Saturday, August 16, 2014

சுந்தர காண்டம் - காட்சிப் படலம் (1)

1. இறுதியாக இங்காவது பார்ப்போமா இல்லை 
ஏமாற்றம் தான் அடைவோமா என்ற
ஏக்கத்துடனே அனுமனும் நுழைந்தான் அசோக வனம்.
அதுகாண் தேவரோ பூமாரி பொழிந்தனர்!
அதே அசோக வனத்தில் தான் அன்னை ஜானகியும்
அனேக அரக்கியர் சூழ மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
இரவாயினும் தூயிலுற நாட்டமில்லாமல் வாட்டத்தில் 
இராமனை எண்ணி வாடி இருந்தார்.

2. காணாததன் காரணம் என்னவோ?  என்னை வந்து
காணாததன் காரணம் என்னவோ?
இலங்கையில் சிறைவைத்ததை என்னவரும் அறியாரோ?
இராவணனை மறித்த ஜடாயுவும் மரித்தே போனாரோ?
என் நிலையை எடுத்து சொல்ல இனி யாரும் உளரோ?
மாரீசன் மாயம்தனை அறியாத பேதை இவள்
மானொன்று பிடித்துவர மனாளனைப்போய் அனுபிப்பினேனே.
என்னவரின் இளையோனையும் விரட்டினேனே.
என்னையும் அதனால் வெறுத்துப் போனாரோ?
வஞ்சனை அரக்கரும் என்னை விட்டுவைக்காமல் 
தின்றே தீர்த்திருப்பார் என்றே விட்டு விட்டாரோ?
ஒருவேளை பரதனும் காட்டுக்கு வந்து
மறுபடி நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ?
வேறு அசுரர்களோடு தான் போர் ஏற்பட்டு விட்டதோ?
வில்லொன்றை ஒரு நொடியில் உடைத்த பெருமான்
சொல்லொன்று உதிர்க்கும் நேரத்திற்குள்
வந்து என்னைக் காணாததன் காரணம் என்னவோ?

3. இனி பரதனே நாட்டை ஆள வேண்டும் 
என்று கைகேயி அன்னை சொன்ன போதும்
முன்னை விட மும்மடங்கு முகப்பொலிவு கொண்ட
என்னவரின் முகத்தை இனி எப்போது காண்பேன்?
வனம்போய்வா என்று சொன்னபொதும் 
அன்றலர்ந்த செந்தாமரை போல் மலர்ந்த முகத்தை 
இனி எப்போது காண்பேன்?

4. அன்று தந்தை ஜனகன் தனது கைகளை
அவரது கைகளில் ஒப்படைக்க,
அவர் என் பாதத்தைப் பற்றி
ஒன்பது முறை எடுத்து வைத்தாரோ!
பொன்முடி தரிக்க வேண்டிய
பரதனும் அவரது அன்பினால்
மரவுரி தரித்து கானகம் வந்தாரே!
கங்கைக் கரையில் குகனைத் தோழனாக்கி
அவனுக்கு இலக்குவனை தம்பியாக்கி
என்னை அவனுக்கு கொழுந்தியாயும் ஆக்கினாரே!
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைக் காட்ட
அன்று புல்லால் காக்கைக்கு கண் போகச் செய்தாரே!

5. அன்னையை சுற்றி இருந்த
அரக்கியர் அனைவரும் உறங்குகின்றனர்.
ஒருத்தி தவிர - அவள் பெயர் திரிசடை.
அவள் இன்சொல்லாள். அன்பு மொழி கூறி
அன்னைக்கு ஆறுதலாய் இருந்தாள்.
அன்னை ஜானகி அவளிடம் துடிக்கும்
தன் இடக்கண்ணைக் காட்டி சகுனம்
நன்மையோ தீமையோ நிகழப்போவது 
என்னவோ ஏதோ எனும் 
தன் கவலையைப் பகிர்ந்தாள்.
வேண்டாம் கவலை சீதையே நல் நிமித்தம் 
என்றே ஆறுதல் மொழிந்தாள் அன்பின் திரிசடை.

6. அச்சமயத்தில் அனுமன் சீதை இருக்கும் இடத்தை
அடைந்தான், அதே சமயம் உரக்கம்
கலைந்த அரக்கியரும் எழுந்தனர்.
ஆலமே உருவமாய் அமைந்த அரக்கியரின்
கொடூரத்தைக் காண அழுகையே வந்தது அன்னைக்கு,
இதையெல்லாம் மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்து
பார்த்த அனுமனுக்கு இதுதான் அன்னை ஜானகி
என்பது தீர்மானமாயிற்று.

7.
இங்கங்கெனாதபடி எங்கும் தேடிப்பின்
கண்டேன் கண்டேன் என்றே மட்டற்ற மகிழ்ச்சியில்
கரைபுரண்டு ஆடினான் பாடினான்.
உவகைத் தேனை உண்ட மகிழ்சியில்
அனுமன் ஆனந்தக் கூத்தாடினான்.

Monday, July 14, 2014

அவன் செயலும் துரியோதனனும்

பகவத் கீதையானது மகாபாரத்தில் பிற்காலத்து இடைச்சொருகல் என்று வாதிடுபவர்கள் மகாபாரதத்து நிகழ்சிகள் எப்படி கீதையின் சாரத்தை பிரதிபலிக்கின்றன என்று அறியாமலே இருக்கிறார்கள்.

