Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Saturday, September 19, 2020

கனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்

 மும்பை. சனிக்கிழமை மாலை. விக்டோரியா டெர்மினஸ் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தென்பட்ட அந்த நூலகத்துக்குப் போய் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படவே, அப்படியே செய்தேன். இந்தி மற்றும் மராத்தி புத்தகங்கள் நிறையவே இருந்தன. கொஞ்சம் நேரம் ஆங்கிலப் புத்தகங்கள் பகுதியில் சில புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்னதான் இங்கிருக்கு என்று அங்கும் இங்கும் பார்க்க, ஒரு மூலையில் ஒரிரண்டு தமிழ்ப்புத்தகங்கள் தென்பட்டன. அவற்றின் அடியில் ஒரு கார்ட்போர்ட் அட்டைப்பெட்டியும் அவற்றில் சில புத்தகங்களும் இருந்தன. 

  ந்த அட்டைப் பெட்டியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் பார்க்க, அதில் குவியலாக இருந்தவை எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றில் பிரிக்காத பார்சல்களும் இருந்தன. புது புத்தகங்கள் போல் இருந்தது. ஒரு பார்சலை எடுத்து, கொஞ்சமாக முனையில் திறந்து பார்க்கலானேன். உள்ளே பிளாஸ்டிக்கில் ஆன ஏதோ இருந்தது. இன்னும் கொஞ்சம் விலக்கிப் பார்க்கையில், சி.டி தட்டுகளின் உறைகள் போல இருந்தது. வெறும் உறைகள் - புது சி.டி போடுவதற்கான பிளாஸ்டிக் உறைகள். சரி, அடுத்த பார்சலில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை எடுத்தேன். அதற்குள் இரண்டு மூன்று பேர்கள் என் பக்கத்தில் வந்து, நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கலானார்கள். அவர்களுள் காக்கி உடை போட்டிருந்த ஒருவன் என்னை அதட்டி, "ஏன் நீ இதல்லாம் எடுக்கற?" என்று இந்தியில் கேட்டாவாறு, என் கையில் இருந்தை பிடுங்கிக் கொண்டான். பின்னார் "இங்க வா, இங்க வா", என்று பின்பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போனான். 

"ன்னவெல்லாம் பிரச்சனை வருது பார் இந்த ஊர்ல.." என்று தமிழில் அவன் தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டதில் இருந்து அவன் தமிழ்க்காரன் தான் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒரு டாய்லெட் ரூமிருக்குள் சென்று கதவை மூடினான். பின்னர் சி.டி தட்டுகளின் உறைகள் இருந்த பார்சலை ஒரு மூலையில் வைத்தான். 

என்னைக் கோபமாகப் பார்த்து, "என்ன பிரச்சனையை விலை கொடுத்து வாங்கப் பார்க்கிறாயா?" என்றான். 

அவனுடைய மிரட்டலில் பாபாசாப் தாக்ரே எல்லாம் எனக்கு நினைவில் வந்தது. அதே சமயம், சற்றுமுன் அவனது புலம்பலும் நினைவிற்கு வர, இவன் ஊருக்கும் வேலைக்கும் புதிதுபோல என்றும் இந்த பார்சலை மறைத்து வைக்கத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறான் என்றும் ஊகித்தேன்.

"என்னப்பா இங்கேதான் எல்லாரும் வந்து போகிற இடம். இங்கே போய் மறைச்சு வைக்கப் பார்க்கிறாயே" என்றேன். 

அவன் வியப்பில் என்னைப் பார்க்க, நான் தொடர்ந்தேன். 

"என்னைக் கேட்டா, இது அந்த அட்டைப்பெட்டியிலேயே குவியலோடு குவியலோடு இருக்கலாம். இங்க நீ கொண்டு வந்து வைச்சாதான் தனியா இருக்கறதனால, ஈசியா யாரும் எடுத்துட்டுப்போக முடியும்" என்றேன். 

அவன் மேலும் வியப்பில் "அப்படியா சொல்றே?" என்றான்.  

"இதுவாவது வெறும் சி.டி. உறை. அங்க மத்த பார்சல்களில் நிறைய புது புத்தகங்கள் இருக்கு போல.. அதெல்லாம் அங்கேயாதன் இருக்கப் போறதா?" என்றேன்.

"இதெல்லாம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. இன்னும் இங்கேயே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருக்குமோ தெரியலை. அதுவரைக்கும் அதை காப்பாத்தணுமே" என்றான் கவலையில்.

"உன்னோட சாப்-கிட்ட சொல்லி சீக்கிரமா இவற்றை கணக்கில் கொண்டு வரலாம் இல்லே?" என்றேன். அதைச் சொன்ன பிறகுதான் தோன்றியது. ஒருவேளை வேண்டுமென்றெ கணக்கில் இருந்து மறைப்பதற்காகத் தான் இங்கே இருக்கிறதோ என்று.

"தேஷ்முக் சாப்-க்கு தெரியும், ஆனா அவரு இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..." என்றான்.

"இதைக் காப்பாத்தணும்னா ஒண்ணு செய்யலாம், வா" என்று கதவைத் திறந்தவாறு அவனுடன் அந்த அட்டைப்பெட்டி இருந்த இடத்திற்கு சென்றேன்.

   ட்டைப்பெட்டி முன்னால் இருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அது அங்கே காணவில்லை.  

"ஐயோ, என் வேலையே போச்சு" என கீழே உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டான் இவன்.  

சுற்றிமுற்றி பார்த்தால் அருகே எங்கேயும் காணோம். அதற்குள் விஷயம் அறிந்து கிடைத்ததை அங்கிருந்தவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களா? அப்படி இருந்தாலும், காலியான அட்டைப்பெட்டி மட்டுமாவது இங்கு இருக்கணுமே? சரி - வெளியிலே போய்ப் பார்ப்போம் என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறினேன். கூடவே இவனும் தொடர்ந்தான். அப்போது தொலைவில் இரண்டு பேர் சேர்ந்து எதையோ தூக்கிச் செல்வது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் அவர்களுக்கு அருகாமையில் சென்றதும், அவர்கள் தூக்கிச் செல்வது அந்தப் பெட்டியைத்தான் என்று தெரிந்தது. அவர்களும் காக்கி உடை அணிந்திருந்தார்கள். ஒருவேளை, அவர்களும் நூலக ஊழியர்கள் தானோ? 

கூடவே வந்த இவன், "ருக்கோ. ருக்கோ. எங்கே எடுத்திட்டு போறீங்க இந்த பெட்டியை?" என்று அவர்களைக் கேட்டான். 

அவர்கள் இவனைப் பார்த்ததும் திகைத்து முழித்தார்கள். அவர்களில் ஒருவன் சுதாகரித்துக்கொண்டு, "தேஷ்முக் சாப் கொண்டுவரச் சொன்னார்" என்றான். 

