Thursday, July 31, 2008

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ?

ந்த இடுகையில் தமிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் மூவரில் ஒருவர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் பாடலில் ஒன்று பார்க்கவிருக்கிறோம். 'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழிசை நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை - மாயாமாளவகௌளை
ஈசனே கோடி சூரிய பிராகசனே - நளினகாந்தி
தரிசித்தளவில் - லதாங்கி

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

இந்த இடுகையில் நாம் கேட்கப்போகும் 'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது! Hats off Sanjay!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

உசாத்துணை:
* திரு. வி. சுப்ரமணியம் - சுருதி இதழ்
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் - சென்னை ஆன்லைன்

Saturday, July 26, 2008

என் மதியம் நிதிஸ்ரீ சுவேதிகா வாம்!

ஆமாங்க, சொல்லிடறேன், ஆடி முதலாம் நாளில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'சுவேதிகா' எனப் பெயர் சூட்டியுள்ளோம்.
சுவேதம் என்னும் சொல்லுக்கு, 'வெண்மை', 'தூய்மை' என்பன பொருள். ஒளிரும் வெண்மையான பாதரசம், என்ற பொருளில் திருமந்திரச் செய்யுள் ஒன்றிலும் குறிப்பிருக்கிறது.
திரு'வெண்'காட்டில் உறையும் ஈசன் சுவேதாரண்யேஸ்வரர் பெயரை நினைவூட்டும் வண்ணம் பெயர் அமைந்துள்ளது.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
என்னும் திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகப்பாடல் எம்வாய் மொழிந்து,
எல்லாம் வல்ல ஈசன் கருணையினால் குழந்தையும் எல்லா நிறைகளுடன் பிறந்துள்ளது.

என்னே ஈசன் கருணை, அவனுக்கு எத்துணை நன்றி நவில்வேன்?

ஆடி முதல்நாளில் ஆடிய பாதத்தான்
ஆதி சிதம்பர நாதன் அருளில்
உதித்திட்ட நித்திலம் ஈதென் மதியம்
நிதிஸ்ரீ சுவேதிகா வாம்.

கருணை மழைபொழி வெண்காட்டு ஈசன்
அருணோத யம்போல் சுவேத அருள்பொழிந்து
அன்பனுக்கு ஆடி முதல்நாளில் ஈந்துவந்த
என்செல்வம் வெண்மதி யாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
திருச்சிற்றம்பலம்.


தொடர்புடைய இடுகை:
திருவெண்காட்டு தேவாரப் பதிகம்