Sunday, November 08, 2020

அப்பா அருள் புரிதல் வேண்டும்

ஆறாம் திருமுறையில் இருபத்தி ஓராம் பதிகத்தில் வள்ளலார் சுவாமிகள் சுத்த சன்மார்க்க வேண்டுகோளை இறைவனிடம் சமர்பிக்கின்றார். இதில் 11 பாடல்கள் உள்ளன. 

21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

1. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்


செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்


தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.


இந்த முதல் பாடலை சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்

இராகம்: பூர்விகல்யாணி



மேற்கண்ட பாடலில் ஐயனை அப்பா என்றழைத்த வள்ளலார், அடுத்த பாடல்களில் ஐயா/ அண்ணா / அம்மா என்றும் அழைக்கிறார். 

மூன்றாவது பாடலில் பண்ணார உன்னைப் பாடுதல் வேண்டும் எங்கிறார். பாடுதலும், பாடலைப் படித்தலும் இறைவனை அடைவதற்கான கருவிகள் ஆதலினால்.

நாலாம் பாடலில் இறந்தாரையும் மீட்டு அவர்களையும் இறைவனை இகத்தில் உணரச் செய்திட வேண்டும் என்றியம்பினார்.

ஆறாவது பாடலில் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் - எனும் ஐந்தொழிலையும் நான் புரிதல் வேண்டும் எனும் கோரிக்கையை விடுக்கிறார். இவையெல்லாம் இறைவனின் தொழிலாக இருக்க, மனிதரால் முடியுமோ?  அப்படி இறைவனின் தொழிலைக் கவர நினைத்தோரை அரக்கர் என்றல்லவோ புராணங்கள் கூறின. இங்கே வள்ளலார் சொல்வது அத்தொழில்களை கவருவது அல்ல.  இறைவனது குணங்களை இந்த பூத உடலில் ஜீவன் இருக்கும்போதே அதிலில் பரமனுடன் கலந்த இகபர நிலை. பத்தாம் பாடலில் உன்னுடன் கலந்து ஒன்றான நிலை வேண்டும் என்றார்.

ஏழாம் பாடலில் வேண்டுதல், வேண்டாமை இரண்டையும் இழக்கும் நிலை வேண்டும் என்றார். 

எட்டாம் பாடலில் சமய சன்மார்க்க பொதுமை பெறல் வேண்டும் எனக் கோருகிறார்.

தொடர்ந்து அடுத்த பாடல்களைப் பார்ப்போம்.

2. ஐயாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

அடிமுடி கண்டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்


பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்


எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்


நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்

நாயக நின்தனைப்பிரியா துறுதலும் வேண்டுவனே.


3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்


கண்ணார நினைஎங்கும் கண்ணுவத்தல் வேண்டும்

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்


பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்


உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண்டுவனே.


4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோதியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகி உலகியல்நடத்தல் வேண்டும்


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.


5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்


வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்


புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்


உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.


6. அடிகேள்நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்


துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்


படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்


ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.


7. அம்மாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆதிய முழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்


இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்


எம்மான்நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்


தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.


8. அச்சாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்


எச்சார்பும் ஆகிஉயிர்க்கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்


இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்


உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.


9. அறிவாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்


செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்


எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்


பிறியாதென்னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.


10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்


மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்


இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்


பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.


11. அமலாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ்சேவடியைப் பாடிநிற்க வேண்டும்


எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்


கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம் சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்


விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.



Sunday, November 01, 2020

எப்படி மனம் துணிந்ததோ?

ராமயணத்தில் தந்தையின் சொற்படி காட்டுக்குச் செல்லத் தயாராகிறான் இராமன். சீதையை அயோத்தியிலேயே விட்டுவிட்டு இராமன் மட்டும் காட்டுக்குச் செல்வதா?


இதைக் கேட்டதும் சீதையின் மனம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் அவள் மனதில் தோன்றும்?
படம் பிடித்துக் காட்டுகிறார் அருணாசலக் கவிராயர்.
 

இராகம்: உசேனி (ஹூசேனி)

இயற்றியவர்: அருணாசலக் கவிராயர் 

 பல்லவி

எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன் 

என்றால் இதை ஏற்குமோ பூமி?

 

அனுபல்லவி 

எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே

ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே              (எப்படி)

 

சரணம் 1 

கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக் 

காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல 

வார்த்தையால் கொல்லாமல் கொல்ல 

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல 

என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல                (எப்படி) 

 

சரணம் 2 

அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத் தள்ளவோ - நீர்

அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?

குன்னமோ? உமக்கென்னைத் தாரம் 

கொடுத்தவன் மேல் அல்லவோ நேரம்?

என்னை இட்டுக்கொண்டு போவதோ பாரம்?

இதுவோ ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி) 

 

சரணம் 3 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை 

நினைத்துக் கொண்டு இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்   

கூடி நாம் உகந்திருக்கும் காடு 

குறைவில்லா என் மிதிலை நாடு 

காடு நீர் இல்லாத வீடு 

கால் வையும் தெரியும் என் பாடு (எப்படி)

 

 ---------

குன்னம் = அவமானம்

______

நம்பினார் கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?

~வடிவாய் நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?

கொஞ்சம் பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு பாடுகிறார்:

பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்

பாரினில் வந்தது பாரும்!

பாரினில் பரப்பிரம்ம் அவதராம் எடுக்கணும்னாலும் பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்ம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ, எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி நிறைவேறும்?

ஆதலினால் கலங்குகிறாள் பிராட்டி.

சாதரணப் பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும் காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ் கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில் எல்லாம் பண்ணறாங்க.

அப்படியாவது இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.

இதனால், சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

நம்முடைய உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி ஆதாரமாக இருக்கிறது.

எப்பிறப்பிலும் பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின், வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப் பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான். 

இந்த இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க, அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.   

இதைவிடுத்து இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்.   

எஸ் சௌம்யா அவர்கள் பாடிட கேட்கலாம்:



சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட கேட்கலாம்: