Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


Wednesday, December 05, 2012

Life of Pi திரையில்

அண்மையில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் பகிர்ந்து கொள்வதும் பல்கிப் பெருகி வரும் தருணத்தில், எனது பார்வையையும் இங்கே பதிவு செய்கிறேன்.

புத்தக வடிவில் நாவலாக வெளியிடப்பட்டபோதே 2005இல், இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி இருந்தேன். முன்னுரை மட்டும் படித்த பின் ஒரு பதிவும் அப்போது எழுதி இருந்தேன். பின்னர் முழுதும் முடித்த பின்னர் மீண்டும் பதிவிடக் கிட்டவில்லை. என்றாலும், அப்போதைக்கு இப்போது சமன் செய்யலாமனெ நினைக்கிறேன். முடிந்த வரை, இப்பதிவில் இப்படத்தின் கதை விவரங்களைச் சொல்லாமல் இருக்கப் பார்க்கிறேன்.

3D வடிவத்தில் பெரிய படங்கள் அனைத்துமே இப்போதெல்லாம் வெளியிடப்படுகையில், எனக்கோ 3D கண்ணாடிகள் வழியாக திரையினைப் பார்ப்பது என்பது ஒரு குறையாகவே தோன்றும். அது செயற்கையான சேர்க்கையாக, என் இயற்கையான விழி வழி புலனுணர்வுகளுக்கு ஏதோ ஒரு தடையாகவே தோன்றும். ஆகவே 3D காட்சியனை தவிர்க்க நினைத்தாலும், சாதாரணக் காட்சிக்கு அனுமதிச் சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், வேறு வழியின்றி 3D காட்சிக்கே சென்றேன். ஆனாலும், நல்லவேளை, அப்படியொன்றும் பெரிய இடராகத் தெரியவில்லை.

படத்தில் முதல் சொல்லே "கண்ணே" என்றே தமிழில் தொடங்க - வியப்பில் இது ஏற்கனவே கேட்ட குரலாய் இருக்கிறதே நினைக்கையில் - அது பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடும் தாலாட்டுப் பாட்டென்பது தெளிவாகியாது. பக்கத்தில் மடியில் உட்கார்ந்திருந்த நான்கு வயது மகளோ உடனே தூங்கிவதற்கு முகத்தை திரும்பிக் கொண்டு தயாராகி விட்டாள்!

 

நல்லவேளை, பாடல் முடிந்தபின் புதுச்சேரிக் காட்சிகளும், இயல்பான வசனங்களும் அவளைத் தொடர்ந்து தூங்க விடாமல் திரையை கவனிக்கச் செய்து விட்டன. இயக்குனர் ஆங் லீ என்பவரின் தயாரிப்பு தானா, இது ஹாலிவுட் படம்தானா என எண்ணும் அளவிற்கு புதுச்சேரிக் காட்சிகள் தமிழ் திரைமண்ணின் மணத்தைக் காட்டின!

இந்தியர்கள்் எப்படி பிற மதங்களையும் தங்கள் சூற்றுச்சூழலில் எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மற்ற மதக் கடவுள்களையும் அன்னியமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டும் காட்சியும் உண்டு. கிட்டத்தட்ட இந்தக் காட்சிகள் ஆவணப்படம் போல் இருந்தாலும், மேலை நாட்டவர்களுக்கு நமது சமயச்சூழலையும், "எம்மதமும் சம்மதம்" என்னும் கோட்பாடும் இயற்கையாகவே இளைய தலைமுறையில் உருவாகுவது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

படம் முழுவதும் படத்தின் நாயகன் தன் கதையைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தன் தந்தையின் மிருகக் காட்சி சாலை அனுபவங்கள் முதல் கால் பகுதி. மீதிப் பகுதியில் நாயகன் ஒரு சில மிருகங்களுடன் படகொன்றில் மாட்டிக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பதுதான். தனது சொந்தப்புலமதில் தனக்கு விருப்பமானவற்றைச் செய்வதும் பின்பற்றுவதுமாக எல்லோரும் போல இருந்த நாயகன், அவற்றைத் தாண்டி, கடல் என்னும் புதிய பழக்கமில்லாத புலத்தில் விடப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கலாம்? பசிபிக் பெருங்கடலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லா திசைகளிலும் கடலே தெரிகையில் படகில் மிஞ்சுவது தினமும் ஐந்து கிலோ மாமிசம் உண்ணும் வங்காளப் புலியும், மாமிசமே உண்டிராத நாயகனும் தான். தன்னை புலியிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள நாயகனின் சிறு சிறு முயற்சிகள் எனப் படம் நகர, அப்பயணத்தின் போது வண்ணத்திரை வண்ணத் தூரிகையாகிறது. படகையும் அதை இணைத்திருக்கு கட்டு மரத்தையும் சுற்றி பச்சை ஒளி தோன்றுவதாகவும், இரவில் கடலுக்கு ஜெல்லி மீன்களே வண்ண ஒளியூட்டுவதும், கடலில் இருந்து பிரம்மாண்டமான உயரத்திற்கு எழுந்து விஸ்வரூப தரிசனத்தைத் தரும் திமிங்கலமும் கண்கொளாக் காட்சிகள்!




