Monday, August 10, 2015

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!

சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய "தேவ தேவ கலயாமி" என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்




இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? "உடல் பொருள் ஆனந்தி" நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்



இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய "சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்" என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,
தேனும் பாலும் போலே சென்று - தேரடியில் நின்று கொண்டு
சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்
என்கிற வரிகள் "தேவ தேவ கலயாமி" பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்



தியாகராகரின் "துளசி தளமுலசே" பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)

இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் "இராம நாமம் ஒரு வேதமே" பாடலோடு நிறைவு செய்திட
நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.



Sunday, February 22, 2015

ஆதித்தன் பெருமை

சௌரம் - ஒரு மதம் என்று சொல்லப்படும் அளவிற்கு அன்று சூரிய வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்தது. கலிங்கத்தின் கட்டிடக் கலையின் உச்சம் என சொல்லப்படும் கொனார்க் சூரிய கோவில் இன்றும் அதை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

சூரிய குடும்பத்திற்கும், அதில் உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமிக்கும் இன்றியமையாதது ஆதவன் என்பதனை எடுத்துரைப்பதாய் இருக்கிறது சூரிய வழிபாடு.

இராம-இராவண யுத்தத்தின் போது, வெற்றி-தோல்வி இல்லாது முடிந்த ஒரு மாலைப் பொழுதில் அகத்திய மாமுனி இராமனை அணுகி, "ஆதித்ய ஹிருதயம்" எனும் ஆதித்தன் துதியை எடுத்து இயம்பினார். இத்துதியானதை ஓதுவோருக்கு மனச் சோர்வையும் நோய்களையும் போக்கி உடலுக்கு சக்தி தரும் அருமருந்தாகச் சொன்னர்.  இதனில் சூரிய பகவான் தான் - பிரம்ம தேவன்; விஷ்ணு; ருத்ரன்; சண்முகன்; பிரஜாபதி தேவன்; தேவேந்திரன்; குபேரன்; காலன்; தர்மராஜன்; சந்திரன்; வருணதேவன் - என்றெல்லாம் வர்ணனை செய்யப்படுகிறது. இப்படி எல்லாமுமான பரம்பொருள் என்பது எல்லாமும் அடங்கிய சர்குண பிரம்மம் ஆகையால் - சூரியனை வழிபடுவது என்பதை பரம்பொருளைத் துதிப்பது போலாகிறது.

யோகாசனங்களில் பெரிதும் அவசியாமான ஒன்றாக கருத்தப்படும் "சூரிய நமஸ்காரம்" - உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் அரும்பயிற்சியாகக் கருதப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களில் சூரியனையும் ஒரு கிரகமாக சேர்க்கப்படுவதன் காரணம் தீமைகளை அழித்து நன்மைகளை நாட்டுவதே ஆகும்.

முத்துசாமி தீக்ஷிதரின் பாடல்களில் - சூரியன் மற்றும் இதர கிரகங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது உருப்படிகள் செய்திருக்கிறார். இவையாவன:

சூர்ய மூர்த்தே (சௌராஷ்டிரம்)
சந்தரம் பஜ மானஸ (அசாவேரி)
அங்காரகம் (சுரடி)
புதம் ஆஸ்ரயாமி (நாட்டைகுறிஞ்சி)
பிரகஸ்பதே (அடாணா)
ஸ்ரீசுக்ரபகவந்தம் (பரஜூ)
திவாகரதனுஜம் (யதுகுலகாம்போதி)
ஸ்மராம்யகம் (ரமாமனோஹரி)
மஹாசுரம் (சாமர)

இந்த ஒன்பது கீர்த்தனைகளில் அந்தந்த கிரகங்களில் சிறப்புகளும், ஜோசிய சாஸ்திரம் தொடர்பான நுட்பங்களையும், அவற்றுக்கான மந்திரங்களின் பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்ய மூர்த்தே 
இராகம் : சௌராஷ்டிரம் (சூர்யகாந்தம் ஜன்யம்)
தாளம்: த்ருவம்

பல்லவி
ஸூர்ய மூர்தே நமோऽஸ்து தே
ஸுந்த3ர சா2யாதி4பதே

அனுபல்லவி
கார்ய காரணாத்மக ஜக3த்ப்ரகாஸ1 -
ஸிம்ஹ ராஸ்1யதி4பதே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஆர்ய வினுத தேஜ:ஸ்பூ2ர்தே
ஆரோக்3யாதி3 ப2லத3 கீர்தே

சரணம்
ஸாரஸ மித்ர மித்ர பா4னோ
ஸஹஸ்ர கிரண கர்ண ஸூனோ
க்ரூர பாப ஹர க்ரு2ஸா1னோ
கு3ரு கு3ஹ மோதி3த ஸ்வபா4னோ
ஸூரி ஜனேடி3த ஸு-தி3னமணே
ஸோமாதி3 க்3ரஹ ஸி1கா2மணே
தீ4ரார்சித கர்ம ஸாக்ஷிணே
தி3வ்ய-தர ஸப்தாஸ்1வ ரதி2னே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஸௌராஷ்டார்ண மந்த்ராத்மனே
ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே
பா4ரதீஸ1 ஹரி ஹராத்மனே
பு4க்தி முக்தி விதரணாத்மனே


பாடற்பொருள்
சூரிய மூர்த்தியே - சாயா தேவியின் பதியே!
எல்லா காரியங்களுக்கும் காரணமாகத் திகழ்பவனே!
உலகங்கெளெல்லாம் ஒளிகொண்டுத் திகழச்செய்பவனே!
சிம்மராசியின் அதிபதியே!
உடலக்கு அழகையும் பலத்தையும் ஆரோக்யத்தையும் கொடுப்பவனே!
தாமரையை மலரச் செய்பவனே! (இதய தாமரையையும்)
கர்ணனின் தந்தையே!
கொடிய பாவங்களையும் வதைத்து காப்பவனே!
சந்திரன் முதலான கோள்களை ஆள்பவனே!
நடக்கும் எல்லா செயல்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே!
அழகான ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செல்பவனே!
எட்டெழுத்து ஸ்வர மந்திரமாகத் திகழ்பவனே!
தங்க ஒளியாத் திகழ்பவனே!
பிரம்மா, திருமால் மற்றும் சிவன் போன்றவனே!
பொருளையும் அருளையும் ஒருசேரத் தருபவனே!

இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள், ஆதித்ய ஹிருதயத்தினை விருத்தமாகப் பாடியபின் பாடிட இங்கு கேட்கலாம்: