Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Sunday, November 08, 2020

அப்பா அருள் புரிதல் வேண்டும்

ஆறாம் திருமுறையில் இருபத்தி ஓராம் பதிகத்தில் வள்ளலார் சுவாமிகள் சுத்த சன்மார்க்க வேண்டுகோளை இறைவனிடம் சமர்பிக்கின்றார். இதில் 11 பாடல்கள் உள்ளன. 

21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

1. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்


செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்


தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.


இந்த முதல் பாடலை சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்

இராகம்: பூர்விகல்யாணி



மேற்கண்ட பாடலில் ஐயனை அப்பா என்றழைத்த வள்ளலார், அடுத்த பாடல்களில் ஐயா/ அண்ணா / அம்மா என்றும் அழைக்கிறார். 

மூன்றாவது பாடலில் பண்ணார உன்னைப் பாடுதல் வேண்டும் எங்கிறார். பாடுதலும், பாடலைப் படித்தலும் இறைவனை அடைவதற்கான கருவிகள் ஆதலினால்.

நாலாம் பாடலில் இறந்தாரையும் மீட்டு அவர்களையும் இறைவனை இகத்தில் உணரச் செய்திட வேண்டும் என்றியம்பினார்.

ஆறாவது பாடலில் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் - எனும் ஐந்தொழிலையும் நான் புரிதல் வேண்டும் எனும் கோரிக்கையை விடுக்கிறார். இவையெல்லாம் இறைவனின் தொழிலாக இருக்க, மனிதரால் முடியுமோ?  அப்படி இறைவனின் தொழிலைக் கவர நினைத்தோரை அரக்கர் என்றல்லவோ புராணங்கள் கூறின. இங்கே வள்ளலார் சொல்வது அத்தொழில்களை கவருவது அல்ல.  இறைவனது குணங்களை இந்த பூத உடலில் ஜீவன் இருக்கும்போதே அதிலில் பரமனுடன் கலந்த இகபர நிலை. பத்தாம் பாடலில் உன்னுடன் கலந்து ஒன்றான நிலை வேண்டும் என்றார்.

ஏழாம் பாடலில் வேண்டுதல், வேண்டாமை இரண்டையும் இழக்கும் நிலை வேண்டும் என்றார். 

எட்டாம் பாடலில் சமய சன்மார்க்க பொதுமை பெறல் வேண்டும் எனக் கோருகிறார்.

தொடர்ந்து அடுத்த பாடல்களைப் பார்ப்போம்.

2. ஐயாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

அடிமுடி கண்டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்


பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்


எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்


நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்

நாயக நின்தனைப்பிரியா துறுதலும் வேண்டுவனே.


3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்


கண்ணார நினைஎங்கும் கண்ணுவத்தல் வேண்டும்

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்


பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்


உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண்டுவனே.


4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோதியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகி உலகியல்நடத்தல் வேண்டும்


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.


5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்


வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்


புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்


உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.


6. அடிகேள்நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்


துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்


படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்


ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.


7. அம்மாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆதிய முழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்


இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்


எம்மான்நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்


தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.


8. அச்சாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்


எச்சார்பும் ஆகிஉயிர்க்கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்


இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்


உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.


9. அறிவாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்


செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்


எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்


பிறியாதென்னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.


10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்


மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்


இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்


பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.


11. அமலாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ்சேவடியைப் பாடிநிற்க வேண்டும்


எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்


கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம் சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்


விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.



Sunday, November 01, 2020

எப்படி மனம் துணிந்ததோ?

ராமயணத்தில் தந்தையின் சொற்படி காட்டுக்குச் செல்லத் தயாராகிறான் இராமன். சீதையை அயோத்தியிலேயே விட்டுவிட்டு இராமன் மட்டும் காட்டுக்குச் செல்வதா?


இதைக் கேட்டதும் சீதையின் மனம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் அவள் மனதில் தோன்றும்?
படம் பிடித்துக் காட்டுகிறார் அருணாசலக் கவிராயர்.
 

இராகம்: உசேனி (ஹூசேனி)

இயற்றியவர்: அருணாசலக் கவிராயர் 

 பல்லவி

எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன் 

என்றால் இதை ஏற்குமோ பூமி?

