Wednesday, October 14, 2015

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:
சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி
சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:
சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி
சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:
ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி
கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி
அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி
மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி
ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி
சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:
குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி - சங்கரனின் துணைவி
சம்குரு - நலங்களை எமக்கு வழங்கிடு,
அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி - மனதுக்கு இயைந்த இறைவி - அகிலாண்டேஸ்வரி.
சாம்பவி - சாம்புவின் துணைவி.
தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி - சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.
எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
ஜகத் ஜனனி - உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.
ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.
சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.
அகில உலகங்களையும் போஷிப்பவள் - பேணுபவள்.
மங்களங்களைத் தருபவள்.
ம்ருதானி - மிருடனின் (கருணையுடையவன்) - சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி - அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி - மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு 'சதோதரன்' என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே - பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

---------------
இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:




டி.கே.பட்டம்மாள்:


மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்:


7 comments:

  1. மிக அருமை! அரியதொரு பாடல் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாம்மா!

      Delete
  2. அற்புதமான கீர்த்தனை.
    என் அம்மா பாடி நான் கேட்டு இருக்கிறேன்.
    சுருதி சுத்தமாக .
    மகாராஜபுரம் நேரில் பாட கேட்க வும்
    எனக்கு பாக்கியம் கிடைத்தது.
    நவராத்திரி
    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய நவராத்ரி வாழ்த்துக்கள்!

      Delete
  3. நலம் தானே?
    வானவில் மனிதன் எனும் என் வலைப்பூவில் உங்களைப் பற்றிய பேச்சு வந்தது. அதன்மூலம் இங்கு வந்தேன். நல்ல கீர்த்தனம். மகாராஜபுரம் அதை மெருகேற்றியிருக்கிறார். இங்கு வந்ததில் மகிழ்ச்சி. நல்ல பணியைக் தொடருங்கள் !

    ReplyDelete