Monday, October 29, 2012

முன்னோ பின்னோ? : அப்பர் பதிகம்

"தொன்று நிகழ்ந்து அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தனள் என்று அறியாத இயல்பினளாம் எங்கள் தாய்"
என்று பாரதி பாரதத்தாய் வாழ்த்துப் பாடி விட்டான். நம் நாட்டில் பண்டைக் காலத்து நிகழ்வுகளோ, சரித்திரங்களோ, எழுதப்பட்ட இலக்கியங்களோ, பலவற்றிற்கும் சரியானதொரு காலகட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். தக்க சான்றுகள் இல்லாத நிலையில் அனுமானங்களையும், பல முரண்பாடன கணிப்புகளையும் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் துணைகொண்டு, காலக் கணிப்பினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் சிவ பக்தரும் சோழ அரசருமான கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிதாகக் கற்றளியாக கட்டப்பட்டது. இன்று 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்்துள்ளன. இன்றைக்கு இவ்வளவு பெரிய கோயிலாக இருப்பதற்கு, சோழர்களுக்கு முன்னால் பல்லவர்கள் தொடங்கி, சோழர்களுக்குப் பின்னால், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், தஞ்சை நாயக்கர்கள், மாரத்திய மன்னர்கள் என பல அரசுகளின் ஆதரவு இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலை கட்டுகையில் திருவாரூர் கோயிலை ஒரு முன்மாதிரியாக கொண்டாதகவும் ஒரு செய்தி உண்டு.

இவற்றுக்கெல்லாம் முன்பாக, கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே அப்பர் பெருமான் திருவாரூர் கோயிலைப் பற்றிய காலக் கணிப்பொன்றில் ஈடுபட்டிருக்கிறார். பழமை வாய்ந்த திருத்தலமான ஆரூரில் (திருவாரூர்) கோயில் கொண்ட சிவபெருமானைப் பார்த்து - ஐயா,  நீர் திரு ஆரூரைக் கோயிலாகக் கொண்ட நாள் எதுவோ? என வினவுகிறார். குறிப்பாக, சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நிகழ்வதற்கு முன்பாகவே திருவாரூரில் கோயில் கொண்டீரா அல்லது அதற்குப் பின்னரா என வினவுகிறார்! இதற்கு சிவபெருமானைத் தவிர வேறு யாரால் விடை பகர இயலும்! எனினும், இதுவே திருவாரூர் தலத்தின் தொன்மைக்கு சான்றல்லவோ!


ஆறாம் திருமுறை 
திருநாவுக்கரசர் தேவாரம்
திரு ஆரூர் பதிகம்



*1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?
ஓர் உருவே மூஉருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
காமனையும் கண்அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ?
மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*2
மலையார் பொன்பாவையொடு மகிழ்ந்த நாளோ?
வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ?
நினைப்ப(அ)ரிய தழல்பிழம்புஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலைகடல்நஞ்சு உண்ட நாளோ?
அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*3
பாடகம் சேர் மெல்அடி நல் பாவையாளும் நீயும் போய்
பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை
மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*4
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ?
ஓர் உகம் போல் ஏழ்உகம்ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலைஆன வானோர் செய்த
தக்கன்தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடுமாலோடு,
நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு
ஏத்தி, வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*5 பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானே!
நீலமாமணிகண்டத்து எண்தோளானே!
நெருநலையாய் இன்றுஆகி நாளைஆகும் சீலமே!
சிவலோகநெறியே ஆகும் சீர்மையே! கூர்மையே! குணமே!
நல்ல கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?---
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*6
திறம்பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம்பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன்தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*7
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக் கலந்து உரைக்கக்
கற்பகம்ஆய் நின்ற நாளோ?
காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று, வலம் சுருக்கி
வல்அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து,
வானோர் உய்ய, சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?---
தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*8
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
பார்அகத்தே பரஞ்சுடர்ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான்உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*9
புகைஎட்டும், போக்குஎட்டும், புலன்கள்எட்டும், பூதலங்கள்அவைஎட்டும்,
பொழில்கள்எட்டும், கலைஎட்டும், காப்புஎட்டும், காட்சிஎட்டும்,
கழல்சேவடி அடைந்தார் களைகண்எட்டும், நகைஎட்டும், நாள்எட்டும்,
நன்மைஎட்டும், நலம் சிறந்தார் மனத்துஅகத்து மலர்கள்எட்டும்,
திகைஎட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*10
ஈசனாய், உலகுஏழும் மலையும் ஆகி,
இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
மதயானைஉரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6 comments:

  1. அருமையான பதிகம் இது
    திருவருள் பெறவே
    தியாகேசன் புகழைத்
    தினமும் பாடுவோம்.

    நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    பி.கு: நீங்கள் இப்பொழுது சென்னையிலா இருக்கிறீர்கள் ?
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  2. திருவாரூர்ப்பதிகம் அருமை. அப்பரின் கேள்விகளை வைத்து பல பதிவுகள் கொண்ட ஒரு புராணமே எழுதிடலாம் போலிருக்கே. மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாம்மா,
      உங்களுக்கு ஒரு தொடர் பதிவு எழுத ஒரு உத்தி கிடைச்சுடுச்சா!
      ஆனா நீங்க எழுதாத சிவ புராணமும் உண்டோ!

      Delete
  3. அருமையான பதிவு . சிவபதிகங்கள் ஈர்க்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் நம் தளத்திற்கும் வந்து செல்லுங்கள் . www.kavithaimathesu.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. @Guru pala mathesu,
      வருகைக்கு நன்றிகள். தங்கள் பதிவில் ஒவ்வொரு தலமாய் அதன் சிறப்புகளைச் சொல்வது சிறப்பாக உள்ளது.

      Delete
  4. நால்வரை பற்றி வள்ளலார் என்ன?
    திருநாவுக்கரசர் தாச மார்க்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக தொண்டு செய்து வாழ்ந்தார்! திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக சிவையால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.பிள்ளை கைநோகுமோ என பொற்றாளம் ஒலிக்க அருளினாள்! சுந்தர மூர்த்திகள் சக மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! சிவனே இவனுக்காக தூது சென்றாராம்! சிறந்த தோழர் சிவனுக்கு! மாணிக்கவாசகரோ சன்மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! நானே நீ நீயே நான் என உணர்ந்தார்! உரைத்தார்! உறைந்தார் ஒளியிலே! இந்நால்வரும் வடலூரரை கவர்ந்த ஞானவான்கள்! திருவருட் பிரகாச வள்ளலார் எப்போதும் திருவாசக பெருமை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் எனச் சொல்வர்! .... read complete article at
    http://gnanasarguru.blogspot.in/2012/11/blog-post_14.html

    ReplyDelete