Friday, December 31, 2010

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் வாசகத்தில்
முத்துசாமி தீக்ஷிதர் பாடல் மட்டுமல்ல,
மழலைப் பாடலும் உண்டு!

மழலைகளுக்கான துள்ளல் பாட்டொன்று இங்கே.
ஆனா, ஆவன்னா சொல்லித் தரும் பாடல், நீங்களே கேட்டுப் பாருங்கள்:



அடுத்து, மழலைகள் தேசிய கீதம் பாடுவதின் இனிய தொகுப்புன்று:


இதோ, 2011 எனும் இனிய புத்தாண்டு பிறக்கறது.
இந்த இசையில் வேகமாக வாசிக்கப்படும் வயலின் போல, 2011 துள்ளலோடு துவங்கட்டும்,
துலங்கட்டும்:


2011 எல்லோருக்கும் எல்லா வளங்களும் வந்துசேர வழி வகுக்க வாழ்த்துக்கள்!

Tuesday, December 28, 2010

பக்தியும் ஞானமும் (6) - சக்தி

ன்று, அன்று என்றில்லாமல் தொன்று தொட்டு சக்தி வழிபாடு நிலவி வருகிறது நம் நாட்டில். தட்சன் நடத்திய யாகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாட்சாயினியின் உடலை சிவன் சுமந்து மிக துயரத்தில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த மஹாவிஷ்ணு, சக்தியின் உடலை சக்ராயுதத்தில் துண்டு துண்டாக வெட்டும்போது, அந்த துண்டுகள் 51 இடங்களில் விழுந்ததாகவும், அவையே 51 சக்தி பீடங்களாக பாரதம் மழுதும் அமைந்தன என்றும் புராணங்கள் சொல்லும். ஜ்வாலாமுகி, சித்தபூரணி, காசி, பிரயாக், வைஷ்ணவி, பத்ரிநாத், நேபாளம், காஞ்சி, மதுரை, திருவாரூர், திருக்குற்றாலம், மைசூர், கொடுங்களூர், சோட்டாணிக்கரை, சிருங்கேரி ஆகியவை முக்கியமான தலங்களாகும்.

சக்தி வழிபாடு இருவகைப்படும். ஒன்று அக வழிபாடு. இன்னொன்று புறவழிபாடு. அக வபாட்டில், யோகியானவன் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, சிரசிலிருக்கும் சஹஸ்ரதள கமலமான சிவனிடம் ஐக்கியமாகச் செய்து ஆனந்தத்தை அடைகிறான். சக்தியின் புறவழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது ஸ்ரீசக்ரம் ஆகும்.

ஸ்ரீசக்ரம்: பல கோணங்கள் கொண்ட வரைபடம் போல் பார்க்க இருந்தாலும், இதன் கண பரிணாமத் தோற்றத்தில் பார்க்கையில் மேரு மலையைப் போன்றது.

1. இதன் முதல் நிலையில் இருப்பது நான்கு வாயில் கொண்ட பூபுரம் எனும் சதுர வடிவான சுவர்கள். இதற்கு த்ரைலோக்ய மோஹன சக்ரம் என்றும், இதில் 28 சக்திகளுக்கு - பிரகடயோகினிகள் என்றும் பெயர் சொல்வார்கள்.
2. இதன் அடுத்த நிலையில் 16 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வாசா பரிபூரக சக்ரம் என்பது பெயர். இதில் 16 குப்த மோகினிகள் வசிக்கிறார்கள்.
3. அடுத்த நிலையில் 8 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வ சம்க்ஷோபன சக்ரம் என்றும் இதில் 8 குப்த மோகினிகள் வசிப்பதாகவும் சொல்வார்கள்.
4. இதற்கு அடுத்த நிலையில் இருப்பது 14 கோணங்களை சர்வ சௌபாக்ய தாயக சக்ரம் என்னும் நிலை. இதில் வசிப்பவர்கள் 14 சம்பிரதாய யோகினிகள்.
5. ஐந்தாவது நிலையில், சர்வார்த்தசாதக சக்ரம் என்ற பெயருடன் 10 வெளிக்கோணங்கள் கொண்டது. இது 10 குளோத் தீர்ண யோகினிகளின் இருப்பிடம்.
6. ஆறாவதாக இருப்பது 10 உள்கோணங்கள் உள்ள சர்வ ரக்ஷாகர சக்ரமாகும். இதில் 10 நிகர்ப்ப யோகினிகள் வசிக்கிறார்கள்.
7. அடுத்தது, 8 திக்கு கோணமுடைய சர்வரோக ஹர சக்ரம். இதில் 8 ரகஸ்ய யோகினிகள் இருக்கிறார்கள்.
8. எட்டாவது நிலையில், முக்கோண வடிவில், சர்வசித்திப்ரத சக்ரத்தில் 3 ரகஸ்ய யோகொனிகள் வசிக்கிறார்கள்.
9. இறுதியாக, "பிந்து" என்கிற புள்ளியில், ஸ்ரீராஜராஜேஸ்வரி என்கிற பெயருடம் அன்னையவள் வீற்றிருக்கிறாள். இந்த ஆவரணத்திற்கு சர்வாநந்தமய சக்ரம் என்று பெயர்.

அம்பிகைக்கு கன்னிப் பருவத்தில் "பாலா" என்றும், குமரிப் பருவத்தில் "புவனேஸ்வரி" என்றும், முப்பது வயதுடன் "லலிதா" என்ற பெயரும், அகில உலக அன்னையாக "ராஜராஜேஸ்வரி" என்ற பெயரும் சொல்லப்படுகிறது. மேலும், தீமையை அழிக்க துர்கையாகவும் இருக்கிறாள் அன்னை. ஆதி சங்கரர் தோன்றுவதற்கு முன்பு, சக்தி வழிபாட்டின் தந்திர மார்க்கத்தில் பல்வேறு தவறான பிரயோகங்களும் இருந்தது. சங்கரர் அவற்றை அகற்றி, ஸ்ரீசக்ரத்தை சத் பூஜைகள் மூலம் ஆராதிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அவர் இயற்றிய சௌந்தர்ய லஹரி கீர்த்தனைகளாலும், சப்ததசி பாராயணம், குத்துவிளக்கு வழிபாடு போன்ற முறைகளாலும் - எளிமையான வழிபாடு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.

இனி, முத்துசாமி தீக்ஷிதரின் சக்தி கீர்த்தனைகளை ஆராய்வோம்.
சுமார் 160 சக்தி உருப்படிகளில், 32 கீர்த்தனைகள் விபக்தி கீர்த்தனைகள் ஆகும். விபக்தி என்பது, வடமொயில் வேற்றுமை உருபு - இது மொத்தம் 8 எண்ணிக்கை ஆகும். அபையாம்பிகை, நீலோத்பலாம்பிகை, கமலாம்பிகை, மதுராம்பிகை என நான்கு அம்பாள் பெயரிலும் - ஒவ்வொன்றுக்கும் 8 விபக்தி கீர்த்தனைகள் என - 32 எண்ணிக்கை அமையப் பெறுகிறது. இதில் கமலாம்பிகையின் மீது பாடப்பட்ட கீர்த்தனைகள் யாவும் ஸ்ரீசக்கரத்தின் நவாவரணங்களாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த நவாவரணங்களைப் பார்த்தால்:
1. கமலாம்பா சம்ரக்ஷது (ஆனந்த பைரவி, மிஸ்ர சாபு)
2. கமலாம்பாம் பஜரே (கல்யாணி, ஆதி)
3. ஸ்ரீ கமலாம்பிகயம் (சங்கராபரணம், ரூபகம்)
4. கமலாம்பிகாயை (காம்போஜி, கண்ட)
5. ஸ்ரீ கமலாம்பா பரம் (பைரவி, மிஸ்ர ஜம்பை)
6. கமலாம்பிகயா (புன்னாக வராளி, ரூபகம்)
7. ஸ்ரீ கமலாம்பிகயம் (சஹானா, திஸ்ர திரிபுட)
8. ஸ்ரீ கமலாம்பிகே(கண்டராகம், ஆதி)
9. ஸ்ரீ கமலாம்பா ஜயதி (ஆகிரி, ரூபகம்)
இந்த ஒவ்வொரு உருப்படியும் ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு ஆவரணத்தையும், அதன் தேவதைகளையும் பாடுகின்றன. இதைத்தவிர, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்புகளை வேறுபல கீர்த்தனைகளிலும் இடத்திற்கு தகுந்தார்போல் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார் தீக்ஷிதர்.
மேலும், லலிதா சகஸ்ரநாமவளிப் பெயர்களை தனது பல்வேறு கீர்த்தனைகளில் பிரோயோகப்படுத்தி இருப்பதை ஏற்கனவே இந்த இடுகையில் பார்த்திருக்கிறோம்.
மேலும்,
ஸ்ரீ மீனாக்ஷி (கல்யாணி) : இதில் காமாட்சி, விசாலாட்சி மற்றும் மீனாக்ஷி என்று முப்பெயர்களையும் சேர்த்திருக்கிறார்.
அன்னபூர்ணே (சாமர ராகம்) : பாயச அன்னத்தில் நிரம்பிய பாத்திரத்தையும், தங்க கரண்டியையும் வைத்திருப்பதாக அன்னபூரணியைக் குறிப்பிடுகிறார்.
ஆர்யாம் அபயாம்பாம் பஜரே (பைரவி): பராசக்தியை பூந்தோட்டம் அமைத்து பூமாலைகளை அணிவித்தல், சந்தனம் அரைத்தல், ஆலயம் கட்டுதல், சுத்தம் செய்தல், சுலோகம் படித்தல், வணங்குதல் முதலான உபசாரங்களால் அவளது அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறார்.
முக்கியமாக, மீனாக்ஷி மேமுதும் என்கிற பாடலைப்பாடி அன்னையின் முகத்தில் ஆனந்தக் கண்ணீரையும், சிரித்த முகத்தையும் வரவைத்தவர் என்பதை முன்பே இந்த பூர்விகல்யாணி இடுகையில் பார்த்திருக்கிறோம்.

இப்படியாக தீக்ஷிதர் தேவி கிருதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
குறிப்பாக, சாகித்ய வரிகளைப் பார்ப்பதற்காக, இங்கே பூர்ண சந்திரிகா இராக "ஸ்ரீராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி" எனும் பாடலை இங்கு பார்ப்போம்.

இப்பாடலை திருமதி.இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-rajarajeswari....


பல்லவி:
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி த்ரிபுர ஸுந்த3ரி
சிவே பாஹி மாம் வரதே3

அனுபல்லவி:
நீரஜாஸனாதி3 பூஜித பரே
நிகி2ல ஸம்சய ஹரண நிபுண-தரே

சரணம்:
சௌரி விரிஞ்சாதி3 வினுத ஸகலே
சங்கர ப்ராண வல்லபே4 கமலே
நிரதிசய ஸுக2 ப்ரதே3 நிஷ்கலே
பூர்ண சந்த்3ரிகா சீதலே விமலே

(மத்யம கால சாஹித்யம்)
பரமாத்3வைத போ3தி4தே லலிதே
ப்ரபஞ்சாதீத கு3ரு கு3ஹ மஹிதே
ஸுருசிர நவ ரத்ன பீட2ஸ்தே2
ஸுக2-தர ப்ரவ்ருத்தே ஸுமனஸ்தே2

பாடற்பொருள்:
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே - த்ரிபுரசுந்தரியே - சிவே -
சகல வரங்களையும் தருபவளே, என்னைக் காப்பாற்று.

பிரம்மா முதலானவர்களால் உபாசிக்கப் பட்டவளே,
எல்லாவித சந்தேகங்களையும் போக்குபவளே - பிரம்ம வித்யா நாயகியே.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலானவர்களால் போற்றப்படுபவள்.
(உன்னைப் போற்றினால் அவர்கள் எல்லோரையும் உபாசித்தது ஆகும்.)
பரமேஸ்வரனின் நாயகியே, பரம பவித்திரமே.
ஈடு இணையற்ற சுகமான ஆத்ம சொரூப ஞானமே.
எந்த விதமான அம்சமோ அவையங்களோ அற்ற சைத்தன்யம் நீ.