உடனே நான், "வாங்க நாம எல்லாரும் சேர்ந்து அவர் கிட்ட போவோம்" என்றேன். 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவனும் கூடவே, "ஆமாம், வாங்க போலாம்" என்று உரக்கவே சொன்னதும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.

  ல்லோரும் தேஷ்முக் சாப் அறைக்கு சென்று அவரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர் இந்த இரண்டு பேரையும் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லவே இல்லை என்று. அவர் இந்தப் புதிய புத்தகங்களின் வரவைப் பற்றியே மறந்து போயிருந்தார். நூலகத்தின் கேட்லாகில் சேர்க்கப்படாத இப்புத்தகங்கள் அட்டைப்பெட்டியில் பொதுமக்கள் கையில் படும்படி இருந்தன என்பதைக் கேட்டதும் அவரே ஆடிப்போனார். அவரது ஊழியர்களை உடனே அப்புத்தகங்களை கேட்லாகில் சேர்க்கச் சொன்னார். நூலகம் மூடுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. வேலையை துரிதமாக முடிப்பதற்கு அவர்களுக்கு நானும் உதவுகிறேன் என்று ஒருகை என்ன, இருகைகளையும் கொடுக்க, அன்றைக்குள்ளே புத்தகங்கள் அனைத்தையும் நூலகத்தின் கேட்லாகில் சேர்த்துவிட்டோம். வேலை முடிந்ததும் வெறுங்கையுடன் நூலகத்தை விட்டு வெளியே வந்தேன். ஆனால் மனநிறைவுடன்!   😇

Sunday, August 21, 2016

கனவில் வந்த கதைகள் - ஸ்பெஷல் காபி

ப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளி இருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே என் அப்பாவின் அலுவலகமும் இருந்தது. சில சமயம் பள்ளி முடிந்த பின் அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று வருவதுண்டு.

ன்றொருநாள் வீட்டில் பிரத்யோகமானதொரு காபி செய்திருந்தார்கள். வறுத்த முந்திரியெல்லாம் போட்ட ஸ்பெஷல் காபி. காபியா பாயசமா என்று கேட்க வேண்டாம், கனவில் எல்லாம் சாத்தியம். நான் அவ்வளவாக காபி அருந்துவதில்லை. இருந்த காபியை பள்ளிக்கு எடுத்துச் சென்றால், பள்ளி முடிந்து திரும்புகையில் அப்பாவின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு காபியை கொடுக்கலாமே என்று தோன்றியது. அதன்படி அந்த ஸ்பெஷல் காபியை எடுத்துக் கொண்டேன்.

ன்றைய பள்ளி முடிந்தவுடன் ஞாபகமாக பையினில் இருந்து காபி கொண்டு வந்திருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தேன். அதனை கையில் பிடித்துக் கொண்டிருந்தவாறு அப்பாவின் அலுவலகத்தை நோக்கி நடக்கலானேன். நடக்கும்போது இந்த ஸ்பெஷல் காபி எப்படித்தான் இருக்குமோ தோன்றியது. கொஞ்சம் சுவைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் அதிலிருந்து இரண்டு மூன்று ஸ்பூன் அளவு எடுத்துப் பருகினேன். சுவையாக இருந்தது.

லுவலத்தை அடைந்ததும், அப்பா வேலையில் அமரும் அறைப்பகுதி அருகே சென்றேன். நுழையுமுன், அங்கே இருந்த பாத்ரூமிற்குள் சென்று டவல் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே என்று தோன்றியது, ஏனெனில் ஒருவளை அலுவலகத்தில் காபி சிந்தும்படி ஏற்பட்டால் உடனே அதை துடைத்து விடலாமே என்ற முன் எச்சரிக்கைக்காக. ஆனால் கையில் காபி பாத்திரத்துடம் பாத்ரூமில் எப்படி நுழைவது என்ற எண்ணம் வேறு. பின்னர் பையினில் மீண்டும் பாத்திரத்தை வைத்து, சுவரின் ஓரமாக பையை வைத்து விட்டு, பின் பாத்ரூமிற்குள் சென்று ஒரு டவலை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

லுவலக அறைக்குள் நுழைந்ததும்,  ஒருவர் தரையில் அமர்ந்தவாறு எதையோ சரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவருக்கு ஒரு ஹலோ சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே அவரை கடந்து செல்கையில், அவரே எனக்கு ஹலோ சொல்லி விட்டார். அவருக்கு பதில் ஹலோ சொல்லிவிட்டு, அவரைத்தாண்டி அப்பா அமரும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

ப்பாவைப் பார்த்து அவருக்கு காபி கொண்டு வந்திருப்பதைச் சொன்னேன். "சரி, தா" என்றார். காபி வைத்திருந்த பாத்திரத்தை அவருடைய மேஜையின் மேல் வைத்தேன். அதை லேசாக திறக்கும்போதுதான் அதை தலை கீழாக வைத்திருக்கிறோம் என்று உணரத்தொடங்கினேன். அதை திருப்ப வேண்டும் என்று தோன்றுமுன் பாத்திரம் திறந்தி விட்டது. நல்ல வேளை அதிலுருந்த காபி அதன் மூடி வரை தான் நிரம்பியதால் வெளியே சிந்தவில்லை. மீதம் இருந்ததோ கொண்டு வந்ததில் கால் பங்கு காபிதான். அதை அப்பா பருகி விட்டு, "நல்லது" என்று சொல்லி என்னிடம் பாத்திரத்தை திருப்பித் தந்தார். அதை பெற்றுக்கொண்டு, வீடு நோக்கி நடக்கலானேன்.

கனவும் கலைந்தது!

Tuesday, December 30, 2008

கனவில் வந்த கதைகள் - செய்வது நானா?

ப்போதெல்லாம் நாங்கள் ப்ரான்ஸில் பாரிஸ் நகரத்தில் வசித்து வந்தோம். பாரிஸில் வசிப்பதில் என்ன சிறப்பு என்றால், ஐரோப்பிய நண்பர்கள் பலரும் அந்த வழியாக பயணிப்பதால், தங்கள் பயணத்தின் இடையே, எங்களை வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். அப்படித்தான் அன்று ஒரு நண்பன், என்னைப் பார்க்க வந்திருந்தான் - கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையுடன்!

ப்போது, இப்போதைக் காட்டிலும், அறிவியல் முன்னேற்றங்கள் மிகையாய் மிகுந்த காலம். செயற்கைக் கருத்தரிப்பு வேகமாய் வளர்ந்திருந்தது. மக்கள் தொகையும் வெகுவாகக் குறைந்து, செயற்கையாக கருவினை வளர்ப்பதும், அதன் மூலமாக, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், சகஜமாய் இருந்தது. நண்பன் கையில் கொண்டு வந்திருந்த பையில் அப்படியொரு செயற்கை கரு இருந்தது!. அவனுக்கு ஒரு வாரத்திற்கு, பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதினால், அக்கருவினை என்னால் கவனித்துக் கொள்ள இயலுமா எனக் கேட்க வந்திருந்தான்.

