Friday, June 12, 2020

நாலும் இரண்டும்

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
- நாலடியார்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- திருக்குறள்

இந் நாலும் இரண்டும் தரும் நல்வழி தனைப் பாடிடப் புனைந்த பாடல்.

எடுப்பு
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும் - உலகில்
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும்.

தொடுப்பு
நாலும் இரண்டும் கற்றோர்க்கு - பொல்லா
உலகில் இல்லையே பவ பயம்.

முடிப்பு
ஓலைக் குடிசையில் இருந்தாலும்
வேலை முடிந்து கோரைப்பாயிற் படுத்தாலும்
நாலும் இரண்டும் தரும் நல்வழிதனைப் பற்றிட
(உலகில் இல்லையே பவ பயம்)

பாலை நிலத்தில் நீர் அதனைத் தேடி
மூலை முடிக்கெங்கும் அலைந்து திரியாமல்
கள்ளிச் செடியிலும் காண்பாரே.
(நாலும் இரண்டும் கற்றோர்க்கு)

காலை மாலை என வேளை எதுவாகிலும்
ஆலும் வேலும் போல் நாலும் இரண்டும் என
நூலைக் கற்று வழி நடந்தார்க்கு
(உலகில் இல்லையே பவ பயம்)

No comments:

Post a Comment