Tuesday, October 23, 2007

இந்து இறை நம்பிக்கை ஒன்பது

இந்து சமய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு மாளாது என்றாலும், பொதுவான மற்றும் முக்கியமான ஒன்பது நம்பிக்கைகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

1. எங்கெங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே.

2. வேதங்களிலும் ஏனைய மறைகளிலும், ஆகமங்களிலும் இறை உண்மை உறைக்கப்பட்டிருக்கிறது.

3. அண்ட சராசரங்களும், அதிலுள்ள எல்லாமும் 'ஆக்கம் - வாழ்வு - இறப்பு' என்னும் முடிவில்லா சுழலில் தொடர்கின்றன.

4. ஒவ்வொருவரும் அவரது எண்ணம், சொல், செயல் மூலமாக தமது கர்மாவினை செதுக்கும் சிற்பியாக செயல்படுகின்றனர்.

5. இறப்பிற்குப்பின் ஒவ்வொரு ஆத்மாவும் மறுபிறப்பு எடுத்து பிறவிச்சுழலில் தொடரும். ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

6. உருவ வழிபாடு, சடங்குகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தங்கள் கண்ணுக்கு தெரியாத உலகங்களில் இருக்கும் இறைஅம்சங்களுடன் தொடர்பு கொள்வதாக நம்புகிறார்கள்.

7. சத்குரு ஒருவரின் வழிநடத்தும் துணையுடன் நல்லொழுக்கம், நன்நடத்தை, யாத்திரை, சுய-வினவல், தியானம் மற்றும் இறைவனுக்கு தன்னை முழுதும் அர்பணித்தல் போன்றவற்றால் எங்கும் நிறைந்த பிரம்மமான இறைவனை அறியலாம்.

8. எல்லா உயிர்களும் புனிதமானவை, அன்பு செலுத்தப்பட வேண்டியவை. எந்த உயிருக்கும் மனதாலோ, செயலாலோ தீங்கு விளைவிக்காமல் அஹிம்சைப் பாதையில் நடக்க வேண்டுமென்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

9. இந்து சமயத்தினைப் போலவே, மற்ற சமயங்களிலும் இறைவனை அடைவதற்கான உண்மையான வழிகளும் உண்டு.

17 comments:

  1. //எல்லா உயிர்களும் புனிதமானவை, அன்பு செலுத்தப்பட வேண்டியவை. எந்த உயிருக்கும் மனதாலோ, செயலாலோ தீங்கு விளைவிக்காமல் அஹிம்சைப் பாதையில் நடக்க வேண்டுமென்பதும் இந்துக்களின் நம்பிக்கை.//

    அப்படியானால் புலால் உண்பவர் இந்து இல்லையா?

    ReplyDelete
  2. //அப்படியானால் புலால் உண்பவர் இந்து இல்லையா?//
    அப்படிச் சொல்லவில்லை தலைவரே! எதிர்மறையாகக் கொள்ள வேண்டாம். மறை சொல்வதாகக் கொள்ளவும்.
    தீங்கு என்பது விலங்குகளை வதைத்தல், துன்புறுதல் எனக் கொள்ளவும்.
    "மனதாலும்" என்று சொல்லுவதைப் பார்க்கவும். மனதில் அன்பு ஏற்பட்டால், யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் புலால் மறுப்பு தானாகத் தோன்றாதோ.
    புலால் மறுப்பு பற்றி ஏற்கனேவே பதித்த பதிவொன்றை இங்கே சுட்டுகிறேன்.

    ReplyDelete
  3. ஜீவா,

    கூறிய கருத்துக்கள் எளிமையானவை சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள்.

    ****

    இந்துமதம் என்று எதை வரையறை செய்கிறீர்கள் ? விளக்கம் தேவை.

    ஆடுகோழி பலியிடுவது இழிசெயல் என்று தடைவிதிக்கப்பட்ட போது நாட்டார் தெய்வங்களின் வழிபாடு அவமதிக்கப்பட்டதே, அந்த தெய்வங்களெல்லாம் இந்து தெய்வங்கள் இல்லைதானே ?

    அஹிம்சை பாதையில் ஹிந்து மதம் (என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது) எப்பொழுதில் இருந்து நடைமுறையில் இருக்கிறது ?

    //4. ஒவ்வொருவரும் அவரது எண்ணம், சொல், செயல் மூலமாக தமது கர்மாவினை செதுக்கும் சிற்பியாக செயல்படுகின்றனர்.//

    இந்த வரி ஆண்டவனின் பங்களிப்பு என்று எதுவுமில்லை என்று சொல்லும் இறைமறுப்பு வாசகமாக எனக்கு படுகிறது. அதாவது அவரவர் செயலுக்கு அவரே பொறுப்பு என்றால் ஆண்டவனின் பங்களிப்பு ஜீரோ. அல்லது தேவையற்றது.

    உங்கள் கருத்து என்ன ?

    ReplyDelete
  4. //மனதில் அன்பு ஏற்பட்டால், யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் புலால் மறுப்பு தானாகத் தோன்றாதோ. //

    அப்படியானால் அந்த அன்பு தோன்றாதவன் ஹிந்து இல்லையா? தன்னை இந்து என்று நம்பிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்கள் பாவம்!

