Showing posts with label இதயக்கமலம். Show all posts
Showing posts with label இதயக்கமலம். Show all posts

Sunday, January 16, 2011

அருணகிரி வேண்டும் உபதேசம்

"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:

தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்

(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,

பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,

திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,

திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே

(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.

பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.

அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)

இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை

ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!

Friday, December 24, 2010

பக்தியும் ஞானமும் (4) - சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை
தரிசித்தளவில் முக்தி பெறலாம்.
- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.
-நடராஜப் பத்து.


சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


(என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.)

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

னி, முத்துசாமி தீஷிதரின் கிருதிகளில் இருந்து:

* சதாசிவனே (சிந்து ராமக்ரியா ராகம்) : சத்யோதாதி பஞ்சமுகன்
* தியாகராஜனே: 'பஞ்சக்ருத்யகரணேன': ஐந்து தொழில்களும் குறிப்படப்படுகின்றன.
* தியாகராஜாயே நமஸ்தே (பேகடா ராகம்): முனிவர்கள் முதல் பூச்சிகள் வரை எல்லா உயிரனங்களுக்கும் முக்தி தர வல்லவர்.
* ருத்ரகோப ஜாத வீரபத்ரமாஸ்ரயே (ருத்ரபிரியா ராகம்): வீரபத்ரர்
* கால பைரவம்: (பைரவி) : காலபைரவர்
* மாரகோடி கோடி லாவண்யாய (ஆரபி) : பிக்ஷாடணர், விபூதி ருத்ராக்ஷ அபிமானர்
* ஸ்ரீதக்ஷிணாமூர்திம் (பேனத்யுதி ராகம்) : வேதங்களால் போற்றப்படுபவர், ஆலமரத்தடியில் வசிப்பவர்
* சங்கர அபிராமி மனோகரம் (மனோகரி) : மார்கண்டேயனைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது
* நீலாசலநாதம் (சம்யுக்தி ராகம்) : அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்த்ரம் வழங்கியது
* ஸ்ரீமாத்ருபூதம் (கானடா) : தாயுமானவர்
* அருணாசல நாதம் (சாரங்கா) : நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாம் திருவண்ணாமலையில் 'தேஜோமய லிங்கம்' தனைக் குறிப்பிடுகிறார்.
* சிந்தயமாகந்த மூலகந்தம் (பைரவி) : காஞ்சி ஏகாம்பரர்- மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவர், பிருத்வி லிங்கம்
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்) : நடராஜர் - பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு திருவடி தரிசனம் தந்தது.

- இப்படியாக, பட்டியலில் இவரது பாடல்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

குறிப்பாக, தில்லைக்கூத்தனைப் பாடும் இக்கீர்த்தனையைப் பார்ப்போம்:
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்)
பாடுபவர்: டி.எம்.கிருஷ்ணா


பல்லவி
ஆனந்த3 நடன ப்ரகாசம் சித்ஸபே4சம்
ஆச்ரயாமி சிவ காம வல்லீசம்


அனுபல்லவி
பா4னு கோடி கோடி ஸங்காசம்
1பு4க்தி முக்தி ப்ரத3 த3ஹராகாசம்
தீ3ன ஜன ஸம்ரக்ஷண சணம்
தி3வ்ய பதஞ்ஜலி வ்யாக்4ர பாத3-
த3ர்சித 2குன்ஞ்சிதாப்3ஜ சரணம்


சரணம்
சீதாம்சு க3ங்கா3 த4ரம் நீல கந்த4ரம்
ஸ்ரீ கேதா3ராதி3 க்ஷேத்ராதா4ரம்
பூ4தேசம் சார்தூ3ல சர்மாம்ப3ரம் சித3ம்ப3ரம்
பூ4-ஸுர த்ரி-ஸஹஸ்ர முனீச்வரம் விச்வேச்வரம்
நவனீத ஹ்ருத3யம் ஸத3ய 3கு3ரு கு3ஹ தாதம்
ஆத்3யம் வேத3 வேத்3யம் வீத ராகி3ணம்
அப்ரமேயாத்3வைத ப்ரதிபாத்3யம்
ஸங்கீ3த வாத்3ய வினோத3 தாண்ட3வ -
ஜாத ப3ஹு-தர பே4த3 சோத்3யம்


பாடற்பொருள்

ஆனந்த நடனம் - பேரொளிப் பிரகாசம் - சிற்சபை தன்னில் சரணடையும்
என்னைக் காத்தருள்வாய், சிவகாமவல்லி பதியே, சிவனே.

கோடிகோடி சூரிய பிரகாசமானவனே - சூரியன் முதலான எல்லா ஒளிக்கும் மூல ஒளியே.
தகராகாசம் என்னும் இதய ஆகாசத்தில் - சைத்தன்ய சொருபமாய் இருப்பவனே,
சித்த சுத்தி வந்து கடைத்தேறச் செய்பவனே, நீ தீனர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவன்.
பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு தன் பொற்பாதத்தைக் காட்டிய பொன்னம்பலவனே.

சிவன், சந்திரன் மற்றும் கங்கையைத் தரித்தவன், நீலகண்டன்.
கேதாரம் முதலான 12 தலங்களை இருப்பிடமாய்க் கொண்டவன். (இப்பாடலின் இராகமும் கேதாரம்!)
பூதகணங்களுக்கு அதிபதி. புலித்தோலை அணிந்தவன்.
சித் + அம்பரம் = சிதம்பரம் : அவனது சித்தம் சைத்தன்யமாய் ஆகாச வெளியில் எங்கெங்கும் பரவியிருக்க, எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
முனிவர்களால் கொண்டாடப் படுபவன். உலகங்களுக்குத் தலைவன்.
இளகிய மனம் கொண்டவன். குருகுஹனாம் முருகனின் - வேதத்தின் உட்பொருளின் - தந்தையானவன்.
ஈடு இணையிற்றவன், அத்வைதமாய் இருப்பவன். அத்வைத வேதாந்தத்தைப் பிரகாசிப்பவன்.
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.

இப்படியாக, ஈசன் குணங்களோடு கூடிய ஈஸ்வரனாக காட்சி அளிப்பது - பக்தர்கள் அவனைப்போற்றிப் பாட ஏது செய்யத்தான். மாயையுடன் சேர்ந்த நிலையில் சகுண பிரம்மமாவதும், நிர்குணமாய் இருப்பதும் - அவன் ஒருவனே - அவனே பரம்பொருள் எனும் மெய்ப்பொருள் தனை அறிவோம்.

Saturday, September 26, 2009

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி - நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
- சகலகலாவல்லி மாலை

Sunday, September 20, 2009

திருவான்மியூர் வளர் திரிபுரசுந்தரி

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்: