Sunday, July 04, 2010

நான் என்பது நீ அல்லவோ : கீதை (அத் 15) - பகுதி 2

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...



7. மனிதனின் ஜீவனும், எங்கெங்கும் பரவியிருக்கும் பரமாத்மாவும் உண்மையில் ஒன்றே. குடத்தின் உள்ளேயுள்ள காற்றும், குடத்தின் வெளியே இருக்கும் காற்றும் ஒன்றே என்பது போலவே. அது பின்னமில்லாமல், ஒன்றேயென எப்போதும் எங்கெங்கும் ஒளிர் விடுகிறது. இன்னும் சிலர், இப்படியும் சொல்வார்கள்: பல்வேறு பூக்களின் பல்வேறு மகரந்தங்களில் ஈர்க்கப்பட்ட தேன் துளிகள், அதன் தனித்துவமெல்லாம் இழந்து 'தேன்' எனும் ஒற்றை அடையாளத்தைப் பெற்றது போல, பல்வேறு ஜீவன்களும் பரமன் எனும் ஒற்றை ஒளிக்கற்றையில் இணையுங்கால், தாம் தரித்துவந்த உருவம், பெயர் முதலான அனைத்தையும் இழந்து, ஒன்றாய் ஒளிருகின்றது.

பரமனின் ஒரு பகுதியான ஜீவன், உண்மையில் எல்லைகளால் குறிக்கிட இயலாதது. ஆனால் இவ்வுண்மையினை அறியாதவர் கண்களிலோ, தன்னைச் சுற்றியுள்ள உடலெனும் சுவரைத் தாண்ட இயலாமற் போகிறது. ஐம்புலன்களின் வழியாய் உணரப்படும் எந்த உணர்வும் அந்த அங்கங்களின் சக்தியாலோ அல்லது அந்தக்கரணங்களின் சக்தியோ இல்லை. பிரகிருதிக்கு உட்பட்டு, இவ்வங்கங்களின் வெளிப்பாடுகளெல்லாம், பரமனின் ஒளியின் பிரதிபலிப்பேயாம். பரமனின் சைத்தன்யம் ஏப்போதும் இந்த ஐம்புலன்களையும், மனதையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

8. அதே பரமன், இந்த ஐம்புலன்களையும், மனதையும் முடிவில் தன் பால் முழுதுமாய் ஈர்த்துக் கொள்கிறான். அது எப்போது? உடலை விட்டு உயிர் பிரியும்போது, ஐம்புலன்களையும், மனதையும் - இது வரை மனத்தில் சேர்த்து வைத்த வாசனைகளையும் கவர்ந்து கொண்டு செல்லும் - வீச்சிய காற்றில், பூத்திருக்கும் பூவின் மணம் காற்றோடு கலந்து பரவுவதுபோலவாம்!

இறப்பில், தூல உடலை விட்டு அருஉடல்(சூட்சும உடல்) பிரிகிறது. ஐம்புலன்களும், மனமும் அருஉடலில் அடங்கும். ஆகவேதான், தூல உடலில் புலன்களுக்கான அறிகுறிகள் ஏதும் அதற்கப்புறம் இருப்பதில்லை. பணிமாற்ற உத்தரவு வந்தவுடன், ஒரு அலுவலர் எப்படி, தனது பொருட்களையும், குடும்பத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு, வேறு ஊருக்கு போகிறாரோ, அது போல, அருஉடல் தனது உடமைகளான, ஐம்புலன்களும், மனதையும், மனம் சுமக்கும் வாசனைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, தான் இதுகாறும் இருந்த தூல உடலெனும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறது. பின்னர், தனக்கான இன்னொரு உடலை அடைந்தபின், தான் கட்டிக் கொண்டுவந்த மூட்டையை இறக்கி வைத்து, புற உலகை துய்க்கத் துவங்கி விடுகிறது. முற்பிறப்பிலிருந்து கொண்டு வந்த வாசனைகள் மூலமாக, கர்ம வினைகள் என்னும் வங்கிக் கணக்கு தொடரப்படுகின்றது.

9. பரம்பொருளே, தன்னொரு பகுதியினை மாயையில் ஆழ்த்தி, இப்படியொரு உலக வாழ்க்கையினைப் படைக்கிறான். ஆன்மாவிற்கு சுகங்களை அனுபவிக்கும் இயல்பு இல்லை. ஆனால், குண மயக்கங்களினால், அது ஐம்பொறிகள் மூலமாக பரமன் துய்க்கும் சுகங்களை, ஜீவனோ தான் அனுபவிப்பதாக கருதுகின்றது. இந்த மயக்கம் நீடிக்கும் வரை, இந்நிலை மாறுவதில்லை.

