Sunday, November 08, 2020

அப்பா அருள் புரிதல் வேண்டும்

ஆறாம் திருமுறையில் இருபத்தி ஓராம் பதிகத்தில் வள்ளலார் சுவாமிகள் சுத்த சன்மார்க்க வேண்டுகோளை இறைவனிடம் சமர்பிக்கின்றார். இதில் 11 பாடல்கள் உள்ளன. 

21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

1. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்


செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்


தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.


இந்த முதல் பாடலை சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்

இராகம்: பூர்விகல்யாணி



மேற்கண்ட பாடலில் ஐயனை அப்பா என்றழைத்த வள்ளலார், அடுத்த பாடல்களில் ஐயா/ அண்ணா / அம்மா என்றும் அழைக்கிறார். 

மூன்றாவது பாடலில் பண்ணார உன்னைப் பாடுதல் வேண்டும் எங்கிறார். பாடுதலும், பாடலைப் படித்தலும் இறைவனை அடைவதற்கான கருவிகள் ஆதலினால்.

நாலாம் பாடலில் இறந்தாரையும் மீட்டு அவர்களையும் இறைவனை இகத்தில் உணரச் செய்திட வேண்டும் என்றியம்பினார்.

ஆறாவது பாடலில் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் - எனும் ஐந்தொழிலையும் நான் புரிதல் வேண்டும் எனும் கோரிக்கையை விடுக்கிறார். இவையெல்லாம் இறைவனின் தொழிலாக இருக்க, மனிதரால் முடியுமோ?  அப்படி இறைவனின் தொழிலைக் கவர நினைத்தோரை அரக்கர் என்றல்லவோ புராணங்கள் கூறின. இங்கே வள்ளலார் சொல்வது அத்தொழில்களை கவருவது அல்ல.  இறைவனது குணங்களை இந்த பூத உடலில் ஜீவன் இருக்கும்போதே அதிலில் பரமனுடன் கலந்த இகபர நிலை. பத்தாம் பாடலில் உன்னுடன் கலந்து ஒன்றான நிலை வேண்டும் என்றார்.

ஏழாம் பாடலில் வேண்டுதல், வேண்டாமை இரண்டையும் இழக்கும் நிலை வேண்டும் என்றார். 

எட்டாம் பாடலில் சமய சன்மார்க்க பொதுமை பெறல் வேண்டும் எனக் கோருகிறார்.

தொடர்ந்து அடுத்த பாடல்களைப் பார்ப்போம்.

2. ஐயாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

அடிமுடி கண்டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்


பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்


எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்


நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்

நாயக நின்தனைப்பிரியா துறுதலும் வேண்டுவனே.


3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்


கண்ணார நினைஎங்கும் கண்ணுவத்தல் வேண்டும்

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்


பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்


உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண்டுவனே.


4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோதியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகி உலகியல்நடத்தல் வேண்டும்


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.


5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்


வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்


புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்


உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.


6. அடிகேள்நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்


துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்


படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்


ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.


7. அம்மாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆதிய முழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்


இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்


எம்மான்நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்


தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.


8. அச்சாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்


எச்சார்பும் ஆகிஉயிர்க்கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்


இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்


உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.


9. அறிவாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்


செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்


எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்


பிறியாதென்னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.


10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்


மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்


இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்


பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.


11. அமலாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ்சேவடியைப் பாடிநிற்க வேண்டும்


எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்


கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம் சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்


விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.



Sunday, November 01, 2020

எப்படி மனம் துணிந்ததோ?

ராமயணத்தில் தந்தையின் சொற்படி காட்டுக்குச் செல்லத் தயாராகிறான் இராமன். சீதையை அயோத்தியிலேயே விட்டுவிட்டு இராமன் மட்டும் காட்டுக்குச் செல்வதா?


இதைக் கேட்டதும் சீதையின் மனம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் அவள் மனதில் தோன்றும்?
படம் பிடித்துக் காட்டுகிறார் அருணாசலக் கவிராயர்.
 

