Saturday, September 19, 2020

கனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்

 மும்பை. சனிக்கிழமை மாலை. விக்டோரியா டெர்மினஸ் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தென்பட்ட அந்த நூலகத்துக்குப் போய் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படவே, அப்படியே செய்தேன். இந்தி மற்றும் மராத்தி புத்தகங்கள் நிறையவே இருந்தன. கொஞ்சம் நேரம் ஆங்கிலப் புத்தகங்கள் பகுதியில் சில புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்னதான் இங்கிருக்கு என்று அங்கும் இங்கும் பார்க்க, ஒரு மூலையில் ஒரிரண்டு தமிழ்ப்புத்தகங்கள் தென்பட்டன. அவற்றின் அடியில் ஒரு கார்ட்போர்ட் அட்டைப்பெட்டியும் அவற்றில் சில புத்தகங்களும் இருந்தன. 

  ந்த அட்டைப் பெட்டியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் பார்க்க, அதில் குவியலாக இருந்தவை எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றில் பிரிக்காத பார்சல்களும் இருந்தன. புது புத்தகங்கள் போல் இருந்தது. ஒரு பார்சலை எடுத்து, கொஞ்சமாக முனையில் திறந்து பார்க்கலானேன். உள்ளே பிளாஸ்டிக்கில் ஆன ஏதோ இருந்தது. இன்னும் கொஞ்சம் விலக்கிப் பார்க்கையில், சி.டி தட்டுகளின் உறைகள் போல இருந்தது. வெறும் உறைகள் - புது சி.டி போடுவதற்கான பிளாஸ்டிக் உறைகள். சரி, அடுத்த பார்சலில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை எடுத்தேன். அதற்குள் இரண்டு மூன்று பேர்கள் என் பக்கத்தில் வந்து, நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கலானார்கள். அவர்களுள் காக்கி உடை போட்டிருந்த ஒருவன் என்னை அதட்டி, "ஏன் நீ இதல்லாம் எடுக்கற?" என்று இந்தியில் கேட்டாவாறு, என் கையில் இருந்தை பிடுங்கிக் கொண்டான். பின்னார் "இங்க வா, இங்க வா", என்று பின்பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போனான். 

"ன்னவெல்லாம் பிரச்சனை வருது பார் இந்த ஊர்ல.." என்று தமிழில் அவன் தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டதில் இருந்து அவன் தமிழ்க்காரன் தான் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒரு டாய்லெட் ரூமிருக்குள் சென்று கதவை மூடினான். பின்னர் சி.டி தட்டுகளின் உறைகள் இருந்த பார்சலை ஒரு மூலையில் வைத்தான். 

என்னைக் கோபமாகப் பார்த்து, "என்ன பிரச்சனையை விலை கொடுத்து வாங்கப் பார்க்கிறாயா?" என்றான். 

அவனுடைய மிரட்டலில் பாபாசாப் தாக்ரே எல்லாம் எனக்கு நினைவில் வந்தது. அதே சமயம், சற்றுமுன் அவனது புலம்பலும் நினைவிற்கு வர, இவன் ஊருக்கும் வேலைக்கும் புதிதுபோல என்றும் இந்த பார்சலை மறைத்து வைக்கத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறான் என்றும் ஊகித்தேன்.

"என்னப்பா இங்கேதான் எல்லாரும் வந்து போகிற இடம். இங்கே போய் மறைச்சு வைக்கப் பார்க்கிறாயே" என்றேன். 

அவன் வியப்பில் என்னைப் பார்க்க, நான் தொடர்ந்தேன். 

"என்னைக் கேட்டா, இது அந்த அட்டைப்பெட்டியிலேயே குவியலோடு குவியலோடு இருக்கலாம். இங்க நீ கொண்டு வந்து வைச்சாதான் தனியா இருக்கறதனால, ஈசியா யாரும் எடுத்துட்டுப்போக முடியும்" என்றேன். 

அவன் மேலும் வியப்பில் "அப்படியா சொல்றே?" என்றான்.  

"இதுவாவது வெறும் சி.டி. உறை. அங்க மத்த பார்சல்களில் நிறைய புது புத்தகங்கள் இருக்கு போல.. அதெல்லாம் அங்கேயாதன் இருக்கப் போறதா?" என்றேன்.