பரம அத்வைதத்தைப் போதிப்பவளே, லலிதே.
பிரபஞ்சத்தின் தோற்ற விளைகளமான சைத்தன்யமே!
குருகுஹனாம் தீக்ஷிதரால் போற்றப்படுபவளே!
ஜொலிக்கும் நவரத்தின பீடத்தில் அமர்ந்திருப்பவளே!
சுகத்தைத் தருபவளே, அகங்காரமற்ற மனங்களில்
எல்லாம் பிராகாசிப்பவளே, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!

~~~~~~
பிரம்ம வித்தையைச் சொல்லும் சாத்திரங்களால் அத்வைதமென போதிக்கப்படும் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அன்னை.
"ஜகம் நேதம் நேதம்" - பிரபஞ்சம் சத்தியமில்லை என்று அது விலக்கப்பட்டு, சைத்தன்மாய் இருக்கும் பரம்பொருள் அன்னை.
பகவான் கண்ணன் கீதையில் உபதேசிப்பது போல
"இந்த பிரபஞ்சம் என்னால் உருவாக்கப்பட்டாலும் - அது என்னுள் இல்லை. எல்லாவற்றைக் காப்பாற்றுவதும் நான் என்றாலும், நான் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இந்த பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து விலகி இருக்கிறேன்." (9.5)

மாயையினால் பிரபஞ்சம் சைத்தன்யத்தில் தோற்றுவிக்கப்பட - அதன் மூலமான சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அம்பாள்.
அதே மாயையினால் தான், அதன் களமான அம்பாளையே உபாசிக்க இயல்கிறது. மாயை சேர்ந்தால் தானே சகுண உபாசனை.
அதே மாயையினால் தான், பிரபஞ்சம் சத்தியமில்லை, பரமன் மட்டுமே சாசுவதமானது என்னும் மெய்ஞான சித்தி வந்து கடைத்தேறக் கிடைக்கிறது.

Sunday, December 26, 2010

பக்தியும் ஞானமும் (5) - திருமால்

என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும்நிறை பரப்பிரம்மம் அம்மா
என்றழைக்க, என்ன தவம் செய்தனை!
- ஊத்துக்காடு வேங்கடகவி

திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்தவுமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும். குழந்தைக் கண்ணன் தன் வாய் திறந்து அண்ட சராசரங்களையும் காட்டி அன்றே சொல்லிவிட்டான், சகுணப் பிரம்மமாக அவன் காட்சி அளித்தாலும், அவன் பரப்பிரம்மம் தான் என்று.

யாரோ என்றெண்ணாமலே நாளும் - இவன்
அதிசயங்களைச் சொல்லக் கேளும்!
சூராதிசூரன் இராமன் என்னும் பேரன்!
...
இங்கே வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை!
- அருணாசலக் கவிராயர்.

ஆம், குணங்களோடு கூடியதான பரப்பிரம்மம் போற்றிப்பாடிட வழி செய்து பரமனை அறிய மற்றும் அடைய மனிதனுக்கு வழி வகை செய்திட, அது நம் பெருந்தவப் பலன் தான்.

முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளில் இராமனையும் கண்ணனையும் பாடும் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகளை இவ்விடுகையில் பார்க்கவிருக்கிறோம்.

முதலில் ஜகம் புகழும் புண்ணிய கதை : இராமகாதை.
* மாமவ இரகுவீரா (மாஹாரி ராகம்) : இராம சொருபம் தத்வ சொருபம்
* ராமசந்திரேண சம்ரஷிதோஹம் : பிரம்ம, விஷ்ணு, ருத்ர சொரூபம்
* ஸ்ரீ ராமச்சந்ரோ (ஸ்ரீரஞ்சனி) : விஸ்வாமித்திரரின் யாகத்தை காத்தது, தாடகை வதம், மிதிலைப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதை மணம், பரசுராமரின் கர்வத்தை அடக்குதல் - என்று பாலகாண்டம் பளிச்சிடுக்கிறது.
* இராமச்சந்திராதன்யம் (தன்யாசி) : சுபாகு, மாரீசன், கரன், தூஷணன் போன்றோர்களைக் கொன்றது குறிப்படப்படுகிறது.
* மாமவ பட்டாபிராம (மணிரங்கு) : அனுமனால் பாடப்பட்டு, பரதன், இலக்குவன், சத்ருக்கணன், விபீடணன் மற்றும் சுக்ரீவன் போன்றவர்களால் சேவிக்கப்பட்டு, முனிவர்களின் ஆசிகளுடன் நவரத்தின மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்மாசனத்தில் அன்பின் சீதையுடன் கொலு வீற்றிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியினை தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது - பாடலில் தான்.

அடுத்து கவின்மிகு கண்ணன் கதை.
* பாலகோபால (பைரவி) : கம்ச வதம், துரோண, கர்ண, துரியோதனன் முதலானவர்களை ஒஇத்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது.
* ஸ்ரீகிருஷ்ணம் பஜரே (ரூபவதி): பாரதப் போரில் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தது.
* பார்த்தனின் சாரதியானதை ஒரு பாட்டில் 'தனஞ்சய சாரதே' என்கிறார்
* கிருஷ்ணாநந்த முகுந்தமுராரே (கௌடிபந்து) : நாராயணன், வாசுதேவன், கோவிந்தன், பத்மநாபன் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

மேலும், பிளிறு கேட்டோடி வந்து களிறு மீட்டது - கஜேந்திரனைக் காப்பாறியது பல கீர்த்தனைகளில் குறிப்படப்பட்டுள்ளது.
பக்தன் பிரகலாதனை பரிபாலித்தது, கூர்மாவதாரம், வாமனாவதாரம் போன்றவயும் அவரது கீர்த்தனைகளில் இடம்பெற்றுள்ளன.
அஜாமிளன், அம்பாரிஷன் கதைகளும் கூட இடம்பெற்றுள்ளன.

திருமால் திருத்தலங்களை இவரது பாடல்கள் மூலமாகவே தரிசித்து விடலாம். திருப்பதி, காஞ்சி, சோளங்கிபுரம், திருவரங்கம், சிதம்பரம், திருக்கண்ணமங்கை, அழகர் கோவில், குருவாயூர், திருவனந்தபுரம் என நெடியோன் தலப்பட்டியல் நீள்கிறது. "சேஷாசல நாயகம்" என்னும் வராளிராக கீர்த்தனையில் திருவேங்கடத்தானின் அலங்கார அகுகளை வர்ணிப்பார்.

இந்த இடுகையில் நாம் சாகித்யத்துடன் பார்க்கப் போகும் பாடல் 'சந்தான ராமசுவாமினம்' என்னும் பாடல்.
இராகம் : ஹிந்தோள வசந்தம்
பாடற்தலம்: நீடாமங்கலம் (திருவாரூர்)

திருமதி, இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்:
santhanaramaswamin...


பல்லவி

சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே

அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்

சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்

பாடற்பொருள்:
பாடலில் பல்லவியிலேயே தீஷிதர் பிரம்மத்தின் இரண்டு பரிணாமங்களை எடுத்து இயம்பி விட்டார். சந்தான இராம சாமி - இவரே தான் குணங்களோடு கூடியவர் - இவரேதான் குணங்கள் இல்லாமலும் இருப்பவர். எதற்காக இப்படி இருக்க வேண்டும் என்றால் - நமக்கு அருள் செய்வதற்குதான் - அதற்காகத்தான் குணங்கள் பொருந்திய சகுண பிரம்மமாகத் திககிறார்.

எப்போதும் யமுனாம்புரமதில்(நீடாமங்கலம்) வாசம் செய்பவர். ஹிந்தோள வசந்தம் என்னும் இராகத்தில் பாடப்படும் மாதவர்.
சச்சிதானந்த சொருபம். சத்யம் - ஞானம் - ஆனந்தம் - என மூன்று சொருபங்களிலும் ஆனவர்.
"சிவம்" - சிவம் என்னும் நிலை - துரியம் - இதுவே சைத்தன்யம்.

பக்தர்களுக்கு சந்தான சௌபாக்கியங்களை அருள் செய்பவர்.
அவரது தாமரைப் பாதங்கள் சாதுக்களின் இருதயத்தில் தெரிகிறது. (அகங்காரம் அற்றவர்களிடமெல்லாம் அவர் இருப்பார்)
சிந்தாமணி முதலான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்.
சைத்தன்ய சொருபமானவர்.
சூரியன் மற்றும் சந்திரன் இவரது கண்களாய் அமைந்தன.
குருகுஹனான தீக்ஷிதரால் துதிக்கப்படுபவர்.
பொய்யானது இங்கே இல்லை, ஜடமானது இங்கே இல்லை. துக்கம் இங்கே இல்லை. பின் என்ன?
சத்யமாயும், ஞானமாயும், ஆனந்தமாயும் திகழும் சச்சிதானந்த சொரூபம் மட்டுமே. ஆதி அந்தமில்லா சச்சிதானந்தம்.

