Wednesday, April 29, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திமூன்று

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

~~~

இவ்வாறாக ஆத்ம போதம் நிறைவடைந்தது.
பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது.

உசாத்துணை: சுவாமி நிகிலானந்தரின் ஆத்ம போதம் ஆங்கில உரை.

மேலும், இணையத்தில் கிடைத்த சுவாமி சின்மயானந்தரின் ஆங்கில உரையாக்கம்:

ஆத்ம போதம் - சுவாமி சின்மயானந்தர் உரை ஓம் தத் சத்!

Sunday, April 19, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திரண்டு

பா 66:

சிரவண மாதிகளாட் றேசுறு ஞான
வெரியினிற் காய்ச்சி யெடுக்கச் - சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில்பொன் போனிர்
மலனாகித் தன்னொளிர் வான்.

பதம் பிரித்து:
சிரவணமாதிகளாலே சுறு ஞான
எரியினிற் காய்ச்சி எடுக்கச் - சருவ
மலமும் போய்ச் சீவன் மறுவில் பொன் போல்
நிர்மலன் ஆகித் தன்னொளிர்வான்.

பொருள்:
சிரவணம் முதலான சாதகங்களில் ஆன்ம முதிர்விற்கு உந்தப்படும் சாதகன்,
ஞானமெனும் நெருப்பில் நன்கு காய்ச்சி எடுக்கப்படுவது போலவாம்.
பொன்னை நெருப்பில் காய்ச்சி,
அதில் இருக்கும் பொன் அல்லாத, மற்ற உலோகங்களை அதனில் இருந்து அகற்றி,
தூய்மையான தங்கத்தை எடுப்பது போல,
சிரவணம் முதலான, கேட்டல், பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு,
தன்னில் இருக்கும் அழுக்கான மலங்களை அகற்றி,
தூய்மையான சச்சிதானந்தாமாய் ஒளிர்வான்.

விளக்கம்:
ஞானமெனும் நெருப்பு : நெருப்பு எப்படி, தூய்மையாய், மாசற்று இருக்கிறதோ அதுபோல, தூய்மையான மெய்ஞானமும், அழுக்கற்று இருக்கும். நெருப்பில் காய்ச்சி, அழுக்கு அகற்றிட, தூய்மையாகும் பொன்போல,
ஜீவனில் அழுக்கு அகற்றி, அதன் தூய்மையான முழுமுதல் நிலைக்கு திரும்பிட ஆவன செய்ய வேண்டும்.
எவ்வாறு?: சிரவணம் (மறைகள் சொல்லும் உன்னத நெறிதனைக் கேட்டறிதல்) முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்)
வழி நெறிகளில் தன்னைத் தான் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வழிநெறிகளில் நன்கு பக்குவப்பட்ட மனதில், அழுக்குகள் அகல, அதுவே அவன் தன்னைத் தானறிந்து ஒளிர்ந்திட ஏதுவாகிறது.

பா 67:
இதயவெளி தோன்றி யிருளையழி ஞான
உதயரவி யான்மா வொளிரு - நிதமுமே
யெல்லாவட் றும்பரவி யெல்லாமுன் தாங்கினிந்
றெல்லா மொளிர்விக்கு மெண்.

பதம் பிரித்து:
இதயவெளி தோன்றி இருளை அழி ஞான
உதய ரவி ஒளிரு(ம்) நிதமுமே
எல்லாவற்றும் பரவி, எல்லாமுன் தாங்கி நின்று
எல்லாம் ஒளிர்விக்கும் எண்.

பொருள்:
இதயவெளியில் இருந்து தோன்றிய, ஞானமானது, அறியாமை என்னும் இருளை அழித்திட, அது அன்றாடம் கிழக்கில் உதிக்கும் சூரியன் இருளை அழித்து, ஒளிர்வது போலவாம். அம்மெய்ஞானம், எல்லாப் பொருளிலும் பரவி, எல்லாப் பொருளையும் நிலைப்பெறச் செய்து, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவை எல்லாவற்றையும் ஒளிர்ந்திடச் செய்திடுவது, என்று எண்ணுக.