கடலின் பிரம்மாண்டம் திரையில் விரிய, அதில் பகல் நேரத்தில் வானத்தின் நீலமும், வெண் மேகங்களும் தங்கள் பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. இரவு நேரமென்றால் இன்னமும் கேட்கவே வேண்டாம். கற்பனைக்கே அலாதி ஆனந்தத்தைத் தரும் கரு வானத்தில் பதித்து வைந்த எண்ணிடலங்கா இரத்தினங்களென மின்னும் விண்மீன்களின் தனித்துவமான பிரதிபலிப்பு பார்ப்பவர் விழிகளை வசியம் செய்கிறது. படகு பயணிப்பது கடலிலா அல்லது வானத்திலா என்று மனதை மயலுறுத்துகிறது!

நடுக்கடலில் மீண்டும் புயல்வர, அது படகுடன் அவர்களை ஆளிலில்லாத அதிசயத் தீவிற்கு இட்டுச் செல்கிறது. அங்கே நாயகன் இயற்கையாகவே சூழ்நிலைக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக் கொண்டதுடன், புலியுடன் படகை செலுத்தி, இறுதியில் மெக்ஸிகோவின் கடற்கரையை அடைகிறான். புலி படகில் இருந்து இறங்கி கடலை ஒட்டி இருக்கும் காட்டில் மறைகிறது. அது காட்டில் நுழையும் சமயம் தன்னை திரும்பி ஒருமுறை கடைசியாகப் பார்க்காத என்ற ஏக்கத்துடன் மயங்கி விழுந்த நாயகனைக் காப்பாற்றி மருத்தவ மனையில் சேர்க்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

பின்னர் நாயகனைப் பார்க்க வந்த காப்புரிமை நிறுவன ஆட்களிடம் இந்தக் கதையைச் சொல்ல அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு கதையினைச் சொல்கிறான். இரண்டாவது மாற்றுக் கதையை நாயகன் சொல்லும்போது ஏனோ நான் அவற்றை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுக்கொண்டே இருந்தேன். ஏனப்படி? நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏதோ ஒன்றின் நம்பிக்கை செய்யும் வித்தையால்தான் அது. படத்தின் முக்கால் பகுதிக்கு கண்களிலும் மனதிலும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அதற்கு நேரெதிர் மறையான இன்னொன்றைச் சொல்லும் போது - மனதால் ஏற்கப்பட மறுக்கப்படுகின்றன. இந்த 'மாற்று' வேண்டாமே என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

இறை நம்பிக்கையும் இப்படித்தான் என்பதை மறைமுகமாக இதன் பின்புலத்தில் வைக்கப்படுவதை கவனிக்காமல் விட்டுவிட இயலாது. இரண்டு கதைகளைச் சொல்லி - எப்படி நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகையில் - இறை நம்பிக்கையோ அல்லது இறை மறுப்போ - நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ - அதைத் தான் நம்பப் போகிறீர்கள் - அதுபோலவே இந்தப் படத்தின் முடிவையும் நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ அதுபோல எடுத்துக் கொள்ளுங்கள் என்று நம்பிடமே விட்டு விடுகிறார்கள்!

புலி காட்டுக்குள் மறைவதற்கு முன்னால் தன்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற நாயகனின் ஏக்கம் போல - மனிதர்கள் வாழும்போதே ஒருவருக்கொருவர் உதவியோ நன்றியோ செய்யாமல், அவர்களை இழந்தபின் அதற்காக ஏங்குவது என்பதைப் பதிவு செய்து திரைப்படம் நிறைவு பெறுகிறது.

படம் முடிந்து மங்கிய விளக்குகளின் வெளிச்சம் அரங்கில் ஆக்கிரமிக்க, என்னுடைய உடமைகளை இறுக்கமாகவும், அதிக கவனத்துடனும் பிடித்துக்கொண்டு நடக்கத் துவங்கினேன்!

படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இங்கே பார்க்கலாம்:

Monday, November 26, 2012

வாழும் இறைவன் : சுவாமி விவேகானந்தர்


"வாழும் இறைவன்" என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதையின் தமிழாக்கம்:

மீண்டும் மீண்டும் பிறந்து, ஆயிரமாயிரம் துயர் பட வேண்டும்.
ஏனெனில், நிஜமான இறைவனை வழிபட வேண்டும்.
நான் நம்பும் ஒரே இறைவன் - அவன்
எல்லா ஆன்மாக்களின் கூட்டுத் தொகுதியாய் இருக்கிறான்.

அவன் உன்னுள்ளும், அதன் வெளியேயும் இருந்து,
உழைப்பாளிகளின் ஒவ்வொரு கையிலும்  செயல்பட்டு,
நடமாடும் ஒவ்வொரு கால்களிலும் நடந்து வருகிறான்.
அவன் உடலில் இருப்பது நீ.
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

உயர்விலும் தாழ்விலும், துறவியிலும் பாவியிலும்,
கடவுளிலும் புழுவிலும்,
காணக்கூடிய, அறியக்கூடிய, உண்மையான எங்கும் நிறைந்த
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

முற்பிறவியும் அடுத்த பிறவியும் இல்லாமல்,
இறப்பும் இல்லாமல்,
வருவதும் போவதும் இல்லாமல்,
எப்போதும் நாம் 'ஒன்றேயென' அவனில் இருப்பதுமான,
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

இப்படிப்பட்ட "வாழும் இறைவனை"யும் அவனது பிரதிபலிப்பையும்
புறந்தள்ளி, பொய்யான நிழல்கள் பின்னால் அலையும் மூடர்களே,
இதனால் சண்டையும் சச்சரவும்தான் மிச்சம். கண்கண்ட
இறைவனயே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

================================

இதன் ஆங்கில வரிகளையும், ஆங்கிலப் பாடலாகப் பாடுவதையும் இங்கே பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.