~~~
திருமாலைப் பற்றிச் சொல்லும்போது அவனது திருமார்பினை விட்டு அகலாத திருமகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமகள் பெருமையினைப் பாடும் 'ஹிரண்மயிம் லக்ஷ்மீம்' எனும் லலிதா ராகப் பாடலை இங்கு முன்பே பார்த்திருக்கிறோம்.
~~~
ஸ்ரீ சத்யநாராயணம் (சுபபந்துவரளி) கிருதியில் தீக்ஷிதர் சொல்லுவது போல, சத்யம் - ஞானம் - ஆனந்தம் எனும் வடிவில் எப்போதும் உள்ளார் நாராயணர். பரமாத்ம சொரூபத்தைத் தவிர பிரபஞ்சத்திற்கு தனியான ஒளி இல்லாததால், சர்வமாக நாராயணர் இருக்கிறார்.

குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மமாக போற்றப்பட்டாலும் - குணங்களற்ற நிர்குண பிரம்மமாய் இராமன் இருப்பவன் என்பதை மகான் கபீர்தாஸர் எப்படி வலியுருத்தி இருக்கிறார் என்பதனை சூரி சாரும் கபீரன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாய் இருக்கும்.

Friday, December 24, 2010

பக்தியும் ஞானமும் (4) - சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை
தரிசித்தளவில் முக்தி பெறலாம்.
- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.
-நடராஜப் பத்து.


சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


(என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.)

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

னி, முத்துசாமி தீஷிதரின் கிருதிகளில் இருந்து:

* சதாசிவனே (சிந்து ராமக்ரியா ராகம்) : சத்யோதாதி பஞ்சமுகன்
* தியாகராஜனே: 'பஞ்சக்ருத்யகரணேன': ஐந்து தொழில்களும் குறிப்படப்படுகின்றன.
* தியாகராஜாயே நமஸ்தே (பேகடா ராகம்): முனிவர்கள் முதல் பூச்சிகள் வரை எல்லா உயிரனங்களுக்கும் முக்தி தர வல்லவர்.
* ருத்ரகோப ஜாத வீரபத்ரமாஸ்ரயே (ருத்ரபிரியா ராகம்): வீரபத்ரர்
* கால பைரவம்: (பைரவி) : காலபைரவர்
* மாரகோடி கோடி லாவண்யாய (ஆரபி) : பிக்ஷாடணர், விபூதி ருத்ராக்ஷ அபிமானர்
* ஸ்ரீதக்ஷிணாமூர்திம் (பேனத்யுதி ராகம்) : வேதங்களால் போற்றப்படுபவர், ஆலமரத்தடியில் வசிப்பவர்
* சங்கர அபிராமி மனோகரம் (மனோகரி) : மார்கண்டேயனைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது
* நீலாசலநாதம் (சம்யுக்தி ராகம்) : அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்த்ரம் வழங்கியது
* ஸ்ரீமாத்ருபூதம் (கானடா) : தாயுமானவர்
* அருணாசல நாதம் (சாரங்கா) : நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாம் திருவண்ணாமலையில் 'தேஜோமய லிங்கம்' தனைக் குறிப்பிடுகிறார்.
* சிந்தயமாகந்த மூலகந்தம் (பைரவி) : காஞ்சி ஏகாம்பரர்- மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவர், பிருத்வி லிங்கம்
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்) : நடராஜர் - பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு திருவடி தரிசனம் தந்தது.

- இப்படியாக, பட்டியலில் இவரது பாடல்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

குறிப்பாக, தில்லைக்கூத்தனைப் பாடும் இக்கீர்த்தனையைப் பார்ப்போம்:
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்)
பாடுபவர்: டி.எம்.கிருஷ்ணா


பல்லவி
ஆனந்த3 நடன ப்ரகாசம் சித்ஸபே4சம்
ஆச்ரயாமி சிவ காம வல்லீசம்


அனுபல்லவி
பா4னு கோடி கோடி ஸங்காசம்
1பு4க்தி முக்தி ப்ரத3 த3ஹராகாசம்
தீ3ன ஜன ஸம்ரக்ஷண சணம்
தி3வ்ய பதஞ்ஜலி வ்யாக்4ர பாத3-
த3ர்சித 2குன்ஞ்சிதாப்3ஜ சரணம்


சரணம்
சீதாம்சு க3ங்கா3 த4ரம் நீல கந்த4ரம்
ஸ்ரீ கேதா3ராதி3 க்ஷேத்ராதா4ரம்
பூ4தேசம் சார்தூ3ல சர்மாம்ப3ரம் சித3ம்ப3ரம்
பூ4-ஸுர த்ரி-ஸஹஸ்ர முனீச்வரம் விச்வேச்வரம்
நவனீத ஹ்ருத3யம் ஸத3ய 3கு3ரு கு3ஹ தாதம்
ஆத்3யம் வேத3 வேத்3யம் வீத ராகி3ணம்
அப்ரமேயாத்3வைத ப்ரதிபாத்3யம்
ஸங்கீ3த வாத்3ய வினோத3 தாண்ட3வ -
ஜாத ப3ஹு-தர பே4த3 சோத்3யம்


பாடற்பொருள்

ஆனந்த நடனம் - பேரொளிப் பிரகாசம் - சிற்சபை தன்னில் சரணடையும்
என்னைக் காத்தருள்வாய், சிவகாமவல்லி பதியே, சிவனே.

கோடிகோடி சூரிய பிரகாசமானவனே - சூரியன் முதலான எல்லா ஒளிக்கும் மூல ஒளியே.
தகராகாசம் என்னும் இதய ஆகாசத்தில் - சைத்தன்ய சொருபமாய் இருப்பவனே,
சித்த சுத்தி வந்து கடைத்தேறச் செய்பவனே, நீ தீனர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவன்.
பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு தன் பொற்பாதத்தைக் காட்டிய பொன்னம்பலவனே.

சிவன், சந்திரன் மற்றும் கங்கையைத் தரித்தவன், நீலகண்டன்.
கேதாரம் முதலான 12 தலங்களை இருப்பிடமாய்க் கொண்டவன். (இப்பாடலின் இராகமும் கேதாரம்!)
பூதகணங்களுக்கு அதிபதி. புலித்தோலை அணிந்தவன்.
சித் + அம்பரம் = சிதம்பரம் : அவனது சித்தம் சைத்தன்யமாய் ஆகாச வெளியில் எங்கெங்கும் பரவியிருக்க, எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
முனிவர்களால் கொண்டாடப் படுபவன். உலகங்களுக்குத் தலைவன்.
இளகிய மனம் கொண்டவன். குருகுஹனாம் முருகனின் - வேதத்தின் உட்பொருளின் - தந்தையானவன்.
ஈடு இணையிற்றவன், அத்வைதமாய் இருப்பவன். அத்வைத வேதாந்தத்தைப் பிரகாசிப்பவன்.
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.

இப்படியாக, ஈசன் குணங்களோடு கூடிய ஈஸ்வரனாக காட்சி அளிப்பது - பக்தர்கள் அவனைப்போற்றிப் பாட ஏது செய்யத்தான். மாயையுடன் சேர்ந்த நிலையில் சகுண பிரம்மமாவதும், நிர்குணமாய் இருப்பதும் - அவன் ஒருவனே - அவனே பரம்பொருள் எனும் மெய்ப்பொருள் தனை அறிவோம்.

Tuesday, December 21, 2010

பக்தியும் ஞானமும் (3) : தண்டாயுதபாணி

சப்தமும் அறியேன், அந்த சப்தத்தின் அர்த்தமும் அறியேன். ஆனால் என் இதயத்தில் ஆறு முகம் கொண்ட சத்யமான பொருள் ஒன்று பிராகசிக்கின்றது.
- சுப்ரமணிய புஜங்கம், ஆதி சங்கரர்.
ர்நாடக இசையில், முத்துசாமி தீக்ஷிதர் என்ற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது அவரது 'குருகுஹ' என்னும் அவரது இயற்றியவர் முத்திரையும், அதில் பொதிந்திருக்கும் கார்த்திகேயனது பெயரும் தான். 'குருகுஹ' என்னும் முத்திரைக்குக் காரணம், அவர் பாடல் இயற்றுவதை துவக்கி வைத்த அவது குருவும், குகனான திருத்தணி முருகனும் என்பதால். தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் மனக்குகையில் பிரகாசிப்பவனாகவும், ஞானத்தை உபதேசிக்கும் குருவாகவும் அமைந்திருப்பதுதான் அப்பெயருக்கு எப்பொருத்தம்!

ஷண்முகனுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள்!!! முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளின் சாகித்யத்தில் அவையாவும் விரவியிருப்பது கண்கூடு. 'பரமசிவன் குமாரன்', 'பார்வதி புத்திரன்', 'கார்த்திகைப் பெண்டிரால் அரவணைக்கப்பட்டவன்', 'கந்தன்', 'குகன்', 'வேலாயுதன்', 'சேவல் கொடியோன்', 'தண்டாயுதபாணி', 'மயில் வாகனன்', 'தேவசேனதிபதி', 'ஆறு எழுத்தோன்', 'சரவணபவ', 'வள்ளி மணாளன்', 'தெய்வயானையின் கணவன்', 'அசுரர்களை அழித்தவன்', 'பிரணவ மந்திரத்தை உபயோகித்தவன்' போன்ற பற்பல பெயர்களால் குமரனை அழைத்து மகிழ்ந்திருக்கிறார் தீக்ஷிதர் பெருமான்.

குறிப்பாக, கீகண்ட தீக்ஷிதரின் கிருதிகளில் இருந்து:
* குருகுஹாதன்யம் (பல ஹம்ச ராகம்) :
'குப்த ஆகமார்த்த தத்வ ப்ரபோதினோ': மறைந்திருக்கும் வேத பொருளை அறிந்தவர்
'வாதிதராந்த தத்வஸ்வரூபிண': பூமி முதல் சிவன் வரையான 36 தத்துவங்களை உடையவர்
'சக்ஸ்ரதள சரசிஜ மத்ய நிவாசின' : 1000 தாமரை இதழ் கொண்ட சக்கரத்தின் மத்தியில் அமர்ந்தவர்
'ஜீவைக்யாத்மனோ' : ஜீவனோடு ஐக்கியமானவர்
'தஹரவித்யா ப்ரதாயக பரமாதனோ' : தஹர வித்யைக்கு காரணமானவர்
போன்ற பொருள் பொதிந்த பதங்களைக் காணலாம்.

* சுவாமிநாத (நாட்டை ராகம்)
'பூமிஜலாக்னி வாயுககன் கிரண' : பஞ்ச பூதங்களின் சொரூபமானவர்
'ப்ரப்ரவாமதி பூஜிதபதேன' : ப்ரப்ரவாம முதலான மந்திரங்களால் பூஜிக்கப்பட்டவர்

* ஷடானனே (கமாஸ் ராகம்)
'ஷட் ஆதாராதி சக்தியாத்மகே' : ஆறு சக்தியாக இருப்பவர் , அறுகோனங்களின் மத்தியில் இருப்பவர்

* ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே (காம்போதி ராகம்)

'தாரக சிம்மமுக சூரபத்மாசுர சம்ஹர்த்ரே': தாரகாசுரன், சிம்மமுகன், சூரபத்மாசுரன் முதலிய கொடியவர்களை வதைத்தவர்.

* மானச குருகுஹ ரூபம் பஜரே (ஆனந்த பைரவி)

திருத்தணி முருகனைப் பாடும் அற்புதமான பாடல். இப்பாடலில் முருகப் பெருமானை குருவாய் பாவிக்கிறார். சத்வ குணம் நிறைந்த சதாசிவமாய் இருபவர் சண்முகன். இவ்வுருவத்தில் இருந்துதான் எல்லா ஜீவனும் அவித்தையுடன் பிறந்தது. அண்ட சராசரமும் அவனது தாமச குணத்தின் குறிப்புதானோ!. தாரகேஸ்வரனாகவும் முருகப் பெருமான் இருந்து பிறவிக்கடலைக் கடக்க பேருதவி புரிகிறார்.அவரே 'ஆனந்தபைரவராக' - பேரானந்தப் பெருவொளியாய்த் திகழ்கிறார்.
இப்பாடலை சமீபத்தில் நடந்த ஜெயா டி.வி மார்கழி மகோற்சுவத்தில் மல்லாடி சகோதரர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



அடுத்து, ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த 'தண்டாயுதபாணிம்' என்கிற கீர்த்தனையை கொஞ்சம் விரிவாகப் பார்த்தால்:

மனமே, தண்டாயுதபாணியை நினை. அசுரரை தண்டித்தவனை, கருணைக் கடலானவனை, தேவர்களால் போற்றப்படுவனை நினை மனமே.

நூறுகோடி சூரியனாய் பிரகாசிப்பவனே! எப்போதும், எல்லாவிடத்திலும் நிறைந்து, எதனாலும் குறுக்கப்படாதவனே! உயர்ந்த கற்களை மாலையாய் அணிந்தவனே! தாரகாசுரனையும், சூரபதுமனையும் தண்டித்தவனே!

புன்னகை தவழும் தாமரை முகத்தவனே! மாதவன் மருகனே! தேவர்கள் பணியும் தேவசேனாபதியே! முனிகளின் மதிப்பே! முசுகுந்த வம்சத்தைக் காப்பாற்றியவனே! பிரம்மா மற்றும் விஷ்ணுவால் வணங்கப்பட்டவனே! உனது அதரங்கள் தேனானது. பூமிதத்துவத்தினை உனது சந்தனத்தில் தெரிவிப்பவனே! ஆகாச தத்துவத்தினை, மலரின் மணத்தில் தெரிவிப்பவனே! வாயு தத்துவத்தினை தூபத்திலும், நெருப்பினை, தீப வரிசையிலும், நீரினை உனது பிரசாதமாகவும் தருபவனே!

குருகுஹனே - நீயே பேரானந்தமாய் இருப்பவன். தாமரைப் பாதங்களைக் கொண்டவன். தனது சேனையில் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொண்டவனே! தூய ஞானமதைத் தரும் பேரானந்தமே!

பாடலை திருமதி இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
dandayudapAni-song...


தண்டாயுத பாணிம்
ராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ரூபகம்

பல்லவி
த3ண்டா3யுத4 பாணிம் த3ண்டி3த தை3த்ய ஸ்ரேணிம்
த3யா நிதி4ம் ப4ஜ ரே ஹ்ரு2த3ய ஸததம் ஸுர வினுதம்

அனுபல்லவி
சண்டா3ம்ஸு1 ஸ1த கோடி ஸங்காஸம் ஜக3தீ3ஸம்
அக2ண்ட3 ரூபம் அண்ட3ஜ மணி மண்ட3ல-மய குண்ட3லாதி3 -
(மத்4யம கால ஸாஹித்யம்)
மண்டி3தாங்க3 ஸுகுமாரம் க2ண்டி3த தாரகஸூரம்
பண்டி3த-தர நவ வீரம் சண்டி3கேஸாவதாரம்

சரணம்
மந்த3ஸ்மித வத3னாரவிந்த3ம் மாதுல கோ3விந்த3ம்
ஸரணாக3த ஸுர ப்3ரு2ந்த3ம் ப3ஹு மானித முனி ப்3ரு2ந்த3ம்
பரிபாலித முசுகுந்த3ம் ப்ரணத விரிஞ்சி முகுந்த3ம்
அத4ர மது4ர மகரந்த3ம் ம்ரு2து3-தர வசனம் அனிந்த3ம்
மாயா மூல கந்த3ம் ஸ்கந்த3ம் ஸந்த3ம்
ப்ரு2தி2வ்யாத்மக க3ந்த4ம் க3க3னாத்மக ஸும க3ந்த4ம்
வாயு-மய தூ4ப க3ந்த4ம் வஹ்னி-மய தீ3ப ப்3ரு2ந்த3ம்
அம்ரு2தாத்மக ரஸ ப்3ரு2ந்த3ம் ஸ்ரீ கு3ரு கு3ஹம் ஆனந்த3ம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸுந்த3ர கர சரணாரவிந்த3ம் ரத2 க3ஜ துரக3 ப்3ரு2ந்த3ம்
ஸத்ய ஞானானந்த3ம் அதி ஸ்வச்ச2ந்த3ம்

ராஜ யோகத்தில் மணிபுர சக்கரத்தின் அதிபதி கந்தன். மூலாதாரத்தில் இருந்து மூலக்கனலை மேலெழுப்பி, சகஸ்ரத்தில் சேர்ப்பதில் துணை செய்பவன். 'சேனைகளுக்குள் ஸ்கந்தன்' என கீதை சொல்லுவதுபோல் இவன் தேவசேனாதிபதி. மனதில் எழும் பயங்களைப் போக்க 'யாமிருக்க பயமேன்?' போக்கிடுபவனாய் வேலுடன் நிற்பவன். விரைந்தோடி துணை புரிபவன் - அதனால் விரைவான ஊர்தியாம் - மயில் வாகனன். மணிபுர சக்ரத்திற்கான வாகனாக செம்மறி ஆடு சொல்லப்படும். குமரனுக்கு ஆடும் வாகனமாய் இருப்பதை திருப்புகழ் உரைக்கும்.

'சுப்ரமண்யன்' என்றாலே வேதத்தின் உட்பொருள் என்பது பொருள். பொன்னேரகம்பதியான சுவாமிநாதன் - ஞான பண்டிதன். அருணகிரியாருக்கு 'சும்மா இரு, சொல்லற' எனும் ஞான உபதேசம் சொன்னவன். அண்டி வரும் அடியார் மனமதில் குகனாய் வாசம் செய்து, அவர்தாம் மன இருள் அகற்றுபவன். உபநிடதங்களில், நாரதர் தனது துன்பங்களை போக்க வேண்டிட, சனத்குமாரர் அவரது அவித்தைகள் அகல, ஆத்ம உபதேசம் செய்திடுவார். அப்படிப்பட்ட சனத்குமாரர் சாட்சாத் குமரக் கடவுளின் அவதாரம் எனவும் உபநிடதங்கள் சொல்லும். கேட்டதைக் கொடுக்கும் குழந்தை - குறிப்பாக ஆன்ம ஞானத்தைக் கொடுக்கும் குழந்தை குமரன். கேட்க வேண்டியது மட்டுமே நம் பணி. குமாரா, கொடுத்தருள் செய்திட வேண்டும். முருகனை நினைந்துருகி ஒருதரம் பாடி நின்றால், கருணையுடனே வந்து காட்சி தருவான். முருகா! முருகா! முருகா!.

குணங்கள் பொருந்திய சகுணப்பிரம்மமாக குமரக் கடவுள் வழிபடப்பட்டாலும், அவன் உண்மையில் நிர்குணபிரம்மம் என உணர்வோம். எந்த ஒரு பொருளால் சூரியன் முதலான ஒளி தரும் பொருட்கள் எல்லாம் ஒளி விடுகிறதோ - அந்த மூலப்பொருளாக இருப்பது கந்தன். எந்த ஒரு பொருள் எல்லாமுமாக இருக்கிறதோ, எந்த ஒரு பொருளாக அறிந்தால் வேறொன்றில்லை என்கிற நிலை ஏற்படுகிறதோ அப்பொருளாம் பரம்பொருளாய் இருக்கிறான் முருகன். அதே பரம்பொருள் குன்று தோறும் சகுணப் பிரம்மமாக வீற்றிருந்து அடியார்களின் குறை தீர அருள் பாலிப்பது நாம் செய்த தவப்பயனால் தான்!

அடுத்த பகுதியில் ஆனந்த நடமாடும் தில்லை ஈசனைப் பாடும் தீக்ஷிதர் கிருதிகளைப் பார்ப்போம்.
கடந்த பகுதிகள்:
பக்தியும் ஞானமும் (2) : கணபதி
பக்தியும் ஞானமும் (1) : முகவுரை

Sunday, December 19, 2010

பக்தியும் ஞானமும் (2) : கணபதி

காலைப் பிடித்தேன் கணபதி - நின் பதம் கண்ணிலொற்றி!
- மகாகவி பாரதி
(சென்ற பகுதியில் முகவுரையைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி இப்போது...)
புராணக் கதைகளில் பார்த்தால் விநாயகர் யாருடைய உதவியையும் நாடியது கிடையாது. ஆனால் எல்லோரும் அவரது உதவியை நாடி இருப்பார்கள். திரிபுர சம்ஹாரத்தின் போது தேர் முறிந்து இடையூறு ஏற்பட, சிவனே விநாயகரை பூஜை செய்து, அசுரர்களை வென்றார். பண்டாசுர அரக்கனை வெல்ல, தேவி விநாயகரை நாட, அரக்கனின் விக்ன யந்திரங்களை அகற்றி தேவிக்கு வெற்றியை அளித்தார். ஹேரம்ப மூர்த்தியாக ராமர் உபாசித்து, இராவணனை அழித்தார். அர்க்க கணபதியாக சூரியனால் வழபடப் பட்டவர். பிரம்மா விநாயகரை வழிபடாததால், சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாம். முருகனுக்கோ, வள்ளி மணம் புரிய துணை புரிந்தவர். இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். சரி, இப்படியெல்லாம் ஏன் சொல்கிறார்கள்? தெய்வத்திற்குள் ஏன் இந்த உயர்வு தாழ்வுகள் என யோசிக்கலாம். இப்படியெல்லாம் புராணக் கதைகள் சொல்வதின் பிண்ணணியில் தத்துவங்கள் அடங்கி இருக்கும்.

அது என்ன? எதையும் கணபதி துணையுடன் துவங்குதல் நன்மையில் முடியும் என்பது மரபு. இதற்கு ஆழமான காரணங்களுண்டு. கணபதி மூலாதார சக்கரத்தின் முதல்வன். அசுத்த மாயைகள் அண்டாமல் காப்பவன். வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களைந்தால் தான், மனமது முக்தி என்னும் நிலைக்குத் தயாராகிறாது. எந்த ஒரு தெய்வதை வணங்குவதற்கு முன்பாகவும் கணபதியை வணங்கிடுதல், குறுக்கிடும் இடர்களை களைவதற்கு துணை புரியும். இவ்வுண்மைகள் தான் திரும்பத் திரும்ப பல்வேறு புராணங்கள் மூலமாக சொல்லப்படுகின்றன!

முத்துசாமி தீக்ஷிதரின் கணபதி கீர்த்தனைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றில் சொல்லப்படும் குறிப்புகளைப் பட்டியலிடலாமா!

1. ஸ்ரீ மூலாதார சக்ர விநாயக (ஸ்ரீராகம்)
* மூலாதார சக்கரத்தின் அதிபதி
* 600 சுவாசங்களுக்கு அதிபதி
2. பஞ்ச மாதங்கமுக கணபதினா (பிலஹரி)
* பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்ச சிருஷ்டிக்கு காரணம்
3. ஸ்ரீ கணேசாத் பரம்
* பூமி முதல் சிவன் வரை 36 தத்துவங்களை தன்னுள் கொண்டவர்
4. விநாயக (வேஹவாகினி ராகம்)
* சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றை முக்கண்களாகக் கொண்டவர்
5. கஜானானயுதம் (வேஹவாகினி ராகம்)
* அர்த, காம, மோட்சம் என்னும் வாழ்வியல் குறிக்கோள்களை அடையத் தருபவர்
6. வாதாபி கணபதிம் (ஹம்சத்வனி)
* பிரணவ சொருபத்தினைக் கொண்டவர்
7. மஹா கணபதிம் (தோடி)
* திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனால் அர்ச்சிக்கப்பட்டவர்
8. வல்லப நாயகஸ்ய (பேகடா)
* முருகன் வள்ளி திருமணத்திற்கு உதவியவர்
9. லம்போதராய (வராளி)
* அகத்தியரால் வணங்கப்பட்டவர்

இப்படியாக முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளில் இருந்து பல்வேறு சுவையான குறிப்புகளையும் கண்டெடுக்கலாம்.

இந்த படத்தில் பார்த்தீர்களா. கள்ளமற்ற வெள்ளைக் குழந்தைகள் தங்கள் பிஞ்சுக்கைகளால் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனைமுகனும், குமாரசாமியும் அவர்களதுகூட எப்போதும் இருப்பார்கள்.

From என் வாசகம்


'ஸ்ரீகணேசாத் பரம்' என்னும் கீர்த்தனையை இங்கு பார்க்கலாம்.

இப்பாடலை திருமதி.ராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-ganesatparam-s...


ஸ்ரீ கணேசாத் பரம்
ராகம்: ஆர்த்ர தேஸி
தாளம்: ஜம்ப


பல்லவி
ஸ்ரீ க3ணேசாத் பரம் சித்த ந ஹி ரே ரே ஸிவாதி3 ஷட்-த்ரிம்ஸத்-தத்வ ஸ்வரூபிண:

அனுபல்லவி
வாகா3தி3 பஞ்சக வ்யாபார ரஹித - ஹ்ரு2த3யாகாஸ ஸம்ஸ்தி2தாத்- யோகி3 ராஜார்சிதாத்

சரணம்
மாதங்க3 வத3னாத்-உமா ருத்3ர த3ர்ஸிதாத் பூ4த பௌ4திக விஸ்வ பூஜித களேப3ராத் ஸ்வேதார்க ஸும த4ராத் ஸ்வேதர விவர்ஜிதாத் பீதாம்ப3ராவ்ரு2தாத் ப்3ரஹ்மாத்3யுபாஸிதாத் (மத்4யம கால ஸாஹித்யம்) பூ4தாதி3 நுத பதா3ம்போ4ஜாத்-ஸிவாத்மஜாத் ஸீதாம்ஸு த4ர பரம சிவ - கு3ரு கு3ஹாக்3ரஜாத்

பாடற்பொருள்:
சிவன் முதலான 36 தத்துவங்களையும் தன்னில் அடக்கிய கணபதியே, நீயே பரமன். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை. 'வாக்கு' முதலான ஐம்புலங்களும் நுழைய முடியாத இதயக் குகையில் - சிதாகாசத்தில் வசிப்பவனே - யோகியரால் வணங்கப்படுவனே!

யானை முகத்தவனே, சிவன் மற்றும் பார்வதியுடன் இருப்பவனே! வெள்ளை அர்க்க மலர் மாலை அணிபவனே! தன்னிலும், எல்லோரிலும் இருப்பவனே! பீதாம்பரம் அணிந்தவனே! பிரம்மனால் வணங்கப்பட்டவனே! தாமரை பாதங்கள் கொண்டவனே! பூத கணங்களால் போற்றப்படுபவனே! குருகுஹனாம் முருகனுக்கு மூத்தவனே! குளிர்பிறை தரித்த சிவனது மூத்த சேயே, உன்னில் உயர்ந்தது யாதுமில்லை.
~~~~~~~~~~~~

