Wednesday, March 31, 2010

கண்ணுதலும் மூவாறு கண்களும்


அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் - அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா!
அதிலிருது ஒருதுளி:

ஆதி சங்கரர் இயற்றிய 'சுப்ரமணிய புஜங்கம்' படித்திருப்பீர்கள்.
அதில் 'அஷ்டாதசலோசன்' என்றொரு வரி வரும்.
அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், 'சுப்பிரமண்யேன' எனத்துவங்கும் சுத்த தன்யாசி ராகப் பாடலில், முருகனை 'அஷ்டாதசலோசனா' என்றழைப்பார்.
அஷ்ட + தச = 8 + 10 = 18 கண்கள்!
எப்படி பதினெட்டு கண்கள் இருக்கமுடியும்?
அறுமுகம் என்றால் கூட பன்னிரண்டு கண்கள் தானே?

'கொடிய மறலியு மவனது கடகமு...' எனத்துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர்
'அறுமுகமும் வெகு நயனமும்' என, 'பலவான கண்கள்' என்கிறாரோ தவிர, குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

...
வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(கைக்கிளைப் படலம், 71).

எனக் கம்பன் சுவைக்கும் கண்ணுதற் கடவுளின் கண்மணி எப்படி இருப்பான்?
தகப்பன் சாயலில் தானே தகப்பன்சாமி!
நுதலிற் (நெற்றியில்) கண்ணினை உடைய கண்ணுதலாம்(கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்!
முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ, முருகய்யா!

கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்.
'பவளத்தன்ன மெனி' செவ்வேளும் சிவனும் சொல்லாடலில் குறிப்பது செந்நிறத்தையேயாம். 'சிவனை நிகர்' முருகனின் ஆற்றுப்படை இடம்கொண்டது, பதினோராம் திருமுறைத் தொகுப்பில்.

ஸ்ரீகுருகுஹ' எனத்துவங்கும் விருவிருப்பான கீர்த்தனையில் பல பதிகளும் சேவிக்கும் பரமனென முருகனைப் புகழ்வார் முத்துசாமி தீக்ஷிதர்.
அந்த பதிகளெல்லாம் யார் யாராம்?

சுரபதி - இந்திரன்
ஸ்ரீபதி - விஷ்ணு
ரதிபதி - மன்மதன்
வாக்பதி - பிரம்மா
க்ஷிதிபதி - அரசன்
பசுபதி - சிவன்

என சிவன் உட்பட, பல்வேறு பதிகளாலும் பூஜிக்கப்படுபவன் பாலசுப்ரமணியன் என்பார் பாடலின் பல்லவியில்.
இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:

8 comments:

  1. முருகா!
    --
    அருமையான விளக்கம்
    முருகருக்கு 18 கண்கள்
    முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா!

    ReplyDelete
  2. //முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்! முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ//

    அதான் முருகனின் உருவமாகவே பதினெட்டு மெய்யெழுத்துக்கள் தமிழில் என்று சுவையாகச் சொல்வதுண்டு! :)

    பன்னிரு கரமும் = 12 உயிரெழுத்துக்கள்
    பதினெட்டு கண்ணும் = 18 மெய்யெழுத்துக்கள்!
    அவன் திருக்கை வேல் = ஆய்த எழுத்து!

    //கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்//

    அஞ்சு முகம் தோன்றில் (சிவன்)
    ஆறு முகம் தோன்றும் (முருகன்)

    //ஸ்ரீகுருகுஹ//

    குருகுஹ-வில் வரும் பதிபதி நல்லா இருக்கு ஜீவா!
    ஆறு பதிகளும் பாடும் ஏழாம் பதி = வள்ளி தேவசேனா பதி!
    ஏழு ஸ்வரமாகவும் ஆகி விட்டது!

    ReplyDelete
  3. //கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை//

    இது என்னா-ன்னு கொஞ்சம் சொல்லிக் குடுங்க ஜீவா!
    நான் தமிழில் அதிலும் இலக்கணத்தில் ரொம்பவே வீக்! :)

    ReplyDelete
  4. வாங்க ராஜேஷ் நாராயணன்!

    ReplyDelete
  5. வாங்க KRS!
    இந்த பதிவிடும்போது உங்களைத்தான் நினைச்சுகிட்டேன். நீங்க முன்ன ஒரு பதிவிலே எழுத்துக்களை இணைத்து எழுதி இருந்தது நினைவில் இருக்கு.

    //ஆறு பதி//
    அருணகிரியார் அழகாச் சொல்லுவாரே
    :
    "ஆறு திருப்பதி வளர் பெருமாளே" என்று - அது நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  6. //இது என்னா-ன்னு கொஞ்சம் சொல்லிக் குடுங்க //
    ஹூம், உங்களுக்குத் தெரியாததா?

    கண்ணுதல் = கண்ணினை உடைய நுதல்
    ; இதில்
    'உடைய' என்கிற ஆறாம் வேற்றுமை உருமை (ஐ,ஆல்,கு,இன்,அது,கண்) மறைந்து வருவதால், அது ஆறாம் வேற்றுமைத் தொகையாம்.
    இப்படிப்பட்டத் தொகையில் இருந்து பிறந்தால், அன்மொழித்தொகை.

    ஏன் அன்மொழித் தொகை?
    கண்ணுதல் என்பது கண்ணினை உடைய நெற்றி என்றாலும், சிவனுடைய பெயராகி விட்டமையால். இப்படி சொல்லின் நேரடியான பொருளைக் குறிக்காமல் வேறொரு பொருளைக் குறிப்பதனால்.

    ReplyDelete
  7. ஜீவா,

    அழகிய விளக்கம். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களைக் கேட்டிருந்த போதும், அதனை இவ்வளவு நுட்பமாய் ரசித்ஹிருக்கவில்லை. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    லலிதா ராம்

    ReplyDelete
  8. வாங்க லலிதாராம்,
    தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!
    நன்றிகள்!

    ReplyDelete