ப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு அவனே விடை பயின்றான். "தினமும், இரண்டு வேளே, குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அதைச் சுற்றி தேங்கி இருந்த தண்ணீரை விலக்கி விட்டு, புதிய தண்ணீரில் நிரப்பி, மீண்டும், குளிர் சாதனப் பெட்டியிலேயே வைத்து விட வேண்டும். அவ்வளவுதான்." என்றான் நண்பன். அவ்வளவுதானே என்று மனம் சொன்னாலும், அதை வெளிக்காட்டுவதில் தயக்கம் இருந்தது. "உடனேயே மாற்றி விட வேண்டுமா?, சற்று தாமதமானால், ஆபத்தில்லையே?" என்று கேட்டு வைத்தேன். "நிறைய நேரம் ஆக்கலாகாது. ஒரு முப்பது நொடிக்குள் மாற்றி விட வேண்டும்" என்றான். என் தயக்கம் அவ்வளவாகத் தெளியா விட்டாலும், நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் படியாகி விட்டது, இறுதியில்.

ரண்டு நாட்களுக்கு, மிகவும் கவனமாக, பக்கத்தில் ஸ்டாப் வாட்ச் எல்லாம் வைத்துக் கொண்டு, பத்து நொடிக்குள் தண்ணீரை மாற்றி விட்டு, மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டேன். ஆனால் அதற்கப்புறம், அந்த செயற்கைக் கரு எப்படி இருக்கிறது, எப்படி வளர்கிறது, அன்றாடம் என்னென்ன மாற்றங்கள் அடைகிறது என்பதெல்லாம் கவனிக்கலானேன். எனது அறிவியல் ஆர்வம், என்ன வந்து பிடித்துக்கொள்ள, அதன் பின்னரெல்லாம், தண்ணீரை மாற்ற, முப்பது நொடிகள் வரை கூட ஆகத் தொடங்கியது. கூடவே, அறிவியலின் ஆக்கமும், அதைச் சார்ந்த பெருமையும் வந்து ஒட்டிக் கொண்டது. நான் ஏதோ, ஆராய்சியாளன் போல முதலில் உணர்த் தொடங்கினேன். பின்னால் ஏதோ, நானே ஆக்குபவன் போலவும், இறுமாப்புகள் வந்து ஆக்ரமித்துக் கொண்டன. இப்போதெல்லாம், தண்ணீர் மாற்றுவதையும் ஒரு ஸ்டெயிலாகச் செய்து வருகிறேன் என்றால் பாருங்களேன்.

ப்படியாக ஒரு வாரமும் ஆனது. நண்பனோ திரும்பி வரக் காணோம்! ஆனால், அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்னும் ஒரு வாரகாலம், அவனது பயணம் நீடிக்கிறதாம், அடுத்த வாரம் திரும்பி விடுவானாம். எனக்கோ உள்ளூர மகிழ்ச்சி! இன்னொரு வாரம், நமக்கு தண்ணீர் மாற்றும் வேலை, என்பதைவிட, இன்னொரு வாரம், நான் இந்த உயிரை வளர்க்கப் போகிறேன், என்ற எண்ணமே, ஓங்கி இருந்தது. என்னவோ தெரியவில்லை, மற்ற செயல்களைக் காட்டிலும், இச்செயலில் இப்படியொரு தற்பெருமை வந்து ஒட்டிக்கொள்கிறது! இது ஆக்கும் வேலை என்பதாலோ!.

ன்றொருநாள், தண்ணீரை மாற்றுகையில், அந்தப் பையுனுள் ஏதோ அசைந்ததுபோல இருக்க, சற்றே அதிர்ந்து பின் வாங்கினேன். அது நிஜமாகவே அசைந்ததா, அல்லது மனப் பிரமையா என்பதும் சந்தேகம். மெதுவாக, அதன் அருகினில் சென்று, உன்னித்துக் கவனிக்க, அதில் அசைவேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் மிகுந்த கவனத்துடன் தண்ணீரை மாற்றினேன். மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைப்பதற்குச் செல்லுமுன்தான் கவனித்தேன், கிட்டதட்ட, இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டதை. அடடா, என்ற நினைப்புடன், இன்னொரு சந்தேகமும் வந்து ஒட்டிக் கொண்டது. குளிர் நீரை மாற்றினேனா, அல்லது, வெது வெதுப்பான நீரை, தவறாக மாற்றி விட்டேனா என்று. தண்ணீரை லேசாக தொட்டுப்பார்க்க, அது சுட்டது, என்னை. அவசரத்தில், ஒரு வேளை, வென்னீர் குழாயில் எடுத்துவிட்டேனோ என்ற சந்தேகம் பிடித்துக்கொள்ள, மீண்டும் தண்ணீரை மாற்றலானேன்.

டுத்த முறை தண்ணீர் மாற்றியபின், ஏதோ ஒரு மாற்றம் அதில் நிகழ்வது போலிருந்தது. திரவமாய் நிறைந்திருந்த அந்தப்பையே, கடினப் பட்டது போலத் தெரிந்தது. அந்தப் பை, வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை, சற்றே, அசைத்துப்பார்க்க, அந்தப் பையில் இருந்து, ஏதோ ஊதா நிறத்தில், தண்ணீரில் கலப்பது போல் இருந்தது. நான் என்ன செய்கிறேன் என்பதை என்னாலாயே சரியாய்ச் சொல்ல இயலாதவனாய் அதிர்ந்தேன். அவ்வளவுதான், ஏதோ நிகழ்ந்து விட்டது. ஒரு உயிரைக் கொன்று விட்டேன், என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணத்தில் பதற்றத்தின் ஆக்ரமிப்பு, வேறேதும் எண்ணத் தோணாமால், ஆக்ரமித்துக் கொண்டது.

யகோ, நண்பன் வந்து கேட்டால், என் செய்வேன்?. யானே கள்வன், யானே அழிவின் காரணம், யானே அழித்தேன். என்னால் ஏதும் ஆக்க இயலுமோ? ஆனால், அழிக்க மட்டும் இயல்கிறதே? இப்படியும் ஒரு பிறவியோ? என் செய்வேன், என்ன செய்தாலும், சரி செய்ய இயலுமோ, அந்தக் கருவை மீண்டும், முன்பிருந்த நிலைக்கே கொண்டு செல்ல இயலுமோ? என ஓயாமல் பிதற்றினேன், அரற்றினேன், ஓலமிட்டேன். அழகாக வளர்ந்த கருவில், ஆலமிட்டது எப்படி? இது அவன் ஜாலமோ? இல்லை என் கோலமோ? ஏதும் அறிந்திலேன் என அழுதேன். ஒருவேளை, நான், எனது செயல் என்கிற அகந்தை வந்து ஆட்கொண்டதோ? எனவெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தபோது - தொலைபேசியோ மணியடித்திட, அதையும் பொருட்படுத்த இயலவில்லை. ஒரு வேளை, அது நண்பனாய் இருந்தால், என்ன பதில் சொல்வேன்? என்னை நம்பி ஒப்படைத்த செயலை, பொறுப்பில்லாமல், கெடுத்தேனே. தொலைத்தேனே.