 

அனுபல்லவி 

எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே

ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே              (எப்படி)

 

சரணம் 1 

கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக் 

காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல 

வார்த்தையால் கொல்லாமல் கொல்ல 

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல 

என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல                (எப்படி) 

 

சரணம் 2 

அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத் தள்ளவோ - நீர்

அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?

குன்னமோ? உமக்கென்னைத் தாரம் 

கொடுத்தவன் மேல் அல்லவோ நேரம்?

என்னை இட்டுக்கொண்டு போவதோ பாரம்?

இதுவோ ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி) 

 

சரணம் 3 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை 

நினைத்துக் கொண்டு இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்   

கூடி நாம் உகந்திருக்கும் காடு 

குறைவில்லா என் மிதிலை நாடு 

காடு நீர் இல்லாத வீடு 

கால் வையும் தெரியும் என் பாடு (எப்படி)

 

 ---------

குன்னம் = அவமானம்

______

நம்பினார் கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?

~வடிவாய் நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?

கொஞ்சம் பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு பாடுகிறார்:

பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்

பாரினில் வந்தது பாரும்!

பாரினில் பரப்பிரம்ம் அவதராம் எடுக்கணும்னாலும் பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்ம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ, எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி நிறைவேறும்?

ஆதலினால் கலங்குகிறாள் பிராட்டி.

சாதரணப் பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும் காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ் கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில் எல்லாம் பண்ணறாங்க.

அப்படியாவது இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.

இதனால், சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

நம்முடைய உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி ஆதாரமாக இருக்கிறது.

எப்பிறப்பிலும் பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின், வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப் பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான். 

இந்த இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க, அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.   

இதைவிடுத்து இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்.   

எஸ் சௌம்யா அவர்கள் பாடிட கேட்கலாம்:



சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட கேட்கலாம்:



Monday, March 13, 2017

தாயே இது தருணம்

இயற்றியவர் : கவி குஞ்சர பாரதி 
இராகம்: காமவர்தினி 

எடுப்பு

தாயே இது தருணம் - என் எதிர் வருவாய்
தரிசனம் தந்தருள் புரிபவாய்!
வேயூரிய கனிவாயன் சோதரி - சுப
வீக்ஷணம் மிகுந்த கடாக்ஷி விசாலாக்ஷி!


தொடுப்பு

இரவும் பகலும் தாமாரை இலை
நீரென எனது மனது சஞ்சலமுறாமலே

முடிப்பு

திருவுளம் இரங்கிய கருணையுடன்
மிகவும் ஷேமமாக இஷ்டகாம்யம் தந்து இரக்ஷிக்க
(தாயே இது தருணம்...)








Sunday, October 16, 2016

ஆனந்தபைரவியில் மூன்றாவது ஆனந்தம்

இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா!

ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி - கமலாம்பாள் அன்னையே - என்னைக் காத்து அருள்வாய்.

இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் முதலாவது கிருதி. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஸ்ரீசக்ர ஆவரணம் என ஒன்பது ஆவரணங்களையும் பாடுவதாக அமைத்துள்ளார்.



பல்லவி
கமலாம்பா3 ஸம்ரக்ஷது மாம்
ஹ்ருத்கமலா நக3ர நிவாஸினீ அம்பா31

அனுபல்லவி
ஸுமனஸாராதி4தாப்3ஜ முகீ2
ஸுந்த3ர மன:ப்ரியகர ஸகீ2
கமலஜானந்த3 போ3த4 ஸுகீ2
காந்தா தார2 பஞ்ஜர ஶுகீ

சரணம்
த்ரிபுராதி3 சக்ரேஶ்வரீ அணிமாதி3 ஸித்3தீ4ஶ்வரீ
நித்ய காமேஶ்வரீ
க்ஷிதி புர த்ரை-லோக்ய மோஹன சக்ரவர்தினீ
ப்ரகட யோகி3னீ
ஸுர ரிபு மஹிஷாஸுராதி3 மர்தி3னீ
நிக3ம புராணாதி3 ஸம்வேதி3னீ

த்ரிபுரேஶீ கு3ரு கு3ஹ ஜனனீ
த்ரிபுர ப4ஞ்ஜன ரஞ்ஜனீ
மது4 ரிபு ஸஹோத3ரீ தலோத3ரீ
த்ரிபுர ஸுந்த3ரீ மஹேஶ்வரீ

பாடல் வரிகளுக்கு உதவி சாகித்யம்.நெட்




ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு முறையினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீசக்ரத்தின் முதலாவது ஆவரணமாகிய  த்ரை லோக்ய மோஹன சக்ரம் பாடற்பெருவதைப் பார்க்கலாம். இந்த சக்ரத்தின் தேவதை பூபுரம் எனப்படும். மேலும் விவரங்களுக்கு இத்தளத்தில் பார்க்கலாம்.