Monday, November 05, 2012

சுழலும் ஞாயிறு

பூமிப்பந்து இடைவிடாமல் சுழல்கின்றது.
சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. 
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும்,
அதற்கப்பாலும் சிதறிக்கிடக்கும் வானத்து மீன்களெல்லாம்
ஓயாது சுழன்று கொண்டேதான் இருக்கின்றன.
- மகாகவி பாரதியார்.


சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும், அவற்றைச் சுற்றி வரும் துணைக்கோள்களும் சூரியனைச் சுற்றி வருவது பொதுவாக பேசப்படும் ஒன்று. ஆனால் சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறதா, அல்லது அதுவும் நகர்கிறதா, சுழல்கிறாதா?

சூரியக் குடும்பம் அமைந்திருக்கும் நமது கேலக்ஸியை பால் வழி மண்டலம் (Milky way) என்றழைக்கிறோம். இந்த பால் வழி மண்டலத்தின் மையப்புள்ளியைச் சுற்றித் தான் சூரியனும், சூரியக் குடும்பமும் சுற்றி வருகின்றன. சராசரியாக ஒரு மணிக்கு 792,000 கி.மீ வேகத்தில். (அண்மையில் நாசா நிகழ்த்திய சோதனைகள், அதை விடக் குறைவாக மணிக்கு 83,700 கி.மீ வேகத்தில் தான் சூரியன் நகர்வதாக கணித்துள்ளது.)


சூரியனைச் சுற்றி வரும் பூமியின் பாதை நீள் வட்டப் பாதை என்பதை அறிவோம். ஆனால், சூரியன் நகர்வதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், திருகுச்சுழல்(helix) வடிவத்தில் பாதை அமைகிறது:



நமது கேலக்ஸியினை, பூமியிலிருந்து பார்க்க இயலுமா? ஆம், இது இரவு நேரத்தில், மங்கலான வெள்ளைப் பட்டையாகத் தெரிகின்றது. இவ்வாறு வெண்ணிறப் பட்டையாகத் தெரிவதனாலேயே இதற்குப் பால்வழி என்னும் பெயர் ஏற்பட்டது. முதலில் உள்ள படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டுவது, பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியினை. மேலும், நமது பால்வழி மண்டலம் எப்படி இருக்கும் என்பதனை இந்த காட்சிப் படத்தினைப் பார்க்க:


பால் வழி மண்டலத்தின் விட்டம் 100,000 ஒளியாண்டுகள் எனவும், அதன் மையத்திலிருந்து சூரியன் 28,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்துகொண்டு மையத்தினை சுற்றி வருவதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. சூரியன் ஒருமுறை தனது வட்டப் பாதையில் சுற்றி வர, 230 மில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும் கணக்கிடப் பட்டுள்ளது. நமது பால் வழி கேலக்ஸியாவது ஒரே இடத்தில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தனக்கு அருகே உள்ளே ஆண்ரோமேடா கேலக்ஸியினை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது.
கீழே உள்ள காட்சிப் படத்தில், நமது பால் வெளி மண்டலத்தின் மாதிரியினைப் பார்க்கலாம். இதன் இறுதியில் சூரியன் சூரியன் நகரும் வேகத்தில், அதன் முன்னே பிறை வடிவிலான ஒரு வில் போன்ற வெளிச்சத்தினைக் காட்டி உள்ளார்கள். இதற்குப் பெயர் bow shock என்கிறார்கள். என்றாலும், அண்மையில் சூரியனின் நகர் வேகம் குறைவாக கணக்கிடப்பட்டபின் இது உண்மையில் ஏற்படுகிறதா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.


Friday, November 02, 2012

காற்றுக்கேது வேலி?

உன் இலக்கணம், உன் எல்லைகள், உன் வரம்புகள்,

என இவை எல்லாமே,

உன்னை ஒரு வரையுரைக்குள் அடைத்து,

அதனை நீ மீறிடாமற் குறுக்குவதாகவே உள்ளது.

உனக்கென ஒரு பெயர்.

உனக்கென ஒரு உயிர்.

சிக்குண்டாய் இங்கேயே.

நின்று ஒரு கணம் யோசி.

காற்றைப் பார்.

காற்றுக்கேது வேலி?

வானமும் எல்லை இடுமோ காற்றுக்கு?

அடைத்து வைத்தாலும்

உயிருடன் இருக்குமோ காற்றும்?

அறிவாய் மனமே,

எல்லைகள் இல்லாமல்

எங்கும் திரிந்து பறந்திட.

எங்கும் எதிலும் வியாபித்திட.

Monday, October 29, 2012

முன்னோ பின்னோ? : அப்பர் பதிகம்

"தொன்று நிகழ்ந்து அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தனள் என்று அறியாத இயல்பினளாம் எங்கள் தாய்"
என்று பாரதி பாரதத்தாய் வாழ்த்துப் பாடி விட்டான். நம் நாட்டில் பண்டைக் காலத்து நிகழ்வுகளோ, சரித்திரங்களோ, எழுதப்பட்ட இலக்கியங்களோ, பலவற்றிற்கும் சரியானதொரு காலகட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். தக்க சான்றுகள் இல்லாத நிலையில் அனுமானங்களையும், பல முரண்பாடன கணிப்புகளையும் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் துணைகொண்டு, காலக் கணிப்பினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் சிவ பக்தரும் சோழ அரசருமான கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிதாகக் கற்றளியாக கட்டப்பட்டது. இன்று 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்்துள்ளன. இன்றைக்கு இவ்வளவு பெரிய கோயிலாக இருப்பதற்கு, சோழர்களுக்கு முன்னால் பல்லவர்கள் தொடங்கி, சோழர்களுக்குப் பின்னால், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், தஞ்சை நாயக்கர்கள், மாரத்திய மன்னர்கள் என பல அரசுகளின் ஆதரவு இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலை கட்டுகையில் திருவாரூர் கோயிலை ஒரு முன்மாதிரியாக கொண்டாதகவும் ஒரு செய்தி உண்டு.