இவ்வாறாக, குணங்களோடு கூடிய தெய்வமாக போற்றினாலும், கணபதி முழுமுதல் பரமன், எல்லாவற்றிலும் உயர்ந்த பிரம்மம் என்றுதான் போற்றுப்படுகிறார். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை என்கிறார். இதன் காரணம், இறுதியில் அடைய வேண்டிய இலக்கான ஞானமதாகவே - பரம்பொருளாகவே - கணபதி இருப்பதுவேயாம்.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.

ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நான்மணிமாலை


அடுத்த பகுதியில் ஆனைமுகனுக்கு அடுத்தவனாம் அழகன் கார்த்திகேயனைப் பாடும் தீக்ஷிதர் கீர்த்தனைகளைப் பார்ப்போம்.

Wednesday, December 15, 2010

பக்தியும் ஞானமும் - பகுதி 1

பொதுவாக எல்லோருக்கும் ஞான மார்க்கம் என்பது பக்தி அல்லாத வழி என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் முக்தி அடைவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, என்றாலும், 'முக்தியானது ஞானத்தால் மட்டுமே கிட்டும்' என்பது ஆதி சங்கரரின் முடிபு. அதே சமயம், பலரும் ஞான மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு - மிக முக்கியமான பங்குண்டு என்பதையும் உணர வேண்டும். ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான 'சைவம்', 'சாக்தம்', 'வைணவம்', 'கணாபத்யம்', 'கௌமாரம்' மற்றும் 'சௌரம்' ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடி கோலினார். அதற்குக் காரணமென்ன என்று பார்த்தால், ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது தெளிவாகும். நாம் எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கருவி பக்தியாகும்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249)

ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை.

ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில்.
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

- நம்மாழ்வார்
வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது?

வேதாந்தத்தில் 'பிரம்மம்' இரண்டு நிலைகளில் விளக்கப்படுகிறது. முதலாவது, 'நிர்குண பிரம்மம்' - அதாவது, குணங்கள் இல்லாத பிரம்மம் குணங்கள் இல்லாததால் - அது கருப்பா, சிவப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் அதனில் இல்லாத நிறமில்லை. அது நெட்டையா, குட்டையா எனச் சொல்ல முடியாது. இடத்தாலோ, காலத்தாலோ அல்லது வேறு எந்த வரையுறைக்கு உட்படுத்தப்பட்டு குறிக்கிட இயலாதது. அதை உபநிடதங்கள் - "சத்யம், ஞானம், அனந்தம்" என்றும் "சத், சித், ஆனந்தம்" என்றும் பேசுகின்றன. இந்த நிர்குண பிரம்மத்துடன் மாயை சேரும்போது - அது "சகுண பிரம்மம்" என வழங்கப்படுகிறது - அதாவது குணங்கள் கூடிய பிரம்மம். இந்த நிலையில் சகுண பிரம்மத்தினை - சிவனாகவோ, திருமாலாகவோ அல்லது வேறு ஒரு இஷ்ட தெய்வமாகவோ போற்றிப் பாடிட வழி வகுக்கிறது. நம்மால் போற்ற, ஆடிப்பாடி பக்தி செய்ய ஏதுவானதொரு கருணை பொழியும் வதனமாகத் திகழ்கிறது. மாயையுடன் சேர்ந்ததால் சகுண பிரம்மமாக - வழிபாட்டுக்கு உரியதொரு தெய்வம் என்னும் நிலை பெற்று, நாம் அருள் பெற வழி வகுக்கிறது. மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சொரூபம் தான் இந்த தெய்வங்களாக இருக்க, அந்த தெய்வங்களையே போற்றிப் பாடி, வணங்கி, அவர்களது அருளால் ஜீவனாக இருந்தது, தனது உண்மையான நிலையினை உணரச் செய்திட, மெய்ஞானம் பெற ஏதுவாகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்.

பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்:
முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது.
அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது.
அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம்.
இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

க்தி செய்திட கீர்த்தனம் ஒரு கருவி என்று பார்த்தோம். நமது நீண்ட பாரம்பரியத்தில் பலநூறு அறிஞர்களும், புலவர்களும், கவிஞர்களும் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றி நமக்கு அருமையான பக்தி செய்யும் கருவிகளை செய்து தந்திருக்கிறார்கள். சண்மதம் முன் நிறுத்திய ஆறு இறைகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே எத்தனை எத்தனை கீர்த்தனைகள்!. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரை எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டியல் பெரிதாய் நீளும். நீங்களே பாருங்களேன், மூர்த்திகள் வகையில் பிரித்த இவரது கீர்த்தனைப் பட்டியலை:

கணபதி : 27
சிவன் : 131
சக்தி : 176
முருகன் : 36
திருமால் : 41 (27 +14)
சூரியன் உட்பட நவகிரகங்கள் : 9
பெரும்பாலும் 'குருகுஹ' என்ற முத்திரையோடு அமைந்த இக்கீர்த்தனைகள் அத்வைத சாரத்தை எடுத்துச் சொல்லுவதோடு, நமது மறைகள், பிரபந்தங்கள் மற்றும் புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை இசையோடு சேர்த்து ஊட்டுகின்றன.