இந்த கிருதியை இரஞ்ஜனி-காயத்ரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


Tuesday, September 20, 2016

ஆனந்த பைரவியில் ஆனந்தமான இரண்டு!

தியாகராஜர் "இராமா நீ சமானம் எவரு?" என்பார்,
கோபால கிருஷ்ண பாரதி "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பார்,
ஷ்யாமா சாஸ்த்ரிகள் இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே - உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்!

தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் - பிரஹதீஸ்வரின் இடது பாகமாம் - பிருஹநாயகி அன்னையைப் பாடும் பாடலாகும் இது.

இப்பாடலை சௌம்யா அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்த்ரிகள்

பல்லவி
ஹிமாசல தனய ப்ரோசூடகிதி
மஞ்சி சமயமுராவே அம்பா

அனுபல்லவி
குமார ஜனனி சமானம் எவரு?
குமார ஜனனி சமானம் எவரிலனு
மானவதி ஸ்ரீ ப்ருஹநாயகி

சரணம்
உமா ஹம்ஸகமா! தாமசமா?
ப்ரோவ திக்கெவரு நிக்கமுகனு
மாகி இபுட அபிமானமு சூப
பாரமா சலமா வினுமா தயதோனு

சதா நத வர தாயகீ நிஜ
தாசூடனு ஷ்யாம க்ருஷ்ண சோதரி
கதா மொர வினதா துரித
நிவாரிணி ஸ்ரீ ப்ருஹநாயகி

தமிழில்:

இமயனின் புதல்வியே! காப்பதற்கு இதுவே
நல்ல சமயமே! வாராயோ? அம்பாள்!

குமாரனை ஈன்றவளே! உனக்கு நிகர் எவருமில்லை!
மதிப்பிற்குரிய பெரிய நாயகியே!

உமையே! அன்ன நடையாளே! தாமதமா!
காத்திட வழியேது? உறுதியாக
என்மீது இப்போது அன்பு காட்ட
கடினமோ? மலையோ? கேளாயோ? தயை காட்ட

எப்போதும் பணிபவர்க்கு வரம் அளிப்பவளே!
நான் நிஜ பக்தனம்மா!

நீ நீல கிருஷ்ணனின் சகோதரி அன்றோ!
நீ என் முறைதனைக் கேளாயோ!

பாவங்களைப் போக்குபவளே!
பெரிய நாயகியே!

----------------------------------------------
ஆனந்த பைரவி இராகமானது, ஷ்யாமா சாஸ்திரிகளின் சொத்து எனச்சொன்னால், இப்பாடல் அதில் ஒரு இரத்தினம்.

எனினும் அனுபல்லவியில் மானவதி எனும் ஐந்தாவது மேளகர்த்தா இராகத்தின் பெயர் வருவதைக் கவனிக்க. ஒருவேளை தற்செயலோ?

பல்லவி, அனுபல்லவி மற்றும் முதல் சரணத்தில் எத்தனை எத்தனை "மா" வருகிறது சாகித்யத்தில் என்று பார்க்க!

ஹிமாசல
குமா
மானம்
மானவதி
மா
ஹம்ஸகமா
தாமசமா
மாகி
அபிமா
பாரமா
சலமா
வினுமா

அப்பாடா! இத்தனை "மா" போதுமா?

அடுத்த சரணத்திலோ, "மா" வில் இருந்து "தா"விற்கு தாவினதோ?

தா

தாயகீ
தாசூடனு
தா
வினதா
துரி

-------------------------------------------------------------------------------------------
மேற்சொன்ன பாடல் பிரஹநாயகி அம்பாளின் மீது என்றால்,
அடுத்த பாடல் பிரகதீஸ்வரர் மீதானது.
இடப்பக்கத்தில் இருந்து அடுத்து வலப்பக்கத்திற்கு!

இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: தஞ்சை சிவானந்தம்

எடுப்பு
காப்பதுவே உனது பாரம்

தொடுப்பு
வாய்ப்பதுவே உனது அருள்
வையகத்தில் வாழச் செய்து
(சிட்டை ஸ்வரம்)

முடிப்பு
இன்பதென்பது அறியாத ஏழை
எனை மறந்திடாமல்
நின் புகழைப் பாடிடவே
நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா!
(சிட்டை ஸ்வரம்)

இப்பாடலை காயத்ரி வெங்கட்ராகவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


Sunday, August 14, 2016

காம்போதியில் மனங்கவர் இரண்டு!

இங்க பார்க்கப் போகிற இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான். இரண்டுமே காம்போதி இராகம் தான். இரண்டு பாடல்களை இயற்றியவரும் ஒருவர் தான் - பாபநாசம் சிவன் அவர்கள்.
இந்த இரண்டு பாடலிலும் "இராமதாசன்" அல்லது "சௌரிராஜன்" ஆகிய அவருடைய இயற்றியவர் முத்திரைகளைக் காணோம்.  ஆனா இந்த பாடல்களில் சொல்நயம் தான் எவ்வளவு அருமையாக அமைஞ்சு இருக்கு!  இரண்டு பாடல்களிலும் சரளமான சொல்லாடல்கள் வந்து விழுந்திருக்கு!
முதல் பாடல்:
எடுப்பு
ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
இடது பாதம் தூக்கி (ஆடும்)
தொடுப்பு
நாடும் அடியர் பிறவித் துயரற
வீடும் தரும் கருணை நிதியே  நடம் (ஆடும்)
முடிப்பு
சுபம் சேர் காளியுடன் ஆடிப் படு தோல்வி அஞ்சி
திருச் செவியில் அணிந்த மணித்தோடு விழுந்ததாக 
மாயம் காட்டியும் தொழும் பதம் உயரத் தூக்கியும் – விரி
பிரபஞ்சம் முழுதும் ஆட்டும்  நின் திருப் பதம்  
தஞ்சம்  என உன்னை அடைந்தேன்
பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே 
சபை நடுவில் தத்திமி என்று (ஆடும்)

உக்கர கோலத்தில் உலகை உலுக்கும் காளியுடனான ஆட்டத்தில்
ஊர்த்துவ தாண்டவம் காட்ட திருச்செவி வரை தூக்கிய  காலானது!
எப்போதும் விரிந்து கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கும் ஈசனது திருப்பாதமானது!

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியன் பாடிட இங்கு கேட்கலாம்:


அடுத்த பாடல் :

எடுப்பு
காணக் கண் கோடி வேண்டும்- கபாலியின் பவனி
காணக் கண் கோடி வேண்டும் (காணக்)

தொடுப்பு
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ கமலவனமோ என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும்-
இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்)

முடிப்பு
மாலோடையன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்
காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்
சிவகணமும் தொடரக்கலை
வாணி திருவும் பணி கற்பக நாயகி
வாமன் அதிகார நந்தி சேவைதனைக் (காணக்)

களை நிறை திருக்கபாலி மயிலை வீதிகளில் பவனி வரும் காட்சியானது 
கண்ணாறக் கண்டாலும் போதாது, கண்ணாயிரம் இருந்தாலும் போதாது. 
பாபநாசம் சிவனின் வர்ணனை தான் என்னே!
தரித்த பிறை மதியோடு, விண்மீன் கூட்டங்களையும் காண -
இது என்ன அந்தி வானமோ என மயங்கியதில் விந்தை இல்லை.
கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை சிவகணங்கள் தொடர கற்பகாம்பாளுடன் பவனி வரும் காட்சியைப் இப்பாடலில் அழகாகப்
பதிவு செய்திருக்கிறார்!

இப்பாடலை மதுரை மணி ஐயர் பாடிட இங்கு கேட்கலாம்:

Wednesday, October 14, 2015

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:
சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி
சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:
சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி
சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:
ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி
கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி
அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி
மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி
ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி
சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:
குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி - சங்கரனின் துணைவி
சம்குரு - நலங்களை எமக்கு வழங்கிடு,
அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி - மனதுக்கு இயைந்த இறைவி - அகிலாண்டேஸ்வரி.
சாம்பவி - சாம்புவின் துணைவி.
தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி - சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.
எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
ஜகத் ஜனனி - உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.
ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.
சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.
அகில உலகங்களையும் போஷிப்பவள் - பேணுபவள்.
மங்களங்களைத் தருபவள்.
ம்ருதானி - மிருடனின் (கருணையுடையவன்) - சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி - அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி - மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு 'சதோதரன்' என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே - பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