இராகம்: உசேனி (ஹூசேனி)

இயற்றியவர்: அருணாசலக் கவிராயர் 

 பல்லவி

எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன் 

என்றால் இதை ஏற்குமோ பூமி?

 

அனுபல்லவி 

எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே

ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே              (எப்படி)

 

சரணம் 1 

கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக் 

காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல 

வார்த்தையால் கொல்லாமல் கொல்ல 

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல 

என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல                (எப்படி) 

 

சரணம் 2 

அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத் தள்ளவோ - நீர்

அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?

குன்னமோ? உமக்கென்னைத் தாரம் 

கொடுத்தவன் மேல் அல்லவோ நேரம்?

என்னை இட்டுக்கொண்டு போவதோ பாரம்?

இதுவோ ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி) 

 

சரணம் 3 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை 

நினைத்துக் கொண்டு இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்   

கூடி நாம் உகந்திருக்கும் காடு 

குறைவில்லா என் மிதிலை நாடு 

காடு நீர் இல்லாத வீடு 

கால் வையும் தெரியும் என் பாடு (எப்படி)

 

 ---------

குன்னம் = அவமானம்

______

நம்பினார் கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?

~வடிவாய் நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?

கொஞ்சம் பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு பாடுகிறார்:

பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்

பாரினில் வந்தது பாரும்!

பாரினில் பரப்பிரம்ம் அவதராம் எடுக்கணும்னாலும் பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்ம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ, எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி நிறைவேறும்?

ஆதலினால் கலங்குகிறாள் பிராட்டி.

சாதரணப் பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும் காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ் கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில் எல்லாம் பண்ணறாங்க.

அப்படியாவது இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.

இதனால், சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

நம்முடைய உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி ஆதாரமாக இருக்கிறது.

எப்பிறப்பிலும் பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின், வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப் பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான். 

இந்த இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க, அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.   

இதைவிடுத்து இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்.   

எஸ் சௌம்யா அவர்கள் பாடிட கேட்கலாம்:



சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட கேட்கலாம்:



Saturday, September 19, 2020

கனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்

 மும்பை. சனிக்கிழமை மாலை. விக்டோரியா டெர்மினஸ் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தென்பட்ட அந்த நூலகத்துக்குப் போய் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படவே, அப்படியே செய்தேன். இந்தி மற்றும் மராத்தி புத்தகங்கள் நிறையவே இருந்தன. கொஞ்சம் நேரம் ஆங்கிலப் புத்தகங்கள் பகுதியில் சில புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்னதான் இங்கிருக்கு என்று அங்கும் இங்கும் பார்க்க, ஒரு மூலையில் ஒரிரண்டு தமிழ்ப்புத்தகங்கள் தென்பட்டன. அவற்றின் அடியில் ஒரு கார்ட்போர்ட் அட்டைப்பெட்டியும் அவற்றில் சில புத்தகங்களும் இருந்தன. 

  ந்த அட்டைப் பெட்டியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் பார்க்க, அதில் குவியலாக இருந்தவை எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றில் பிரிக்காத பார்சல்களும் இருந்தன. புது புத்தகங்கள் போல் இருந்தது. ஒரு பார்சலை எடுத்து, கொஞ்சமாக முனையில் திறந்து பார்க்கலானேன். உள்ளே பிளாஸ்டிக்கில் ஆன ஏதோ இருந்தது. இன்னும் கொஞ்சம் விலக்கிப் பார்க்கையில், சி.டி தட்டுகளின் உறைகள் போல இருந்தது. வெறும் உறைகள் - புது சி.டி போடுவதற்கான பிளாஸ்டிக் உறைகள். சரி, அடுத்த பார்சலில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை எடுத்தேன். அதற்குள் இரண்டு மூன்று பேர்கள் என் பக்கத்தில் வந்து, நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கலானார்கள். அவர்களுள் காக்கி உடை போட்டிருந்த ஒருவன் என்னை அதட்டி, "ஏன் நீ இதல்லாம் எடுக்கற?" என்று இந்தியில் கேட்டாவாறு, என் கையில் இருந்தை பிடுங்கிக் கொண்டான். பின்னார் "இங்க வா, இங்க வா", என்று பின்பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போனான். 