இந்த தெய்வங்களைப் போற்றுவதில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக கருதப்படும். "We can have preferences, but no exclusions." என்பார்கள். தனக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக, ஒரு தெய்வத்தை பற்றிக் கொள்ளலாம். கண்ணன் கீதையில், "என்னைப் பற்றிக்கொள். உனக்குத் தேவையான ஞானத்தை நான் தருகிறேன்", சொல்வதை நினைவில் கொண்டு, பக்தி என்னும் கருவி கொண்டு சகுண பிரம்ம உபாசனை செய்து உயர் ஞானம் பெற்று முக்தி என்னும் வீடுபேறினை பெற்று உய்யும் உபாயத்தினை நம் பெரியவர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள். ஆயினும், பக்தியும் ஞான மார்க்கமும் வெவ்வேறானது, தொடர்பில்லாதது என்கிற ஐயப்பாட்டு பலரிடம் நிலவத்தான் செய்கிறது.

மேலே சொன்ன ஆறு இறைகளையும் எடுத்துக்கொண்டு, முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் வழியாக பக்தி பண்ணிப் பாடிப்போற்றி இந்தத் தொடரில் பயணிக்கப் போகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இறையை எடுத்துக்கொண்டு, தீக்ஷிதரின் கிருதிகளை முன்னிருத்தி, அதிலிருந்து பக்தி செய்வதற்கான உந்துதலைப் பெற முனைவோம்.

அடுத்த பகுதியில் முமுதற் கடவுள் கணபதியைப் பாடித் துவங்க இருக்கிறோம்...

Tuesday, December 07, 2010

கபீரின் கவிதைகள் மூன்று

கபீரின் கனிமொழிகள் வலைப்பதிவு தொடங்கி நான்காண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, நண்பர் கபீரன்பன் அப்பதிவிற்காக விருந்தினர் இடுகையொன்றை இயற்றித் தருமாறு கேட்டிருந்தார். அவ்விடுகைக்காக மகான் கபீரன் கவிதைகளில் இருந்து மூன்று கவிதைகளை மொழி பெயர்க்கக் கிடைத்தது பெரும் பேறு. அவற்றை நீங்களும் கபீரின் கனிமொழிகள் வலைப்பதிவிற்கு வந்து வாசித்திட்ட வேண்டும்.
இடுகையின் சுட்டி இங்கே.
நன்றிகள்.

Friday, November 05, 2010

எந்திரன் எனக்குள் என்ன செய்கிறான்?

னித உடல் பாகங்களில் மூளையே மனிதனை நடத்துவிக்கும் "தலைமைச் செயலகம்" என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா!
சமீப கால கண்டுபிடிப்புகள் அந்த சொல்லாடலைக் கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் வயிற்றுக்குள் சின்னச் சின்னதாக எந்திரன் பலப்பல உட்கார்ந்து கொண்டு உங்களை ஆட்டிப் படைப்பதாக...
என்னது என்பவர்கள், வாங்க பாக்டீரியா உலகத்திற்கு.

உங்கள் உடலில் உள்ள செல்களின் மொத்த எண்ணிக்கையில் 90 சதம் உங்களது அல்ல. உண்மையில் அவை யாவும் பாக்டீரியாக்கள்தான்!

பாக்டீரியா எனப்படும் இந்த நுண்ணுயிர்கள் தங்களுக்குள் சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. இரசாயனங்கள் மூலமாக செய்திகளை பறிமாறிக்கொள்கின்றன. தங்களுக்குள் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. பாக்டீரியா அல்லாத செல்களுடன் கூட அவை தொடர்பு கொள்கின்றன. ஆய்வாளர்கள் அவற்றுக்கு "சமூக அறிவு" இருப்பதாகக் கூறுகிறார்கள். இனி யாரும் மனிதர்களை தனி நபர் என்று சொல்ல முடியாது! அவர்களுக்குள் குட்டி எந்திரன் பேக்டீரியாக்கள் அவர்களை வாழவோ, வீழ்த்தவோ செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால். அப்படி அவற்றால் என்னதான் செய்ய முடியும்?

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சக்திகள் நமக்கு போய்ச்சேருவதை பாதித்தல், குடற்பகுதிச் செல்களின் முதர்ச்சி அடைதல் மற்றும் ஊக்குவித்தலை பாதித்தல் போன்றவற்றில் பாக்டீரியாக்களுக்கு பங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். உடற் செயல்பாடுகளில் இதனால் இவற்றின் பங்கு முக்கியான பாதிப்பனை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

பாக்டீரியாக்களை தொந்தரவு செய்தால், அவை நச்சுத்தனமையைக் கூட ஏற்படுத்தக்கூடும். பாக்டீரியாக்களைப் பற்றியான ஆராய்ச்சிகள் சொல்லும் முடிவுகள் தற்கால மருத்துவத்தில் பெரிதானதொரு மாறுதலை ஏற்படுத்தும் என்பதை கட்டியம் சொல்லலாம். இனிமேல் மருத்துவர்கள் பாக்டீரியாக்களை போட்டுத்தள்ளும் மருந்துகளை அவ்வளவு எளிதாக பரிந்துரைப்பது என்பது கேள்விக்குறியாகிடும். பாக்டீரியாக்கள் அம்மருந்துகளைக் கூட மறுதலிக்கச் செய்யும் ஆற்றலை நாளடைவில் வளர்த்துக் கொள்ளக்கூடயதாகவும் உள்ளன.

நல்ல மனநிலைக்கும் பாக்டீரியாக்கள் காரணியாகின்றன. மனித மூளையினை செயல்படுத்தும் அதே இரசாயனங்களை பாக்டீரியக்கள் செலுத்த முடியும். குடல் பகுதியில் இருக்கும் நரம்புத் தொகுதிகளுடன் அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. தயிர் போன்ற உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை உண்பது மூலமாக நல்ல மனநிலைக்கு உதவிடலாம் என்றும் சொல்கிறார்கள். ப்ரோ-பயோடிக் எனச் சொல்லப்படும் பாக்டீரியாக்கள் மருந்து வடிவிலும் கிடைக்கிறது. சீரியல் போன்ற காலை உணவுகளில் கூட ப்ரோ-பயோடிக் பாக்டீரியாக்கள் சேர்த்துத் தர இருக்கிறார்கள். இப்படியாக, நம் உடலுக்குள் இழந்த பாக்டீரியாகளைச் சமன் செய்வதன் மூலமாக உடலுக்குள் இருக்கும் சுற்றுச்சூழல் மாசினை சரிசெய்ய முயல்கிறார்கள்.

பாக்டீரியா ஆராய்சிகள் சொல்லும் மேலும் பல தகவல்களை இந்த அருமையான உரையில் நீங்களே கேட்டுப்பாருங்கள்:

Thursday, November 04, 2010

தீபாவளிப் பாட்டு

சமீபத்தில் தீபாவளியின் கதை என்ன என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தீபாவளி இராமன் அயோத்தி திரும்பி முடிசூட்டிய நாளென்றார். இன்னொருவர், கண்ணன் நரகாசுரனை வதைத்த நாள் என்றார். அது எப்படி இரண்டு தொடர்பில்லாத இதிகாசங்களிலும் தொட்டுத் தொடர்ந்தது இந்த தீபாவளி என இருவரும் வியந்தனர்.

தீபாவளி கொண்டாடுவதற்கு அவரவர் மாநிலத்தில் அவரவர்க்கு காரணங்கள் வேறாக இருக்கலாம். அது எல்லோருக்கும் இருள் முடிந்து நன்மைகள் பிறக்கும் நன்னாளாக அமைய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் அமைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவில் மத்யமாவதி இராகத்தில் தீபாவளிப் பாட்டொன்று பார்க்கலாமா!
பாடலில் மத்யமாவதியின் அம்சம் அப்படி அருமையாக வெளிப்படும்படி இயற்றியிருப்பார் பாபநாசம் சிவன் அவர்கள்.
பூமி பிராட்டி தோரோட்ட & மங்கள தீபாவளி ஒளி - என்ற இடங்களில் எதுகை நயம் அழகாய் மிளிரும்!

இராகம் : மத்யமாவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
பாடுபவர் : காயத்ரி வெங்கட்ராகவன்






எடுப்பு

கண்ணா காத்தருள் மேகவண்ணா
கடைக்கண் பார்த்தருள் கமலக்கண்ணா

தொடுப்பு
விண்ணாடரும் முனிவரும் வணங்கிவேண்ட
நரகாசுர வதம் செய்ய விரைந்துவந்த
(கண்ணா...)

முடிப்பு
பாமை வடிவான பூமிபிராட்டி தேரோட்ட
அசுரர் குலம் அழத்தவா!
சக்ரபாணி! உலகெலாம்
மங்கள தீபாவளி ஒளி
வீச அருள் புரிந்த (கண்ணா...)

Saturday, October 23, 2010

ச இ த ப

அது என்னது ச இ த ப?

நீங்களே கேளுங்களேன்!
Get this widget | Track details | eSnips Social DNA


நடுவிலே லம்போதர லகுமிகரா வில் கொஞ்சம் வருது!

Sunday, October 17, 2010

ஏதும் கலக்கம் இலன்.

ஆடும் அரவம் படம்பிடித் தாடுமண்ணல்
ஆடும் அகிலமாம் அம்பலம் தன்னைப்
பாடும் நாவினில் நின்ற நாதன்
நாமம் நமசிவாய வே.

நாளும் தேடும் இடமும் பலப்பலவாம்
நாளும் தேடும் பொருளும் பலப்பலவாம்
யாதும் ஒன்றென ஈசன் மலர்பதமென
அறியா மாந்தர் கலக்கம் யாதும்
தீர்க்கும் மருந்தென
ஈர்க்கும் திருநீறென
சேர்க்கும் அவனடி சேர் அடியார்
நாற்கவி போற்றும் நாதன்
நாமம் நமசிவாய வே.

பாலும் தெளிதேனும் நாலும் இரண்டும்
நவிலும் தேன்சொல் மறைநெறி சாரமதை
நாடும் நெஞ்சில் ஓதும் சொல்லில்
ஏதும் கலக்கம் இலன்.

Saturday, October 09, 2010

ஆலவாய் வளர் அம்மையும் அப்பனும்

கபாலி நீள் கடிம் மதில் கூடல் ஆலவாயாம்
எத்தலத்தினும் ஏழுவரும் புகழ்
முத்தும் முத்தமிழும் முற்றும்
மாநகர் மதுரையம்பதி தன்னில்
அம்மையும் அப்பனும் அமரந்தருள் தரும்
அழகினை என்னென்று சொல்வேன்!


பாபநாசம் சிவன் அவர்களின் இரண்டு அழகான பாடல்கள் துணையுடன்!
முதலில் தேவி நீயே துணை என்று, அங்கயற்கண்ணியாம் அம்மை உமையன்னையைப் பாடும் பாடல். இவள் புவன சுந்தரி, புவனேஸ்வரி। மலையத்வஜன் மாதவத்தின் பலனாய் பிறந்தவள்। காஞ்சனமாலை புதல்வி. அமுதாய் இனிக்கும் செந்தமிழ் வளர்த்த தேவி நீயே துணை!


பாடல் : தேவி நீயே துணை
இராகம்: கீரவாணி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலுக்கான சுரக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
தேவி நீயே துணை
தென்மதுரை வாழ் மீனலோசனி
(தேவி...)

தொடுப்பு
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா
(தேவி...)

முடிப்பு
மலையத்வஜன் மாதவமே - காஞ்சன
மாலை புதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த
(தேவி...)

மார்கழி மகாஉற்சவத்தில் உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிட பாடலை இங்கு கேட்கலாம்.

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்.

இப்பாடலினை நாட்டியத்துடன் இங்கு பார்க்கலாம்.

--------------------------------------------------------------------------------------------------------
எண்டிசைக் கெழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே.
- திருஞானசம்பந்தர், மூன்றாம் திருமுறை

திருஆலவாய் மேவிய பெம்மான் சந்திரசேகரன், சுந்தரேஸ்வரன் - சங்கத் தமிழ்த் தலைவன், மீனாட்சி மநாளன், அடிமையான என்ன ஆண்டருள் செய்வான்!

என்று தவழ்ந்தோடி வரும் கௌரி மனோகரி ராகத்தில் கௌரி மனோகரனைப் பாடும் பாடல்:

பாடல் : கௌரி மனோகரா
இராகம்: கௌரி மனோகரி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கௌரி மனோகரா,
கருணாகர சிவ சங்கர ஸ்ரீ
கௌரி மனோகரா!

தொடுப்பு
சௌரிராஜன் பணியும்
சதாசிவ சந்திரசேகரா,
சுந்தரேஸ்வரா!
(ஸ்ரீ கௌரி மனோகரா!)