---------------
இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:




டி.கே.பட்டம்மாள்:


மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்:


Monday, October 12, 2015

"உன்னை"ப் பாடும் பாடல்கள்

பாடலின்/பல்லவியின் அல்லது முதல் வரியில் "உன்னை" என்ற சொல்லுடன் வரும் கிருதிகளில் சில:

1. அறிவார் யார் உன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: பைரவி



2. அய்யனே இன்றுன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: மத்யமாவதி

3. நேக்குருகி உன்னைப் பணியா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆபோகி

4, நிஜம் உன்னை நம்பினேன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பிலஹரி

5. சுவாமி உன்னை - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆரபி

6. உன்னப்போல எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: பேஹாக்

7. உன்னைத் தவிர வேறில்லை
இயற்றியவர்: நீலகண்ட சிவன்
ராகம்: சுரடி

8. உன்னைத் துதிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: குந்தளவரளி

9. உன்னையல்லால் உற்றதுணை
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
ராகம்: கல்யாணி

10. உன்னையல்லால் வேறேகதி
இயற்றியவர்: கோடீஸ்வர ஜயர்
ராகம்: சிம்மேந்திர மத்யமம்

11. உன்னையன்றி உற்றதுணை
இயற்றியவர்: தண்டபாணி தேசிகர்
ராகம்: பைரவி

12. உன்னையல்லால் 
இயற்றியவர்: கவி குஞ்சர பாரதி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்

13. உன்னை பஜிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பேகடா

14. உன்னை எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: கல்யாணி

15. அப்பா உன்னை மறவேனே
இயற்றியவர்: பெரியாசாமித் தூரன்
ராகம்: பிலஹரி

16. உன்னை மறவாதிருக்க
இயற்றியவர்: லலிதா தாசர்
ராகம்: ஹம்சாநந்தி

17. உன்னை மறவாமல்
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: சாளகபைரவி

18. உன்னை நினைந்தே
இயற்றியவர்: முத்தையா பாகவதர்
ராகம்: இராகமாலிகை

19. உன்னை நினைந்து நினைந்து
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: சக்ரவாகம்

20. உன்னை நினைந்து உள்ளம் - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: தேவமனோகர்

21. உன்னை நினைந்தாலே
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: செஞ்ச்சுருட்டி




Monday, September 07, 2015

ஒரு காலைத் தூக்கியது ஏன்?

இயற்றியவர்: மாரிமுத்தாப்பிள்ளை
இராகம் : தோடி / விளரிப்பாலை
தாளம் : ஆதி


பல்லவி:
எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக்
கொண்டிருக்கின்ற வகை ஏதையா?

அனுபல்லவி:
பொன்னாடர் போற்றும் தில்லை
.....நன்னாடர் ஏத்தும் தில்லை
பொன்னம்பல வாணரே
.....இன்னும் தானும் ஊன்றாமல்
(எந்நேரமும் ஒரு...)

சரணம்:
எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ?
....எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ?

சிக்கனவே பிடித்து சந்திரனை நிலத்தில் தேய்த்த போதிலுரைந்தோ?
....உக்கிர சாமுண்டியுடன் வாதுக்காடியசைந்தோ?

உண்ட நஞ்சு உடம்பெங்கும்
.....ஊறிக் கால் வழி வந்தோ

தக்க புலி பாம்பிரு வாக்கும் கூத்தாடியாடி
....சலித்துத்தானோ பொற்பாதம் வலித்துத்தானோ தேவரீர்
(எந்நேரமும் ஒரு...)

Monday, August 10, 2015

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!

சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய "தேவ தேவ கலயாமி" என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்




இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? "உடல் பொருள் ஆனந்தி" நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்



இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய "சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்" என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,
தேனும் பாலும் போலே சென்று - தேரடியில் நின்று கொண்டு
சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்
என்கிற வரிகள் "தேவ தேவ கலயாமி" பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்



தியாகராகரின் "துளசி தளமுலசே" பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)

இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் "இராம நாமம் ஒரு வேதமே" பாடலோடு நிறைவு செய்திட
நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.



