Thursday, March 17, 2011

மாமதுரை மீனாக்ஷி!

அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சயமானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
- அபிராமி அந்தாதி


இப்படி, அப்படி என எப்படிச் சொல்ல இயலும்?
பெரொளி கூட்டி, பெருநிறைக் காட்டி, ஈதன்றி வேறில்லை எனவிருக்கையில் வேறெப்படிச் சொல்ல இயலும்.
அதிசயம்! ஆம், அதிசயம்!

ஒப்பிலா சொல்லில் அதிசய வடிவில்
மெச்சிடும் பேச்சாய் நிற்பாள் அன்னை!

அன்னையவளைப் பாடும் அபிராமிபட்டரின் அந்தாதி சொல்லும் சந்தத்தை சிந்தித்திருக்கையில் அங்கயற்கண்ணியைப் பாடும் மாமேதை நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய பாடல்கள் - ஒன்று மட்டுமல்ல - மூன்று பாடல்களைச் இங்கே சுவைக்கப்போவது சுகம்.
~~~~~~~~~~~
1.
இராகம் : கரஹரப்ரியா
தாளம் : ஆதி
பாடுபவர் : திரு. உன்னி கிருஷ்ணன்

anthari_sundari-ka...


எடுப்பு
அந்தரி சுந்தரி காமாக்ஷி என
அருள்புரியும் மாமதுரை மீனாக்ஷி

தொடுப்பு
சுந்தரேசர் வாமாங்க மேவிய ஆனந்தம் ஓடுஞ்
சுகமுங் கைக்கொண்டு நாமுமக மகிழ்ந்துறவாடும்

முடிப்பு

மும்மலைத் தடாதகை எனப்புவி மீது உதித்தாய்
முழுதுலகமும் வென்று வீர முடி தரித்தாய்
செம்மையாய் உலகாண்டு ஜகம் புகழ்ந்திட வைத்தாய்
திருநீல கண்டர் பாதி உடற் அலங்கார முற்றாய்.

~~~~~~~~~~~
2.
இராகம் : நாட்டைகுறிஞ்சி
தாளம் : ஆதி

எடுப்பு
ஏனிந்தத் தாமதம் மீனாட்சி மனம்
இரங்கி வந்து தந்தருள் திருக்காட்சி

தொடுப்பு
நீ நினைந்தால் நடவாததும் உண்டோ
நித்திய கல்யாணி யென்பெற்றவளே கண்டாய்

முடிப்பு
சோதனை யாமென்றாலும் நான்மனம் பொறுக்கேன்
துரும்பெனத் தள்ளினாலும் இனியுனை வெறுக்கேன்
நீதனை யாலவாயில் நீலகண்டனை மேவி
நிரந்தர வருள்புரிந்து எதுந்தரும் பரதேவி.


~~~~~~~~~
3.
இராகம் : வராளி
தாளம் : மிச்ரசாபு

எடுப்பு
கருணை புரியிதுதருணம் மீனாக்ஷி நானுன்னடிமை
சரணம் உனக்கே சரணம் ஜகத்ஸாக்ஷி

தொடுப்பு
பெருமை யுறுமது ராபுரித் தனி
யரச பெரும் சுந்தரேசர் மனோன்மணி
அருணிறைந்த கடாக்ஷ வீக்ஷணி
அம்பிகே யுன்னை நம்பினேன் இனி

முடிப்பு
நீல வேணி நிறைந்த பூஷணி
லீலைதரு முக்கதர பாண்டிய ஜனனீ
சீல மிகு பரதேவி சீகபாணி
நீல கண்டர் மனோல் லாசினி.

Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.