Friday, September 26, 2008

கனவில் வந்த கதைகள் : விழிக்குத் துணை

ன்றைக்கு அந்த ஆறு லேன் சாலையில் என் வாகனத்தை சீரானதொரு வேகத்தில் நிறுத்திப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து லேனில் சென்று கொண்டிருந்த திறந்த கார் என் கவனத்தை ஈர்த்தது. அந்த காரின் பின் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் 'Hello Uncle, Where are you? In Search of you - NORA.' அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த இளைஞன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டிருந்தவாறு, ஏதோ தாளத்திற்கு ஏற்றாற்போல் தலையை வேகமாக அசைத்தவாறு இருந்தான். அவனைப் பார்த்தவாறும், அந்த வாசகத்தை படித்தவாறும், ஒன்றும் புரியாமல், நானிருக்க, சற்றுத் தொலைவில் இன்னொரு லேனில் வந்து கொண்டிருந்த காரில் இருந்து ஒரு நபர், இந்த இளைஞனை நோக்கி கையசைத்து, சமிஞ்சை காட்டினார். ஆனால் அந்து இளைஞனோ அதை கவனிக்கவில்லை. லேசாக அவர் காரின் ஹார்னை அழுத்தி, ஒலி எழுப்பியும், அவனது கவனத்தை அவரது பக்கம் திருப்பிட இயலவில்லை. சற்று நேரத்தில் அந்த இளைஞனின் கார், அடுத்த சாலைத் திருப்பத்தில், திரும்பிவிட, அவர் முகமும் அந்த கார் சென்ற பக்கமாய் திரும்பிப் பார்த்தது. அவரது முகத்தை எங்கோ பார்த்ததுபோல் இருந்திட, அவரைக் கூர்ந்து கவனித்தேன். ஆ, ப்ரொபசர் மனோகர் தான் அவர், எனக் கண்டுகொண்டேன்.

அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டேன். அன்றைக்கு மாலை, கந்தர் அலங்காரப் பாடல்களை படித்து, ஒரு பாடலுக்கு விளக்கத்தினை கூகிளில் தேடிக்கொண்டிருக்கையில், மீண்டும் அந்த இளைஞன் நோராவைச் சந்திக்க நேர்ந்தது - பதிவர் நோராவாக! ப்ரொஃபைலில் இருந்த அவனது புகைப்படத்திலிருந்து, அவன் அன்று காரில் பார்த்த அந்த இளைஞன்தான் என்பதையும் உறுதிப் படுத்தியது. அவனது ப்ளாக்கில் இருந்த பதிவுகளைப் பார்த்த போது, சில வருடங்களுக்கு முன், நிறைய ஆன்மீகப் பதிவுகளை, குறிப்பாக முருகன் பற்றி நிறைய எழுதி இருந்ததெல்லாம் பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கலானேன். சடாரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இந்த இளைஞனுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி, இவன் தேடும் அங்கிள் பற்றியான விவரத்தை தெரிவிக்கலாமே என்று.

அவனுக்கு மின் அஞ்சல் எழுதும் போதுதான் தோன்றியது, இந்த இளைஞனை இந்த சாக்கிட்டு நம் வீட்டில் விருந்துக்கு அழைத்து, அவனிடம் கந்தர் அலங்காரம் பற்றி கொஞ்சம் பேசித் தெரிந்து கொள்ளலாமே என்று! அப்படியே மின் அஞ்சல் தட்டி விட்டேன். என் வீட்டு முகவரியோடு. அந்த இளைஞனிடம் இருந்து, சிறிது நேரத்தில் பதில் வந்தது. அவனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தான் என் வீடு இருக்கிறதென்றும், அந்த வழியில் வந்து நாளை மாலை என்னைப் பார்ப்பதாகவும்.

அந்த மாலையும் வந்தது. ப்ரொபசர் மனோகரின் வீடு இருக்கும் இடம் எனக்குத் தெரியுமாதலால், விருந்துக்குப்பின், நோரோவை, நானே ப்ரொபசரின் வீட்டுக்கு அழைத்துப்போவதாக திட்டம். விருந்தின் போது பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். விருந்தும் முடிந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ப்ரொபசர் மனோகரின் வீட்டுக்குப் புறப்படலாம் என்று பேசிக்கொண்டோம். அதற்குமுன் அவரிடம் தொலைபேசியில் நாங்கள் வருவதை தெரிவிக்க கூப்பிட்டோம். முதலில் நான் அவரிடம் பேசிவிட்டு, தொலைபேசியை நோராவிடம் தந்தேன்.