முடிப்பு
தாராதரம் புகழ் ஆலவாய் வளர்
சங்கத் தமிழ்த் தலைவனே
வராபயகர மீனலோசனி மநாளன்
உளமிரங்கி அடிமையை ஆள்!
(ஸ்ரீ கௌரி மனோகரா!)

இப்பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


அனைவருக்கு இனிய நவராத்ரி வாழ்த்துக்கள்!

Wednesday, September 15, 2010

முரண்களின் அரண்

காற்றே உன்னை வேற்றூருக்கு
திருப்பி விடவா?

கவிதையே உன்னை அயலூருக்கு
அனுப்பி விடவா?

பெற்றுத் தருவதற்கு அரிதான விடியல்
முற்றுப் பெறுவதோ அன்றாடம்!

உறக்கம் கலைந்தவுடம் கனவுகள் மட்டும்
பறப்பது ஏன்?

விற்றுத் தீர்ந்துபோன செங்கல் யாதும்
சுற்றுச்சுவரில் இடம்பெறுமோ?

அகலும் மோதிரம் விரல்கள் மெலிந்ததை
அறிவிக்கின்றதோ?

சரித்திரம் சொல்லும் சாக்ரடீஸ் கதைகள் மட்டும்
சாகாவரம் பெறுவது ஏன்?

மௌனத்தின் மொழியில் ஓசை நயத்தினை
மனதிற்குமட்டும் உரைப்பது யார்?

முரண்களின் அரணில் விழுந்த வட்டத்தில்
முளைத்துதான் புதுக்கவிதையோ?

Friday, September 10, 2010

வாரண முகவா துணை வருவாய்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நாந்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
ஔவைப் பாட்டி, சங்கத் தமிழ் மூன்றும் வேண்டி பாடிய பாட்டு எல்லோருக்கும்தெரிந்தது। இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் - இப்படி எல்லாமும் கேட்டு கோடீஸ்வர ஐயரால் இயற்றப்பட்ட பாடலை இங்கு பார்ப்போம். இவர் இயற்றிய "கந்த கானாமுதம்" என்னும் இசைப்பாடல்கள் தொகுப்பில் முன்னவனாம் ஆனைமுகத்தவனை வாழ்த்திப்பாடும் பாடல் - ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.

இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
இராகம் : ஹம்சத்வனி

இப்பாடலின் ஸ்வரக் குறிப்புகளுக்கு சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தினில் இங்கு பார்க்கலாம்.

எடுப்பு

வாரண முகவா துணை
வருவாய் - அருள்வாய், தயவாய்!

தொடுப்பு

ஆரணப் பொருளான கந்த
கானாமுதத்திற்குள் உன்
கருணாமுதம் உதவியே அருள் மத (வாரண..)

முடிப்பு

இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் அறிவேதும் இன்றி
கன்னல் அனை கந்த கானமுத நன்னூலை
உன்னும் கவிகுஞ்சரதாசன் நான்
உன்னருள் கொண்டே பண்ணத் துணிந்தேன்;
முன்னவனே நீ முன்நின்றால் முடியாதது
ஒன்றில்லை! ஆதலால் அதிவேகமாகவே... (வாரண...)

இப்பாடலை டி.எம் கிருஷ்ணா பாடிட ராகா.காம் தளத்தில் இங்கு கேட்கலாம்:



பாடலை பிரியா சகோதரிகள் பாடிட இங்கு கேட்கலாம்:


இப்படியாக வினைகள் தீர்க்கும் கணபதி கடவுள் வாழ்த்துப் பாடி துவங்கினால் - நினைத்தது முடியாதது இல்லைதான். 'கந்த கானாமுதம்' என்னும் இந்த இசைத்தொகுப்பில் 72 மேளகர்த்தா இராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இத்தனைக்கும் இவை அத்தனையும் தமிழ்ப்பாடல்கள். ஏற்கனவே இவற்றில் இரண்டு பாடல்களை இங்கே பார்த்திருக்கிறோம்। அண்மையில் மறைந்த கலைமேதை எஸ்.ராஜம் அவர்கள், இந்த இசைத்தொகுப்பின் கீர்த்தனைகளை ஸ்வரக்குறிப்புகளோடு பதிவு செய்திருக்கிறார், வருங்கால சந்ததியின் வளத்தினை மனத்தில் இருத்தி.

இந்த சதுர்த்தி தினத்தில் கணபதி அருள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று எல்லா வளங்களையும் எட்டிட நமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

Friday, August 06, 2010

எது பகுத்தறிவு?

பகுத்தறிவு என்றால் பகுத்து அறியும் அறிவு. எதை பகுத்து அறிவது?
உடல் வேறு உயிர் வேறு என்று பகுத்து அறிவதே பகுத்தறிவாம்.

நம்மால் நம்ப இயலாதவற்றை 'மூட நம்பிக்கை' எனப்பெயரிட்டு, அம் மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவதே - பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தான் நாம் வெகுவாகப் பார்ப்பதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவான சமூகத்தில் நம்பிக்கைகள் பல்வேறு விதமாக உருவாகுவதும், அவை பலராலும் பல்வேறு விதத்திலும் தேவையில்லாமல் பின்பற்றப்பட்டும், நம்பப்பட்டும் வருவதும் இயல்பாகும். ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது? ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் 'இது நிஜம்', என நம்பப்படுவதால். அதுவே நம்பிக்கைகளுக்கு வித்தாகி, இன்னும் பலராலும் பின்பற்றப்படுகிறது. பின்பற்றும் சிலருக்கு, அவர் பின்பற்றும் நம்பிக்கை பொய்த்திட அவர்களில் சிலர் அப்போது அதிலிருந்து வெளிவருவதும் உண்டு. அவர்களில் சிலருக்கு வேறொரு நம்பிக்கை, நம்பிக்கை ஊட்டிட, அந்த நம்பிக்கைக்கு மாறி விடுவதும் உண்டு. வேறு சிலரோ, கேள்விகள் ஏதும் எழுப்பாமல் குருட்டுத்தனமாக நம்பிக்கைகளைப் பின்பற்றுவதும் உண்டு. நம்பிக்கை என்ற பெயரால் அறியாமைக்கு ஆளாகவும் கூடாது. மூடநம்பிக்கை என்ற பெயரால் அறிவை ஒதுக்கவும் கூடாது. மூட நம்பிக்கையா, இல்லையா? கண்டு பிடிப்பது எப்படி? சமீபத்தில் 'கண்ணாடி' என்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் அழகாகச் சொன்னார் - "எனக்கு எந்த நம்பிக்கை பயன் தருகிறதோ, அதுவே 'என் நம்பிக்கை'. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்றழைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றார்.

அறிவியல் வளர்ச்சியினால் நிரூபிக்க அல்லது ஏற்றுக்கொள்ளப் பட இயலாதவற்றைத் தான் மூட நம்பிக்கையா இல்லையா என்றொரு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, இங்கு, இன்றைய அறிவியல் வளர்ச்சிதான் அதற்கு அளவுகோலாக இருக்கிறது. பல அறிஞர்களும், அறிவியல் வளர்ச்சியால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவினைத் தர முடியும் என்று நம்பினார்கள், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். அறிவியிலை எப்படியாவது முன்னேற்றி எல்லா கேள்விகளுக்கும் ஒரு பரமத்துவமான பதிலினைத் தர முயன்று வருகிறார்கள்.

அறிவியல் ஆராய்சியாளர்களின் தேடுதல் ஒருபுறம் இருக்க, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மெய்ஞானிகள், இத்தேடுதல் எல்லாவற்றிக்குமான முடிவினை தம்முள்ளேயே கண்டும், களித்தும், அவற்றை ஆராதித்தும் ஆனந்தித்தும் வருவதினை யாரும் புறம் தள்ள இயலாது. அகக்கண்களால் அவர்கள் கண்டு சொன்ன உண்மைகளின் வீச்சு என்றென்றைக்கும் நிலையானதாகவும் இருப்பது. மாறாக, புறக் கண்கள் பார்க்கும் உலகத்தேயே எல்லாம் எனக்கொள்பவர்களின் அறிவின் உண்மையான வீச்சு எள்ளளவேயாம்.

தனோடும் நின்றோங்கும் றிவொன்றே தெய்வம் என்றோதி அறியீரொ?

அகத்தனை ஆய்ந்து அறியார், தூல உடலின் சூக்கும வடிவத்தினை கண்டு கொள்ளுவதில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து பார்த்து 'இல்லை' என்று சொல்லி என்ன பயன்? உள்ளே ஆழ்ந்து உணர்ந்த மெய்ஞானிகள், சூக்கும வடிவங்களை உற்று நோக்கி, அவற்றின் ஆதார சக்தியினை அறிந்து சொன்னார்கள், தெளிந்து சொன்னார்கள்:
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

அதுவே, இயற்கையின் சக்தி என்பதை ஞானிகள் உணர்ந்திருந்தனர். காற்று, மழை, இடி முதலியவற்றின் இயக்க சக்தியும் தெய்வீக சக்தி என்பதை அறிந்திருந்தனர். இயற்கையினை வணங்கிய பண்டைக் காலத்தை எள்ளி நகையாடி, அது அச்சத்தினால் ஏற்பட்டது எனக் காரணம் கற்பிக்கும் சிறு மதியார் சில கணமாவது தம்மை உணர்ந்திருப்பாரா? உணர்ந்திருந்தால்தான் உண்மை அறிந்திருப்பாரே. இறை மறுப்பினையே பகுத்தறிவு என்று வழங்கிக் கொண்டதிலேயே தெரியவில்லையா இவர்களது மடமையினை.
ஒன்று பிரமம் உளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரமம் உளதுண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

தமது உடலிலேயே சூக்கும ரூபமாய் அமைந்திருக்கும் பிரகிருதி குணங்களையும் குண காரியங்களையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள் ஜீவனின் உண்மையான வடிவினை எப்படிக் கண்டு கொள்ள இயலும்? அது பாரெங்கும் ஒளிர்விடும் பரமன், சேதனமாய் இருக்கும் தன்னில் ஒளிர்வதை எப்படிக் கண்டு இன்புற இயலும்?


(ஓவியம் நன்றி: ஹிமாலயன் அகாடமி)
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய்.

சித்தானது, உடலான அசித்துடன் இணைந்தது. அவ்உடலை ஆலயம் என்றார்கள். அந்த ஆலையம் அமையும் இடம் தலம் அல்லது க்ஷேத்திரம் எனலாம். சூக்கும சரீரங்களும், தூல சரீரங்களும் அபரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். குண வயப்பட்ட ஜீவன், பரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். உள்ளம் கடந்த இந்நிலைகளை, கட-உள் என்றார்கள் ஞானிகள். 'நான் கடவுள்' எனும் நிலையை அடைய, குணங்களைக் கடந்து, அவை மறைக்கும் உள்ளொளியினை உணர்ந்து, ஒன்றாய் இருக்கும் பரமனெனத் தெளிந்தார்கள் ஞானியர். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாக நிற்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்து தெளிகிறார்கள் ஞானியர். ஐம்பூதங்களின் கலவையான உலகையும், அது சமைந்திருக்கும் அண்ட சராசரங்களையும் சிதாகாசத்தில் - தன் இதயக்குகையில் கண்டு ஆனந்தக் களிப்படைவதுதான் பாரதி பாடும் "எத்தனைகோடி இன்பம்!" அன்றோ!

Thursday, July 08, 2010

எல்லாம் நீ எனில் நான் எங்கே? - கீதை (அத் 15) - பகுதி 3

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...

11. மனமயக்கம் அகன்றிட, யோக பாதையில் நடந்திட, அது மனதைத் தூய்மை பெறச் செய்திடும். மனத்தூய்மை அடையாதவர்களாலோ, என்ன முயன்றாலும் அவர்களால் இலக்கினை அடைய முடிவதில்லை. எது இலக்கு? 1) அது இன்னொரு பொருளால் ஒளிர்விக்க இயலாதது 2) அது, உயரிய நிலையை அடைந்தபின், அதிலிருந்து திரும்பிட இயலாதது 3) அதனில், ஆன்மாக்கள் எல்லாம் சிறு சிறு பகுதிகளாய் இருப்பது.

மனமது தூய்மை அடைதல் என்றால் என்ன? மனமதில் எதை நீக்க வேண்டும் தூய்மை அடைய? மனமதில், ஐம்புலங்களை துய்ப்பது நான் என்று ஏற்படும் எண்ணத்தைத் தான். பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகிய சாதனங்கள் கொண்டு, எண்ணச் சீரமைப்பு மேற்கொள்வதே யோக நெறியாம்.

அடுத்த நான்கு சுலோகங்கள், பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறான் என்பதனை எடுத்துச் சொல்கின்றன:

12. ஒளிரும் எல்லாப்பொருளும் ஒளிருவது பரமனின் ஒளியினைத்தான். ஐம்புலன் காட்டும் காட்சியானது, அக ஒளியால் புலப்படும்பொழுது தெளிவான மயக்கமற்ற காட்சி கிட்டும்.