இவற்றுக்கெல்லாம் முன்பாக, கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே அப்பர் பெருமான் திருவாரூர் கோயிலைப் பற்றிய காலக் கணிப்பொன்றில் ஈடுபட்டிருக்கிறார். பழமை வாய்ந்த திருத்தலமான ஆரூரில் (திருவாரூர்) கோயில் கொண்ட சிவபெருமானைப் பார்த்து - ஐயா,  நீர் திரு ஆரூரைக் கோயிலாகக் கொண்ட நாள் எதுவோ? என வினவுகிறார். குறிப்பாக, சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நிகழ்வதற்கு முன்பாகவே திருவாரூரில் கோயில் கொண்டீரா அல்லது அதற்குப் பின்னரா என வினவுகிறார்! இதற்கு சிவபெருமானைத் தவிர வேறு யாரால் விடை பகர இயலும்! எனினும், இதுவே திருவாரூர் தலத்தின் தொன்மைக்கு சான்றல்லவோ!


ஆறாம் திருமுறை 
திருநாவுக்கரசர் தேவாரம்
திரு ஆரூர் பதிகம்



*1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?
ஓர் உருவே மூஉருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
காமனையும் கண்அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ?
மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*2
மலையார் பொன்பாவையொடு மகிழ்ந்த நாளோ?
வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ?
நினைப்ப(அ)ரிய தழல்பிழம்புஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலைகடல்நஞ்சு உண்ட நாளோ?
அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*3
பாடகம் சேர் மெல்அடி நல் பாவையாளும் நீயும் போய்
பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை
மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*4
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ?
ஓர் உகம் போல் ஏழ்உகம்ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலைஆன வானோர் செய்த
தக்கன்தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடுமாலோடு,
நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு
ஏத்தி, வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*5 பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானே!
நீலமாமணிகண்டத்து எண்தோளானே!
நெருநலையாய் இன்றுஆகி நாளைஆகும் சீலமே!
சிவலோகநெறியே ஆகும் சீர்மையே! கூர்மையே! குணமே!
நல்ல கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?---
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*6
திறம்பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம்பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன்தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*7
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக் கலந்து உரைக்கக்
கற்பகம்ஆய் நின்ற நாளோ?
காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று, வலம் சுருக்கி
வல்அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து,
வானோர் உய்ய, சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?---
தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*8
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
பார்அகத்தே பரஞ்சுடர்ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான்உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*9
புகைஎட்டும், போக்குஎட்டும், புலன்கள்எட்டும், பூதலங்கள்அவைஎட்டும்,
பொழில்கள்எட்டும், கலைஎட்டும், காப்புஎட்டும், காட்சிஎட்டும்,
கழல்சேவடி அடைந்தார் களைகண்எட்டும், நகைஎட்டும், நாள்எட்டும்,
நன்மைஎட்டும், நலம் சிறந்தார் மனத்துஅகத்து மலர்கள்எட்டும்,
திகைஎட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*10
ஈசனாய், உலகுஏழும் மலையும் ஆகி,
இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
மதயானைஉரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

Sunday, October 21, 2012

நவராத்ரிப் பாடல்


ஆதியவன் சோதியாம் அன்னையவள் சக்தி
ஆதரிப்பாள் அன்புடனே அனுதினமும் போற்றி
நீதிநிலை நாட்டிடவே தீமையாவும் ஓட்டிடுவாள் சக்தி
நீடுதனி சூலமதை ஏந்திடுவாள் போற்றி
மூடச்சித்தமும் சிதைபட விடுவாளோ சக்தி
பாடியுன்னை சரண் புகுவேன் போற்றி

வையமெல்லாம் நினது கண்மணியாம் அலர்மேல்மகளே
வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வாயே நீயே
பொன்னென மணியென மின்னிடும் அன்னையே
உன்னையன்றி உலகத்தோர் உழல்வாரில்லையே.
இணைமலர்த் திருவடி இறைஞ்சிப் புகுந்திட
இனியில்லைத் துயரென அடைந்தேன் தஞ்சம்.

ஆலயமாய் அமைந்ததுபார் அன்பர் மனதும்நீ அமர
காலமெல்லாம் காத்திடுவாய் கருத்ததனை கலைமகளே
வேதமும் நாதமும் தாயே நின் உறைவிடம்
வேண்டுவோர் திகழ்ந்திட வரமளிப்பாய் நித்தமும்
போனது போகட்டுமெனப் பணிவேன் நின்பதம்
போகாமல் நீயெனக்களிப்பாய் ஞானம் யாவும், உயர் ஞானம் யாவும். ===================================================

கேட்கமாலேயே பால் நினைந்தூட்டுவதுவாம் அன்னையின் கருணை.