    *உங்கள்* நம்பிக்கைகளை இந்து நம்பிக்கை என்று சொல்லாதீர்கள். அப்படி இதுதான் இந்து நம்பிக்கை என்றால் இதில் வராத மற்றவர்களை இந்து என்று சொல்லாதீர்கள். பெரிய பன்முகத்தன்மைகொண்ட சமுதாயத்தை இப்படி ஒற்றை வரையறைக்குள் அடக்கப்பார்ப்பது முட்டாள்தனம்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. கோவி, இந்து மதத்தினை வரையறுப்பதல்ல பதிவின் நோக்கம். நம்பிக்கைகளில் முக்கியமானவற்றை பட்டியலிடுவதே.
    அஹிம்சைப் பாதையில் இந்து மதம் பற்றி அறிய இந்த சுட்டியை நாடுங்கள்.

    //அதாவது அவரவர் செயலுக்கு அவரே பொறுப்பு//
    ஆம், கண்ணன் - பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும். அற வழியில் நடந்திட, அவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது பற்றி விவரமாக தனிப்பதிவே எழுத வேண்டும்.
    கருப்பொருளுக்கு நன்றி!

    ReplyDelete
  7. காசி:

    யார் இந்து என்று வரையுறுப்பதல்ல இந்த பதிவின் நோக்கம். இந்த நம்பிக்கைகள் இந்துக்களிடம் உண்டு என்பது மட்டுமே பட்டியல் சொல்கிறது.

    //*உங்கள்* நம்பிக்கைகளை//
    பதிவின் தலைப்பை சுட்டிப் பார்க்கவும். தலைப்பில் மூலத்தின் சுட்டி கொடுத்திருந்தேன். ஆனால் ப்ளாக்கர் அது எளிதாக வெளியில் காட்டுவதில்லை. :-(

    எல்லா மதங்களும் அஹிம்சையைத்தான் போதிக்கின்றன. இதற்கு இந்து மதமும் விலக்கல்ல. நான் படித்தவற்றை பகிர்ந்து கொள்ள வந்தால் 'எங்கள் சகோதரர்கள்' என்று விலக்குகிறீர்கள். அறம் ஈதென்று சொல்லிய நம் பொதுமறையின் அரும் கருத்தாய் அகம் அருங்கமலமாய் விரிய, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டுமென்பதுதான் இந்தக் கருத்து. வள்ளுவப் பெருந்தகை சொல்லியதற்கு மேலாக வேறு யாரும் சொல்லவில்லை.

    எல்லா சமயங்களுக்கும் மேலாக, நான் 'மனித' சமயத்தில் நம்பிக்கை கொண்டவன். எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவை என்று இயன்றவரை நடுநிலையோடுதான் பதிவிடுகிறேன். அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்என்று உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது :-(

    ReplyDelete
  8. நீங்க ஆன்மீகத்தில் கரைக்கண்டவர்கள் என தெரிகிறது, ஒரு சின்ன அய்யம்,

    பாரதியார்காலத்தில இந்திய மக்கள் தொகை முப்பது கோடி தான் , அதனால முப்பது கோடி முகமுடையாள்னு பாடினார், அப்போதும் நம்ம வேதாந்திகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் வானில் இருப்பதா சொன்னாங்க, இப்போ இந்திய மக்கள் தொகை 110 கோடி ஆனப்பிறகும், வானுலக தேவர்கள் தொகை அதே முப்பத்து முக்கோடியாவே இருக்கே , ஏன் அவங்க தொகை பெருகவே இல்லை?

    மக்கள் எல்லாம் குழந்தை பிறந்தா ஆண்டவன் கொடுத்தது சொல்றாங்க, ஆனா மேல இருக்கவங்க மக்கள் செல்வம் இல்லாமலே இருக்காங்களேனு தான் கேட்டேன்!

    ReplyDelete
  9. வாவ் வவ்வால்! கலக்கறீங்க! இப்படி யாருமே இதுவரைக்கும் யோசிச்சுருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்!
    :-)

    ReplyDelete
  10. வருகைப் பதிவு மட்டும். படிச்சேன்.

    ReplyDelete
  11. வாங்க கீதா மேடம்!

    ReplyDelete
  12. Anonymous1:24 PM

    Thanks for putting up this list of 9 important beliefs. Eventhough this is a reproduction, I think its an important service to Tamil. It also needs to be translated in every language.
    Every Hindu should keep a copy of this list, its so essential to the understanding of one's religion.

    ReplyDelete
  13. Anonymous3:47 PM

    PayanuLa pathivu, pARAttukkal!

    ReplyDelete
  14. Thanks for the kind words sundar. Yes you are right, These are basic beliefs, that every hindu should be aware of.

    Thanks for dropping in Gopi.

    ReplyDelete
  15. நல் வாழ்விற்கு உகந்த கருத்துக்கள். நன்றி ஜிவா

    ReplyDelete
  16. ஆம், மதுரையம்பதி!, மறுமொழிக்கு நன்றி!

    ReplyDelete
  17. பகுத்தறிவாளர்களின் கேள்விகளி புல்லரிக்கது. என்னே அறிவு அப்பா எப்படிபட்ட ஞானம் சூப்பர் பகுத்தறிவாளர்களின் கேள்விகள்.

    பகுத்தறிவு ஞானிகள் இதே கேள்விகளை மற்ற மதத்தினரிடமும் கேட்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

    வேணும்னா கொஸ்டின் பேப்பரை நான் ப்ரிபேர் பண்ணி தரேன்.

    ReplyDelete