Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, May 30, 2014

மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?

சிங்கள வம்சாவளியினரின் இலங்கை வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்தின் படி, வங்கத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் (கி.மு 543 - கி.மு 505) என்பவன் வந்ததாகவும், அவனது வம்சாவளியினரே முதல் சிங்கள ராஜ வம்சமாகவும் கருதப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க, சிங்கள வம்சாவளியினருக்கும் மற்றவர்களுக்குமான மரபணுத் தொடர்பை ஆராயும் சோதனைகள் என்ன சொல்கின்றன?

பல்வேறு சோதனைகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தாலும், அவை யாவும் சிங்களர்களுக்கும் வங்காளியர்க்குமான மரபணுத் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன.

1995 வாக்கில் நடத்தப்பட்ட ஆரம்பகால சோதனைகள் இந்தியத் தமிழர்களின் மரபணுத்தொடர்பே சிங்களரிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் சிங்களர்க்கும் வங்கத்தினருக்குமான மரபணுத் தொடர்பு - மகாவம்சத்தின் கதையோடு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை.

சமீபத்தில், 2005-2006 இல் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் படி,  72 சதவிகிதமும் வங்காளியர்க்கும், 16 சதவிகிதம் தமிழருக்கும் மற்றும் 12 சதவிகிதம் குஜராதியினருக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது! இந்த ஆய்வில் தமிழரின் மரபணுத் தொடர்பின் பங்கு குறைந்துபோனதற்கு காரணமென்ன என்கிற கேள்விக்குச் செல்லாமல் (சோதனை செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்து பங்கு விகிதம் கூடவும் குறையவும் செய்யலாம்), வங்காளியர்க்கும், தமிழருக்குமான தொடர்பு எதிர்பார்த்ததே என்றாலும், குஜராத்தியினரின் குறிப்பிடத்தக்க பங்கு சிங்களரின் மரபணுவில் இருப்பதுமாக இவ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது.

மேலும் சில வரலாற்று ஆய்வளர்கள் - இளவரசன் விஜயன் வங்க நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை. மகாவம்சம் சொல்லுவதற்கு மாற்றாக வட மேற்கு இந்தியாவில் இருந்து - குறிப்பாக தற்போதைய குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

வங்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பவர்கள் கூற்றுப்படி - விஜயன் இருந்த சிம்மபுரம் என்ற இடம் என்பது தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கும் சிங்குர் எனகிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பர்கள் கூற்றுப்படி, சிம்மபுரம் என்கிற இடம், தற்போது குஜராத்தில் சிஹோர் என்கிறார்கள். விஜயனின் கப்பல் முதலில் சுப்பாரகா என்னும் இடத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் இருக்கும் சோபனா என்கிற இடமாக அறியப்படுகிறது. விஜயனின் கப்பல் வங்கத்தில் இருந்து கிளம்பி இருந்தால் எப்படி இந்தியாவின் மேற்கு கரையினை அடைந்திருக்க முடியம்? ஆகையால் மேற்கு கடற்கரையில் இருந்தே புறப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுக்கிறது.

குஜராத் நாட்டுப்புற பாடல்களிலும், மற்றும் ஒன்றிரண்டு திரைப்படங்களிலும் கூட, "இங்கு இருந்து இளவரசன் இலங்கை சென்று, அங்கு பெண்ணை மணந்தான்" என்கிற செய்தி பேசப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியிலும் இடம்பெறுகிறது சிங்கம். பழங்கால வங்கத்தில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் குஜராத்திலோ தொன்று தொட்டே சிங்கங்கள்  இருந்தன என்றும் தெரிகிறது.

மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கொண்டாலும் கூட - அதனை இந்தியாவின் வட மாநிலங்களான வங்காளம் மற்றும் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் நிதர்சனமான குறியீடாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் சிங்கள மொழி உருவாவதற்கும் இதுவே காரணமாகவும் அமைகிறது.

மரபணு சோதனை விவரங்களுக்கு விக்கி தளத்தில் இச்சுட்டியைப் பார்க்கவும்.

