Wednesday, December 05, 2012

Life of Pi திரையில்

அண்மையில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் பகிர்ந்து கொள்வதும் பல்கிப் பெருகி வரும் தருணத்தில், எனது பார்வையையும் இங்கே பதிவு செய்கிறேன்.

புத்தக வடிவில் நாவலாக வெளியிடப்பட்டபோதே 2005இல், இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி இருந்தேன். முன்னுரை மட்டும் படித்த பின் ஒரு பதிவும் அப்போது எழுதி இருந்தேன். பின்னர் முழுதும் முடித்த பின்னர் மீண்டும் பதிவிடக் கிட்டவில்லை. என்றாலும், அப்போதைக்கு இப்போது சமன் செய்யலாமனெ நினைக்கிறேன். முடிந்த வரை, இப்பதிவில் இப்படத்தின் கதை விவரங்களைச் சொல்லாமல் இருக்கப் பார்க்கிறேன்.

3D வடிவத்தில் பெரிய படங்கள் அனைத்துமே இப்போதெல்லாம் வெளியிடப்படுகையில், எனக்கோ 3D கண்ணாடிகள் வழியாக திரையினைப் பார்ப்பது என்பது ஒரு குறையாகவே தோன்றும். அது செயற்கையான சேர்க்கையாக, என் இயற்கையான விழி வழி புலனுணர்வுகளுக்கு ஏதோ ஒரு தடையாகவே தோன்றும். ஆகவே 3D காட்சியனை தவிர்க்க நினைத்தாலும், சாதாரணக் காட்சிக்கு அனுமதிச் சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், வேறு வழியின்றி 3D காட்சிக்கே சென்றேன். ஆனாலும், நல்லவேளை, அப்படியொன்றும் பெரிய இடராகத் தெரியவில்லை.

படத்தில் முதல் சொல்லே "கண்ணே" என்றே தமிழில் தொடங்க - வியப்பில் இது ஏற்கனவே கேட்ட குரலாய் இருக்கிறதே நினைக்கையில் - அது பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடும் தாலாட்டுப் பாட்டென்பது தெளிவாகியாது. பக்கத்தில் மடியில் உட்கார்ந்திருந்த நான்கு வயது மகளோ உடனே தூங்கிவதற்கு முகத்தை திரும்பிக் கொண்டு தயாராகி விட்டாள்!

 

நல்லவேளை, பாடல் முடிந்தபின் புதுச்சேரிக் காட்சிகளும், இயல்பான வசனங்களும் அவளைத் தொடர்ந்து தூங்க விடாமல் திரையை கவனிக்கச் செய்து விட்டன. இயக்குனர் ஆங் லீ என்பவரின் தயாரிப்பு தானா, இது ஹாலிவுட் படம்தானா என எண்ணும் அளவிற்கு புதுச்சேரிக் காட்சிகள் தமிழ் திரைமண்ணின் மணத்தைக் காட்டின!

இந்தியர்கள்் எப்படி பிற மதங்களையும் தங்கள் சூற்றுச்சூழலில் எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மற்ற மதக் கடவுள்களையும் அன்னியமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டும் காட்சியும் உண்டு. கிட்டத்தட்ட இந்தக் காட்சிகள் ஆவணப்படம் போல் இருந்தாலும், மேலை நாட்டவர்களுக்கு நமது சமயச்சூழலையும், "எம்மதமும் சம்மதம்" என்னும் கோட்பாடும் இயற்கையாகவே இளைய தலைமுறையில் உருவாகுவது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

படம் முழுவதும் படத்தின் நாயகன் தன் கதையைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தன் தந்தையின் மிருகக் காட்சி சாலை அனுபவங்கள் முதல் கால் பகுதி. மீதிப் பகுதியில் நாயகன் ஒரு சில மிருகங்களுடன் படகொன்றில் மாட்டிக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பதுதான். தனது சொந்தப்புலமதில் தனக்கு விருப்பமானவற்றைச் செய்வதும் பின்பற்றுவதுமாக எல்லோரும் போல இருந்த நாயகன், அவற்றைத் தாண்டி, கடல் என்னும் புதிய பழக்கமில்லாத புலத்தில் விடப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கலாம்? பசிபிக் பெருங்கடலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லா திசைகளிலும் கடலே தெரிகையில் படகில் மிஞ்சுவது தினமும் ஐந்து கிலோ மாமிசம் உண்ணும் வங்காளப் புலியும், மாமிசமே உண்டிராத நாயகனும் தான். தன்னை புலியிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள நாயகனின் சிறு சிறு முயற்சிகள் எனப் படம் நகர, அப்பயணத்தின் போது வண்ணத்திரை வண்ணத் தூரிகையாகிறது. படகையும் அதை இணைத்திருக்கு கட்டு மரத்தையும் சுற்றி பச்சை ஒளி தோன்றுவதாகவும், இரவில் கடலுக்கு ஜெல்லி மீன்களே வண்ண ஒளியூட்டுவதும், கடலில் இருந்து பிரம்மாண்டமான உயரத்திற்கு எழுந்து விஸ்வரூப தரிசனத்தைத் தரும் திமிங்கலமும் கண்கொளாக் காட்சிகள்!




கடலின் பிரம்மாண்டம் திரையில் விரிய, அதில் பகல் நேரத்தில் வானத்தின் நீலமும், வெண் மேகங்களும் தங்கள் பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. இரவு நேரமென்றால் இன்னமும் கேட்கவே வேண்டாம். கற்பனைக்கே அலாதி ஆனந்தத்தைத் தரும் கரு வானத்தில் பதித்து வைந்த எண்ணிடலங்கா இரத்தினங்களென மின்னும் விண்மீன்களின் தனித்துவமான பிரதிபலிப்பு பார்ப்பவர் விழிகளை வசியம் செய்கிறது. படகு பயணிப்பது கடலிலா அல்லது வானத்திலா என்று மனதை மயலுறுத்துகிறது!

நடுக்கடலில் மீண்டும் புயல்வர, அது படகுடன் அவர்களை ஆளிலில்லாத அதிசயத் தீவிற்கு இட்டுச் செல்கிறது. அங்கே நாயகன் இயற்கையாகவே சூழ்நிலைக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக் கொண்டதுடன், புலியுடன் படகை செலுத்தி, இறுதியில் மெக்ஸிகோவின் கடற்கரையை அடைகிறான். புலி படகில் இருந்து இறங்கி கடலை ஒட்டி இருக்கும் காட்டில் மறைகிறது. அது காட்டில் நுழையும் சமயம் தன்னை திரும்பி ஒருமுறை கடைசியாகப் பார்க்காத என்ற ஏக்கத்துடன் மயங்கி விழுந்த நாயகனைக் காப்பாற்றி மருத்தவ மனையில் சேர்க்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

பின்னர் நாயகனைப் பார்க்க வந்த காப்புரிமை நிறுவன ஆட்களிடம் இந்தக் கதையைச் சொல்ல அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு கதையினைச் சொல்கிறான். இரண்டாவது மாற்றுக் கதையை நாயகன் சொல்லும்போது ஏனோ நான் அவற்றை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுக்கொண்டே இருந்தேன். ஏனப்படி? நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏதோ ஒன்றின் நம்பிக்கை செய்யும் வித்தையால்தான் அது. படத்தின் முக்கால் பகுதிக்கு கண்களிலும் மனதிலும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அதற்கு நேரெதிர் மறையான இன்னொன்றைச் சொல்லும் போது - மனதால் ஏற்கப்பட மறுக்கப்படுகின்றன. இந்த 'மாற்று' வேண்டாமே என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

இறை நம்பிக்கையும் இப்படித்தான் என்பதை மறைமுகமாக இதன் பின்புலத்தில் வைக்கப்படுவதை கவனிக்காமல் விட்டுவிட இயலாது. இரண்டு கதைகளைச் சொல்லி - எப்படி நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகையில் - இறை நம்பிக்கையோ அல்லது இறை மறுப்போ - நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ - அதைத் தான் நம்பப் போகிறீர்கள் - அதுபோலவே இந்தப் படத்தின் முடிவையும் நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ அதுபோல எடுத்துக் கொள்ளுங்கள் என்று நம்பிடமே விட்டு விடுகிறார்கள்!

புலி காட்டுக்குள் மறைவதற்கு முன்னால் தன்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற நாயகனின் ஏக்கம் போல - மனிதர்கள் வாழும்போதே ஒருவருக்கொருவர் உதவியோ நன்றியோ செய்யாமல், அவர்களை இழந்தபின் அதற்காக ஏங்குவது என்பதைப் பதிவு செய்து திரைப்படம் நிறைவு பெறுகிறது.

படம் முடிந்து மங்கிய விளக்குகளின் வெளிச்சம் அரங்கில் ஆக்கிரமிக்க, என்னுடைய உடமைகளை இறுக்கமாகவும், அதிக கவனத்துடனும் பிடித்துக்கொண்டு நடக்கத் துவங்கினேன்!

படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இங்கே பார்க்கலாம்:

4 comments:

  1. In all frankness, I am unable to understand the story.
    subbu rathinam.

    ReplyDelete
    Replies
    1. @சூரி ஐயா,
      கதையை இங்கேயே சொன்னால் படம் பார்க்க விரும்புவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை. படம் பார்த்தவர்களும் ஒவ்வொரு வகையில் கதையை புரிந்து கொள்ளவ்ய்ம் வாய்ப்பிருக்கிறது.

      Delete
  2. அழகா சொல்லி இருக்கீங்க. அந்த மாற்றுக்கதையை அதனால தான் அதிக கவனத்தோட கவனிக்கவேண்டி இருந்ததா..>? :))

    ReplyDelete
    Replies
    1. @முத்துலெட்சுமி,
      மாற்றுக்கதை கவனிக்கக்கூடாது என்கிற தன் முனைப்பில்லாமல், தானாக மனமானது அதை ஏற்க மறுத்தது. மாற்றுக்கதை முடிந்தபின், இரண்டு கதைதையும் ஒப்பிட்டுச் சொல்லுகையில் தான் "ஓ அப்படியா" என்றது மனம்!


      Delete