Sunday, February 22, 2015

ஆதித்தன் பெருமை

சௌரம் - ஒரு மதம் என்று சொல்லப்படும் அளவிற்கு அன்று சூரிய வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்தது. கலிங்கத்தின் கட்டிடக் கலையின் உச்சம் என சொல்லப்படும் கொனார்க் சூரிய கோவில் இன்றும் அதை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

சூரிய குடும்பத்திற்கும், அதில் உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமிக்கும் இன்றியமையாதது ஆதவன் என்பதனை எடுத்துரைப்பதாய் இருக்கிறது சூரிய வழிபாடு.

இராம-இராவண யுத்தத்தின் போது, வெற்றி-தோல்வி இல்லாது முடிந்த ஒரு மாலைப் பொழுதில் அகத்திய மாமுனி இராமனை அணுகி, "ஆதித்ய ஹிருதயம்" எனும் ஆதித்தன் துதியை எடுத்து இயம்பினார். இத்துதியானதை ஓதுவோருக்கு மனச் சோர்வையும் நோய்களையும் போக்கி உடலுக்கு சக்தி தரும் அருமருந்தாகச் சொன்னர்.  இதனில் சூரிய பகவான் தான் - பிரம்ம தேவன்; விஷ்ணு; ருத்ரன்; சண்முகன்; பிரஜாபதி தேவன்; தேவேந்திரன்; குபேரன்; காலன்; தர்மராஜன்; சந்திரன்; வருணதேவன் - என்றெல்லாம் வர்ணனை செய்யப்படுகிறது. இப்படி எல்லாமுமான பரம்பொருள் என்பது எல்லாமும் அடங்கிய சர்குண பிரம்மம் ஆகையால் - சூரியனை வழிபடுவது என்பதை பரம்பொருளைத் துதிப்பது போலாகிறது.

யோகாசனங்களில் பெரிதும் அவசியாமான ஒன்றாக கருத்தப்படும் "சூரிய நமஸ்காரம்" - உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் அரும்பயிற்சியாகக் கருதப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களில் சூரியனையும் ஒரு கிரகமாக சேர்க்கப்படுவதன் காரணம் தீமைகளை அழித்து நன்மைகளை நாட்டுவதே ஆகும்.

முத்துசாமி தீக்ஷிதரின் பாடல்களில் - சூரியன் மற்றும் இதர கிரகங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது உருப்படிகள் செய்திருக்கிறார். இவையாவன:

சூர்ய மூர்த்தே (சௌராஷ்டிரம்)
சந்தரம் பஜ மானஸ (அசாவேரி)
அங்காரகம் (சுரடி)
புதம் ஆஸ்ரயாமி (நாட்டைகுறிஞ்சி)
பிரகஸ்பதே (அடாணா)
ஸ்ரீசுக்ரபகவந்தம் (பரஜூ)
திவாகரதனுஜம் (யதுகுலகாம்போதி)
ஸ்மராம்யகம் (ரமாமனோஹரி)
மஹாசுரம் (சாமர)

இந்த ஒன்பது கீர்த்தனைகளில் அந்தந்த கிரகங்களில் சிறப்புகளும், ஜோசிய சாஸ்திரம் தொடர்பான நுட்பங்களையும், அவற்றுக்கான மந்திரங்களின் பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்ய மூர்த்தே 
இராகம் : சௌராஷ்டிரம் (சூர்யகாந்தம் ஜன்யம்)
தாளம்: த்ருவம்

பல்லவி
ஸூர்ய மூர்தே நமோऽஸ்து தே
ஸுந்த3ர சா2யாதி4பதே

அனுபல்லவி
கார்ய காரணாத்மக ஜக3த்ப்ரகாஸ1 -
ஸிம்ஹ ராஸ்1யதி4பதே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஆர்ய வினுத தேஜ:ஸ்பூ2ர்தே
ஆரோக்3யாதி3 ப2லத3 கீர்தே

சரணம்
ஸாரஸ மித்ர மித்ர பா4னோ
ஸஹஸ்ர கிரண கர்ண ஸூனோ
க்ரூர பாப ஹர க்ரு2ஸா1னோ
கு3ரு கு3ஹ மோதி3த ஸ்வபா4னோ
ஸூரி ஜனேடி3த ஸு-தி3னமணே
ஸோமாதி3 க்3ரஹ ஸி1கா2மணே
தீ4ரார்சித கர்ம ஸாக்ஷிணே
தி3வ்ய-தர ஸப்தாஸ்1வ ரதி2னே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஸௌராஷ்டார்ண மந்த்ராத்மனே
ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே
பா4ரதீஸ1 ஹரி ஹராத்மனே
பு4க்தி முக்தி விதரணாத்மனே