"இதெல்லாம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. இன்னும் இங்கேயே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருக்குமோ தெரியலை. அதுவரைக்கும் அதை காப்பாத்தணுமே" என்றான் கவலையில்.

"உன்னோட சாப்-கிட்ட சொல்லி சீக்கிரமா இவற்றை கணக்கில் கொண்டு வரலாம் இல்லே?" என்றேன். அதைச் சொன்ன பிறகுதான் தோன்றியது. ஒருவேளை வேண்டுமென்றெ கணக்கில் இருந்து மறைப்பதற்காகத் தான் இங்கே இருக்கிறதோ என்று.

"தேஷ்முக் சாப்-க்கு தெரியும், ஆனா அவரு இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..." என்றான்.

"இதைக் காப்பாத்தணும்னா ஒண்ணு செய்யலாம், வா" என்று கதவைத் திறந்தவாறு அவனுடன் அந்த அட்டைப்பெட்டி இருந்த இடத்திற்கு சென்றேன்.

   ட்டைப்பெட்டி முன்னால் இருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அது அங்கே காணவில்லை.  

"ஐயோ, என் வேலையே போச்சு" என கீழே உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டான் இவன்.  

சுற்றிமுற்றி பார்த்தால் அருகே எங்கேயும் காணோம். அதற்குள் விஷயம் அறிந்து கிடைத்ததை அங்கிருந்தவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களா? அப்படி இருந்தாலும், காலியான அட்டைப்பெட்டி மட்டுமாவது இங்கு இருக்கணுமே? சரி - வெளியிலே போய்ப் பார்ப்போம் என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறினேன். கூடவே இவனும் தொடர்ந்தான். அப்போது தொலைவில் இரண்டு பேர் சேர்ந்து எதையோ தூக்கிச் செல்வது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் அவர்களுக்கு அருகாமையில் சென்றதும், அவர்கள் தூக்கிச் செல்வது அந்தப் பெட்டியைத்தான் என்று தெரிந்தது. அவர்களும் காக்கி உடை அணிந்திருந்தார்கள். ஒருவேளை, அவர்களும் நூலக ஊழியர்கள் தானோ? 

கூடவே வந்த இவன், "ருக்கோ. ருக்கோ. எங்கே எடுத்திட்டு போறீங்க இந்த பெட்டியை?" என்று அவர்களைக் கேட்டான். 

அவர்கள் இவனைப் பார்த்ததும் திகைத்து முழித்தார்கள். அவர்களில் ஒருவன் சுதாகரித்துக்கொண்டு, "தேஷ்முக் சாப் கொண்டுவரச் சொன்னார்" என்றான். 

உடனே நான், "வாங்க நாம எல்லாரும் சேர்ந்து அவர் கிட்ட போவோம்" என்றேன். 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவனும் கூடவே, "ஆமாம், வாங்க போலாம்" என்று உரக்கவே சொன்னதும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.

  ல்லோரும் தேஷ்முக் சாப் அறைக்கு சென்று அவரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர் இந்த இரண்டு பேரையும் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லவே இல்லை என்று. அவர் இந்தப் புதிய புத்தகங்களின் வரவைப் பற்றியே மறந்து போயிருந்தார். நூலகத்தின் கேட்லாகில் சேர்க்கப்படாத இப்புத்தகங்கள் அட்டைப்பெட்டியில் பொதுமக்கள் கையில் படும்படி இருந்தன என்பதைக் கேட்டதும் அவரே ஆடிப்போனார். அவரது ஊழியர்களை உடனே அப்புத்தகங்களை கேட்லாகில் சேர்க்கச் சொன்னார். நூலகம் மூடுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. வேலையை துரிதமாக முடிப்பதற்கு அவர்களுக்கு நானும் உதவுகிறேன் என்று ஒருகை என்ன, இருகைகளையும் கொடுக்க, அன்றைக்குள்ளே புத்தகங்கள் அனைத்தையும் நூலகத்தின் கேட்லாகில் சேர்த்துவிட்டோம். வேலை முடிந்ததும் வெறுங்கையுடன் நூலகத்தை விட்டு வெளியே வந்தேன். ஆனால் மனநிறைவுடன்!   😇

Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு