4)ய-சா(h)ஸனாயை நம:
ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி

ஓம் ஓம் லலிதாம்பி(3)காயை நம:
ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி

எல்லாம் வல்ல அன்னையே போற்றி!

~~~~
நன்றி:
லலிதா சஹஸ்ரநாமம் தமிழாக்கம் - இணையத்தில் கிடைக்கப்பெற்றது.
முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் - N.பார்த்தசாரதி அவர்கள்

Tuesday, October 07, 2008

நவராத்ரி : அருள் மழை பொழி அலைமகள்

ஹிரண்மயிம் லக்ஷிமீம் பஜாமி எனத் தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதரின் கிருதி ஏற்பட்ட கதை இது:

ஒருமுறை தீக்ஷிதரின் சிஷ்யர் ஒருவர், அவரிடம் வந்து, ஐயா, நீங்கள் மகாராஜாவைப் போய் சந்திக்கலாமே, உங்கள் வரவுக்காக காத்திருக்கிறார் அவர். நீங்கள் போய் சந்தித்தாலே போதும், உங்களுக்கு அவர் பொன்னும் பொருளும் வாரி வழங்கிடுவார் என்று. அந்த சிஷ்யருக்குத் தெரியும் தீக்ஷிதரைப் பற்றி. இருப்பினும் தீக்ஷிதரின் மனைவியார் சில தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டாராம். அப்போது, அந்த சமயத்தில் குறிப்பாக, மகாராஜாவைப்பற்றிய செய்தியை காதில் போட்டு வைக்கலாமே என நினைத்தார் போலும்.

தீக்ஷிதரோ, இந்த ஆசைக்கு வளைந்தாரில்லை. ஸ்ரீவித்யா உபாசகரான அவர், சாட்சாத் இறைவனைப் பாடும் இந்த நாவால், சாமன்யர்களைத் துதிப்பதா, இயலாது என மறுத்துவிட்டார். அப்போது, தங்க விக்ரகமாக மஹாலஷ்மியே தன் இருதயத்தில் நிறைந்திருக்க, அவளே இதுபோன்ற நிலையில்லா உலகில் இருந்தென்னைக் காப்பாள், என்று பாடுகிறார். நிலையான செல்வம், இறையருள் மட்டுமே என்கிறார். அன்றிரவே, அவரது துணைவியாரின் கனவில் மஹாலஷ்மி தோன்றி, தங்க மழையாய் கனவில் பொழிவது போலவும், இது போதுமா, எனக் கேட்பது போலவும் கனாக் கண்டாராம். அப்போதுதான் அவருக்கு, சாட்சாத் திருமகளே அருள் பாலித்திடும்போது, இதைவிடவும் செல்வம் வேறுண்டோ என உணர்ந்தாராம்.

இராகம் : லலிதா
தாளம் : ரூபகம்
பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்


hiranmayeem_lakshm...


பல்லவி
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஸதா3 ப4ஜாமி
ஹீன மானவாஸ்1ரயம் த்யஜாமி

அனுபல்லவி
சிர-தர ஸம்பத்ப்ரதா3ம்
க்ஷீராம்பு3தி4 தனயாம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஹரி வக்ஷ:ஸ்த2லாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்4ரு2த குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

சரணம்
ஸ்1வேத த்3வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பி3காம் பராம்
பூ4த ப4வ்ய விலாஸினீம்
பூ4-ஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்3ஜ மாலினீம்
மாணிக்யாப4ரண த4ராம்
கீ3த வாத்3ய வினோதி3னீம்
கி3ரிஜாம் தாம் இந்தி3ராம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸீ1த கிரண நிப4 வத3னாம்
ஸ்1ரித சிந்தாமணி ஸத3னாம்
பீத வஸனாம் கு3ரு கு3ஹ -
மாதுல காந்தாம் லலிதாம்


பொருள்:
பல்லவி:
எப்போதும் என் இதயத்தில் கொலுவிருக்கும் தங்கமே, திருமகளே,
துணை நீ தானே, நிலையிலா மானிடர் தொடர்பினை அறுப்பாயே.

அனுபல்லவி:
நிலையான செல்வமாம், வீடுபேறுதனை வழங்குவாயே, பாற்கடலின் குமாரியே.
ஹரியின் ஹிருதயத்திலுருப்பாயே - மான் போலும், இளம்பாதம் கொண்டவளே.
தாமரை போன்ற கரங்களில் அல்லி மலரைத் தரித்தவளே,
மரகத வளை அணிந்தவளே.

சரணம் :
வெள்ளைத் தீவினில் வசிப்பவளே, கமலாம்பாள் நீதானே.
கணங்களும் தேவரும் தொழுதிட, தாமரைமாலை அணிந்தவளே.
நவரத்தின ஆபரணம் சூடி, ஒளி விடுபவளே.
இசைக் கருவிகளின் நாத இன்பத்தை இரசிப்பவளே.
குளிர் நிலவின் பொலிவே.
ஸ்ரீசக்ர சிந்தாமணியில் வீற்றிருந்து,
பக்தர்க்கு வேண்டியதை அளிக்கும் தேவ லோகத்து இரத்தினமே.
பட்டு பீதாம்பரம் அணிந்தவளே.
குருகுஹனின் மாமன் மனைவியே, லலிதாம்.

(குருகுஹ என்பது, தீக்ஷிதரின் முத்திரை; குஹன் என்பது இங்கு முருகனையும் குறிக்கிறது!. 'லலிதா' என இராக முத்திரையும் வருகிறது.)