ற்றாமையில் நான் அழுது புலம்பிட, அச்சத்தம் கேட்டு, அம்மா அங்கே வந்தார். நடந்ததை அறிந்து கொண்டு ஆறுதல் சொல்லலானார். "அப்பா, ஆக்கலும், அழித்தலும், நம் கரத்தில் இல்லை. எல்லாம் வன் செயல். நாம் வெறும் கருவி மட்டுமே. எய்தவன் அங்கிருக்க, இங்கே அம்பை நொந்து என்ன பயன்?." என்றார். என்ன இருந்தாலும், அத்தண்ணீர் மாற்றும் செயலுடன், அந்த அளவிற்கு நான் ஒன்றியிருக்கக் கூடாது. அதன் மேல், என் விருப்புகளை ஆழ்த்தினேன் அல்லவோ. அதனால்தான் இப்படியானதோ? செயலைச் செய்கையில், எதற்காக, "செய்வது நான், செய்வது நான்" - என்கிற எண்ண ஓட்டங்கள். அம்மா சொல்வது சரிதான், செய்வதெல்லாம் வன் என்றிருக்க, எங்கிருந்து வந்தது நான் என்கிற எண்ணம்? எப்போதும் செயல் நடந்து முடிந்தபின், 'அப்படி நடந்திருக்கக் கூடாது' எனச் சொல்வது எத்தனை எளிதாக இருக்கிறது!. செயலை அழித்து, பொருளின் முந்தைய நிலைக்கு, எப்போதும் கொண்டு செல்ல இயன்றால், எவ்வளவு நன்றாக இருக்கும், கனவுபோல? ஓ, ஒருவேளை இது கனவு தானோ, என்கிற வினவலின் விளைவில், கனவும் கலைந்தது. நல்லவேளை, இது கனவுதான் என்ற பெருமூச்சும் வந்திட, எல்லாமும் இயல்பானது.

Friday, September 26, 2008

கனவில் வந்த கதைகள் : விழிக்குத் துணை

ன்றைக்கு அந்த ஆறு லேன் சாலையில் என் வாகனத்தை சீரானதொரு வேகத்தில் நிறுத்திப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து லேனில் சென்று கொண்டிருந்த திறந்த கார் என் கவனத்தை ஈர்த்தது. அந்த காரின் பின் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் 'Hello Uncle, Where are you? In Search of you - NORA.' அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த இளைஞன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டிருந்தவாறு, ஏதோ தாளத்திற்கு ஏற்றாற்போல் தலையை வேகமாக அசைத்தவாறு இருந்தான். அவனைப் பார்த்தவாறும், அந்த வாசகத்தை படித்தவாறும், ஒன்றும் புரியாமல், நானிருக்க, சற்றுத் தொலைவில் இன்னொரு லேனில் வந்து கொண்டிருந்த காரில் இருந்து ஒரு நபர், இந்த இளைஞனை நோக்கி கையசைத்து, சமிஞ்சை காட்டினார். ஆனால் அந்து இளைஞனோ அதை கவனிக்கவில்லை. லேசாக அவர் காரின் ஹார்னை அழுத்தி, ஒலி எழுப்பியும், அவனது கவனத்தை அவரது பக்கம் திருப்பிட இயலவில்லை. சற்று நேரத்தில் அந்த இளைஞனின் கார், அடுத்த சாலைத் திருப்பத்தில், திரும்பிவிட, அவர் முகமும் அந்த கார் சென்ற பக்கமாய் திரும்பிப் பார்த்தது. அவரது முகத்தை எங்கோ பார்த்ததுபோல் இருந்திட, அவரைக் கூர்ந்து கவனித்தேன். ஆ, ப்ரொபசர் மனோகர் தான் அவர், எனக் கண்டுகொண்டேன்.

அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டேன். அன்றைக்கு மாலை, கந்தர் அலங்காரப் பாடல்களை படித்து, ஒரு பாடலுக்கு விளக்கத்தினை கூகிளில் தேடிக்கொண்டிருக்கையில், மீண்டும் அந்த இளைஞன் நோராவைச் சந்திக்க நேர்ந்தது - பதிவர் நோராவாக! ப்ரொஃபைலில் இருந்த அவனது புகைப்படத்திலிருந்து, அவன் அன்று காரில் பார்த்த அந்த இளைஞன்தான் என்பதையும் உறுதிப் படுத்தியது. அவனது ப்ளாக்கில் இருந்த பதிவுகளைப் பார்த்த போது, சில வருடங்களுக்கு முன், நிறைய ஆன்மீகப் பதிவுகளை, குறிப்பாக முருகன் பற்றி நிறைய எழுதி இருந்ததெல்லாம் பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கலானேன். சடாரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இந்த இளைஞனுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி, இவன் தேடும் அங்கிள் பற்றியான விவரத்தை தெரிவிக்கலாமே என்று.

அவனுக்கு மின் அஞ்சல் எழுதும் போதுதான் தோன்றியது, இந்த இளைஞனை இந்த சாக்கிட்டு நம் வீட்டில் விருந்துக்கு அழைத்து, அவனிடம் கந்தர் அலங்காரம் பற்றி கொஞ்சம் பேசித் தெரிந்து கொள்ளலாமே என்று! அப்படியே மின் அஞ்சல் தட்டி விட்டேன். என் வீட்டு முகவரியோடு. அந்த இளைஞனிடம் இருந்து, சிறிது நேரத்தில் பதில் வந்தது. அவனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தான் என் வீடு இருக்கிறதென்றும், அந்த வழியில் வந்து நாளை மாலை என்னைப் பார்ப்பதாகவும்.

அந்த மாலையும் வந்தது. ப்ரொபசர் மனோகரின் வீடு இருக்கும் இடம் எனக்குத் தெரியுமாதலால், விருந்துக்குப்பின், நோரோவை, நானே ப்ரொபசரின் வீட்டுக்கு அழைத்துப்போவதாக திட்டம். விருந்தின் போது பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். விருந்தும் முடிந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ப்ரொபசர் மனோகரின் வீட்டுக்குப் புறப்படலாம் என்று பேசிக்கொண்டோம். அதற்குமுன் அவரிடம் தொலைபேசியில் நாங்கள் வருவதை தெரிவிக்க கூப்பிட்டோம். முதலில் நான் அவரிடம் பேசிவிட்டு, தொலைபேசியை நோராவிடம் தந்தேன்.

