Showing posts with label கோபாலகிருஷ்ண பாரதி. Show all posts
Showing posts with label கோபாலகிருஷ்ண பாரதி. Show all posts

Monday, August 10, 2015

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!

சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய "தேவ தேவ கலயாமி" என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்




இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? "உடல் பொருள் ஆனந்தி" நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்



இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய "சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்" என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,
தேனும் பாலும் போலே சென்று - தேரடியில் நின்று கொண்டு
சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்
என்கிற வரிகள் "தேவ தேவ கலயாமி" பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்



தியாகராகரின் "துளசி தளமுலசே" பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)

இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் "இராம நாமம் ஒரு வேதமே" பாடலோடு நிறைவு செய்திட
நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.



Monday, December 12, 2011

ஹரியும் ஹரனும்

ஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.
ஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.
ஹரிஹரன் என்பாருண்டு.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே!  சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய "மா ரமணன் உமா ரமணன்" ஹிந்தோள இராகப் பாடல்.

எடுப்பு
மா ரமணன்
உமா ரமணன்
மலரடி பணி மனமே- தினமே

தொடுப்பு
மாற ஜனகன்
குமார ஜனகன்,
மலைமேல் உறைபவன்- பாற்கடல்
அலைமேல் உறைபவன்- பாவன

முடிப்பு
ஆயிரம் பெயரால் உரைத்திடும்
ஆயிரம் உருமாறினும்
உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்

உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:


அடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.

இயற்றியவர்: நீலகண்ட சிவன்
பண்: காந்தார பஞ்சமம்
இராகம்: கேதாரகௌளை
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
ஸ்ரீகண்டேஸ்வரனை ஸ்ரீ பத்மநாபனைத்
தரிசனம் செய்வோமே

தொடுப்பு
நாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்
ஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து

முடிப்பு 
அன்னபூர்ணேஸ்வர் மனையாளிவருக்குண்டு
அஷ்டலக்ஷ்மி மனையாட்டி யவருக்குண்டு
பொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு
பொங்கும் பாற்கடல் நவமணிகளிவர்க்குண்டு
உன்னத இடப வாகனமிவர்க்குண்டு
உயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு
தன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு
சாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு

இப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "தில்லையம்பலத்தானை" பாடலை நினைவு படுத்துகிறதல்லவா! இதோ அந்த பாடலும்:

இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : சஹானா
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
தில்லையம் பலத்தானை கோவிந்தராஜனை
தரிசித்துக் கொண்டேனே

தொடுப்பு
தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்
தொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்

முடிப்பு
தும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே
துளசிக்கொழுந்தெடுத்துக் தொட்டுக் கொடுப்பதங்கே
அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே
அஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே
தேவாரம் திருவாசகம் படிப்பதிங்கே
திருவாய்மொழியோதி சேவிப்பதங்கே
அருமறைப் பொருளுக்கெட்டா வடிவமிங்கே
அறிதுயில் அணையானை ஆதரிப்பதங்கே

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:

Sunday, November 02, 2008

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ள வேண்டாம்!

கோபாலகிருஷ்ண பாரதியின், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவை. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை ஒரு தொடராகவே தந்திட நெடுநாளாகவே விருப்பம் இருப்பினும், அப்பெரிய சாதகத்திற்கு தயார் செய்து கொள்ளவே இன்னும் பல காலம் செல்ல வேண்டியிருப்பதால், அவற்றை பின்னர் தருகிறேன். அவற்றைத் தவிர, தனிப்பாடல்களையும், கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி இருக்கிறார்.
அவற்றில் ஒன்றான 'திருவடி சரணம்' பாடலை இங்கு பார்க்கப்போகிறோம்.

கோபால கிருஷ்ண பாரதியின் அனைத்து பாடல்களுக்குமான வரிகளை இங்கு காணலாம்.

இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். குறிஞ்சி எனும் பாடல் தொகுப்பில் நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடி முதலில் கேட்டது. முசிரி சுப்ரமணிய ஐயர், எம்.எஸ் அம்மா, மதுரை மணி ஐயர் போன்றோரின் கச்சேரிகளில் இடம்பெற்ற பாடல். வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளும் போது, வர்ணத்தினை தொடும் பொழுதே, இந்தக் கீர்த்தனையை சொல்லிக் கொடுக்கும் படி எனது ஆசிரியரிடம் கேட்டிட, அவரும் என் ஆர்வத்திற்கு அணை போடாமல், சொல்லிக் கொடுக்க முயன்றார். ஆனால், என்னிடம் போதிய பயிற்சி இன்மையால், அனுபல்லவியிலேயே நின்றுவிட்டது! (இந்தப் பாடல் அனுபல்லவியில் தொடங்கி, அதற்கு அப்புறம் பல்லவியில் தொடர்வது வழக்கம்)

இராகமோ, காம்போதி. 28ஆவது மேளம் ஹரிகாம்போதியின் ஜன்யம். இங்கு நிஷாதம், ககாலி நிஷாதம் (நி2). ஆகையால், சதுஸ்ருதி த்வைதம்(த2) ஸ்வரஸ்தானத்திற்கும், ககாலி நிஷாதம் ஸ்வரஸ்தானத்திற்கும் இடைவெளி அதிகம்.
ஆரோகணத்தில், நிஷாதம் இல்லை, ஆனால் அவரோகணத்தில் உண்டு. ஆகவே பத (ப-ஸ்த), நித (நி-நித) சஞ்சாரங்களில் நிறைந்திருக்கும் கமகங்கள் இசைக்கு செழுமை சேர்ப்பவை.