"ன்னவெல்லாம் பிரச்சனை வருது பார் இந்த ஊர்ல.." என்று தமிழில் அவன் தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டதில் இருந்து அவன் தமிழ்க்காரன் தான் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒரு டாய்லெட் ரூமிருக்குள் சென்று கதவை மூடினான். பின்னர் சி.டி தட்டுகளின் உறைகள் இருந்த பார்சலை ஒரு மூலையில் வைத்தான். 

என்னைக் கோபமாகப் பார்த்து, "என்ன பிரச்சனையை விலை கொடுத்து வாங்கப் பார்க்கிறாயா?" என்றான். 

அவனுடைய மிரட்டலில் பாபாசாப் தாக்ரே எல்லாம் எனக்கு நினைவில் வந்தது. அதே சமயம், சற்றுமுன் அவனது புலம்பலும் நினைவிற்கு வர, இவன் ஊருக்கும் வேலைக்கும் புதிதுபோல என்றும் இந்த பார்சலை மறைத்து வைக்கத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறான் என்றும் ஊகித்தேன்.

"என்னப்பா இங்கேதான் எல்லாரும் வந்து போகிற இடம். இங்கே போய் மறைச்சு வைக்கப் பார்க்கிறாயே" என்றேன். 

அவன் வியப்பில் என்னைப் பார்க்க, நான் தொடர்ந்தேன். 

"என்னைக் கேட்டா, இது அந்த அட்டைப்பெட்டியிலேயே குவியலோடு குவியலோடு இருக்கலாம். இங்க நீ கொண்டு வந்து வைச்சாதான் தனியா இருக்கறதனால, ஈசியா யாரும் எடுத்துட்டுப்போக முடியும்" என்றேன். 

அவன் மேலும் வியப்பில் "அப்படியா சொல்றே?" என்றான்.  

"இதுவாவது வெறும் சி.டி. உறை. அங்க மத்த பார்சல்களில் நிறைய புது புத்தகங்கள் இருக்கு போல.. அதெல்லாம் அங்கேயாதன் இருக்கப் போறதா?" என்றேன்.

"இதெல்லாம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. இன்னும் இங்கேயே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருக்குமோ தெரியலை. அதுவரைக்கும் அதை காப்பாத்தணுமே" என்றான் கவலையில்.

"உன்னோட சாப்-கிட்ட சொல்லி சீக்கிரமா இவற்றை கணக்கில் கொண்டு வரலாம் இல்லே?" என்றேன். அதைச் சொன்ன பிறகுதான் தோன்றியது. ஒருவேளை வேண்டுமென்றெ கணக்கில் இருந்து மறைப்பதற்காகத் தான் இங்கே இருக்கிறதோ என்று.

"தேஷ்முக் சாப்-க்கு தெரியும், ஆனா அவரு இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..." என்றான்.

"இதைக் காப்பாத்தணும்னா ஒண்ணு செய்யலாம், வா" என்று கதவைத் திறந்தவாறு அவனுடன் அந்த அட்டைப்பெட்டி இருந்த இடத்திற்கு சென்றேன்.

   ட்டைப்பெட்டி முன்னால் இருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அது அங்கே காணவில்லை.  

"ஐயோ, என் வேலையே போச்சு" என கீழே உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டான் இவன்.  

சுற்றிமுற்றி பார்த்தால் அருகே எங்கேயும் காணோம். அதற்குள் விஷயம் அறிந்து கிடைத்ததை அங்கிருந்தவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களா? அப்படி இருந்தாலும், காலியான அட்டைப்பெட்டி மட்டுமாவது இங்கு இருக்கணுமே? சரி - வெளியிலே போய்ப் பார்ப்போம் என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறினேன். கூடவே இவனும் தொடர்ந்தான். அப்போது தொலைவில் இரண்டு பேர் சேர்ந்து எதையோ தூக்கிச் செல்வது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் அவர்களுக்கு அருகாமையில் சென்றதும், அவர்கள் தூக்கிச் செல்வது அந்தப் பெட்டியைத்தான் என்று தெரிந்தது. அவர்களும் காக்கி உடை அணிந்திருந்தார்கள். ஒருவேளை, அவர்களும் நூலக ஊழியர்கள் தானோ? 