அவர்கள் உரையாடத் துவங்கினார்கள்.
'அலோ அங்கிள். போன வாரம்தான் இந்த ஊருக்கு வேலை மாற்றலில் வந்தேன். உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும் இல்லாததால் எப்படி தொடர்பு கொள்ளுவதென விழித்துக் கொண்டிருந்த போது, இப்படி காரில் விளம்பரப்படுத்தலாம் என தோன்றிற்று. சின்ன உலகம் பாருங்கள், கை மேல் பலன்' என்றான் நோரா.
இப்படியாக தொடர்ந்த பேச்சினை கவனிக்காமல் எதோ செய்து கொண்டிருக்கும் என் கவனத்தையும் ஈர்த்தது, தொடர்ந்த அவர்களது பேச்சு.
'அங்கிள், இன்றிறவே நமது Reuniuon-ஐக் கொண்டாடலாம். வரும்போது என்னென்ன பொருட்கள் வாங்கி வர சொல்லுங்கள்....ஆங்... முக்கியமாக ஒரு 24 பேக் பியர் கேன், அப்புறம் காண்டோம் - இதெல்லாம், வாங்கி வந்துடறேன்...மஜா பண்ணிடலாம்' என்றான் நோரா.

அவர்கள் பேச்சு முடிந்த கையோடு, நோராவின் ப்ளாகைப் பற்றியும், கந்தர் அலங்காரம் பற்றியும் பேச்சைத் துவங்கினேன், நான்.
'அதெல்லாம் அந்தக்காலம். அப்போது எங்கள் தமிழாசிரியரின் தூண்டுதலால், தமிழார்வம் ஏற்பட்டு, நிறையப் படித்ததுண்டு. அகராதி கொண்டு, பல பழந்தமிழ் பாடல்களின் பொருளை ஷெர்லாக் ஹோம்ஸ் போல தேடிக் கண்டுபிடித்து, எழுதுவதில் ஒரு 'திரில்' இருந்தது.' என்றான் நோரா.
'இப்போது...?', என ஆவலோடு வினவினேன் நான்.
'இப்போ, பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பயணிக்கிறேன். வாழ்க்கையை அனுபவிக்க, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். செல்லும் இடத்தில் நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' என்றான்.
'சரி. அனுபவித்துக் கொண்டே இருக்கும் போது, திடீரென ஒருநாள் இந்த அனுபவிப்பையெல்லாம் துறக்க வேண்டும் என்றால் இயலுமா' என வினவினேன்.
'ஏதற்காக துறக்க வேண்டும்?' என்றான் அவன்.
'உனக்கும் உலகுக்கும் இருக்கும் தொடர்பு எந்த அளவில் என்பதைக் கணிக்க... அதைவிடு. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லேன்.' என்றேன் நான்.
'நல்லா திளைத்து விட்டால், எப்படி துறக்க இயலும்?' என்றான்.
'அப்போ கற்றதனால், ஆய பயனென் கொல்?' என்றேன்.
'ஓ, நீங்க அங்கே வரீங்களா?. இந்த தமிழ் இருக்கே, அதுவும் மது போல. அதைக் கற்க கற்க கிடைத்த இன்பத்தில் திளைத்தேன். அது தந்த இன்பம் போல், இப்போது இன்னும் பலவும் இருக்கக் கண்டேன். எனக்கு இவற்றில் வேறுபாடில்லை.' என்றான்.
இதுபோல மொழியின் வசத்தில் சிக்கி, அதைத்தாண்டி செல்ல இயலார் நிறைய பேர் உண்டு' என என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், அவனிடம் சொல்லவில்லை. ஆனால், இதை மட்டும் சொன்னேன்.
'இருக்கட்டும். எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும். உனக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும் கந்தர் அலங்காரச் செய்யுளையும், அப்படி தேவைப்படும்போது, மனதில் நினைத்துக்கொள்:
“விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”
விழிக்கு - மொழிக்கு - பழிக்கு - தனி வழிக்கு - இவை யாவைக்கும், இன்னும் நீ சாதிக்க விரும்பும் இன்ன பிறவற்றிற்கும், அவனைத் துணையாக கொண்டால், இயலாதது இல்லையப்பா.' என்றேன்.

அவன் என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த தருணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுபோல், 'என்ன ப்ரொபசர் வீட்டுக்கு கிளம்பலாமா?' என்றேன். அவ்வாறாகவே செய்தோம்.

கனவும் கலைந்தது.

மெய்ம்மை?: சுட்டி!

Saturday, April 26, 2008

கனவில் வந்த கதைகள் : ஆலங்கட்டி மழை

திகாலை...
சுபவேளை...
ஒரு ஓலை வந்தது...
பாட்டொன்று காற்றில் கசிந்து கொண்டிருக்கிறது...
எனக்கெல்லாம், அதிகாலையில் தூக்கத்தில் கனவில் வந்தால்தான் உண்டு!
அட, இன்றைக்கு வந்த கனவினை நினைவிருக்கும் போதே சொல்லி விடுகிறேன்!

ன்றைக்கு ஏகாந்தமானதொரு இடத்தில் இருந்ததாக நினைக்கிறேன். எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை. அப்போதுதான் நன்றாக மழை பெய்து விட்டிருந்தது. கொஞ்சம் வித்யாசமாக ஆலங்கட்டி மழை வேறு. வீட்டைச்சுற்றியும் சின்னஞ்சிறிய கூழாங்கல் அளவிலான பனிக்கட்டிகள். வெளியே வந்து பார்க்கிறேன், வெள்ளை வெளேரென்று, வெள்ளைப்பூக்கள் உலகமாக வீதியெங்கும் இரைந்து கிடக்கின்றன. ஒரு பனிக்கட்டியினை கையில் எடுத்துப் பார்க்கிறேன். மத்தியிலோ வெள்ளை. ஓரங்களில் உருகிக்கொண்டிருக்கும் அந்த பனிக்கட்டி, தன் வெள்ளை நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. தன் எல்லைகளை இழப்பதால் அந்த பனிக்கட்டி வருத்தப்படுகிறதா, அல்லது எல்லாமும் ஆன பிரகிருதியுடன் இணைவதில் மகிழ்வடைகிறதா, என வியந்து கொண்டிருந்தேன்.

லங்கட்டிகளில் ஆழ்ந்துபோன என் கவனத்தை இன்னொன்றும் இழுத்தது. அந்த வெள்ளை வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக வட்ட வடிவத்தில் தடங்கள். ஆலங்கட்டிகளை காயப்படுத்தாமல் நடந்து செல்ல யாரோ பாதை அமைத்தது போல இருந்தது. அதன் அருகே சென்று பார்க்கிறேன். அந்த வட்ட வடிவத் தடத்தில் தண்ணீர் மட்டுமே இருந்தது. பனியெல்லாம் அங்கே உருகி விட்டது போலும். அருகே இருந்த மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கொண்டு, அந்த பள்ளத்தில் விட்டுப் பார்க்கிறேன். குச்சி உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்றடி ஆழம் இருக்கலாம். இன்னமும் தரை தட்டுப்படவில்லை. இன்னமும் எவ்வளவு ஆழம் இருக்குமோ தெரியவில்லை. இந்த தண்ணீர் நிறைந்த பள்ளத்தினைப் போலவே, தொடர்ந்து வரிசையாக இருந்த பள்ளத்தடங்கள் என் ஆவலை அதிகப்படுத்தியத்தில் வியப்பதற்கில்லை. தொடர் தடங்களாக நிறைந்திருக்கும் இந்தப் பள்ளங்கள் எங்குதான் செல்கிறனவோ என வியந்தேன்.

