Sunday, October 14, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே - 2

சென்ற பகுதியைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியொன்று எழுதுவேன் என்று நானே நினைத்துப் பார்க்கவில்லைதான் அப்போது. ஆனால், இந்த காணொளிப் படத்தினைப் பார்த்தபின்பு அதன் தொடர்ச்சியாகத் தோன்றத் தான் செய்தது.





காட்சிப் படத்தின் கருவினை, சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில்:
ஜில் போல்ட் டெய்லர் என்கிற மூளை சம்பந்தபட்ட நோய்கள் பிரிவு மருத்துவர் / ஆராய்சியாளர்  தனக்கே ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாக சுவைபட விவரிக்கிறார்.


நோயாளிக்கு நோய் வருகையில் மருத்துவரைச் சென்று பார்க்கிறார்.
ஆனால் மருத்துவருக்கே நோய் வருங்கால்?
இந்த காட்சிப் படத்தில் அவர் தன்னைத்தானே ஆராய்சி செய்துகொள்ளும் பேறு பெற்றேன் என்கிறார். அப்படியொரு ஆராய்சியில் அவர் என்னதான் சொல்கிறார்?
மூளையில் இரண்டு பகுதிகளான வலது மூளை மற்றும் இடது மூளை ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் இருந்து தனித்தனியே செயல்படும் பொழுது:
(காணொளிக் காட்சிப் படத்தின் இறுதியில் 17:09 நிமிடங்கள் கடந்தபின்) 
வலது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நானே அண்ட சராசரங்களையும் இயக்கிடும் சக்தி. என் உடலில் உள்ள 50 டிரில்லியன் மூலக்கூறுகளுக்கும் (molecule) நான் ஆதார சக்தியாகவும், எல்லாப்பொருள்களுடனும் ஒன்றாகவும் தெரிகிறேன்."
இடது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நான் மற்றவர்களில் இருந்து தனிப்பட்டு, நான் என்கிற தனித்துவமானவர். நான் ஒரு மருத்துவர்...என்றெல்லாம்.".
"ஆகவே மக்களே, நமக்குள் இப்படியாக இரண்டு சாய்ஸ்கள் இருந்தால், எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? எப்போது?" என்கிற கேள்வியைக் கேட்டதோடு, இவாறு நிறைவு செய்கிறார்: "எந்த அளவிற்கு நாம் வலது மூளையில் அமைதியையும் சாந்தத்தையும் நிலைபெறச் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், உலகத்திலும் அமைதியையும், சாந்தத்தையும் திகழ்ச்செய்வோம்".

---------------------------------------------------------------------------

சென்ற பகுதியில் ஐம்புலன்களும் எப்படி ஆழ்மனதிற்கு "இடையூறு" என்பதைப் பார்த்தோம். அதுபோலவே, நமது வெளி உலக அனுவங்களும், நமது வெளியுலகக் கல்வியும் ஆழ் மனதிற்கு இடையூறாகவே இருக்கின்றன. அது எப்படி? நமது புத்தியில் சேகரிக்கப்படும் அனுபவங்களும், உணர்வுகளும் நம்மை திருப்பி வெளியுலக அனுபவதிற்கே இட்டுச் செல்கிறன.



படத்தில் காட்டியுள்ளபடி, மனதின் செயல்பாட்டுப் பகுதிகளாக, ஆழ்மனம், சித்தம், அகங்காரம், புத்தி எனப் பிரிக்கலாம். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் பகுதியாகும். சித்தம் என்னும் பகுதியில், மனதினால் அறிந்ததை, புத்தி என்னும் சேமிப்பு கிடங்கிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், "முடிவுகளை" எடுக்கிறது. அகங்காரத்தின் உதவியால் எல்லா செயல்களையும, முடிவுகளையும் தன்னோடு (ஜீவனோடு) இணைத்துப்பார்க்க இயல்கிறது.

மேலே குறிப்பிட்ட மனதின் வரை படத்தின் எல்லைகளை ஒரு அமீபா செல்லின் செல் சுவர்களோடு ஒத்து நோக்கவும். ஆமீபாவின் செல் சுவர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரையுரைக்குள் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக பெருத்தும் சிறுத்துமாகிக் கொண்டே இருக்கும். அதற்கு ஒப்பாக, மனதில் சித்தம் விகாரமடைத்து, ஆழ் மனமானது புத்தி, அகங்காரம் மற்றும் ஐம்புலன்களின் ஈடுபாட்டால், தன் வயப்பட இயலாமல் போகிறது.

இதனாலேயே நம்மால், "தன்னை" அறியாமல் போவதற்கு ஏதாகிறது.



No comments:

Post a Comment