Monday, October 29, 2012

முன்னோ பின்னோ? : அப்பர் பதிகம்

"தொன்று நிகழ்ந்து அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தனள் என்று அறியாத இயல்பினளாம் எங்கள் தாய்"
என்று பாரதி பாரதத்தாய் வாழ்த்துப் பாடி விட்டான். நம் நாட்டில் பண்டைக் காலத்து நிகழ்வுகளோ, சரித்திரங்களோ, எழுதப்பட்ட இலக்கியங்களோ, பலவற்றிற்கும் சரியானதொரு காலகட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். தக்க சான்றுகள் இல்லாத நிலையில் அனுமானங்களையும், பல முரண்பாடன கணிப்புகளையும் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் துணைகொண்டு, காலக் கணிப்பினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் சிவ பக்தரும் சோழ அரசருமான கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிதாகக் கற்றளியாக கட்டப்பட்டது. இன்று 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்்துள்ளன. இன்றைக்கு இவ்வளவு பெரிய கோயிலாக இருப்பதற்கு, சோழர்களுக்கு முன்னால் பல்லவர்கள் தொடங்கி, சோழர்களுக்குப் பின்னால், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், தஞ்சை நாயக்கர்கள், மாரத்திய மன்னர்கள் என பல அரசுகளின் ஆதரவு இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலை கட்டுகையில் திருவாரூர் கோயிலை ஒரு முன்மாதிரியாக கொண்டாதகவும் ஒரு செய்தி உண்டு.

இவற்றுக்கெல்லாம் முன்பாக, கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே அப்பர் பெருமான் திருவாரூர் கோயிலைப் பற்றிய காலக் கணிப்பொன்றில் ஈடுபட்டிருக்கிறார். பழமை வாய்ந்த திருத்தலமான ஆரூரில் (திருவாரூர்) கோயில் கொண்ட சிவபெருமானைப் பார்த்து - ஐயா,  நீர் திரு ஆரூரைக் கோயிலாகக் கொண்ட நாள் எதுவோ? என வினவுகிறார். குறிப்பாக, சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நிகழ்வதற்கு முன்பாகவே திருவாரூரில் கோயில் கொண்டீரா அல்லது அதற்குப் பின்னரா என வினவுகிறார்! இதற்கு சிவபெருமானைத் தவிர வேறு யாரால் விடை பகர இயலும்! எனினும், இதுவே திருவாரூர் தலத்தின் தொன்மைக்கு சான்றல்லவோ!


ஆறாம் திருமுறை 
திருநாவுக்கரசர் தேவாரம்
திரு ஆரூர் பதிகம்



*1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?
ஓர் உருவே மூஉருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
காமனையும் கண்அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ?
மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*2
மலையார் பொன்பாவையொடு மகிழ்ந்த நாளோ?
வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ?
நினைப்ப(அ)ரிய தழல்பிழம்புஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலைகடல்நஞ்சு உண்ட நாளோ?
அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*3
பாடகம் சேர் மெல்அடி நல் பாவையாளும் நீயும் போய்
பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை
மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*4
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ?
ஓர் உகம் போல் ஏழ்உகம்ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலைஆன வானோர் செய்த
தக்கன்தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடுமாலோடு,
நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு
ஏத்தி, வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*5 பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானே!
நீலமாமணிகண்டத்து எண்தோளானே!
நெருநலையாய் இன்றுஆகி நாளைஆகும் சீலமே!
சிவலோகநெறியே ஆகும் சீர்மையே! கூர்மையே! குணமே!
நல்ல கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?---
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*6
திறம்பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம்பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன்தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*7
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக் கலந்து உரைக்கக்
கற்பகம்ஆய் நின்ற நாளோ?
காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று, வலம் சுருக்கி
வல்அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து,
வானோர் உய்ய, சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?---
தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*8
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
பார்அகத்தே பரஞ்சுடர்ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான்உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*9
புகைஎட்டும், போக்குஎட்டும், புலன்கள்எட்டும், பூதலங்கள்அவைஎட்டும்,
பொழில்கள்எட்டும், கலைஎட்டும், காப்புஎட்டும், காட்சிஎட்டும்,
கழல்சேவடி அடைந்தார் களைகண்எட்டும், நகைஎட்டும், நாள்எட்டும்,
நன்மைஎட்டும், நலம் சிறந்தார் மனத்துஅகத்து மலர்கள்எட்டும்,
திகைஎட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*10
ஈசனாய், உலகுஏழும் மலையும் ஆகி,
இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
மதயானைஉரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