சக்தியின் தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். மின்சார சக்தியின் வெளிப்பாடு, மின்சார பல்பில் வெளிச்சமாகவும், மின்சார விசிறியில் அதன் சுழற்சியாகவும், மின்சார உலையில் வெப்பமாகவும் வெளிப்படுவது போல, அவற்றுக்கு தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை சக்தி ஒன்றுதான். அது போலவே, உலகில் ஒளிரும் எப்பொருளும், பரமனின் சைத்தன்ய ஒளியின் வெளிப்பாடுதான்.

மேலும்,

13. பரிதியின் ஒளியினை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியிலும் பயிர்கள் வளர்வதுபோல, அகத்தில் பிரதிபலிக்கும் பரமனின் ஒளிதான் இப்பிரபஞ்சத்தினை வளர்ப்பதாம்.

இயற்கை செழித்து வளர்வதும், பரிதியின் ஒளி மற்றும் வெப்பத்தினால் தாவரங்களும் செழிப்பது போலவும், நிலவொளியினைப் பெற்றும் தாவரங்கள் வளர்வதும் - இப்படியாக, சூரியன், சந்திரன், அக்னி - என சக்தியூட்டும் அனைத்திற்கும் மூல சக்தியாக இருப்பது எல்லையிலா சைத்தன்யமாகும்.

மேலும்,
14. உணவாகவும், உணவின் சுவையாகவும் அமைந்து உடல் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் காரணமாய் அமைகிறான் பரமன்.

உண்ணும் உணவினை செரிக்கச் செய்து, அவற்றின் சத்தினை உடல் வளர்சிக்குப் பயன் படுத்திக்கொண்டு, இதரவற்றினைக் கழிக்கும் ஜீரண உறுப்புகளின் சக்தியாகவும் பரமன் இருக்கிறான்.

"அர்ஜூனா, நானே சூரியன், சந்திரன், பூமியின் இயற்கை வளங்கள்" என்றவன் தொடர்ந்து "நானே உனக்கு உணவாகும் செடிகொடிகள். நான் அவற்றை உண்பவன். நானே உன் வயிற்றின் ஜீரண சக்தியாவும் இருக்கிறேன்" என்று சொல்வதன் மூலம் - அவன் மறைமுகமாக கேட்கும் கேள்வியாக - "இதில் ஜீவனான நீ எங்கே?" என்பதும் புலனாகிறது.

மேலும், பகவான் கண்ணன் சொல்கிறான்:

15. "நானே அனைவரது இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். எல்லா வேதங்களும் பரமன் என விளக்குவதும், அவற்றைக் கற்றால் அறியப்படுவதும் நான் தான். வேதாந்தத்தின் ஆசிரியனும் நான் தான்."

இதயக்கமலத்தில் அமர்ந்தவாறு, ஆத்ம ஒளியினைப் பார்த்து, அதனொடு ஐக்கியப் படுத்திக் கொள்ளுதல் மூலம், காண்பவன், கண்ட காட்சி எனும் இரு நிலை மாறி, 'காணும் மெய்யறிவு' என்ற ஒன்று மட்டுமே மிஞ்சும்.

மெய்யியலில் 'இதயம்' எனக்குறிப்பிடப்படுவது மனத்தைத்தான். நற்பண்புகளால் செழித்து - அமைதியாகவும், விழிப்புடன் இருக்கும் மனத்தை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கும் போது, இதயத்தில் மட்டும் அமர்வதாகச் சொல்வதேன்? மனம் எனும் அங்கேதான் அவன் தன்னைத்தான் காட்டிக்கொள்கிறான். அங்கேதான் நாம் அவனை தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு கண்டு கொள்ள இயலுவதால்.

உயிரில்லாத பொருட்களிலும் அவன் இருக்கிறான்; - என்றால் ஏன் அவற்றில் அசைவில்லை, ஏன் அவை வளர்வதில்லை?
ஜீவனின் ஆன்மா பரமனின் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறது. சைத்தன்யத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அனைத்துமே பிரகிருதி மட்டுமே. பிரகிருத்தியில் சில பொருட்களில் மட்டும், சைத்தன்யம் பிரதிபலிப்பதால், அவை உயிர் மற்றும் அறிவு இருப்பதாக (இதனை 'சேதனம்' என்பார்கள்) நாம் சொல்கிறோம். பிரதிபலிக்கக் கூடியதை சூட்சுமம் என்றும், பிரதிபலிக்க இயலாதவற்றை (ஸ்)தூலம் எனவும் சொல்லலாம். நமது சூட்சும உடலும் பிரதிபலிக்கக் கூடியதால், அதனை 'சேதனம்' எனலாம். நம் மனம், சைத்தன்யத்தால் ஒளிர் விடக்கூடைய தன்மை உடையது. அவ்வொளியைப் பெற்று மனம், ஐம்பொறிகளைப் பிரகாசப் படுத்துகிறது. உயிரற்ற பொருட்களில் சூட்சும உடல் இல்லாததால், அவற்றால் சைத்தன்யத்தை பிரதிபலிக்க இயலுவதில்லை.

இவ்வாறாக, பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுறுவி வியாபித்து இருக்கிறான் என்பதை மேற்கண்ட சுலோகங்களில் பார்த்தோம். தொடர்ந்து பகவான் சொல்கிறான்:



16. இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இருகிறார்கள். ஒரு வகை - அட்சர புருஷன் - மாறுதலுக்கு உட்படாதவர்கள். இன்னொரு வகை - சர புருஷன் - மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.." என மணிவாசகர் குறிப்பிடுவது எந்த நிலையில்லா மாறுதலுக்கு உட்பட்டர்களை.
இன்னொரு வகை - ஜீவன் முக்தர்கள் - பிறவிச் சுழல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் கொல்லன் பட்டரையில் பயன்படுத்தும் "பட்டை தீட்டும் கல்" போன்றவர்கள். எத்தனை அடி விழுந்தாலும், அசையாமல் இருந்தவாறு, தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இடம் கொடுத்து - அவற்றை 'பதம்' செய்ய உதவுவார்கள்.

இந்த இரண்டு வகை புருஷர்களைக் காட்டிலும் மேலானவன் பரமன். இவ்விரு புருஷர்களுக்கும் அப்பால், மேலான நிர்குண நிலையில் நிற்பவன். ஆகையால் அவன் புருஷோத்தமன், என்பதை அடுத்த இரண்டு சுலோகங்களும் சொல்லுகின்றன:

17. பரமனே, எல்லா வடிவமும் கொண்டு உலகைப் பலவிதமாய் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸ்வரன். சர புருஷன், அட்சர புருஷன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலான புருஷோத்தமன்.

18. "அழிவிலாதன், பரமன்; அவனே புருஷோத்தமன்", என உலகிலும், வேதங்களிலும் ஓதப்படுபவன்.

19. குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

ஜீவன் அடையும் வெவ்வேறு நிலைகளை இவ்வாறாக பகுக்கலாம்:

குணங்கள் கொண்டது : ஜீவன்

குணங்கள் நீங்கிய ஜீவன் : ஜீவன் முக்தன்

ஜீவன் முக்தன் -> சகுண பிரம்மம் அடைகிறான்

சகுண பிரம்மம் -> நிர்குண பிரம்மத்துள் அடங்கும்

இந்நிலைகளை அனுபவ அறிவில் அறிபவன் மெய்ஞானி. அவன் எப்போதும் பிரம்மமன்றி வேறொன்றும் காணான்.

20. இதுவரை படித்த சுலோகங்களை மனதில் நிறுத்தி தியானித்துத் தெளிவோர் ஞானியாவர். இக்கடமையெனும் யோக நெறியில் ஈடுபடுவோர் பிறந்த மனிதப் பிறவியின் கடன் நிறைவேறப் பெறுவர்.

பரமனின் உண்மையான தன்மையை எடுத்துரைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். அதை அநுபவத்தில் அறிந்து கொள்வதே மானிடப் பிறப்பின் கடனாகவும், இலக்காகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே கீதாசாரியனின் அறிவுரையாம்.

ஓம் தத் சத்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Sunday, July 04, 2010

நான் என்பது நீ அல்லவோ : கீதை (அத் 15) - பகுதி 2

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...



7. மனிதனின் ஜீவனும், எங்கெங்கும் பரவியிருக்கும் பரமாத்மாவும் உண்மையில் ஒன்றே. குடத்தின் உள்ளேயுள்ள காற்றும், குடத்தின் வெளியே இருக்கும் காற்றும் ஒன்றே என்பது போலவே. அது பின்னமில்லாமல், ஒன்றேயென எப்போதும் எங்கெங்கும் ஒளிர் விடுகிறது. இன்னும் சிலர், இப்படியும் சொல்வார்கள்: பல்வேறு பூக்களின் பல்வேறு மகரந்தங்களில் ஈர்க்கப்பட்ட தேன் துளிகள், அதன் தனித்துவமெல்லாம் இழந்து 'தேன்' எனும் ஒற்றை அடையாளத்தைப் பெற்றது போல, பல்வேறு ஜீவன்களும் பரமன் எனும் ஒற்றை ஒளிக்கற்றையில் இணையுங்கால், தாம் தரித்துவந்த உருவம், பெயர் முதலான அனைத்தையும் இழந்து, ஒன்றாய் ஒளிருகின்றது.

பரமனின் ஒரு பகுதியான ஜீவன், உண்மையில் எல்லைகளால் குறிக்கிட இயலாதது. ஆனால் இவ்வுண்மையினை அறியாதவர் கண்களிலோ, தன்னைச் சுற்றியுள்ள உடலெனும் சுவரைத் தாண்ட இயலாமற் போகிறது. ஐம்புலன்களின் வழியாய் உணரப்படும் எந்த உணர்வும் அந்த அங்கங்களின் சக்தியாலோ அல்லது அந்தக்கரணங்களின் சக்தியோ இல்லை. பிரகிருதிக்கு உட்பட்டு, இவ்வங்கங்களின் வெளிப்பாடுகளெல்லாம், பரமனின் ஒளியின் பிரதிபலிப்பேயாம். பரமனின் சைத்தன்யம் ஏப்போதும் இந்த ஐம்புலன்களையும், மனதையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

8. அதே பரமன், இந்த ஐம்புலன்களையும், மனதையும் முடிவில் தன் பால் முழுதுமாய் ஈர்த்துக் கொள்கிறான். அது எப்போது? உடலை விட்டு உயிர் பிரியும்போது, ஐம்புலன்களையும், மனதையும் - இது வரை மனத்தில் சேர்த்து வைத்த வாசனைகளையும் கவர்ந்து கொண்டு செல்லும் - வீச்சிய காற்றில், பூத்திருக்கும் பூவின் மணம் காற்றோடு கலந்து பரவுவதுபோலவாம்!

இறப்பில், தூல உடலை விட்டு அருஉடல்(சூட்சும உடல்) பிரிகிறது. ஐம்புலன்களும், மனமும் அருஉடலில் அடங்கும். ஆகவேதான், தூல உடலில் புலன்களுக்கான அறிகுறிகள் ஏதும் அதற்கப்புறம் இருப்பதில்லை. பணிமாற்ற உத்தரவு வந்தவுடன், ஒரு அலுவலர் எப்படி, தனது பொருட்களையும், குடும்பத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு, வேறு ஊருக்கு போகிறாரோ, அது போல, அருஉடல் தனது உடமைகளான, ஐம்புலன்களும், மனதையும், மனம் சுமக்கும் வாசனைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, தான் இதுகாறும் இருந்த தூல உடலெனும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறது. பின்னர், தனக்கான இன்னொரு உடலை அடைந்தபின், தான் கட்டிக் கொண்டுவந்த மூட்டையை இறக்கி வைத்து, புற உலகை துய்க்கத் துவங்கி விடுகிறது. முற்பிறப்பிலிருந்து கொண்டு வந்த வாசனைகள் மூலமாக, கர்ம வினைகள் என்னும் வங்கிக் கணக்கு தொடரப்படுகின்றது.

9. பரம்பொருளே, தன்னொரு பகுதியினை மாயையில் ஆழ்த்தி, இப்படியொரு உலக வாழ்க்கையினைப் படைக்கிறான். ஆன்மாவிற்கு சுகங்களை அனுபவிக்கும் இயல்பு இல்லை. ஆனால், குண மயக்கங்களினால், அது ஐம்பொறிகள் மூலமாக பரமன் துய்க்கும் சுகங்களை, ஜீவனோ தான் அனுபவிப்பதாக கருதுகின்றது. இந்த மயக்கம் நீடிக்கும் வரை, இந்நிலை மாறுவதில்லை.

பரம்பொருளின் சைத்தன்ய ஒளி மனதின் புத்தியில் பிரதிபலிக்கும்போது, அதனால், ஐம்புலன்களும் ஒளிர்விக்கப் படுகின்றன. இதனால் தாம், நாம் ஆழ்ந்த கவனத்தில் இருக்கும்போது, இன்னொருவர் அருகே வந்து பேசினாலும், அவர்பால், உடனடியாக கவனத்தை திருப்ப இயலுவதில்லை. ஏனெனில், நமது கவனம் - அல்லது ஆழ்மனம் வேறிடத்தை நாடியிருக்கிறது. ஆழ்மனத்தின் மூலமாக, ஐம்புலன்களின் துணையோடு, ஜீவன் ஐம்புலன்கள் வழியாக நுகரப்படும் உணரப்படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொள்கிறது.