அவர்கள் உரையாடத் துவங்கினார்கள்.
'அலோ அங்கிள். போன வாரம்தான் இந்த ஊருக்கு வேலை மாற்றலில் வந்தேன். உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும் இல்லாததால் எப்படி தொடர்பு கொள்ளுவதென விழித்துக் கொண்டிருந்த போது, இப்படி காரில் விளம்பரப்படுத்தலாம் என தோன்றிற்று. சின்ன உலகம் பாருங்கள், கை மேல் பலன்' என்றான் நோரா.
இப்படியாக தொடர்ந்த பேச்சினை கவனிக்காமல் எதோ செய்து கொண்டிருக்கும் என் கவனத்தையும் ஈர்த்தது, தொடர்ந்த அவர்களது பேச்சு.
'அங்கிள், இன்றிறவே நமது Reuniuon-ஐக் கொண்டாடலாம். வரும்போது என்னென்ன பொருட்கள் வாங்கி வர சொல்லுங்கள்....ஆங்... முக்கியமாக ஒரு 24 பேக் பியர் கேன், அப்புறம் காண்டோம் - இதெல்லாம், வாங்கி வந்துடறேன்...மஜா பண்ணிடலாம்' என்றான் நோரா.

அவர்கள் பேச்சு முடிந்த கையோடு, நோராவின் ப்ளாகைப் பற்றியும், கந்தர் அலங்காரம் பற்றியும் பேச்சைத் துவங்கினேன், நான்.
'அதெல்லாம் அந்தக்காலம். அப்போது எங்கள் தமிழாசிரியரின் தூண்டுதலால், தமிழார்வம் ஏற்பட்டு, நிறையப் படித்ததுண்டு. அகராதி கொண்டு, பல பழந்தமிழ் பாடல்களின் பொருளை ஷெர்லாக் ஹோம்ஸ் போல தேடிக் கண்டுபிடித்து, எழுதுவதில் ஒரு 'திரில்' இருந்தது.' என்றான் நோரா.
'இப்போது...?', என ஆவலோடு வினவினேன் நான்.
'இப்போ, பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பயணிக்கிறேன். வாழ்க்கையை அனுபவிக்க, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். செல்லும் இடத்தில் நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' என்றான்.
'சரி. அனுபவித்துக் கொண்டே இருக்கும் போது, திடீரென ஒருநாள் இந்த அனுபவிப்பையெல்லாம் துறக்க வேண்டும் என்றால் இயலுமா' என வினவினேன்.
'ஏதற்காக துறக்க வேண்டும்?' என்றான் அவன்.
'உனக்கும் உலகுக்கும் இருக்கும் தொடர்பு எந்த அளவில் என்பதைக் கணிக்க... அதைவிடு. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லேன்.' என்றேன் நான்.
'நல்லா திளைத்து விட்டால், எப்படி துறக்க இயலும்?' என்றான்.
'அப்போ கற்றதனால், ஆய பயனென் கொல்?' என்றேன்.
'ஓ, நீங்க அங்கே வரீங்களா?. இந்த தமிழ் இருக்கே, அதுவும் மது போல. அதைக் கற்க கற்க கிடைத்த இன்பத்தில் திளைத்தேன். அது தந்த இன்பம் போல், இப்போது இன்னும் பலவும் இருக்கக் கண்டேன். எனக்கு இவற்றில் வேறுபாடில்லை.' என்றான்.
இதுபோல மொழியின் வசத்தில் சிக்கி, அதைத்தாண்டி செல்ல இயலார் நிறைய பேர் உண்டு' என என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், அவனிடம் சொல்லவில்லை. ஆனால், இதை மட்டும் சொன்னேன்.
'இருக்கட்டும். எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும். உனக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும் கந்தர் அலங்காரச் செய்யுளையும், அப்படி தேவைப்படும்போது, மனதில் நினைத்துக்கொள்:
“விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”
விழிக்கு - மொழிக்கு - பழிக்கு - தனி வழிக்கு - இவை யாவைக்கும், இன்னும் நீ சாதிக்க விரும்பும் இன்ன பிறவற்றிற்கும், அவனைத் துணையாக கொண்டால், இயலாதது இல்லையப்பா.' என்றேன்.

