Saturday, April 16, 2011

கறை கரைந்து காணும் தெய்வம்!

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓரமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்.
நித்தம் நித்தம் உயிருடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வளவு அழகான கவியாய் வடித்திருக்கிறார் பேருண்மையை!

எண்ணம் என்ற மூலம் என்னிடத்தில் இருக்கும் வரை அது எனது எனது என்று என்னையே நினைத்து, என்னைச் சுற்றி வருகிறது.
ஆனால் அதே எண்ணத்தை என்பால் அகற்றி எல்லாமுமான இறையவனை நினைக்கும்போது...
"ஓரு அமைதி" கிட்டுகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்பின் கிட்டும் அவ்வமைதி பேரமைதி.

அந்த அமைதி நிலையில் நிலைத்து நிற்க. "எழுமின், விழிமின்" என நிலையில் விழிப்புடன், வழிமேல் விழி வைத்து நிற்க, தானாக ஏற்படும் நிறைநிலை. மெய்பொருள் யாதென உணந்திடும் தற்செயலும் இறை செயலேயாம்.

ஒருமுறை அந்நிலையை அடைந்து விட்டால், அந்நிலையை அடுத்து பழகப்பழக, காணும் காட்சியும், நுகரும் நாற்றமும், கேட்கும் ஒலியும் என எல்லாவற்றிலும் நந்தலாலா.

பின் எல்லாக் கறைகளும் களைந்தாயிற்று என்றால், தன் முனைப்பு தானாய்க் கரைந்து போகும்.
கண்ணுக்கினியவனை கண்ணாறக் கண்டு கைக்கொளலாம்!

Thursday, March 17, 2011

மாமதுரை மீனாக்ஷி!

அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சயமானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
- அபிராமி அந்தாதி


இப்படி, அப்படி என எப்படிச் சொல்ல இயலும்?
பெரொளி கூட்டி, பெருநிறைக் காட்டி, ஈதன்றி வேறில்லை எனவிருக்கையில் வேறெப்படிச் சொல்ல இயலும்.
அதிசயம்! ஆம், அதிசயம்!

ஒப்பிலா சொல்லில் அதிசய வடிவில்
மெச்சிடும் பேச்சாய் நிற்பாள் அன்னை!

அன்னையவளைப் பாடும் அபிராமிபட்டரின் அந்தாதி சொல்லும் சந்தத்தை சிந்தித்திருக்கையில் அங்கயற்கண்ணியைப் பாடும் மாமேதை நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய பாடல்கள் - ஒன்று மட்டுமல்ல - மூன்று பாடல்களைச் இங்கே சுவைக்கப்போவது சுகம்.
~~~~~~~~~~~
1.
இராகம் : கரஹரப்ரியா
தாளம் : ஆதி
பாடுபவர் : திரு. உன்னி கிருஷ்ணன்

anthari_sundari-ka...


எடுப்பு
அந்தரி சுந்தரி காமாக்ஷி என
அருள்புரியும் மாமதுரை மீனாக்ஷி

தொடுப்பு
சுந்தரேசர் வாமாங்க மேவிய ஆனந்தம் ஓடுஞ்
சுகமுங் கைக்கொண்டு நாமுமக மகிழ்ந்துறவாடும்

முடிப்பு

மும்மலைத் தடாதகை எனப்புவி மீது உதித்தாய்
முழுதுலகமும் வென்று வீர முடி தரித்தாய்
செம்மையாய் உலகாண்டு ஜகம் புகழ்ந்திட வைத்தாய்
திருநீல கண்டர் பாதி உடற் அலங்கார முற்றாய்.

~~~~~~~~~~~
2.
இராகம் : நாட்டைகுறிஞ்சி
தாளம் : ஆதி

எடுப்பு
ஏனிந்தத் தாமதம் மீனாட்சி மனம்
இரங்கி வந்து தந்தருள் திருக்காட்சி

தொடுப்பு
நீ நினைந்தால் நடவாததும் உண்டோ
நித்திய கல்யாணி யென்பெற்றவளே கண்டாய்

முடிப்பு
சோதனை யாமென்றாலும் நான்மனம் பொறுக்கேன்
துரும்பெனத் தள்ளினாலும் இனியுனை வெறுக்கேன்
நீதனை யாலவாயில் நீலகண்டனை மேவி
நிரந்தர வருள்புரிந்து எதுந்தரும் பரதேவி.


~~~~~~~~~
3.
இராகம் : வராளி
தாளம் : மிச்ரசாபு

எடுப்பு
கருணை புரியிதுதருணம் மீனாக்ஷி நானுன்னடிமை
சரணம் உனக்கே சரணம் ஜகத்ஸாக்ஷி

தொடுப்பு
பெருமை யுறுமது ராபுரித் தனி
யரச பெரும் சுந்தரேசர் மனோன்மணி
அருணிறைந்த கடாக்ஷ வீக்ஷணி
அம்பிகே யுன்னை நம்பினேன் இனி

முடிப்பு
நீல வேணி நிறைந்த பூஷணி
லீலைதரு முக்கதர பாண்டிய ஜனனீ
சீல மிகு பரதேவி சீகபாணி
நீல கண்டர் மனோல் லாசினி.