Monday, May 16, 2011

நல்லூரான் பாட்டு : நற்சிந்தனை

நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!

எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!

Saturday, April 16, 2011

கறை கரைந்து காணும் தெய்வம்!

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓரமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்.
நித்தம் நித்தம் உயிருடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வளவு அழகான கவியாய் வடித்திருக்கிறார் பேருண்மையை!

எண்ணம் என்ற மூலம் என்னிடத்தில் இருக்கும் வரை அது எனது எனது என்று என்னையே நினைத்து, என்னைச் சுற்றி வருகிறது.
ஆனால் அதே எண்ணத்தை என்பால் அகற்றி எல்லாமுமான இறையவனை நினைக்கும்போது...
"ஓரு அமைதி" கிட்டுகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்பின் கிட்டும் அவ்வமைதி பேரமைதி.

அந்த அமைதி நிலையில் நிலைத்து நிற்க. "எழுமின், விழிமின்" என நிலையில் விழிப்புடன், வழிமேல் விழி வைத்து நிற்க, தானாக ஏற்படும் நிறைநிலை. மெய்பொருள் யாதென உணந்திடும் தற்செயலும் இறை செயலேயாம்.

ஒருமுறை அந்நிலையை அடைந்து விட்டால், அந்நிலையை அடுத்து பழகப்பழக, காணும் காட்சியும், நுகரும் நாற்றமும், கேட்கும் ஒலியும் என எல்லாவற்றிலும் நந்தலாலா.

பின் எல்லாக் கறைகளும் களைந்தாயிற்று என்றால், தன் முனைப்பு தானாய்க் கரைந்து போகும்.
கண்ணுக்கினியவனை கண்ணாறக் கண்டு கைக்கொளலாம்!