கூடவே வந்த இவன், "ருக்கோ. ருக்கோ. எங்கே எடுத்திட்டு போறீங்க இந்த பெட்டியை?" என்று அவர்களைக் கேட்டான். 

அவர்கள் இவனைப் பார்த்ததும் திகைத்து முழித்தார்கள். அவர்களில் ஒருவன் சுதாகரித்துக்கொண்டு, "தேஷ்முக் சாப் கொண்டுவரச் சொன்னார்" என்றான். 

உடனே நான், "வாங்க நாம எல்லாரும் சேர்ந்து அவர் கிட்ட போவோம்" என்றேன். 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவனும் கூடவே, "ஆமாம், வாங்க போலாம்" என்று உரக்கவே சொன்னதும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.

  ல்லோரும் தேஷ்முக் சாப் அறைக்கு சென்று அவரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர் இந்த இரண்டு பேரையும் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லவே இல்லை என்று. அவர் இந்தப் புதிய புத்தகங்களின் வரவைப் பற்றியே மறந்து போயிருந்தார். நூலகத்தின் கேட்லாகில் சேர்க்கப்படாத இப்புத்தகங்கள் அட்டைப்பெட்டியில் பொதுமக்கள் கையில் படும்படி இருந்தன என்பதைக் கேட்டதும் அவரே ஆடிப்போனார். அவரது ஊழியர்களை உடனே அப்புத்தகங்களை கேட்லாகில் சேர்க்கச் சொன்னார். நூலகம் மூடுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. வேலையை துரிதமாக முடிப்பதற்கு அவர்களுக்கு நானும் உதவுகிறேன் என்று ஒருகை என்ன, இருகைகளையும் கொடுக்க, அன்றைக்குள்ளே புத்தகங்கள் அனைத்தையும் நூலகத்தின் கேட்லாகில் சேர்த்துவிட்டோம். வேலை முடிந்ததும் வெறுங்கையுடன் நூலகத்தை விட்டு வெளியே வந்தேன். ஆனால் மனநிறைவுடன்!   😇

Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு 





Sunday, August 30, 2020

என்ன காரணம்? ஏனிந்த தாமதம்?

இராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ஆதி
 
எடுப்பு
ஏன்ன காரணம்? ஏனிந்த தாமதம்?
என்பால் கருணை இலையோ உன்னிடம்?
 
தொடுப்பு
இன்னொரு புகல் ஏதும் அறியேன் 
உன்னையே யான் எனவே அடுத்தேன்
பின்னமும் ஏனோ எனக்கிந்த இடர்கள் ஆயிரம்?
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...)

முடிப்பு
முன்னம் இடர்களை களைந்தது போதவில்லை
இன்னமும் இடர்கள் தொடர்வது தீரவில்லை
அறிவேன் நின் அருளின் பொருளை
உரக்கச் சொல்வேன் உன் பெயரை... ஈசனே...
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...) 
 
வண்டுகள் ரீங்காரம் புதுக்கொன்றைத் திகழாரம்
பிரணவ ஓம்காரம் சுவேதாரண்யத் தாண்டவம்
ஈரேழு சதங்கைகளும் ஜதி போடும்
ஈசனின் திருவெண்காட்டுறைத் தலமாகும்.
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...) 
 

 

Saturday, August 29, 2020

கோபம் நல்லது?

ன்னது, கோபம் நல்லதா? ஆத்திரத்தாலே செய்யக்கூடாததை செஞ்சு ஏடாகூடமா மாட்டிக்கிட்டவங்க எத்தனையோ பேராச்சே? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு பழமொழியே உண்டே?

ஒருவர் கோபமா இருக்கார்ன்னு எப்படி தெரிய வருது?

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற ?

 - குறள் : 304

அவருடைய நடவடிக்கையில் மகிழ்ச்சி இருக்காது. அவருடைய முகத்தில் சிரிப்பு இருக்காது. எள்ளும் கொள்ளும் அவர் முகத்தில் வெடிக்கும். அவரது சொற்கள் சுடும்.