பரம்பொருளின் சைத்தன்ய ஒளி மனதின் புத்தியில் பிரதிபலிக்கும்போது, அதனால், ஐம்புலன்களும் ஒளிர்விக்கப் படுகின்றன. இதனால் தாம், நாம் ஆழ்ந்த கவனத்தில் இருக்கும்போது, இன்னொருவர் அருகே வந்து பேசினாலும், அவர்பால், உடனடியாக கவனத்தை திருப்ப இயலுவதில்லை. ஏனெனில், நமது கவனம் - அல்லது ஆழ்மனம் வேறிடத்தை நாடியிருக்கிறது. ஆழ்மனத்தின் மூலமாக, ஐம்புலன்களின் துணையோடு, ஜீவன் ஐம்புலன்கள் வழியாக நுகரப்படும் உணரப்படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொள்கிறது.

பரம்பொருள் நம்மில் இருந்து கொண்டே, நம்மை இயக்கிக்கொண்டே, ஐம்பொறிகள் வழியாக சுகத்தை துய்த்துக் கொண்டிருக்கையில், அப்பரமனை நாம் அன்றாட செயல்களில் ஏன் அறியாமலே இருக்கிறோம்?

10. ஏனெனில், அகத்தின் ஞானக் கண்ணால் மட்டுமே காணக்கூடயது அஃதாம். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாய் மட்டுமே நிற்கிறது என்பதை அனுபவத்தில் ஞானியர் அறிவர். அவர்களது அறிவே வற்றாத பேரறிவாம். மெய்ஞானமாம். இவ் உண்மையினை அறியாமல், பொறிகள் மூலமாக துய்க்கும் சுகங்கள் யாவையும் தான் அனுபவிப்பதாக ஜீவனும் நினைப்பதால், அன்றாடம் எல்லாச் செயல்களிலும் பரமனை, அறியாமலே காலம் கழிக்கிறோம். விளைவு? மீண்டும் மீண்டும் பிறவி எனும் மீளாச்சுழலில் சிக்கித் தவிக்கிறோம்.

இலக்கியத்தை எல்லோராலும் படித்திட இயலும். ஆனால் அதன் சுவையை சுவைத்திட, இலக்கிய ரசனை வேண்டும். எல்லோராலும் நவரத்தின நகைகளை அணிந்து கொள்ள இயலும். அதன் சரியான மதிப்பை, நகைக்கடைக்காரரால் தான் துல்லியமாக மதிப்பிட இயலும். எல்லோராலும் இசையினை கேட்க முடியும். ஆனால் இசை ரசனை இருந்தால் தான், அதை ரசித்து அனுபவிக்க முடியும். அதுபோல, உயர் ஞானம் அமையப் பெற்றால் மட்டுமே, தன்னில் உறையும் பரமனே தன்னைத் துய்க்கிறான் என்பதை அறிந்து, தான் என்னும் அகந்தை அழிந்து, எல்லையில்லா பேரின்பத்தை துய்க்க முடியும்.

எப்போது ஒருவனால் ஞானியாக முடியும்? அகக்கண்ணால் எப்போது பரமனை உணர முடியும்?
அதற்கான வழியாக பகவான் கண்ணன் சொல்கிறான் "யோகம் செய்" என்று...
அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் படித்துப் பார்ப்போம்.

4 comments:

  1. நிறைய படிக்காது இருந்திருப்பேன் போல இருக்கிறதே?....புரியும்படியாக எழுதியிருக்கீங்க...படிக்கிறேன் மிச்சத்தையும்.

    ReplyDelete
  2. வாங்க மௌலி சார்,
    மிக்க மகிழ்ச்சி!
    அவசியம் மிச்சமில்லாமல் படிக்க வேண்டும்!

    ReplyDelete
  3. You have been blogging since 2005? Amazing! I wonder I missed you. We write on similar topics. Thanks for visiting my blog http://vishishtadhvaitham.blogspot.com/

    ReplyDelete
  4. வாங்க மாலதி,
    வருகைக்கு நன்றி. குறித்துக்கொண்டேன் உங்கள் வலை முகவரியினை.

    ReplyDelete