அதுபோலவே,

கேட்காமலேயே பாடிப் பதிவேற்றி இருக்கிறார் சுப்பு தாத்தா,

அனைவரும் கேட்டு அன்னையின் அருள் பெற:

 

Sunday, October 14, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே - 2

சென்ற பகுதியைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியொன்று எழுதுவேன் என்று நானே நினைத்துப் பார்க்கவில்லைதான் அப்போது. ஆனால், இந்த காணொளிப் படத்தினைப் பார்த்தபின்பு அதன் தொடர்ச்சியாகத் தோன்றத் தான் செய்தது.





காட்சிப் படத்தின் கருவினை, சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில்:
ஜில் போல்ட் டெய்லர் என்கிற மூளை சம்பந்தபட்ட நோய்கள் பிரிவு மருத்துவர் / ஆராய்சியாளர்  தனக்கே ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாக சுவைபட விவரிக்கிறார்.


நோயாளிக்கு நோய் வருகையில் மருத்துவரைச் சென்று பார்க்கிறார்.
ஆனால் மருத்துவருக்கே நோய் வருங்கால்?
இந்த காட்சிப் படத்தில் அவர் தன்னைத்தானே ஆராய்சி செய்துகொள்ளும் பேறு பெற்றேன் என்கிறார். அப்படியொரு ஆராய்சியில் அவர் என்னதான் சொல்கிறார்?
மூளையில் இரண்டு பகுதிகளான வலது மூளை மற்றும் இடது மூளை ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் இருந்து தனித்தனியே செயல்படும் பொழுது:
(காணொளிக் காட்சிப் படத்தின் இறுதியில் 17:09 நிமிடங்கள் கடந்தபின்) 
வலது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நானே அண்ட சராசரங்களையும் இயக்கிடும் சக்தி. என் உடலில் உள்ள 50 டிரில்லியன் மூலக்கூறுகளுக்கும் (molecule) நான் ஆதார சக்தியாகவும், எல்லாப்பொருள்களுடனும் ஒன்றாகவும் தெரிகிறேன்."
இடது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நான் மற்றவர்களில் இருந்து தனிப்பட்டு, நான் என்கிற தனித்துவமானவர். நான் ஒரு மருத்துவர்...என்றெல்லாம்.".
"ஆகவே மக்களே, நமக்குள் இப்படியாக இரண்டு சாய்ஸ்கள் இருந்தால், எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? எப்போது?" என்கிற கேள்வியைக் கேட்டதோடு, இவாறு நிறைவு செய்கிறார்: "எந்த அளவிற்கு நாம் வலது மூளையில் அமைதியையும் சாந்தத்தையும் நிலைபெறச் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், உலகத்திலும் அமைதியையும், சாந்தத்தையும் திகழ்ச்செய்வோம்".

---------------------------------------------------------------------------

சென்ற பகுதியில் ஐம்புலன்களும் எப்படி ஆழ்மனதிற்கு "இடையூறு" என்பதைப் பார்த்தோம். அதுபோலவே, நமது வெளி உலக அனுவங்களும், நமது வெளியுலகக் கல்வியும் ஆழ் மனதிற்கு இடையூறாகவே இருக்கின்றன. அது எப்படி? நமது புத்தியில் சேகரிக்கப்படும் அனுபவங்களும், உணர்வுகளும் நம்மை திருப்பி வெளியுலக அனுபவதிற்கே இட்டுச் செல்கிறன.



படத்தில் காட்டியுள்ளபடி, மனதின் செயல்பாட்டுப் பகுதிகளாக, ஆழ்மனம், சித்தம், அகங்காரம், புத்தி எனப் பிரிக்கலாம். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் பகுதியாகும். சித்தம் என்னும் பகுதியில், மனதினால் அறிந்ததை, புத்தி என்னும் சேமிப்பு கிடங்கிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், "முடிவுகளை" எடுக்கிறது. அகங்காரத்தின் உதவியால் எல்லா செயல்களையும, முடிவுகளையும் தன்னோடு (ஜீவனோடு) இணைத்துப்பார்க்க இயல்கிறது.

மேலே குறிப்பிட்ட மனதின் வரை படத்தின் எல்லைகளை ஒரு அமீபா செல்லின் செல் சுவர்களோடு ஒத்து நோக்கவும். ஆமீபாவின் செல் சுவர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரையுரைக்குள் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக பெருத்தும் சிறுத்துமாகிக் கொண்டே இருக்கும். அதற்கு ஒப்பாக, மனதில் சித்தம் விகாரமடைத்து, ஆழ் மனமானது புத்தி, அகங்காரம் மற்றும் ஐம்புலன்களின் ஈடுபாட்டால், தன் வயப்பட இயலாமல் போகிறது.

இதனாலேயே நம்மால், "தன்னை" அறியாமல் போவதற்கு ஏதாகிறது.



Monday, October 01, 2012

அனுமனை அனுதினம் நினை


நேற்று இங்கே திரு. ஓ.எஸ். தியாகராஜன் அவர்களது கச்சேரி நடந்தது.
என்றைக்கு சிவ கிருபை வருமோ
ஓ ரங்க சாயி
போன்ற பாடல்களைப் பாடியதோடு, விருத்தமாக "ஸ்ரீராகவம்" ஸ்லோகத்தினை இராகமாலிகையாக பாடியது இனிமையாக இருந்தது.