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

- நாலடியார் : 63 

சினத்தில் சொன்ன சொற்கள் எதிராளியை மட்டுமல்ல, தன்னையே பின்னர் வந்து வருத்தும்.  அதனால் முதலில் கோபத்தில் கடுஞ்சொற்களைத் தவிர்க்க வேண்டும். 

இதிலேயும், அன்னியர்களை விட, நமது அருகில் இருப்பவர்களிடம் அதிகமாக நமது கோபத்தைக் காண்பிக்கிறோம். நாம் அவர்களிடம் நாமே ஏற்படுத்திக்கொள்ளும் எதிர்பார்ப்புகள் நடைவேறாதபோது, நமக்கு அவர்களிடம் கோபம் அதிகமாக வருகிறது. நமது கோபத்தில் நாகாவாமல் சொல்லும் சொற்களால், அவர்களுக்கு நம்மீது கோபம் வருகிறது.

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

- நாலடியார் : 70 


ஒருவரை நாய் கடிக்கும் போது, சினம் கொண்டு, பதிலுக்கு அந்த நாயை அவர்தான் கடிக்கக் கூடுமோ? அப்படியிருக்க சினஞ்சொற்களை கேட்டபின், பதிலுக்கு நாமும் சினஞ்சொற்களை ஏன் திருப்பித் தருகிறோம்?

கோபம் சக்தி வாய்ந்தது. கோபத்தை வெளிப்படுத்தாமலே போனாலும் நாளாடைவில் அதுவே வெறுப்பாக மாறுகிறது. 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 

தன்னையே கொல்லும் சினம். 

- குறள் : 305 

வெறுப்பு ஆழமான உணர்வலைகளால் ஆனது. அதனைக் கொண்டாரையே எரிக்கும் தன்மையுடையது. ஒருவர் இதுகாறும் மகிழ்வுடன் செய்யவதற்றைக்கூட இனி செய்ய இயலாமல் துன்பப்படுவர்.

இத்துணை சக்தி வாய்ந்த கோபத்தை நல்வழியில் பயன்படுத்த முடியுமோ? 

தென் ஆப்ரிக்காவில் முதல் வகுப்பு இரயிலில் பயணம் செய்த மாகாத்மா காந்தியடிகளை கழுத்தைப் பிடித்து வெளிய தள்ளப்பட்டபின், அவர் என்செய்தார்? வெளியே தள்ளிய அதிகாரியை கடுஞ்சொற்களால் திட்டினாரா அல்லது அந்த இரயில் மேல் கல்லெடுத்து அடித்தாரா? அல்லது தன் கோபத்தை தன் உற்றாரிடம் திசை திருப்பினாரா? அப்படி செய்திருந்தால் அவருடைய கோபம் தணிந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக, இன வேறுபாடு காட்டிய கட்டமைப்பின் மேல் அவரது கோபத்தைத் திருப்பி, அதிலிருந்து விடுதலை பெற உழைத்தார். ஆக, கோபமும் ஒரு வகை சக்தி. அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது நமது கையில் தான் இருக்கிறது. 

கோபத்தை அடக்கிக் கொள்வதும் நல்லதல்ல. அதே சமயத்தில், கோபத்தினால் பித்துப் பிடிப்பதும் சரியல்ல. நல்லதற்காகக் கோபத்தைக் காட்டுவதும் தவறல்ல. 