அவன் என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த தருணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுபோல், 'என்ன ப்ரொபசர் வீட்டுக்கு கிளம்பலாமா?' என்றேன். அவ்வாறாகவே செய்தோம்.

கனவும் கலைந்தது.

மெய்ம்மை?: சுட்டி!

Wednesday, September 24, 2008

என்றைக்கு சிவ கிருபை வருமோ?

ளிதாகச் சொல்லி விடுவோம், முகாரி இராகத்தைப் பற்றி - அது சோக உணர்வினைத் தருவதற்கு ஏற்ற இராகம் என்று. ஆம் என்றாலும், மிகவும் உருக்கமான வேண்டுதலுக்காகவும் இந்த இராகத்தினை பயன்படுத்துவதுண்டு. திரு. நீலகண்ட சிவன், இயற்றிய இந்தப் பாடலில் முகாரியைப் பார்க்கலாமா. இவர் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே' பாடலை முன்பொரு இடுகையில் பார்த்திருக்கிறோம் என்பதையும் நினைவு கூர்கிறேன் இங்கே. இவரைப் பற்றி சுவையான கதைகளும் இருக்கு, அவற்றை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.

இராகம் : முகாரி
தாளம் : மிஸ்ர சாபு
இயற்றியவர் : திரு.நீலகண்ட சிவன்
பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி

என்றைக்கு சிவ கிருபை...


எடுப்பு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? - ஏழைக்கு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? - ஏழை,
என் மன சங்கடம்(/சஞ்சலம்) அறுமோ?

தொடுப்பு
கன்றின் குரலைக்கேட்டு கனிந்து வரும் பசுபோல்
ஒன்றுக்கும் அஞ்சாத என் உளத் துயரம் தீர்க்க
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

முடிப்பு
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி கொண்டாடிக் கொள்வார் - தனம்
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி தொண்டாடிக் கொள்வார் - தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார் - இந்த கைத்தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தை தள்ளி நற்கதி செல்ல
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

பாடல் முழுதும், என்னமாய் எதுகை வந்து, அழகாய் வடித்திருக்கு, இந்தப் பாடலை, என்று வியக்காமலிருக்க முடியவில்லை. தொடுப்பில் இவர் சொல்லும் வரிகளை கவனிக்க. 'இளங்கன்று பயமறியாது' என்பதுபோல, ஒன்றுக்கும் அஞ்சாமல் நான் உன் பின்னே தொடர்ந்தாலும், என்னுள்ளே துயரம் தீர்ந்த பாடில்லை என்கிறார்.

சில நாத்தீக நண்பர்கள் கேட்பார்கள், கிண்டலாக. நீங்கள் தான் ஆன்மீகவாதியே - உங்களுக்கு துயரமே இருக்கக் கூடாதே என்று. துயரம் இல்லாமல் இருப்பதற்கல்ல ஆன்மீகம். துயரை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை அளிப்பது ஆன்மீகம். துயர் முடிவது, தான் என்பதே இல்லாமல் இருக்கும்போதுதான். இதனை உணர்த்துவதுதான் ஆன்மீகம். அந்த துயரம், எப்போதைக்குமாக, முடிவாக, முடிவது எப்போதென்றால், சிவ கிருபை வந்தென்னை தடுத்தாட்கொளும்போது. அந்த நிலை வருவது எப்போது என்கிறார், சிவன் இப்பாடலில்.

இப்பேதை உலகில், பொருளுக்காக பொல்லாத செயலை எல்லாம் செய்து, பெரும் பாதகப் பழிகளில் உழன்று வரும் மனித உலகத்தைப் பார்த்து, சண்டாள உலகம் என வெறுப்பதினை, சரண அடிகளில் காணலாம். உறவு என்று சொல்லி, ஓடி வரும் மனிதர்கள் நம்மை போற்றிக் கொண்டாடுவர், பலப்பல தொண்டாற்றுவர். ஆனால், நம் கையில் இருக்கும் செல்வம் குறைந்து போனாலோ, முகமெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார் என்பதனைக் கவிஞர் அழகாகச் சொல்கிறார்.

நற்கதி என்னும் பேறினை அடைய என்றைக்கு சிவ கிருபை வருமோ?

உசாத்துணை:
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் @ சென்னை ஆன்லைன்.காம் தளம்