Sunday, February 19, 2012

லிஸ்பனில் இருந்து கோவா வரை

ண்டைக் காலத்து மக்கள் கடற்பரப்பில் மரக்கலங்களை ஏற்றி அவற்றை காற்றின் உதவியோடு அண்டை அயல் நாடுகளை அடைந்து புதியனவற்றை கொள்முதல் செய்யும் திறன் பெற்றிருந்தனர். இவை யாவும்  திசை காட்டும் கருவிகள் ஏதுமில்லாத காலத்திலேயே. ஒரு வருடத்தில் எந்த மாதத்தில் காற்று எந்த திசையில் வீசும், எத்திசையில் கலத்தினை செலுத்தினால், கடலில் எந்த இடத்தில் எந்த தீவு வரும் என்பதை நன்கு கணித்து வைத்திருந்தனர். சங்க காலத்திலேயே வளிதொழில் ஆண்டவர்கள் தமிழர்கள் என்பதறிவோம். அக்காலத்திலேயே யவனர்களோடு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என பலப்பல பொருட்களை வணிகம் செய்தது அறிவோம். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின், அந்த பொருட்கள் கிடைக்கும் தேசத்தை தேடி கனவு கண்டவர்களில், தேடி அலைந்தவர்களில் - பராசீகர்களுக்கு முதலிடம் என்றால், போர்ச்சுகீசியர்களுக்கு அதற்கடுத்த இடம் கிடைக்கும்.

ஐரோப்பாவின் மேற்குக் கோடியில், ஆப்ரிக்காவைத் தொட்ட வண்ணம் இருக்கும் நாடு போர்ச்சுகல்.  லிஸ்பன் அதன் தலைநகரம். கிட்டத்தட்ட மூன்று பக்கத்திலும் கடலால் சூழப்பட்ட நாடு. பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளவரசர் ஹென்றி என்பவர் நீண்ட தூரம் பயணம் செய்து அண்டை நாடுகளை அடைவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தார். 1460 இல் அவர் இறப்பிற்கு பின்னும் தொடர்ந்த முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவை : 1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ்  ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் கடந்தவர் நமக்கெல்லாம் பரிச்சயமான வாஸ்கோட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைகிறார்.

மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமி - அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது. வாஸ்கோடகாமாவிற்குப்பின் வந்த அஃபோன்சா டி அல்புகியர்கியூ என்பவர், இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புக்கு வழிகோலிட - "கோவா" என்றொரு போர்சுகீசிய பிரதேசம் உருவாகி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகள் வரையிலும் கூட அது போர்ச்சுகீசியர்கள் கையில் தான் இருந்தது. வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திலேயே ஆபத்தினை அறியாமல் விட்டு வைத்த மனப்பாங்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு இன்னல் விளைவித்தது என்பதை வரலாறு நன்றாய் சொல்கிறது.


போர்ச்சுகீசியர்களைப் பொறுத்தவரை, ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையைத் தாண்டிய கடற்புரப்பு துவங்கி, கிட்டத்தட்ட இந்தோனேசியா வரையிலான பரப்பு எல்லாவற்றையும் - இந்தியா என்றே அழைத்தார்கள். அவர்களது இந்தியாவில், இந்தியப்பெருங்கடலும் அடங்கியே இருந்தது. அன்னிய கடற்பரப்பை ஆட்சி செய்ய விரும்பிய அவர்களது கனவு எளிதான ஒன்றாக மட்டும் அவர்களுக்கில்லை. கோழிக்கோட்டினை அடையும்முன் ஏற்பட்ட ஒரு பெரிய புயலில் சிக்கியது அவர்களது கப்பல்கள், வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்தில். லிஸ்பனில் இருந்து இந்தியா நோக்கி வாஸ்கோடகாமாவிற்கு பின்னாளில் பயணித்த கவிஞன் ஒருவன் பயணக்காட்சியினை பதிவு செய்கிறான்:
"திடீர்திடீர் பயங்கர புயல்காற்றும்,
பகீரெனப் பற்றி எறியும் வான்வெளியும்,
கனத்த காற்றும், அடர்ந்த நிசப்த இரவுகளும்,
பூமியைப் பிளக்கும் இடி முழக்கங்களும்..."
வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திற்குபின், தொடர்ந்த இந்தியப் பெருங்கடலை நோக்கி துவங்கிய பயணங்களில் - பீரங்கிகளும், வெடிமருந்துகளும், சிப்பாய்களும் என நிறைந்திருந்தன. முதல் முயற்சியில் முக்கியமான இடங்களில் கோட்டைகள் கட்டிக்கொண்டு அவற்றில் தங்களுக்கு சாதகமான துறைமுகங்களும் கால்வாய்களும் அமைத்துகொண்டார்கள். இந்தியப் பெருங்கடலில், கடல் வணிகப் பாதைகளை இதன் மூலம் தங்கள் கைக்குள் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலும் - ஏனைய ஐரோப்பிய சக்திகளான - டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தலைத்தூக்கத் துவங்கிய வரையில் போர்ச்சுகீசியர்களின் கடலாளுமை இந்தியப் பெருங்கடலில் இருந்து வந்தது.