கோபம் ஏற்படுங்கால் செய்யக்கூடிய சில நடைமுறைகள்:

  • நியாயமான கோபம் தானா, இக்கோபம் நற்பலனுக்காகவா என்பதை தீர்மானித்தல் வேண்டும். இதற்கு அனுபவமும், மன முதிர்ச்சியும் துணை செய்யும்.
  • சரியான நபரிடம் தானா நாம் கோபத்தை வெளிக்காட்டுகிறோம் என தீர்மானம் செய்ய வேண்டும். எய்தவன் வேறிடம் இருக்க, அம்பை நொந்து என்ன பயன்?
  • இன்னொருவர் நமது கோபத்தைப் புரிந்து கொள்ளாதபோதோ, அல்லது அலட்சியம் செய்யும் போதோ, அவரிடம் வாதம் வீண் எனத் தெரியுங்கால், அதை அத்துடன் நிறுத்திக் கொள்தல் நலம். இல்லாவிடில், அது தன் கையை வீணில் நிலத்தில் அறைவது போன்றதாகும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 

- குறள் : 307

  • கோபம் ஏற்படும் நபரிடம் இருந்து தற்காலிகமாக அகன்று வேறிடம் செல்வது. மனதை வேறொன்றில் செலுத்திவிட, கோபம் தணிந்து வேறு விதமாய் யோசிப்போம்.


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 

- குறள் : 309

        

Sunday, June 21, 2020

கள்வரோ நீர்?

ன்னவெல்லாம் தோன்றும் எம்பெருமான் மேனியிலே என்றெடுத்துச் சொல்வார் திருநாவுக்கரசர் பெருமான் இந்த திருப்பூவணம் பதிகத்தின் முதல் பாடலில்:
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
 		- வாசீகப் பெருமான் நாவுக்கரசர்

முழு பதிகத்தினையும் இங்கு பார்க்கலாம்.

சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி அவர்கள் இப்பாடலுக்கும் இன்னும் சில பாடல்களுக்கும் சிவகாமி நாட்டியம் ஆடுவதாகக் கதை அமைத்து, கதையோடு சேர்த்து கண்ணுதற் கடவுளைக் கருத்தில் நிறைத்திடும் கனிவான திருநாவுகவுக்கரசர் தேவாரப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