ந்த தடங்களை தொடர்ந்து செல்வதென முடிவு செய்து நடக்கலானேன். பனிக்கட்டிகளுக்கும், பள்ளத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில், காலை அதிகம் ஊன்றி விடாமலும், பட்டும் படாமலும் நடந்தேன். சற்றே நடந்தவுடன், அந்த தடங்கள் முடிவுக்கு வரலாயின - ஒரு குடிசையின் வாசலில். ஆகா, இந்த வீட்டுக்கான பாதை தானா இந்த தடங்கள் என்று எண்ணியவாறு, அந்த வீட்டின் கதவின் மேல் கையை வைக்க தானாக திறந்து கொண்டது. வீட்டினுள் குள்ளமாக ஒருவர் இருந்தார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைவில், யார் இவர் என்று பார்க்க, உள்ளே நுழைந்தேன். என் வருகையைப் பார்த்து திரும்பிய அவரோ, "என்ன இவ்வளவு நேரம்? உன் கால் பாதங்கள் எல்லாம் பனிக்கட்டிகளால் சுட்டு விட்டதா என்ன?" என்று கேட்டு சிரிக்கலானார்!

வரை இதற்குமுன் பார்த்ததில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன் நான். இதற்குமுன் நாம் பார்த்திராத ஒருவர், நம்மை எதிர்பார்த்திருந்ததுபோல் பேசுகிறாரே என்கிற வியப்பு ஒரு நொடி தோன்றினாலும், அது நெடுநேரம் நீடிக்கவில்லை. அதற்குக் காரணம், அவரது உருவமும் உடையும் - அவைகளே அவரொரு பௌத்த துறவியென சொல்லாமல் சொன்னது. "ஐயா, வெளியே வீதியில் இருந்த தடங்களை தொடர்ந்து வந்தேன். அவை இங்கு வந்து முடிந்தன. தங்கள் வீட்டினுள்ளும் இவை இருக்கின்றவே..." என்றென் வியப்பை அவரிடம் வெளிப்படுத்தினேன். அப்போதுதான் அவர் வீட்டினுள் இருக்கும் அத்தடங்களை கூர்ந்து கவனிக்கலானேன். அந்த தடங்களோ, அந்த வட்ட வடிவத்திலால் ஆன வீட்டின் மையப்புறத்தில் சென்று முடிந்தன. மையத்திலோ இன்னமும் பெரியதாக வட்ட வடிவிலான பள்ளம். என் கண்கள் மையப் பள்ளத்தினை அடைந்ததை தன் பார்வையால் கண்டு கொண்ட அந்த முனி, அதைக்காட்டி "அதோ, அதுவா?, அருகில் சென்று பார்!" என்றார்.

மையப் பள்ளத்தின் அருகே சென்று அதன் அருகில் மண்டியிட்டு சாய்வாக அமர்ந்தேன். துறவியும் அருகில் வரலானார். வீட்டின் வெளியே இருந்த பள்ளங்களைப்போல் இதில் நீரில்லை. ஒருவேளை மழைதான் அவற்றை நிரப்பி இருந்தது போலும். பள்ளத்தில் சதுரப் பட்டையான கற்கள் கறுப்பிலும் வெள்ளையிலும் ஆங்காங்கே இருந்தன. கூர்ந்து கவனித்தால், அந்த சதுரப் பட்டையில் ஒரு பக்கம் வெள்ளையாகவும், இன்னொரு பக்கம் கறுப்பு நிறத்திலும் இருப்பது தெரிந்தது. சில கற்கள் வெள்ளைப்பக்கமாகவும், மற்றவை கறுப்புப் பக்கமாகவும் வெளியே தெரிந்தன. "இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன, சொல் பார்க்கலாம்!" என்றார் துறவி என்னிடம். சமயத்திற்கு ஏற்ப எதாவது சொல்லி வைக்கலாம், என்றவாறு நானும் பதிலளிக்கலானேன். "வெள்ளை மனதில் கர்ம வினைகள் கறுப்பு நிறத்தில்" என்று.

ன்னைப் புன்னகையுடம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் கையில் குச்சி ஒன்றை அவர் எடுத்துக் கொண்டார். பள்ளத்தில் கீழே குச்சியை நீட்டி, கறுப்புப் பக்கத்தினைக் காட்டியவாறு இருந்து பட்டைக் கற்களை ஒவ்வொன்றாக திருப்பி, வெள்ளைப்பக்கம் தெரியும்படி செய்யதாவாறு, என்னிடம் கேட்டார், "இப்போது?" என்று. "கர்ம வினைகள் களையப் படுகின்றனவோ!?" என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். அதற்கும் அவரிடம் புன்னகை மட்டுமே விடையாய் கிடைத்தது. கடைசிக் கல்லினை திருப்பிட முயலும்போது அவரது குச்சி அந்தப் பள்ளத்திலேயே விழுந்து விட்டது. உடனே நான், பள்ளத்தின் கீழிறங்கி அதை எடுக்க எத்தனிக்கலானேன். என்னை தடுத்து நிறுத்திய அவரோ, "வேண்டாம், பள்ளத்தில் அடியில் கனல் நெருப்பு நீறுபூத்தவாறு இருக்கு. கீழே இறங்கினால், உன் கால் பாதங்கள் சுட்டுச் சுண்ணாம்பாகி விடும்" என்று.

ன்னைக் கேட்காமலேயே என் கண்கள் விரிந்தன, அவர் சொன்னதைக் கேட்டு. அவரோ, குனிந்து தன் கைகளை பள்ளத்தில் நீட்டினார். முதலில் அவருக்கு குச்சியோ எட்டவில்லை. ஆனால் அவரது கைகள் தானாக நீண்டிட, குச்சியை கையில் இலாகவமாக எடுத்துக் கொண்டார். பின்னர் கடைசி கல்லையும் அதன் வெள்ளைப் பக்கமாக திருப்பி விட்டுவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார்!. கடைசி கல்லும் திரும்பியவுடன், அந்தக் கடைசிப் புன்னகையில் எல்லா கற்களும் முழுதும் வெள்ளையாக தெரிந்தன. அண்ட கோடி சராசரங்களெல்லாம் ஒன்றாய் சமைந்திருப்பது போல், அந்தப் பள்ளம் முழுதும் வெள்ளையாக, எங்கும் நிறைந்த ஆனந்த வெளிச்ச வெள்ளத்தில் மூழ்கலானேன், கனவு கலையும் வரை...!

Thursday, December 06, 2007

கனவில் வந்த கதைகள் : மாடியில் ஏறிக் குதித்து ...