விருத்ததைத் தொடர்ந்து என்ன பாட்டு பாடுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "அனுமனை அனுதினம்..." பாடினார்.
அப்பாடலைக் கேட்கையில் தான் உறைத்தது, இதுவரை அனுமன் பாடல் எதுவுமே நமது பதிவில் தரவில்லையே என்பது. இதோ இப்போதே, அக்குறை களைய:

இராகம்: இராகமாலிகை
தாளம்: கண்டசாபு
இயற்றியவர்: குரு சுரஜானந்தர்
பல்லவி:
அனுமனை அனுதினம் நினை மனமே
விதிவினை மறைந்திடும் இது நிஜமே

சரணம் 1:
தினம் தினம் தவறுகள் செய்கின்றோம்
மனம் குணம் மாறியே நடக்கின்றோம்
பணம் பணம் என்றே தவிக்கின்றோம்
குணநிதி அனுமனை மறக்கின்றோம்

சரணம் 2:
பக்திக்கு முதலிடம் தந்தவன்
சத்திய ராமனை கவர்ந்தவன்
பக்தரின் உள்ளத்தில் நிறைந்தவன்
பக்தியின் திலகமாய் உயர்ந்தவன்

சரணம் 3:
ராமா ராமா என பஜிப்பவன்
ராமன் சேவையை இரசிப்பவன்
ராம நாமத்தை புசிப்பவன்
ராமர் பாதத்தில் வசிப்பவன்
-----------------------------------------
ஓ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியிருப்பதை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், இப்பாடலை பரத் சுந்தர் பாடிப் பதிவேற்றியுள்ளது இங்கே கேட்கலாம்:

Thursday, September 27, 2012

வேலும் மயிலுமே



இராகம்: சுசரித்ரா
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: கோட்டீஸ்வர ஐயர்



எடுப்பு

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! 

தொடுப்பு

காலை மாலையுமே மனமே துதி  கந்தனை!

காலை மாலையுமே மனமே துதி காலன் வரினுமே - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

முடிப்பு

சித்ரகவி நக்கீரன் தத்தை தவிர்த்த தீரன்

கஜபத்ர வீரபத்ர வீரபாகு சோதரன்

ஆறுபத்ர வசீகரன் சுசரித்ர சுசீகரன்

விசித்ர கவி குஞ்சரதாச மித்ர ருசீகரன் - சக்தி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

---------

பாடுபவர்: சஞ்சய் சுப்ரமணியம்


Wednesday, September 19, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே!

எனது ஆண்டிராய்ட் கைபேசியில் எப்.எம் இணைய வானொலி ஒன்றைத் துழாவிக்கொண்டிருக்கையில் பாட்டொன்று ஒலித்தது:
"அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே...
அய்யங்காரு வீட்டு அழகே."  (அன்னியன் திரைப்படப் பாடல்)

அறியாமை எப்போதாவது பேரின்பமாகுமா?
"... அறியாத" மானிடரை வையம் சுமப்பது வம்பன்றோ!

"Ignorance is Bliss" என்பார்கள் ஆங்கிலத்தில்.  சில சமயம் தெரிந்து துன்பப்படுவதை விட தெரியாமல் இருப்பதே தேவலை என்பதால் போலும்.

வேதாந்தம் உரைத்த ஞானியர் சொல்வார்:
அவித்தை என்னும் அறியாமையாவது தவறான அல்லது குறைவான புரிதலினால் விளைவது. அவித்தையின் விளைவால் மனதானது, தன் கண் போன போக்கிலே தன் கால் போகலாம் என நினைக்கிறது. "துய்ப்பது பரமன்" என்னும் உண்மையை உணராது, தனது புற அவையங்களால் துய்க்கப் படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொண்டு பெருமிதத்தில் புரண்டோடுகிறது.
ஆகவே ஐம்புலங்களால் தான் இந்த அவித்தையே ஏற்படுகிறது அல்லவா? இன்புட்டே இல்லாமல் இருந்தால்?
இதைத்தான் அருணகிரியார் வேண்டுவார்:
"ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்
அந்தி பகல் அற்ற நிலை அருள்வாயே" என்று.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகத்தைச் சுற்றி வலம் வந்த ஐங்கரனைப் போல் அலைபாயும் மனது - அவ்வாறு செயல்படுவதற்கு - அதன் அவையங்களே பெரிதும் துணை புரிகின்றன. உள்வயப்படமால் வெளியுலக ஈர்ப்பிலேயே மனமானது உழல்கிறது. அதனால், ஐம்புலன்களையும் அகற்றிய நிலையினை வேண்டுகிறார்.

அல்லது, ஐம்புலன்களுக்கும் மனதிற்கும் இடையே ஒரு பெருஞ்சுவரை எழுப்பியாக வேண்டும். மனதிற்கும் ஐம்புலன்களுக்கும் தொடர்பே இல்லாமல் செய்ய வேண்டும்.

அல்லது மனம் ஐம்புலன்களைப் பற்றியே அறிவே இல்லாமல், மனமானது "ஐம்புலன் அறியாமை" தனில் இருக்க வேண்டும். அப்படியொரு நிலையில் இருந்தால், அந்த அறியாமையும் பேரின்பம் விளைவிக்கலாம். ஏனென்றால், ஐம்புலன்கள் மனதில் மயக்கத்தினை விளைவிக்காத பொழுது, அது தனக்குள்ளே, தன் புத்தியில் பிரதிபலிக்கும் பரமனின் பிம்பத்தினைக் கவனிக்கத் தொடங்குகிறது. வாட்டத்தை ஓட்டும் நாட்டத்தை நாடி இருக்கிறது. அவ்வாறான "தன் வயப்பட்ட" நிலையில் வெளி உலகப் புலன் வழிச் செய்திகள் ஏளிதாக மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பகவான் கண்ணன் கீதையில் உரைப்பதினை:
மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: | 
மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||
"நானே ஜீவனாய் இருக்கிறேன். பிரகிருதியில் இருப்பதும் நானே. மனம் மற்றும் ஐந்து புலன்களையும் நானே கவர்கிறேன்."
மனதில் நிறுத்திட வேண்டும்.