மா - கா - பா - தா - ஸ்அ ; - ஸ் ரீகா | ரிஸ்ஸ்த - ரீஸ்நீ - தா - பா ; தா ||
ம - று - ப - டி - யும் - கருவ | டையும் - கு.ழி - யில் - தள்.ளி ||

பா - தா - ஸ்அ - ஸ்நி - தா - பம - பா ; | தா ; ; பா - ; ; ப நி தா ||
வ - ரு - த்த - ப - டு - த்த - வேண் - | டா - ம் . . . . என்.னை ||

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இந்த சுட்டியில் கேட்கலாம்.

பல்லவி
திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
தேவாதி தேவா நின் (திருவடி சரணம்...)

அனுபல்லவி
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் - என்னை
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம்
பொன்னம்பலவா நின் (திருவடி சரணம்...)

சரணம்
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!

அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி சரணம்...)

(அடுத்து வருதல் : இடையறாது, தொடர்ந்து வருதல்)
பொன்னம்பலம் தன்னில் பொதுநடம் ஆடும் சபேசனே, உன் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்.
என்னை இதற்கு மேல், மீண்டும் மீண்டும் கருவடையும் கருங்குழியில் தள்ளி, வருத்தப்படுத்த வேண்டாம், ஐயா.
இப்பிறப்புக்கு மேல், இனி ஒரு பிறப்பில்லை எனும் பேறினைத் தாரும் ஐயா. அதற்காகவே, உங்கள் திருவடியே சரணம், என நான் நம்பி வந்தேன்.

புல்லாகி, பூண்டாகி, இன்னும் என்னவெல்லாம் என கணக்கெழுத முடியாத அளவிற்கு பிறப்பெல்லாம் பிறந்திளைத்தேன். தேவரீர், உம்மை இறைஞ்சிக் கேட்டு, இம்மானிட ஜன்மம் தனைப் பெற்றேன்.
அரிதாய் கிடைத்த இம்மானிடப் பிறப்பு நாளொரு வண்ணம், வீணாகி அல்லவோ போகின்றது.
எனினும், ஐயா, என் குறை இம்மியளவும், தீர்வதாகத் தெரியவில்லையே.
பிறந்த பிறப்பறுக்கும் பெம்மானே, என் பிறவிச் சுழலைதனை உடைத்திடுவாயே.

உன்னை இடையறாது, தொடர்ந்து வந்திடும், என்னை நீ ஒதுக்கித் தள்ளலாகாது.
உன்னை அரஹர வென சொன்னாலே, போதுமல்லவா.
சொல்கிறேன் நானும், அரகர, ஹரஹர, அரஹர.
ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர.
ஐயா, என்னை தடுத்தாட்கொள்ள, நீயும் வந்தருள நற்சமயம் ஈதய்யா.
கோபாலகிருஷ்ணன், உன்னை எப்போதும்,
புகழ்ந்து, பணிந்து, போற்றி, திருவடி சரணம் என,
உன் திருவடிகளில், உன் திருவருளுக்காக இறைஞ்சிப் பணிகிறேன் ஐயா.

திருமந்திரம்:
அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றோ.
(அரகர எனச்சொல்ல, அடைய அரிதானது ஏதுமில்லை. எனினும், அதைச்சொல்ல அறியாரே. அரகர எனச் சொல்ல, அமரராய் ஆவாரே, ஏனெனில், பிறப்பறுக்கும், பெரும் துயர் முடிக்கும், அருஞ்சொல் தானே அரகர.)

Wednesday, January 10, 2007

கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள்

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு:

1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை

2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ

3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே

4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ

5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி

6. எப்போ தொலையும் இந்த துன்பம்

7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா

9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன்

10. கட்டை கடைதேறவேணுமே

11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்

12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே

13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம்

14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு

15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ

17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும்

18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம்

19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு

20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்

21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம்

22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி

23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு

24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும்

25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்

26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம்

27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது

28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா

29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி

30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள்

31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள்

32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி

33. மற்றதெல்லாம் பொறுப்பேன்

34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்

35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ

பாடல்களின் முழு வரிகளுக்கு செல்லவும் சைவம்.ஆர்க்

இந்த தொகுப்பினை தமிழ் விக்கிபீடியாவிலும் ஏற்றியுள்ளேன்.

Tuesday, January 02, 2007

நந்தனார் சரிதம் - இசைச்சொற்பொழிவு கேட்டீரோ

அன்பால் உருகி மருகியவனுக்கு
தன்பால் ஓடிவர வழிசெய்து
தடைகள் யாவையும் தவிர்த்த
எம்பிரானே, உன்பாதம் சரணம்.

நந்தனார் சரிதம் - இன்றைக்கும் என்றைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அதுவும் பாலு சாஸ்திரிகள் காலக்ஷேபம் பண்ணினால், அதைவிட சிறப்பு வேறு என்ன?

நான்கு பகுதிகளாக இங்கு கேட்க கிடைக்கிறது.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

இந்த பகுதிகளை அனைவரும் கேட்க மற்றும் தரவிறக்கம் செய்து கொள்ள வழிசெய்துள்ள சங்கீதபிரியா.ஆர்க் தளத்திற்கு நன்றிகள்.
(திரு.ஆர்.ஸ்ரீநிவாசன், திரு.டி.என்.பாலா அவர்களுக்கு நன்றிகள்)