Saturday, December 20, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினேழு

பா 56:

எதுகுறுக்கு மேல்கீழா மெங்குநிறை வாகும்
எதுசச்சித் தின்பிரண் டிலா ததானந்தம்
நித்தமா யொன்றாய் நிகழ்வதெது வாகுமவ்
வத்து பிரம மதி.
(சீர்களைப் பிரித்து:)
எது குறுக்கு மேல் கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித் இன்ப இரண்டிலாத ஆனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் அதி.

பொருள்:
குறுக்கு, மேல், கீழ் என எங்கும் நிறைந்திருக்கும் எப்பொருளோ,
எது சத் எனவும், சித் எனவும், ஆனந்தம் எனவுமான பொருளோ,
எது இரண்டு என்றில்லாமல்,
எது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறதோ,
எது எப்போதும் ஒளிர்ந்து திகழ்கிறதோ,
அப்படிப்பட்ட பொருளே, பிரம்மம் எனக் கொள்வாய்.

விளக்கம்:
வேதங்கள் யாவும் கூறும் உண்மைப் பொருளாம், தன்னை அறிந்தார் உணர்வதாம்,
பிரம்மம் என்னும் மெய்ப்பொருள் எப்படி இருக்குமாம்?
இவ்வெண்பா சொல்லும்:
பிரம்மம் என்னும் வஸ்து, எல்லாவற்றுக்கும் மேலேயிலிருந்து, எல்லாவற்றுக்கும் கீழ் வரையும், இரண்டுக்கும் இடைப்பட்ட இடமெலாமும், இப்படியாக எல்லா இடமும், நிறைந்திருக்குமாம்.

முன்னே இருப்பதும் பிரம்மம், பின்னே இருப்பதும் பிரம்மம்,
வலப்பக்கம் இருப்பதும் பிரம்மம், இடப்பக்கம் இருப்பதும் பிரம்மம்,
கீழேயும் பிரம்மம், மேலேயும் பிரம்மம்.
இங்கே இருப்பது எல்லாமும் பிரம்மம். பிரம்மம் மட்டுமே.
-முண்டக உபநிடதம்.

அது சத்(களம்), சித் (சாதனம்), ஆனந்தம் (இலக்கு) எனவாய் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால், அதில் ஆடுகளமும் ஆட்டமும் - சத்; எல்லையில்லா பிரபஞ்சத்திலோ எல்லாமே சத்; கிரிக்கெட் ஆட பயன்படும் பந்து, மட்டை, கையுறை போன்றவை சாதனம் - ஆகவே அவை சித். அடைய வேண்டிய வெற்றியானது ஆனந்தம். இந்த மூன்றுமாய் இருக்கிறது பிரம்மம். அதவாது, அடைய வேண்டிய இலக்காகவும், அடைவதற்கான களமாகவும், அடையத் தேவையான சாதனமாகவும் இருக்கிறது.

ஜீவனாய் இருக்கும்வரை இரண்டெனத் தெரிந்தது. பிரம்ம நிலையில் எல்லாமே ஒன்றுதான். ஒன்று என எங்கெங்கும் நிகழ்வாய் திகழ்கிறது.


"அதுவும் (தெரியா பிரம்மம்) நிறைவானது, இதுவும் (தெரிந்த பிரம்மம்) நிறைவானது.
இந்த நிறை (தெரிந்த பிரம்மம்), அந்த நிறையில்(தெரியா பிரம்மம்) இருந்து தான் உருவானது.
இந்த நிறையின் முழுமை, யாதெனத் தெளிந்தபின், அந்த நிறையே இங்கும், எங்கும் நிறைந்தது."
- பிரஹதாரண்யக உபநிடதம்


சுட்டிகள்:
* சச்சிதானந்தம் பற்றி மகாபெரியவர் 'அருள்மொழி அமுதம்' தனில் சொல்வது:
"‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்."

* திண்ணையில் எஸ்ஸார்ஸி : வேத வன விருட்சம்:
"சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை
பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்"

No comments:

Post a Comment