இச்சில பாடல்களைப் படித்தாலே இன்னபிற இனிப்பினையும் தேடிப் படிப்பாரெனச் சொல்லவும் வேண்டுமோ!. இப்பாடல்கள் வரும் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலுக்குள் செல்வோம்.

~~~~~~~~ முப்பத்தைந்தாம் அத்தியாயம் : கள்வரோ நீர்? ~~~~~~~~~~~~~

சிவகாமி மீண்டும் அரங்க மேடைக்கு வந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். திருநாவுக்கரசர் பெருமானின்,

"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்"

என்னும் பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, சபையோர் சாக்ஷாத் சிவபெருமானையே நேருக்கு நேர் தரிசித்தவர்களைப் போல் ஆனந்த வாரிதியில் முழுகினார்கள்.

பின்னர், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பாள் என்று எல்லாரும் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சிவகாமி பின்வரும் பாடலைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்:

வெள்ளநீர்ச் சடையனார் தாம்

வினவுவார் போலவந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க்கு

உறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக்

கலந்துதான் நோக்கிநக்கு

வெள்ளரோம் என்று நின்றார்

விளங்கிளம் பிறையனாரே!

ஓர் அறியாப் பெண்ணின் உள்ளமாகிய இல்லத்தினுள்ளே வெள்ள நீர்ச்சடையனாராகிய சிவபெருமான் ஏதோ விசாரிக்க வருகிறவர்போல வந்து பிரவேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த பெண் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். யாரோ முன்பின் அறியாதவர் எதிரில் நிற்பதைக் கண்டு,

"ஐயோ! இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் என் உள்ளத்திலே புகுந்த நீர் யார்? கள்ளரா?" என்று வினவுகிறாள்.

அப்போது வந்தவர் கண்ணோடு கண் கலங்கும்படி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். பார்த்துவிட்டு நகை செய்கிறார்;

அந்த நகைப்போடு கலந்து, "நானா கள்ளன்? கள்ளத் தனமென்பதே அறியாத வெள்ளை மனத்தவனாயிற்றே அதற்கு அறிகுறியாக என் மேலேயும் வெண்ணீறு பூசியிருக்கிறேன், தெரியவில்லையா?" என்கிறார்.

வானத்திலே விளங்கிய இளம் பிறையைத் திருடித் தம் சிரசிலே அணிந்து கொண்ட பெருமான்தான் இப்படி ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்! ஆகா! அந்த இளம் பிறையின் அழகைச் சொல்வேனா? அவருடைய கள்ளத்தனத்தைச் சொல்வேனா? அல்லது கள்ள மற்றவர் போல அவர் நடித்த நடிப்பைச் சொல்வேனா?... மேற்கூறிய இவ்வளவு உள்ளப் பாடுகளும் வெளியாகும்படியாகச் சிவகாமி தன் முகபாவங்களினாலும், அங்கங்களின் சைகைகளினாலும் கைவிரல்களின் முத்திரையினாலும் உணர்ச்சியோடு கலந்து அற்புதமாக அபிநயம் பிடித்தாள்.

பாடலும் அபிநயமும் சபையோருக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்துப் பல முறை 'ஆஹா'காரத்தை வருவித்தது. ஆனாலும் சபையோர்கள் திருப்தியடைந்தவர்களாகக் காணவில்லை. அவர்களில் ஒருவர் துணிந்து எழுந்து அரங்க மேடைக்குச் சென்று ஆயனர் காதோடு ஏதோ சொன்னார். அது சிவகாமியின் செவியிலும் விழுந்தது. சிவகாமி சிறிது தயக்கத்துடனேயே, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!" என்று பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள். எவ்வளவோ திறமையுடனே, விதவிதமான உள்ளப்பாடுகள் அற்புதமாக வெளியாகும்படி அபிநயம் பிடித்தாள். பாட்டும் அபிநயமும் முடியும் தருவாயில் சபையிலே பலருக்கு ஆவேசம் வந்துவிட்டது!

ஒரு வயது சென்ற கிழவர் எழுந்து நின்று, "நடராஜா, நடராஜா! நர்த்தன சுந்தர நடராஜா!" என்று பாடிக் கொண்டே ஒரு காலைத் தூக்கிய வண்ணம் சபையிலே நடனமாடத் தொடங்கி விட்டார். "இம்மாதிரி உணர்ச்சி வாய்ந்த அபிநயத்தை இது வரையில் யாரும் பார்த்ததில்லை; இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை" என்று சபையோர் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தார்கள்.

Friday, June 12, 2020

நாலும் இரண்டும்

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
- நாலடியார்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- திருக்குறள்

இந் நாலும் இரண்டும் தரும் நல்வழி தனைப் பாடிடப் புனைந்த பாடல்.

எடுப்பு
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும் - உலகில்
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும்.

தொடுப்பு
நாலும் இரண்டும் கற்றோர்க்கு - பொல்லா
உலகில் இல்லையே பவ பயம்.

முடிப்பு
ஓலைக் குடிசையில் இருந்தாலும்
வேலை முடிந்து கோரைப்பாயிற் படுத்தாலும்
நாலும் இரண்டும் தரும் நல்வழிதனைப் பற்றிட
(உலகில் இல்லையே பவ பயம்)

பாலை நிலத்தில் நீர் அதனைத் தேடி
மூலை முடிக்கெங்கும் அலைந்து திரியாமல்
கள்ளிச் செடியிலும் காண்பாரே.
(நாலும் இரண்டும் கற்றோர்க்கு)

காலை மாலை என வேளை எதுவாகிலும்
ஆலும் வேலும் போல் நாலும் இரண்டும் என
நூலைக் கற்று வழி நடந்தார்க்கு
(உலகில் இல்லையே பவ பயம்)

Sunday, May 17, 2020

காணக் கண் கோடி வேண்டும்

காணக் கண் கோடி வேண்டும்
காம்போதி ராகம்
பாபநாசம் சிவன் பாடல்



எடுப்பு

காணக் கண் கோடி வேண்டும் - கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும் (காணக்)


தொடுப்பு
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும் 


மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ 

கமலவனமோ


என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும்-
இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்)


முடிப்பு
மாலோடையன் பணியும்

மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்
காண 


அறுமுகனும் 



கணபதியும் 


சண்டேச்வரனும்

சிவகணமும் 


தொடரக் கலை வாணி திருவும் பணி கற்பக நாயகி

வாமன் அதிகார நந்தி சேவைதனைக் 


காணக் கண் கோடி வேண்டும்!