அதற்கான ஒரு சான்றாக ஒரு மகாபாரதத்து நிகழ்வினை இங்கே பார்ப்போம். சமீபத்தில் விஜய் டி.வி மகாபாரதத்தொடரில் இக்காட்சி காட்டப்பட்டது.

கண்ண பெருமான் பாண்டவர் தரப்பில் இருந்து தூதுவனாக அஸ்தினாபுரத்து அரண்மணையில் நுழைகிறான். மாபாரதப் போர் நிகழாமல் தடுக்க இரு தரப்பிலும் முயற்சிக்கிறார்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில் கண்ணன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தர வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறான். சகுனியும் துரியோதனும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். துரியோதனன், ஐந்து கிராமங்கள் என்ன, ஐந்து ஊசி முனை நிலம் கூடத் தர முடியாது என்று மறுக்கிறான்.

சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகையில் போர் நிச்சயம் என்றாகிறது. போரில் கண்ணன் பாண்டவர் தரப்பில் போர்களம் புகுந்து விடக்கூடாது என்கிற சகுனியின் அறிவுரையின் பேரில், கண்ணனை கைது செய்யத் துணிகிறான் துரியோதனன். கண்ணனை இரும்புச் சங்கிலியால் பிணைக்க வீரர்களை ஆணியிடுகிறான். வீரர்கள் அச்சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அரசவைக்குள்ளே நுழைகிறார்கள். ஆனால் கண்ணனைப் பார்த்த உடனே அவர்களால் அச்சங்கிலியைத் தூக்க முடியாமல் கீழே விட்டு விடுகிறார்கள். அவர்களால் அதை இம்மியளவும் அசைக்கவும் முடியவில்லை.



அதைப்பார்த்து கண்ணன் துரியோதனனிடம் உரைக்கிறான். "துரியோதானா, உன் பாவச்சுமைகளை அவ்வீரர்களால் சுமக்க இயலாது. உன்னால் மட்டுமே அச்சங்கிலியை அசைக்கவும் முடியும். நீயே சங்கிலியைக் கொண்டு வந்து என்னை பிணைப்பாய்" என்கிறான். வியப்பில் துரியோதனன், சங்கிலியின் அருகில் சென்று அதை மெள்ள அசைத்துப் பார்க்கிறான். அதை எளிதாக அவனால் தூக்கவும் முடிகிறது. "ஆகா, என் பலத்தைப் பார். இத்தனை வீரர்களாலும் தூக்க இயலாத சங்கிலியை யான் ஒருவனே தூக்கி உன்னை பிணைப்பேன் பார்" என்ற அகந்தையில் அச்சங்கிலியால் கண்ணனைக் கட்டி, அவனைச் சிறையில் அடைக்கின்றான்.

இந்தக் கதையில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?

துரியோதனன் போலத்தான் கிட்டத்தட்ட நாம் அன்றாடம் நடந்து கொள்கிறோம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், ஆகா இது என்னால் செய்யப்பட்டது என்கிற இறுமாப்பினைக் கொள்கிறோம்.  ஆனால் ஒரு செயலை ஒருவரால் செய்ய இயலாமற் செய்வதும், செய்ய இயலச் செய்வதும் அவன் செயல் என்பதை அறியாமலே. அத்தனை வீரர்கள் இரவு பகலாக உழைத்து மிகவும் கடினமான, இந்திரனின் ஐராவதத்தாலும் முறிக்க முடியாத மிக உறுதியான இரும்புச் சங்கிலியைச் செய்ய இயன்றது என்றால் அதுவும் அவன் செயல் அன்றோ? அதனை அரசவை வரை எடுத்து வர வீரர்களால் இயன்றதும் அவன் செயல் அன்றோ? அவன் நினைத்திருந்தால் இச்செயல் எல்லாம் முதலிலேயே முடியாமல் போயிருக்கும் அல்லவா?

அரசவை வரை எடுத்துவரச் செய்து பின் வீரர்களால் தீடீரென அதைச் சுமக்க இயலாமற் செய்ததன் காரணம் என்ன? துரியோதனன் இன்னும் ஒரு பாவம் செய்யத் துணிகிறான் என்றால் அதற்குப் பொறுப்பாளி அவன் மட்டுமே என்று அவனைத் தனிமைப் படுத்துவதா? இல்லை. துரியோயதனனுக்கு தன் தவறுகளை உணர இன்னுமோர் வாய்ப்பு தரப்படுகிறது. "வீரர்களால் அசைக்க முடியாமற் போன சங்கிலியை தான் அசைக்க இயன்றதக்கு காரணம் தான் அல்ல! " என்று உணர்வதற்காக ஓர் நடமுறை வாய்ப்பு தரப்பட்டது. மூடனான அவனால் அவ்வாய்ப்பை பயன் படுத்த இயலாமற் போனது.

அன்றாடம் நமக்கும் இதுபோன்று வாய்ப்புகள் பலவும் வரவர துரியோதனன் போலவே மூடனாக இருப்பதும் அல்லது கிடைத்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தானே உள்ளது!