Friday, May 06, 2005

புத்தம் - ஒரு அத்வைதப்பார்வை

புத்தம் என்ற தலைப்பில் வி.சுப்ரமணியம் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்:

புத்தர் (கெளதமர்) ஒரு மாபெரும் ஞானி, ஆனால் அவரை பெயர்த்து உரைத்தவர்களுக்கு அவ்வளவாக ஞானம் இருக்கவில்லை. புத்தரோ அவருக்கு முன் இருந்த வேதாந்தங்களுக்கு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அவருக்கு அது தேவையில்லாதாகப் பட்டது. ஆனால், அந்தோ அந்த ஒரு காரணத்தாலேயே இந்தியாவில் பெரிதும் நிராகரிக்கப் பட்டார்.
ஆதி சங்கரரோ, புத்தரின் ஏறக்குறைய அனைத்து கோட்பாடுகளிலும் ஒத்துப்போனாலும், புத்தர் செய்யாத ஒன்றைச் செய்தார். வேறொன்றும் இல்லை. 'ரோமானியபுரியில் ரோமானியனாக இரு' என்ற மொழிக்கு ஏற்றார்போல் செய்ததே - ஏற்கனவே ஏற்பட்ட வேதாந்தங்களுக்கு விளக்கம் சொல்வதுதான்! உண்மையை புரியவக்க, அதுவரை இருந்த அனைத்து சாத்திரங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தனது 'அத்வைதம்' என்ற சித்தாந்தத்தில் மறுமொழி அளித்தார். புத்தர் சொல்லியும் கேட்காத, புரியாத அல்லது விளங்க விரும்பாத மரமண்டைகளுக்கு அப்போதுதான் விளங்கத் தொடங்கியது.

saranath-buddha Posted by Hello
அது அப்படி இருக்கையில், புத்த மதமே கெளதமரையே தவறாகவேத்தான் புரிந்துகொண்டது - நிர்வாணத்திற்கு அப்புறம் மீதி இருப்பது ஒன்றுமே இல்லை என்று புத்தர் சொன்னதாக . பல நூற்றாண்டுகளாக புத்த மதத்தினரும் இதையே சாதித்து வந்தனர். மறைந்து போகும் ஈகோவினைப் பார்ப்பது யார்? என்ற கேள்விக்கு புத்தமதத்தினரால் பதிலேதும் சொல்ல இயலாது. அந்த கேள்விக்கு சரியான பதிலை அத்வைதம் மட்டுமே உரைக்க முடியும்: "மறைந்து போவதை பார்ப்பது யார் என்று திருப்பிப் பார்ப்பவன்தான்" என்று. நிர்வாணம் அடையும் நிலையில் ஈகோ மறைகிறது என்று சொல்கிற வரையில் புத்தத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர்களிடம் விட்டுப்போன ஒரு பகுதி - "திருப்பிப் பார்ப்பவன்". எப்படி ஈகோ உருவாகிறது?, ஈகோ வருவதையும், மறைவதையும் பார்த்துக்கொண்டு இருப்பது யார்? 'ஆத்மா' என்று விடையளிக்கிறது வேதாந்தம் - "தீர்க தேஸ்ய விவேகம்" என்னும் விவாதத்தின் மூலம்.

இன்னமும் எளிய முறையில் விளக்குகிறேன்.
'வருகிறது', 'போகிறது' என்று சொல்லும்போது, அவ்வாறு வந்ததையும், போவதையும் பார்த்துக்கொண்டு இருக்க இன்னொருவர் இருந்தால்தானே, அவ்வாறு சொல்ல முடியும்.? புத்த மதத்தில், இப்படி ஒரு இன்னொன்றுக்கான சாத்தியம் இல்லை. இப்படி ஒரு விஷயத்தை புத்த மதத்தில் விட்டுபோனதிற்கு மூல காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் - புத்தர் இதுபோன்ற தர்க்க ரீதியான விஷயங்களை விளக்கிக்கொண்டிருக்கவில்லை என்பதேயாகும்.

ஈகோ என்பது மாயை, அதற்கு தொடக்கம் இல்லை, ஆனால் முடிவு உண்டு புத்தர் உபதேசித்தார். அது முற்றிலும் சரி. ஆனால் அதற்கு மேல் அவர் விளக்கவில்லை. அது தானகவே கண்டறிய வேண்டிய விஷயம், சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அவரது வழிவந்தவர்களோ, ஏற்கனவே இருந்த சித்தாந்தங்களை உடைக்கும் முயற்சியில், இதையும் சேர்த்துக் கொண்டார்கள் - புத்தர் அந்த கூற்றைப்பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு விவாதமுமே செய்யாவிட்டாலும்.

புத்த மத சித்தாந்ததிற்கும், அத்வைதத்திற்கும் இது ஒன்று தான் வேறுபாடு, மற்றவையெல்லாம் ஒன்றுதான். ஆனால் இது மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய கூற்று.

No comments:

Post a Comment