Monday, September 01, 2014

சுந்தர காண்டம் - காட்சிப் படலம் (2)

1. மனத்தவத்தால் உயர்ந்து விளங்கும்
மாசிலா மங்கையாம் சீதையைக் கண்ட அனுமன்
மாநிலம் உய்வதன் காரணத்தைக் கண்டான்.
வானவரும் உய்வர். முனிவரும் உய்வர்.
வேதியரும் ஏனையரும் உய்வர். 
தீவினையெலாம் மடிய
அறம் வாழும் என்றே ஆனந்தம் அடைந்தான்.

2. ஆங்கே அசுரர் கோமான் இராவணன்
அசோகவன வாயில் கண் தோன்றினான்.
இலங்கேஸ்வரனின் தலையில் மகுடமும்
தோளில் வலயமும் செவியிற் குண்டலமும்
பளபளத்தன.

3. 
அரக்கன் இராவணன் பிராட்டியை அணுகி
ஆசை வார்த்தைகளை மொழிவதை
அனுமன் மரத்திலிருந்து பார்த்தான்.

பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை ஒத்த
அழுக்கான அரக்கனது வார்த்தைகள் பிராட்டியை வந்து
அடைவதற்கு முன்னமே அவளது செவிகள் தீய்ந்து போனது.

4. சினந்த  சீதை அறிவுரை பகர்ந்தாள்.
என் இன்னுயுர்த் தலைவன் 
இராமபிரானின் பாணம் மேருவையும் துளைக்கும்.
விண்ணையும் பிளக்கும். ஈரேழு புவனங்களையும் அழிக்கும்
வல்லமை பெற்றது என அறிந்திருப்பாய். எனினும்
சிறப்பற்றவற்றைச் சொல்லி தலை பத்தும்
சிந்திப்போகச் செய்வாயோ இராவணா?

5. மாயமான் ஒன்று ஏவி மாயையினால்
மறைந்து வந்தென்னைக் கவர்ந்தாய்.
தப்பிப் பிழைக்க வேண்டின் வழி தேடு.
தவறிடின் போர்மூள உன்குலத்திற்கே நஞ்சாகும்.
பெற்ற வரம் யாவும் காலனிடம் இருந்து உனைக்காக்கவே.
பிரானின் பாணத்தின் முன்னே அவை தாங்குமோ மூடனே?

6. பெற்ற வாளும் ஆயிளும் அமைந்த வலிமையும்
பேறினால் வானோர் வழங்கிய வரங்களும்
இராமன் அம்பைத் தொடுத்து விட்டவுடனே
இலவமாய் பறந்து அழிந்து போகுமே.
இருளும் நிற்குமோ ஆதவனின் முன்பு?

7. மறைந்துநீ வாழும் இவ்விடமாம் இலங்கையை
அறிந்து என் கோமகன் வரும்கால் 
ஆழியும் அதன் நடுவே அமைந்த இலங்கையும் 
அழியும் - அதுமட்டுமா? ஊழிக்காலமும் ஏற்பட
அழிவது உன் உயிர் மட்டுமன்று, உணர்வாய் என்றாள்.

8. இப்பெருஞ் செல்வம் யாவும் வழங்கினான் ஈசன்
எப்பொழுதும் மாதவத்தில் நிற்பாய் என்றே.
ஒப்பிலா செல்வமும் உன் உறவெலாமும் ஒழிய
தப்புகின்றாய் அறத்தில் இருந்தே. 
முப்பொழுதும் அறத்தையே விரும்பாயோ? என்றாள்.

9. அறஉரை கேட்ட அரக்கன் இராவணனின்
இருபது கண்களும் மின்னலாய்ப் பிளந்தன.
வெப்பம் கக்கிடும் குன்றுகளும் இற்றுப்போக
வெளிப்பட்ட வெங்கனல் சீற்றமும் 
மிஞ்சியது முன்னிருந்த காமத்தையும்.

10. கோபத்தில் கால்கள் வளர்ந்தன. 
தோள்கள் திசைகளை அளந்தன.
நெருப்பைக் கண்கள் உமிழ்ந்தன.
பெண் இவளைப் பிளந்து தின்பேன் 
என்றே முதலில் புறப்பட்டான், 
பின் நின்றான்.
சீற்றமும் காதலும் எதிரெதிர் கிளம்ப
செய்வதறியாது திகைத்தான்.

11. புனலென புறப்பட்ட இராவணன்
பிராட்டியைத் தொடும் முன்னர் அவனை
நான் காலாலே மிதித்துக் கையாலே பிசைந்து
நற்பணி செய்வேன் என்றே 
உறுதி கொண்டான் அனுமன் மரத்திலிருந்தவாறே.

12. தலைகள் பத்தும் சிதற மோதிப்பின்
இலங்கையை கடலின் கீழ் அமிழ்த்தி
புனித பிராட்டியை சுமந்து போவேன்
எனக்கருதி கைகளை பிசைந்திருந்தான் அனுமன்.



13. சினம் தணிந்த இராவணன் பிராட்டியிடம் :
உனக்கு உரிமையான இராமனைக் கொன்றபின்
உன்னைக் கொண்டு வருதலைச் செய்வேனாயின்
அதனால் நீயுன் உயிரை விட்டால்
அதனால் என்னுயிரும் நீங்கும் - ஆகவே
அன்று வஞ்சகம் செய்தேன் என்றான்.

14. அற்ப ஆயுளாள் சீதையே, யான் அயோத்தி சென்று
அரசாளும் பரதன் முதலானோர் உயிரைப் பருகி 
மிதிலையில் வாழ்பவரையும் அடியோடு அழித்து
அதிவிரைவில் திரும்பிவந்து உன்னைக் கொல்வேன் என்றே
அதட்டிச் சொன்னான்.

15. அஞ்சிடச் செய்தாவது அல்லது அறிவில் 
எஞ்சிடச் செய்திடும் உபாயம் ஏதாவது கொண்டு
வஞ்சியினை வசியம் செய்வீர் - தவறினால்
நஞ்சினைப் போலாவேன் நான் என்றே
வெஞ்சினத்துடன் உரைத்தான் அரக்கர் கோமான்
தனித்தனியே ஒவ்வொரு அரக்கியரிடமும்.

16. பொங்கும் அரவமாம் இராகு விழுங்கிக் கக்கிய 
மங்காத் தூவெண் மதிபோன்று இருந்த அன்னையை
தீயவர் அரக்கியர் சூழ்ந்து இழித்து அதட்டித்
தீமனம் போன போக்கில் சீறிப் பேசினர்.

17.  குறையா மனம் பெற்ற பிராட்டியைக்
கொல்லும் பொருட்டு அணுகிய அரக்கியரையும்
தின்னும் பொருட்டு அணுகிய அரக்கியரையும்
தீமொழி பேசிச்சென்ற இராவணனின் ஏவலையும்
தன்மனத்திலே எண்ணிப்பார்த்து கண்களில் கண்ணீர்
ததும்பியவாறு சிரித்தவளானாள் சீதை.

18. இன்னல்களில் இடைமறித்த திரிசடை:
அன்னையே கவலை வேண்டாம், 
முன்பு சொன்ன கனவின் முடிவாய்
நன்றே நடக்கும் என்றே சொல்லித் தேற்றினாள்.

19. முக்காலமும் அறிந்தவரை ஒத்த திரிசடை
மொழிந்ததைக் கேட்ட அரக்கியர் சீற்றம் குறைத்தனர்.
மேலும் துன்புறுத்தாது அடங்கினர். 
மெலிந்த பிராட்டியோ தன்னுயிர் நிலைபெற்றாள்.