Sunday, July 22, 2012

சிந்தனைக்குள் ஊற்று

எண்ணம் அல்லது சிந்தனை எப்போதுமே அறிவு சார்ந்த செயல்பாட்டாகவே கருதப்பட்டது வந்தாலும், அப்படி இல்லாமால் இருப்பதும் கண்கூடு.  எண்ணம் என்பது எல்லாவற்றிற்கும் ஆதாரம், ஆவதும் அதனாலே, அழிவதும் அதனாலே என்பாருண்டு. எண்ணம் என்பது அன்றாட இயல்பான செயல்பாடுகளை விளைவிக்கும் பொழுது, அவற்றை ஒரு பொருட்டாகக் கூட நாம் கொள்ளுவதில்லை. It's mostly taken for granted. அதே எண்ணம் சற்றே எதிர்பாராத விளைவினைத் தரும்கால், அந்த எண்ணத்திற்குப் புதியதோர் பரிணாமத்தினைத் தருகிறோம். சிந்தனைகள் "உரத்த சிந்தனை", "உயர்ந்த எண்ணம்" என்றெல்லாம் பெயர் பெறுகிறது. ஒரு சிலர் சிந்தனைவாதிகள் என்றும் சிந்தனை ஊற்று என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.

மாணிக்கவாசகர் பெருமான், "சிந்தனைக்குள் தேனாக ஊற்றெடுத்தது" என்பார்.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
அடியவர் மனதில் தேனாக ஊறி நின்றானாம் பிறப்பை அறுக்கும் "பிறவா யாக்கைப் பெருமான்".

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
தேற்றம்: கருத்து; தேற்றத் தெளிவு: கருத்து தெளிவித்திடும் அதன் சாறு.

இறுதியான முடிபாக ஒரு கருத்தானது நிறுவப்பட்டு இருக்குமேயானால், அந்த கருத்தின் சாறாகவும், அக்கருத்தாகவும் உறையும் எம்பெருமான், அக்கருத்தின் பயனான தெளிவாகவும் இருக்கிறானாம். அப்படிப்பட்ட சிந்தனை அல்லவோ உரத்த சிந்தனை!. எல்லா எண்ணக் குழப்பங்களுக்கும் இறுதியான முடிபாக, இனி ஏதும் விவாதிப்பதற்கில்லை என குன்றிடை விளக்காய் விளங்கி எல்லாக் கலக்கங்களையும் அறுத்துத் தள்ளுகிறான். அப்படிப்பட்ட நிலையில் கிடைக்கும் தெளிவானது, தீர்க்கமான தெளிவாக நிலைக்கப்பெறுகிறது. மாணிக்க வாசகர் பெருமான், மீண்டும் "சிந்தனைக்குள் ஊற்றாக" சிவபெருமானைக் குறிப்பிடுகிறார். இம்முறையும் உண்பதற்கு உகந்ததான ஒன்றுடன் ஒப்பிடுகிறார். அதுவும் அரிதானதும் மிகவும் விரும்பத்தக்கதுமான அமுதுடன் ஒப்பிடுகிறார். மனிதப்பிறவியின் அடிப்படைத் தேவையான உணவோடு இயைந்து அதுவாகவே சிந்தனைக்குள் ஊறிட, வேறென்ன வேறென்ன வேண்டும்? சிவனவன் சிந்தனையுள் நின்றதனால், அவனருளாலே, அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ சிவபுராணம் சொன்னார் மாணிக்க வாசகர்.

சிந்தனைக்குள் வற்றா ஊற்றாக, அமுத சுரபியாகத் திகழுமுன், தன் சிந்தையுட் புகுந்ததையும், பூங்கழல் காட்டியதையும் சொல்கையில்:
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே!
           ....

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

இருளெனக் கிடந்த மனத்தில், ஒளி பொருந்திய விளக்காய் எழுந்தமையால், செழுஞ்சுடர் மூர்த்தியாய் விளங்கினான் பூசனைக்கு உகந்த ஈசன். விளக்கானது இன்னொருவரின் ஒளியினைப் பிரதிபலிக்காமல், தானக ஒளி தரும் கருவி.  தானிருந்த இடத்தின் இருளை அகற்றி, ஒளியைப் பெருக்கி, எல்லா இடத்திலும் வியாபித்து என்றென்றும் இருக்கிறது.

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தானாகச் சிந்தையில் வந்து புகுந்த ஈசன், அத்தோடு நில்லாமல், தாயைக் காட்டிலும் மிகுதியான பரிவோடு உள்ளொளியினைப் பெருக்கினானாம். அதனால் விளைந்த குறைவிலா ஆனந்தத்தினை என்னென்று சொல்வது! கைவிளக்கொன்றினால், இருள் அகல்வது இயற்கையன்றோ!

அல்லது, இயற்கையான நிகழ்வுகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாததனால், அவை அன்னியப்பட்டுப் போனதோ!?

வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே!
- இராமலிங்க வள்ளலார்.