பாடற்பொருள்
சூரிய மூர்த்தியே - சாயா தேவியின் பதியே!
எல்லா காரியங்களுக்கும் காரணமாகத் திகழ்பவனே!
உலகங்கெளெல்லாம் ஒளிகொண்டுத் திகழச்செய்பவனே!
சிம்மராசியின் அதிபதியே!
உடலக்கு அழகையும் பலத்தையும் ஆரோக்யத்தையும் கொடுப்பவனே!
தாமரையை மலரச் செய்பவனே! (இதய தாமரையையும்)
கர்ணனின் தந்தையே!
கொடிய பாவங்களையும் வதைத்து காப்பவனே!
சந்திரன் முதலான கோள்களை ஆள்பவனே!
நடக்கும் எல்லா செயல்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே!
அழகான ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செல்பவனே!
எட்டெழுத்து ஸ்வர மந்திரமாகத் திகழ்பவனே!
தங்க ஒளியாத் திகழ்பவனே!
பிரம்மா, திருமால் மற்றும் சிவன் போன்றவனே!
பொருளையும் அருளையும் ஒருசேரத் தருபவனே!

இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள், ஆதித்ய ஹிருதயத்தினை விருத்தமாகப் பாடியபின் பாடிட இங்கு கேட்கலாம்:



Monday, May 26, 2014

ஜெயதி ஜெயதி பாரத மாதா!

ஆகஸ்ட் 15, 1947 - சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இடையே நீங்கள் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பைக் கேட்டிருந்தால் "ஜெயதி ஜெயதி பாரத மாதா!"  எனத்தொடங்கும் கமாஸ் இராகப் பாடலைக் கேட்டிருக்க முடியும். பாரத தேசிய கீதத் தேர்வின் கடைசி சுற்று வரையிலுக் கூட இடம் பெற்ற இப்பாடலின் சொந்தக்காரர் - விஸ்வநாத சாஸ்திரி அவர்கள். ஜி.எம்.பி அவர்களின் ரெக்கார்டுகளிலும், டி.கே.பி யாலும் பெரிதும் பாடப்பட்டு பிரபலமானது இப்பாடல்.



மயூரம் விஸ்வநாத சாஸ்திரி (1893-1958) பல்வேறு இராகங்களில் பாடல்கள் புனைந்துள்ளார். இவருடைய பாடல் முத்திரை 'வேதபுரி' மற்றும் 'விஸ்வநாத' என்பதாகும். 'முருகன் புகழ்மாலை' மற்றும் 'முருகன் மதுர கீர்த்தனைகள்' போன்ற இசை நூல்களை ஸ்வரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.

திருக்குறளை இசை வடிவத்தில் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். மூன்று முதல் ஒன்பது குறட்பாக்களை இணைத்து கிருதி வடிவில் பல்லவி-அனுபல்லவி-சரணம் முறையில் வழங்கியுள்ளார்.

2009 மார்கழி மகா உற்சவத்தின் போது - சஞ்சய் சுப்ரமணியம்  மயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாடி இருக்கிறார். இவற்றில் இரண்டு திருக்குறள் கிருதிகளும் அடங்கும். இப்பாடல்களுக்கான சுட்டிகள் இங்கே.

பகவன் முதற்றே உலகு - ஹம்சத்வனி
இந்த ஜாலமே - கமாஸ்
மயில் வாகனா - அமிர்தவர்ஷிணி
ஒழுக்கம் உயிரினும் - குந்தலவராளி
பாரத சாம்ராஜ்ய சுகி - தேஷ்


Sunday, November 10, 2013

சிலையில் இருந்து சிவரூபம்!

பல வருடங்களுக்கு முன் ஜேசுதாஸ் பாடிக் கேட்டிருந்த இந்த மலையாளப் பாடலை, இங்கே பதிவு செய்கிறேன்.

பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

சிலையே கைக்கொண்டு சிவரூபம் ஆக்குன்ன
கலையுடே கால்களே கைத்தொழுனேன்

முளையே சும்பிச்சு முரளியாய் மாட்டிய
முரஹர பத பாதம் கைத்தொழுனேன்

மூகன்னு சுவரமேழுக்கும் முக்தி பிரதாஹினியாம்
மூகாம்பிகே நின்னே கைத்தொழுனேன்

காலில் சிலங்கையோடடு ஆனந்த நடனமாடும்
கனகசபாபதியே கைத்தொழுனேன்

கல்லேலே கலைவண்ணம் கண்டு
கண்களில் சிலைவண்ணம் காண,
கண்களும் காணா சிவரூபம் காண,
கைகளும் அவன் காற் தொழுமே.

மூங்கிலை ஒடித்து குழலாக மாற்றி
முரளீகானம் இசைத்திடும்
முரஹரனாம் கண்ணனின் தாமரை
மலர் பாதங்களைக் கைத் தொழுமே.

தித்திக்கும் சுவரம் ஏழுக்கும்
முக்தி அளித்தவளாம்
மூகாம்பிகை அன்னையை என்
கைகளும் பணிந்து தொழுமே.

காலிற் சதங்கைகள் ஒலிக்க அம்பலத்தில்
ஆனந்த நடனம் ஆடும்
கனக சபாபதியை என்
கைகளும் போற்றித் தொழுமே.

Tuesday, October 01, 2013

ஆருக்கும் அடங்காத நீலி

ராகம் : பேகடா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

பல்லவி
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி


அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)

பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை


சரணம்
ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்
சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்

ஹ‌ரிகேச‌ ந‌க‌ர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்

சிட்டை ஸ்வரங்கள்
;நீத பமாத மகரிஸ நிதப | ஸாகரி காநித | நீதப மபதப||
ரிஸ்க்ரி க்மாக் ரிஸ்நிரி நீதப | ஸாக்ம் ப்தநீ |தபஸ்ப அமத||
பரி (ஆருக்கும்)


இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடிட கேட்கலாம்:




இந்தப் பாட்டின் வரிகள் பொருளை, இல்லை இல்லை கதையை - கீதாம்மா அவர்களது பதிவில் கதையையும் அதன் காரணத்தையுமாக கேட்க வேண்டுகிறேன்.
கதைகளுக்கான சுட்டிகள்:

பொன் அம்பலத்தாடும் காளி (சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு.  உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.)
பாருள் பரபிரம்மத்தை அடக்கிய சாயை
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை
பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்
சிரம் அது அறுபடவே 'விதி'தனை தூற்றினாள் பகுதி 1 பகுதி 2 பகுதி 3



Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


Monday, October 01, 2012

அனுமனை அனுதினம் நினை


நேற்று இங்கே திரு. ஓ.எஸ். தியாகராஜன் அவர்களது கச்சேரி நடந்தது.
என்றைக்கு சிவ கிருபை வருமோ
ஓ ரங்க சாயி
போன்ற பாடல்களைப் பாடியதோடு, விருத்தமாக "ஸ்ரீராகவம்" ஸ்லோகத்தினை இராகமாலிகையாக பாடியது இனிமையாக இருந்தது.

விருத்ததைத் தொடர்ந்து என்ன பாட்டு பாடுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "அனுமனை அனுதினம்..." பாடினார்.
அப்பாடலைக் கேட்கையில் தான் உறைத்தது, இதுவரை அனுமன் பாடல் எதுவுமே நமது பதிவில் தரவில்லையே என்பது. இதோ இப்போதே, அக்குறை களைய:

இராகம்: இராகமாலிகை
தாளம்: கண்டசாபு
இயற்றியவர்: குரு சுரஜானந்தர்
பல்லவி:
அனுமனை அனுதினம் நினை மனமே
விதிவினை மறைந்திடும் இது நிஜமே

சரணம் 1:
தினம் தினம் தவறுகள் செய்கின்றோம்
மனம் குணம் மாறியே நடக்கின்றோம்
பணம் பணம் என்றே தவிக்கின்றோம்
குணநிதி அனுமனை மறக்கின்றோம்

சரணம் 2:
பக்திக்கு முதலிடம் தந்தவன்
சத்திய ராமனை கவர்ந்தவன்
பக்தரின் உள்ளத்தில் நிறைந்தவன்
பக்தியின் திலகமாய் உயர்ந்தவன்

சரணம் 3:
ராமா ராமா என பஜிப்பவன்
ராமன் சேவையை இரசிப்பவன்
ராம நாமத்தை புசிப்பவன்
ராமர் பாதத்தில் வசிப்பவன்
-----------------------------------------
ஓ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியிருப்பதை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், இப்பாடலை பரத் சுந்தர் பாடிப் பதிவேற்றியுள்ளது இங்கே கேட்கலாம்: