Monday, December 12, 2011

ஹரியும் ஹரனும்

ஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.
ஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.
ஹரிஹரன் என்பாருண்டு.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே!  சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய "மா ரமணன் உமா ரமணன்" ஹிந்தோள இராகப் பாடல்.

எடுப்பு
மா ரமணன்
உமா ரமணன்
மலரடி பணி மனமே- தினமே

தொடுப்பு
மாற ஜனகன்
குமார ஜனகன்,
மலைமேல் உறைபவன்- பாற்கடல்
அலைமேல் உறைபவன்- பாவன

முடிப்பு
ஆயிரம் பெயரால் உரைத்திடும்
ஆயிரம் உருமாறினும்
உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்

உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:


அடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.

இயற்றியவர்: நீலகண்ட சிவன்
பண்: காந்தார பஞ்சமம்
இராகம்: கேதாரகௌளை
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
ஸ்ரீகண்டேஸ்வரனை ஸ்ரீ பத்மநாபனைத்
தரிசனம் செய்வோமே

தொடுப்பு
நாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்
ஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து

முடிப்பு 
அன்னபூர்ணேஸ்வர் மனையாளிவருக்குண்டு
அஷ்டலக்ஷ்மி மனையாட்டி யவருக்குண்டு
பொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு
பொங்கும் பாற்கடல் நவமணிகளிவர்க்குண்டு
உன்னத இடப வாகனமிவர்க்குண்டு
உயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு
தன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு
சாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு

இப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "தில்லையம்பலத்தானை" பாடலை நினைவு படுத்துகிறதல்லவா! இதோ அந்த பாடலும்:

இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : சஹானா
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
தில்லையம் பலத்தானை கோவிந்தராஜனை
தரிசித்துக் கொண்டேனே

தொடுப்பு
தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்
தொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்

முடிப்பு
தும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே
துளசிக்கொழுந்தெடுத்துக் தொட்டுக் கொடுப்பதங்கே
அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே
அஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே
தேவாரம் திருவாசகம் படிப்பதிங்கே
திருவாய்மொழியோதி சேவிப்பதங்கே
அருமறைப் பொருளுக்கெட்டா வடிவமிங்கே
அறிதுயில் அணையானை ஆதரிப்பதங்கே

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:

6 comments:

  1. நல்ல பாடல்கள்! நன்றி ஜீவா1

    ReplyDelete
  2. அருமையான பாடல்கள், பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  3. கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலை முதன்முறையாகக் கேட்கிறேன். சஞ்சய் சுப்ரமணியம் அழகாக பாடியுள்ளார். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. இனிக்கும் பொங்கல் நல் நாளில்
    இந்தோள ராகத்தில்
    உன்னி கிருஷ்ணனின் மா ரமணன் பாடல்
    உள்ளத்திலே பெருகுவது
    உவகையா இல்லை
    வைகையா !!

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    சுப்பு ரத்தினம்.
    இங்கேயும் பொங்கல் கிடைக்கும்
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. இனிக்கும் பொங்கல் நல் நாளில்
    இந்தோள ராகத்தில்
    உன்னி கிருஷ்ணனின் மா ரமணன் பாடல்
    உள்ளத்திலே பெருகுவது
    உவகையா இல்லை
    வைகையா !!

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    சுப்பு ரத்தினம்.
    இங்கேயும் பொங்கல் கிடைக்கும்

    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!
    உள்ளம் இனிக்குதய்யா!

    ReplyDelete