பரம்பொருள் நம்மில் இருந்து கொண்டே, நம்மை இயக்கிக்கொண்டே, ஐம்பொறிகள் வழியாக சுகத்தை துய்த்துக் கொண்டிருக்கையில், அப்பரமனை நாம் அன்றாட செயல்களில் ஏன் அறியாமலே இருக்கிறோம்?

10. ஏனெனில், அகத்தின் ஞானக் கண்ணால் மட்டுமே காணக்கூடயது அஃதாம். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாய் மட்டுமே நிற்கிறது என்பதை அனுபவத்தில் ஞானியர் அறிவர். அவர்களது அறிவே வற்றாத பேரறிவாம். மெய்ஞானமாம். இவ் உண்மையினை அறியாமல், பொறிகள் மூலமாக துய்க்கும் சுகங்கள் யாவையும் தான் அனுபவிப்பதாக ஜீவனும் நினைப்பதால், அன்றாடம் எல்லாச் செயல்களிலும் பரமனை, அறியாமலே காலம் கழிக்கிறோம். விளைவு? மீண்டும் மீண்டும் பிறவி எனும் மீளாச்சுழலில் சிக்கித் தவிக்கிறோம்.

இலக்கியத்தை எல்லோராலும் படித்திட இயலும். ஆனால் அதன் சுவையை சுவைத்திட, இலக்கிய ரசனை வேண்டும். எல்லோராலும் நவரத்தின நகைகளை அணிந்து கொள்ள இயலும். அதன் சரியான மதிப்பை, நகைக்கடைக்காரரால் தான் துல்லியமாக மதிப்பிட இயலும். எல்லோராலும் இசையினை கேட்க முடியும். ஆனால் இசை ரசனை இருந்தால் தான், அதை ரசித்து அனுபவிக்க முடியும். அதுபோல, உயர் ஞானம் அமையப் பெற்றால் மட்டுமே, தன்னில் உறையும் பரமனே தன்னைத் துய்க்கிறான் என்பதை அறிந்து, தான் என்னும் அகந்தை அழிந்து, எல்லையில்லா பேரின்பத்தை துய்க்க முடியும்.

எப்போது ஒருவனால் ஞானியாக முடியும்? அகக்கண்ணால் எப்போது பரமனை உணர முடியும்?
அதற்கான வழியாக பகவான் கண்ணன் சொல்கிறான் "யோகம் செய்" என்று...
அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் படித்துப் பார்ப்போம்.

Thursday, July 01, 2010

தலைகீழ் அரச மரமும் அதை வெட்டும் வழியும்

இந்த உலகத்தையும் அதில் சஞ்சரிக்கும் வாழ்க்கைகளையும் தலைகீழாய் இருக்கும் ஒரு அரசமரத்துக்கு ஒப்பாக சொல்கிறது கீதையின் பதினைந்தாவது அத்தியாயம், கொஞ்சம் படித்துப் பார்க்கலாமா?


எல்லாவற்றுக்கும் மேலான பரமனை சரண் புகுந்து யோகத்தில் இறங்குவது 'புருஷோத்தம யோகம்'. யோகமே செயல் யாவுக்கும் திறனாய் அமைவது. விசாலமான பார்வையினைத் தருவது. எங்கும் இருக்கும் கடவுளை எங்கும் காணும் திறனைத் தருவது.

----------------------------------------------------------------
1. பிரக்ருதியும், ஆன்மாவும் சேர்ந்து வானளாவிய 'அச்வதம்' எனும் அரசமரமாய் இப்பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. பிறவி, செயல், பலன், இறப்பு, மீண்டும் பிறவி, செயல் என எல்லாமும் இம்மரத்தில் அடங்கும். இம்மரத்தின் ஆணிவேரோ மேலிருந்து கீழேயாக, நிர்குண பிரமத்திடம் இருந்து வருகிறது. மேலே இருந்து வரும் வேர்களுக்குச் சமமானதாக, நிர்குணமாய் இருக்கும் பரமன், சர்குண நிலை பெற்று, ஆக்கம், நீக்கம் முதலியவற்றை செயல்படுத்துகிறான்.

இந்த மரத்தின் இலைகள் நன்நெறிகளைக் காட்டும் மறைகளுக்கு ஒப்பாகும். நன்நெறிகளால் விளையும் நற்பயன்கள் இலைகளில் இருந்து வரும் பழங்களுக்கு ஒப்பாகும். இந்த மரத்தின் சாராம்சத்தை எவன் உணர்கிறானோ, அவன் உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். மெய்ஞானத்தினை ஆணி வேருக்கு ஒப்பாகவும், அதிலிருந்து ஏற்படும் கிளை வேர்களை அஞ்ஞானத்திற்கும் ஒப்பாகவும் கொள்ளலாம். அஞ்ஞானத்தினால் மேலும் மேலும் கிளை வேர்கள் ஏற்பட்டு, ஆணி வேரிலிந்து பிரிந்து, மேலும் பலமாக இந்த மரம் பரந்து விடுகிறது.

பி.கு: தலைகீழாய் இருக்கும் இந்த மரத்தை மனிதனின் உடலுக்கு ஒப்பாகவும், மரத்தின் வேர்கள் மூளையின் அமைப்புக்கு ஒப்பாகவும் கூடச் சிலர் சொல்லுவார்கள்.

2. கிளைகள் மூலமாக குணங்கள் இலைகளைச் சென்றடையும். தான் சேர்த்து வைத்த குணங்கள் மூலமாக இலைகள் செழித்து வளர, அதனால் அந்த மரம் வளர்ந்து பெரிதாகிறது. சில கிளைகள் மேலேயும், சில கிளைகள் கீழே செல்லுவதுமாய் இருக்கின்றன. செயல்களில் தர்மச் செயல்கள், அதர்மச் செயல்கள் என இருப்பது போல. நற்செயலா, தீஞ்செயலா, என்பது 'ரஜஸ், தமஸ், சாத்வீகம்', எனும் முக்குணங்களின் கலவையால் தீர்மானிக்கப் படுகிறது.

மனித வாழ்க்கையில் தேடுதல் கிளைகளைக்கு ஒப்பு. இலைகளால் செழிக்கும் மரம் போல, வேதங்களால் உலகமும் செழிக்கிறது. மேலே இருந்து வரும் சத்தினை கீழ் நோக்கி செலுத்தி நிலத்தில் வேரூன்றும். இது மேலும் மேலும் வளர, கர்ம வினைகளால் இவ்வுலகத் தொடர்புகள் நீட்டித்து, உலக வாழ்க்கை என்னும் மரமும் செழித்து வளருகின்றது. புதுப்புது வினைகளையும் தோற்றுவிக்கின்றன.

பரவிச் செல்லும் கிளைகள் போல, வாழ்வின் பல்வேறு தேடுதல்களில் விளையும் ஆசையினால், செயல்களைப் புரிந்து, அவற்றால் பலனையும், மீண்டும் மீண்டும் செயல்களில் ஈடுபடவும் செய்கிறோம். கண் போன போக்கில் கால் போக நடக்க, மறைகள் சொல்லும் பாதையை மறந்து போனவர் வழி தடுமாறிட, கீழே போகும் கிளைகளாய், அவர்தம் அடுத்தடுத்த பிறவிகள், இன்னும் கீழான பிறப்புகளுக்கே இட்டுச் செல்கின்றது.

3. நம்மால் இந்த மரத்தின் ஆணிவேரின் ஆதியையோ, முடிவையோ காண இயலாது. பரமேஸ்வரனின் அடி, முடியினை அரியும் அயனும் தேடிக் காண இயலாதது போல, ஆணி வேரின் மூலத்தினையும், முடிவினையும் கண்டு கொள்ள இயலாது.

மேலும் மேலும், விழுதுகளால் நிலைபெற்று நிலத்தில் ஊன்றி விடுகிறது இம்மரம். குணங்களின் விளைவுகளுக்கு அடிமையாகி, மாந்தர் தம் வினைகள் பெருகிப் பெருகி, பிறவிப் பெருஞ்சுழலில் சிக்கித் தவிக்க, இதிலிருந்து அவர்கள் தப்புவதற்கான ஒரே வழி பற்றின்மையை பற்றிக்கொள்வதே. விளைவுகளில் விழுந்து விடாமல் நிஷ்காம்யமாக இருப்பதே, இம்மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கான வாள் போன்றதாகும். சூரபதுமன் மாமரமாய் நின்றதும், ஞான வேலால் அவன் வெட்டுண்டு வீழ்ந்ததையும் ஒத்து நோக்குக.

கடற்கரையில் அலைகளைப் பார்க்கிறோம். நுரையோடு மேலெழும்பிக் கீழே விழும் நீரைத்தான் அலை என்கிறோம், 'நீர்' என்று சொல்லாமல். அந்த அலையின் உருவதை அகற்றி விட்டுப் பார்த்தால், தெரிவது நீர்தானே? அதுபோல, இந்த மரத்தின் உருவத்தையும், பெயரையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இருப்பது, பரமன் மட்டுமே. இந்த மரம் நம்மை உலக வாழ்க்கை என்னும் வட்டத்திற்குள்ளும், பிறவிச் சுழலுக்குள்ளும் அடைத்து வைக்கிறது. ஆன்ம விசாரம் செய்து பார்த்தால், இந்த மரம் என்று ஒன்று உண்மையில் இல்லாமல் இருப்பது புலனாகும். அதுவரை அந்த மரம் தெரிந்து கொண்டே இருக்கும். ஆகவேதான், "பிறவிச்சுழல், என்னும் இந்த மரத்தை, பற்றின்மை என்னும் கோடாலியால் வெட்டி வீழ்த்து" என்கிறான் பகவான் கண்ணன்.

4. இம்மரத்தை வெட்டி வீழ்த்தியபின், அந்த மரம் செழித்து வளர்ந்ததற்கு காரணமான பரமனையே சரண் புகுந்திட, அதுவே மோட்சமெனும் வீடுபேறு ஆகும். பரமனின் சத்தே வேர்களை மேலிருந்து கீழாக விழுதுகளை நிலத்தில் ஊன்றச் செய்தது. இது இயற்கையான நிகழ்வுதான். செயல்களைச் செய்ய வைத்ததும் அவன் நடத்தும் நாடகத்தில்தான். நிலத்தில் ஊன்றச் செய்ய வைத்த சத்தின் மூலமான பரமனை திரும்பிப் பார்ப்பதுவே யோகமாம் - புருஷோத்தம யோகமாகும்.

அலை என்ற எண்ணம் இருக்கும் வரை நீருக்கு தன்னுடைய தனிப்பட்ட உருவம் இருக்க, அதற்கு, 'தான், தனது' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். அது நீர்தான் - அதை சுற்றி சின்னதும், பெரியதுமாய் இருக்கிற பலப்பல அலைகளும், எல்லாமும், இந்தக் கடல் முழுதும் வியாபித்து இருக்கும் நீரெல்லாம் - ஒன்றேயான ஒட்டுமொத்த கடல்நீர் தான் என்பது உணர - அதற்கு அகந்தையற்ற நிலையில் - அது பரமன் எனும் பேரின்பக் களிப்பினைப் பருகுவதற்கான நிலைக்குத் தயாராகின்றது.

5. உயர்வான இந்நிலையினை அடைவதற்கான தகுதி என்ன? பகவான் கண்ணன் சொல்கிறான்: தானெனும் அகந்தை, தானெனும் மயக்கம், தானெனும் பற்று ஆகிவற்றை நீக்கி நிற்பதேயாம். அக்குணங்களைப் பெற்றவன், ஆத்ம ஞானத்தில் நிற்க, இன்ப துன்பங்கள் தரும் விருப்பு வெறுப்புகளைக் கடந்து நிற்க, அப்பேறு பெற்றவன் பரமபதம் என்னும் முடிவில்லா நிலையினை அடைகிறான்.

6. உயர்வான இந்நிலை எப்படி இருக்கும்? பரமபதம் என்னும் நிலைக்குச் சென்றவர், அவ்வின்ப நிலையில் இருந்து திரும்பிவரா நிலையாம் அது. (கண்டவர் விண்டிலர்). அவ்விடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளிர்ந்திட இயலா. ஏனெனில், அவ்விடம், எவ்வொளிரும் பொருளுக்கும் மூலமாகவும், எல்லா ஒளி தரும் பொருளைக்காட்டிலும் பற்பல மடங்குகள் ஒளிர்வதான பரஞ்சோதியாம். எத்தனையோ மில்லியன் மைல்கள் கடந்து வர இயன்ற சூரியஒளியானாலும், புறக்கண்களை மறைக்கும் அளவிற்கு அது எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், அதனால் அகத்தினை ஒளிர்விக்க இயலுமா என்ன? அதை பரமனின் அருள் ஒளியால் மட்டுமே இயலும்.


----
இவ்வாறாக, 15ஆம் அத்தியாயத்தின் முதல் ஆறு சுலோகங்களின் பொருள் விளக்கத்தினைப் படித்துப் பார்த்தோம். தொடர்ந்தும் பார்ப்போம்.
------