Tuesday, March 13, 2012

மனம் ஏதய்யா

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி
புனைந்தது: அடியேன்

பல்லவி

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா - உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

அனுபல்லவி

தொட்டுத் தொடர்ந்திடும் பழவினைகளும் தொடரவே  - உனை 

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

சரணம்

சொட்டு சொட்டெனத் தூர்த்திடும் நின்னருளுக் கேங்கிட

பட்டுப்போனதொரு பாலையில் நீரனெ நின்னருள்

மட்டிலா மகிழ்ச்சியை தந்ததே முருகய்யா - நிதம் உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

Sunday, February 19, 2012

லிஸ்பனில் இருந்து கோவா வரை

ண்டைக் காலத்து மக்கள் கடற்பரப்பில் மரக்கலங்களை ஏற்றி அவற்றை காற்றின் உதவியோடு அண்டை அயல் நாடுகளை அடைந்து புதியனவற்றை கொள்முதல் செய்யும் திறன் பெற்றிருந்தனர். இவை யாவும்  திசை காட்டும் கருவிகள் ஏதுமில்லாத காலத்திலேயே. ஒரு வருடத்தில் எந்த மாதத்தில் காற்று எந்த திசையில் வீசும், எத்திசையில் கலத்தினை செலுத்தினால், கடலில் எந்த இடத்தில் எந்த தீவு வரும் என்பதை நன்கு கணித்து வைத்திருந்தனர். சங்க காலத்திலேயே வளிதொழில் ஆண்டவர்கள் தமிழர்கள் என்பதறிவோம். அக்காலத்திலேயே யவனர்களோடு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என பலப்பல பொருட்களை வணிகம் செய்தது அறிவோம். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின், அந்த பொருட்கள் கிடைக்கும் தேசத்தை தேடி கனவு கண்டவர்களில், தேடி அலைந்தவர்களில் - பராசீகர்களுக்கு முதலிடம் என்றால், போர்ச்சுகீசியர்களுக்கு அதற்கடுத்த இடம் கிடைக்கும்.

ஐரோப்பாவின் மேற்குக் கோடியில், ஆப்ரிக்காவைத் தொட்ட வண்ணம் இருக்கும் நாடு போர்ச்சுகல்.  லிஸ்பன் அதன் தலைநகரம். கிட்டத்தட்ட மூன்று பக்கத்திலும் கடலால் சூழப்பட்ட நாடு. பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளவரசர் ஹென்றி என்பவர் நீண்ட தூரம் பயணம் செய்து அண்டை நாடுகளை அடைவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தார். 1460 இல் அவர் இறப்பிற்கு பின்னும் தொடர்ந்த முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவை : 1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ்  ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் கடந்தவர் நமக்கெல்லாம் பரிச்சயமான வாஸ்கோட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைகிறார்.

மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமி - அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது. வாஸ்கோடகாமாவிற்குப்பின் வந்த அஃபோன்சா டி அல்புகியர்கியூ என்பவர், இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புக்கு வழிகோலிட - "கோவா" என்றொரு போர்சுகீசிய பிரதேசம் உருவாகி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகள் வரையிலும் கூட அது போர்ச்சுகீசியர்கள் கையில் தான் இருந்தது. வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திலேயே ஆபத்தினை அறியாமல் விட்டு வைத்த மனப்பாங்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு இன்னல் விளைவித்தது என்பதை வரலாறு நன்றாய் சொல்கிறது.


போர்ச்சுகீசியர்களைப் பொறுத்தவரை, ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையைத் தாண்டிய கடற்புரப்பு துவங்கி, கிட்டத்தட்ட இந்தோனேசியா வரையிலான பரப்பு எல்லாவற்றையும் - இந்தியா என்றே அழைத்தார்கள். அவர்களது இந்தியாவில், இந்தியப்பெருங்கடலும் அடங்கியே இருந்தது. அன்னிய கடற்பரப்பை ஆட்சி செய்ய விரும்பிய அவர்களது கனவு எளிதான ஒன்றாக மட்டும் அவர்களுக்கில்லை. கோழிக்கோட்டினை அடையும்முன் ஏற்பட்ட ஒரு பெரிய புயலில் சிக்கியது அவர்களது கப்பல்கள், வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்தில். லிஸ்பனில் இருந்து இந்தியா நோக்கி வாஸ்கோடகாமாவிற்கு பின்னாளில் பயணித்த கவிஞன் ஒருவன் பயணக்காட்சியினை பதிவு செய்கிறான்:
"திடீர்திடீர் பயங்கர புயல்காற்றும்,
பகீரெனப் பற்றி எறியும் வான்வெளியும்,
கனத்த காற்றும், அடர்ந்த நிசப்த இரவுகளும்,
பூமியைப் பிளக்கும் இடி முழக்கங்களும்..."
வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திற்குபின், தொடர்ந்த இந்தியப் பெருங்கடலை நோக்கி துவங்கிய பயணங்களில் - பீரங்கிகளும், வெடிமருந்துகளும், சிப்பாய்களும் என நிறைந்திருந்தன. முதல் முயற்சியில் முக்கியமான இடங்களில் கோட்டைகள் கட்டிக்கொண்டு அவற்றில் தங்களுக்கு சாதகமான துறைமுகங்களும் கால்வாய்களும் அமைத்துகொண்டார்கள். இந்தியப் பெருங்கடலில், கடல் வணிகப் பாதைகளை இதன் மூலம் தங்கள் கைக்குள் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலும் - ஏனைய ஐரோப்பிய சக்திகளான - டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தலைத்தூக்கத் துவங்கிய வரையில் போர்ச்சுகீசியர்களின் கடலாளுமை இந்தியப் பெருங்கடலில் இருந்து வந்தது.

Sunday, January 22, 2012

சிரிக்கவும் சஞ்சய்

பகுதி 1:

பகுதி 2: