Friday, May 30, 2014

மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?

சிங்கள வம்சாவளியினரின் இலங்கை வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்தின் படி, வங்கத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் (கி.மு 543 - கி.மு 505) என்பவன் வந்ததாகவும், அவனது வம்சாவளியினரே முதல் சிங்கள ராஜ வம்சமாகவும் கருதப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க, சிங்கள வம்சாவளியினருக்கும் மற்றவர்களுக்குமான மரபணுத் தொடர்பை ஆராயும் சோதனைகள் என்ன சொல்கின்றன?

பல்வேறு சோதனைகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தாலும், அவை யாவும் சிங்களர்களுக்கும் வங்காளியர்க்குமான மரபணுத் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன.

1995 வாக்கில் நடத்தப்பட்ட ஆரம்பகால சோதனைகள் இந்தியத் தமிழர்களின் மரபணுத்தொடர்பே சிங்களரிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் சிங்களர்க்கும் வங்கத்தினருக்குமான மரபணுத் தொடர்பு - மகாவம்சத்தின் கதையோடு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை.

சமீபத்தில், 2005-2006 இல் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் படி,  72 சதவிகிதமும் வங்காளியர்க்கும், 16 சதவிகிதம் தமிழருக்கும் மற்றும் 12 சதவிகிதம் குஜராதியினருக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது! இந்த ஆய்வில் தமிழரின் மரபணுத் தொடர்பின் பங்கு குறைந்துபோனதற்கு காரணமென்ன என்கிற கேள்விக்குச் செல்லாமல் (சோதனை செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்து பங்கு விகிதம் கூடவும் குறையவும் செய்யலாம்), வங்காளியர்க்கும், தமிழருக்குமான தொடர்பு எதிர்பார்த்ததே என்றாலும், குஜராத்தியினரின் குறிப்பிடத்தக்க பங்கு சிங்களரின் மரபணுவில் இருப்பதுமாக இவ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது.

மேலும் சில வரலாற்று ஆய்வளர்கள் - இளவரசன் விஜயன் வங்க நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை. மகாவம்சம் சொல்லுவதற்கு மாற்றாக வட மேற்கு இந்தியாவில் இருந்து - குறிப்பாக தற்போதைய குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

வங்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பவர்கள் கூற்றுப்படி - விஜயன் இருந்த சிம்மபுரம் என்ற இடம் என்பது தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கும் சிங்குர் எனகிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பர்கள் கூற்றுப்படி, சிம்மபுரம் என்கிற இடம், தற்போது குஜராத்தில் சிஹோர் என்கிறார்கள். விஜயனின் கப்பல் முதலில் சுப்பாரகா என்னும் இடத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் இருக்கும் சோபனா என்கிற இடமாக அறியப்படுகிறது. விஜயனின் கப்பல் வங்கத்தில் இருந்து கிளம்பி இருந்தால் எப்படி இந்தியாவின் மேற்கு கரையினை அடைந்திருக்க முடியம்? ஆகையால் மேற்கு கடற்கரையில் இருந்தே புறப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுக்கிறது.

குஜராத் நாட்டுப்புற பாடல்களிலும், மற்றும் ஒன்றிரண்டு திரைப்படங்களிலும் கூட, "இங்கு இருந்து இளவரசன் இலங்கை சென்று, அங்கு பெண்ணை மணந்தான்" என்கிற செய்தி பேசப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியிலும் இடம்பெறுகிறது சிங்கம். பழங்கால வங்கத்தில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் குஜராத்திலோ தொன்று தொட்டே சிங்கங்கள்  இருந்தன என்றும் தெரிகிறது.

மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கொண்டாலும் கூட - அதனை இந்தியாவின் வட மாநிலங்களான வங்காளம் மற்றும் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் நிதர்சனமான குறியீடாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் சிங்கள மொழி உருவாவதற்கும் இதுவே காரணமாகவும் அமைகிறது.

மரபணு சோதனை விவரங்களுக்கு விக்கி தளத்தில் இச்சுட்டியைப் பார்க்கவும்.

Monday, May 26, 2014

ஜெயதி ஜெயதி பாரத மாதா!

ஆகஸ்ட் 15, 1947 - சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இடையே நீங்கள் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பைக் கேட்டிருந்தால் "ஜெயதி ஜெயதி பாரத மாதா!"  எனத்தொடங்கும் கமாஸ் இராகப் பாடலைக் கேட்டிருக்க முடியும். பாரத தேசிய கீதத் தேர்வின் கடைசி சுற்று வரையிலுக் கூட இடம் பெற்ற இப்பாடலின் சொந்தக்காரர் - விஸ்வநாத சாஸ்திரி அவர்கள். ஜி.எம்.பி அவர்களின் ரெக்கார்டுகளிலும், டி.கே.பி யாலும் பெரிதும் பாடப்பட்டு பிரபலமானது இப்பாடல்.



மயூரம் விஸ்வநாத சாஸ்திரி (1893-1958) பல்வேறு இராகங்களில் பாடல்கள் புனைந்துள்ளார். இவருடைய பாடல் முத்திரை 'வேதபுரி' மற்றும் 'விஸ்வநாத' என்பதாகும். 'முருகன் புகழ்மாலை' மற்றும் 'முருகன் மதுர கீர்த்தனைகள்' போன்ற இசை நூல்களை ஸ்வரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.

திருக்குறளை இசை வடிவத்தில் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். மூன்று முதல் ஒன்பது குறட்பாக்களை இணைத்து கிருதி வடிவில் பல்லவி-அனுபல்லவி-சரணம் முறையில் வழங்கியுள்ளார்.

2009 மார்கழி மகா உற்சவத்தின் போது - சஞ்சய் சுப்ரமணியம்  மயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாடி இருக்கிறார். இவற்றில் இரண்டு திருக்குறள் கிருதிகளும் அடங்கும். இப்பாடல்களுக்கான சுட்டிகள் இங்கே.

பகவன் முதற்றே உலகு - ஹம்சத்வனி
இந்த ஜாலமே - கமாஸ்
மயில் வாகனா - அமிர்தவர்ஷிணி
ஒழுக்கம் உயிரினும் - குந்தலவராளி
பாரத சாம்ராஜ்ய சுகி - தேஷ்


Sunday, May 18, 2014

உன்பாலே ஈர்ப்பதுமேன்?

விருத்தம்:

உன்னுருவைக் கண்டறியேன்
....உன்வரவைக் கண்டறியேன்
உன்பேச்சைக் கேட்டறியேன்
....உன்னிடத்தை தெரிந்தறியேன்
ஒன்றான என்மனத்தை
...உன்பாலே ஈர்ப்பதுமேன்?
என்றென்றும் எவ்வுருவிலும்
....எங்கெங்கும் இருப்பதாலோ!