ந்த ஊர் எனத் தெரியவில்லை, ஒரு கிராமம் போல இருந்தது. அதில் அப்போது நாங்கள் வசித்து வந்த வீடு கொஞ்சம் வித்யாசமானது. பெரிய வீடு. கொஞ்சம் பழைய வீடு. கிராமத்தில் எங்கள் தாத்தவின் வீடு போலவே தோற்றமளித்தது. ஆனால் தாத்தாவின் வீடுபோல் தனி வீடு அல்ல. ஒட்டினாற்போல் பக்கத்திலேயே இன்னும் சில வீடுகள். அதிக வீடுகள் இல்லை, சுமார் நான்கைந்து இருக்கும். எல்லா வீடுகளுக்கும் முன்னால் பொதுவாக, பெரிய காலியான மைதானம் போன்ற வெற்று வெளி். அந்த இடத்தை சுற்றிலும் மதில் சுவர் ஒன்று அமைக்கப்பட்டு, இந்த இடம் எங்களால் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தது. மதில் சுவரை ஒட்டி, கார்கள் மற்றும் ஏனைய வண்டிகளை நிறுத்துவதற்காக வெள்ளைக் கோடுகள் போட்டு இடம் ஒதுக்கப் பட்டு இருந்தது. (கிராமத்தில் இது எப்படி? இப்படி, சம்பந்தமில்லாதவை கனவில் ஒன்றாக கலக்கும், கனவில், இதைப்பற்றியெல்லாம் கேட்பதில்லை!). திறந்த வெளியில் ஆங்காங்கே ஒரு சில மரங்களும் இருந்தது.

அப்போது நான் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு கலை நிகழச்்சியைப் பார்ப்பதற்கு. கூட என் மனைவியும், தந்தையும் வருகிறார்கள். இன்னும் 15 நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு இதற்கு முன் சென்றதில்லை. ஆனால், இணைய தளத்தில் பார்த்ததில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருப்பதாக தெரிந்தது. நடந்தே போய் விடலாமா என முதலில் யோசனை. பின்னால் காரிலேயே செல்வதாக முடிவு செய்தேன். வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வெள்ளை நிற ட்ரக் நிறுத்தப் பட்டு இருந்தது. எதற்காக என்று சரியாகத் தெரியவில்லை. எதற்காகவோ வாடகைக்கு அமர்த்தி இருந்தோம். வீட்டுக்கு வெளியே வந்தவுடன் தான், ட்ரக் வாசலிலேயே நிற்பது கவனத்துக்கு வந்தது. உடனே அதை ஓரமாக நிறுத்த முயன்றேன், இந்த அவசரத்தில் இதுவேறா என்ற சலிப்புடன். அவசர அவசரமாக அதை சிரமத்துடன் நிறுத்தி விட்டு, காரில் எல்லோரும் ஏறினோம். காரை, அது நிறுத்தப் பட்டு இருந்த இடத்திலிருந்து வெளியே எடுத்தேன். திடீரென, கார்களை பார்க் செய்வதற்கு வசதியாக போடப்பட்டு இருந்த வெள்ளைக் கோடுகள் கவனத்தை ஈர்த்தன. ஏனோ தெரியவில்லை, காரை ரிவர்ஸில் எடுத்து, அந்த இரு வெள்ளைக் கோடுகளுக்கு இடையே நிறுத்தி விட்டேன். பின்தான் நிறுத்தக் கூடாது, வெளியே செல்ல வேண்டுமே என்ற நினைவு மனதில் உறைக்க, மீண்டும் காரைக் கிளப்பி, ஒரு வழியாக வேளியே வந்தேன்.

இணையத்தில் அரங்கத்திற்கு செல்லும் வழியை பார்த்து இருந்ததில், வீட்டில் இருந்து வெளியே வந்தபின் இடது பக்கம் திரும்பி, பின்னர் அடுத்த சாலையில் மீண்டும் இடது பக்கம்் திரும்ப வேண்டும் எனச் சொல்லி இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே அடுத்த திருப்பம் வந்தது. அதில் இடது பக்கம் திரும்பியதில் அரங்கம் என்று வெளியே எழுதி இருந்ததைப் பார்த்து, காரை அதன் அருகே நிறுத்து விட்டு, வெளியே வந்தேன். அப்போதுதான் கவனிக்கிறேன். இந்த அரங்கமும், நாங்கள் வசிக்கும் வீட்டின் பின் பகுதியில் இருப்பதுதான் என்று. அடடா, இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்துடன், வேகமாக நுழைவாயிலைத் தேடி நடக்கிறேன். நுழைவதற்கான வழி எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கொண்டே விரைவாக நடந்ததில், மற்றவர்கள் கூட வருகிறார்களா என்பதுகூட கவனிக்காமல், இப்படியும் அப்படியும் விரைந்தேன். பின்னர் சிறிதான ஒரு வாயில் தென்பட்டது. இவ்வளவு பெரிய அரங்கத்திற்க்கு இவ்வளவு சின்ன வாயிலா என்ற சந்தேகத்துடன், பின்னால் திரும்பிப் பார்த்தால், கூட வந்தவர்கள் யாருமில்லை. அப்போது, இந்த வாயில் வரை ஏற்கனவே வந்து திரும்பியது போன்ற விந்தையான உணர்வு வந்தது. சரி, அவர்கள் வருவதற்குள், இதற்குள் சென்று இதுதான் சரியான வழியா என்று பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று உள்ளே செல்லலானேன்.

உள்ளே செல்லச் செல்ல அது, குகைபோல விரிந்தது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய நெடிசலான ஒற்றையடிப் பாதை அது. கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் எப்படி, தேடல் விரிந்து கொண்டே செல்கிறதோ அதுபோல பாதை சென்று கொண்டு இருந்தது. சிறிது தூரம் சென்றபின், ஒரு மூலையில் இதற்கு மேல் செல்ல இயலாத இடத்தை அடைந்தேன். அந்த இடத்தில் இருந்து மேலே பார்த்தால், திறந்த வெளியாக மேலிருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் வரும் திசையில் செல் என உள் மனது உச்சரித்தது. அந்த இடத்தில் பக்கத்துச் சுவர் சுமார் நான்கு அடிகள்தான் இருந்தது. சரி, இதன் மேல் ஏறி அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கலாம் என தீர்மானித்தேன். கைகளை சுவரின் மேல் ஊன்றியவாறு, எம்பிக்கொண்டு, அதன்மேல் ஏறி, மேல் பக்கம் வந்தடைந்தேன்.

மேலே ஏறி வந்த பின் அந்த இடம் அந்த வீட்டின் மொட்டைமாடி எனத் தெரிகிறது. மொத்த மாடியும் மொட்டையாக இருக்காமல், அங்கேயும் அறை ஒன்று இருந்தது. அதன் மேல் புறக் கூரை கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது. அதன் வாசலில் இரும்புச் சட்டங்களில் ஆன கதவொன்றும் இருந்தது. அதன் வழியே உள்ளே ஏதாவது தெரிகிறதா எனப் பார்க்கலாம் என நினைத்து, அதை நெருங்க, யாரோ அருகில் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

அவன் ஒரு இளைஞன். அவன் சட்டையில் ஆங்காங்கே கறுப்பாக அழுக்காகி இருந்ததில், அவன் எதோ வேலையாள் போலத் தோன்றியது. "என்ன சார், இங்க டிக்கட் வாங்க வந்தீங்களா, டிக்கட் எல்லாம் வித்துப் போச்சுங்க, ஹவுஸ் ஃபுல் ஷோவாம், அதோ பாருங்க, டிக்கட் வாங்கினவங்க எல்லாம் உள்ளே இருக்காங்க" எனக் கை காட்டினான். இரும்புச் சட்டங்கள் வழியாக அந்த அந்த கட்டிடத்தின் கீழ் தளம் தெரிந்தது. அங்கே மனிதர்கள் கையில் எதோ காகிதங்களை வைத்துக்கொண்டு, இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டவர்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், முதலில் தோன்றியது - இந்த இடத்தை விட்டு முதலில் அகல வேண்டும் என்பது தான்.

அப்போதுதான் அப்பா மற்றும் மனைவியின் நினைவு வந்தது. அடடா, அவர்களை விட்டுவிட்டு வந்து இவ்வளவு நேரம் கடந்து விட்டதே, அவர்கள் நமக்காக எங்கெல்லாம் தேடுகிறார்களோ என்ற கவலை அரித்தது. அனேகமாக அந்த குகை போன்ற நுழை வாயில் வரை வந்து அங்கே காத்திருப்பார்கள், முதலில் அந்த இடத்துக்குச் சென்று பார்ப்போம் எனத் தோன்றியது. என்னுடன் பேசிய இளைஞனோ என்னை விட்டு தூரத்தில் எதோ படிகளில் இறங்கிச் செல்லத் துவங்கி விட்டான். நாம் வந்த வழியை விட இந்த இளைஞன் செல்லும் வழி அனேகமாக சரியானதாகத் தான் இருக்கும் என எண்ணி அவனை பின் தொடரலானேன். தொடர்ந்து அந்தப் படிகளில் நானும் இறங்கினேன். சில வளைவுகளுக்குப்பின் ஒரு திறந்த இடத்தை அடைய, அந்த இளைஞனைக் காணோம். அந்த இடமும் தரையிலிருந்து நீண்ட உயரத்தில் இருந்தது. அந்த இடத்தில்் இருந்து சற்று தொலைவில் கூட்டமாக பின்புறம் திரும்பியவாறு கொஞ்சம் நபர்களும் - அதில் அப்பாவும் மனைவியும் கூடத் தெரிந்தார்கள்.

இந்த உயரமான இடத்திலுருந்து கீழே குதித்தால்தான் அந்த இடத்தை சீக்கிரமாக அடைய இயலும் என்று முடிவு செய்தேன். ஆனால் அது எவ்வளவு அபாயகரமானது என்பதை என் மனம் யோசிக்கவே இல்லை. அந்த இடத்திலிருந்து நேராக குதிக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் பக்கத்திலுள்ள மதில் சுவரிலோ அல்லது கூரான இரும்பு வேலிக் கம்பிகளிலோ விழுந்திடக்கூடும். குதிப்பது என விளிம்புக்கு வந்து, ஒரு காலைத் தூக்கியவுடன் தான் இதெல்லாம் வேறு கண்ணுக்குத் தெரிகிறது. இனிமேல் திரும்பவும் முடியாது. என்ன செய்வது, அதிகம் யோசிக்காமால் குதிப்பதே நல்லது என்று எண்ணி குதித்தும் விட்டேன். நல்லவேளே, அடி ஏதும் படாமல் நல்லபடி கீழே வந்துவிட, படுக்கையில் இருந்து எழுந்தேன்.

கனவு கலைந்து, இது கனவுதானா என பெருமூச்சு விட்டாலும் கனவின் நினைவுகள் அவ்வளவு எளிதாக நினைவினில் இருந்து அகலவில்லை. அவ்வளவு எளிதில் அகலக் கூடியதா இந்தக் கனவு?!

Saturday, February 26, 2005

Divine Dream

I had this dream today early morning just before i could wake up at about 7 am. I am still ruminating over whatever I remember from the dream and posting the same.
Location: I was inside our vellingapattarai (Kanchipuram, India) house. We no longer own this house, we have sold it at about 9 years ago, before we moved to Chennai and have never visited that place afterwards. It was a huge house with 9 rooms, an out-house and a room on upstairs.

I was alone in the house, i was doing something (don't remember what i was doing or it wasn't in the dream) in the backyard and realized i better close and lock the front door. The front door was a wooden door and also had steel grill gate. The steel grill gate (those from India would be familiar) is typically made of steel frames to some nice design. We had some floral designs on it. I was about to lock the door with padlock from inside. Suddenly, I remembered that I was about leave the house in short-while, and I better lock the house from outside. So while still being from inside, I closed the outside latch of the grill gate and secured it with the padlock by inserting my hand through the grill gate. It took a few attempts to properly secure the gate. After I was satisfied that I locked it, I was about to return back to what I was doing, I realized that the back door was open for too long. I was worried someone might have entered the house. And to make sure, I was just checking each room. As I entered the pooja (prayer) room ( the room where we keep idols/framed pictures of gods), I realize, what I was afraid was indeed true. To my annoy, I see a man who (black/African as far as I remember) like a thief, was looking at the pictures there showing his back to me. I ran towards him, grabbed him by his neck/shoulder and dragged him to the backyard. I was probably yelling at him (don't remember what it was) and pushed him out of my backyard. But his long sleeve T-shirt (was vertically stripped in orange and black) was in my hands as he disappeared. I wasn't much worried about his disappearance, was only glad to get rid of him.

Then I closed the back door and came inside only to realize the man was not gone. He is still here, sitting on a sofa in the living room. He had well build body structure, with muscles showing up visibly. I realize, the only way to avoid trouble from him is to get friendly with him. I approached him and told him that he has well built body, with muscles showing up like outside of a star-fruit. (what an imagination of me at that time!). He looked at my face and smiled at me. As I observed his smile, I was loosing all my thinking. I immediately sat on the floor in the meditation posture with my eyes closing. There was then this thought that, this man could indeed be God. Within a second, the thought grew up on me so much that I was fully convinced and I was feeling some kind of brightness. It lasted for perhaps for few microseconds may be, I didn't observe much. As that thought fully grew up on me, I immediately prostrated at his feet. Even though my eyes were closed, in the next second I felt that he is gone. I opened my eyes, looked around. I went to front door to see that the previously locked padlock, is now open. The grill gate is still closed, but the opened padlock is just hung on the latch. And the padlock's key is not in the key-hole. As I was trying to look around for the lost key, I woke from the dream to an amazement in my consciousness.
And I am still pondering on my sub-consciousness on what in the world or outside or something that's present everywhere pulled off this dream?
For one thing sure, I never had any experience like this before.